ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கற்றல் கற்பித்தலில் மாணாக்கர் அகத்தூண்டலை ஊக்கும்
மாற்றுவழிச் சிந்தனைகள்


1.   அறிமுகம்
அன்று மாணாக்கரின் ஆட்காட்டி விரலை ஆசிரியர் அழுந்த பிடித்து மணலில் இரத்தம் தோய அரிச்சுவடி கற்ற காலம் கனவாய்ப் போய், பசும்பலகையில் வெண்கட்டியால் கோலமிட்ட காலம் பழங்கதையாய்ப் போய், தாள்களில் எழுத்துகளின்மேல் எழுதிய காலமும் மெல்ல அருகிப்போய், இன்று மின்னியல் தொடுத்திரைகளின் ஊடாக ஒளிவழியாக எழுதும் காலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டாலும் இன்றைய கல்வி மதிப்பீடுகளின் வாயிலாகப் பெரும்பாலும் மாணாக்கர் சிந்தனை விரிவாக்கம் பெறாமல் குறுகியே கிடப்பது கண்கூடு.

பொதுவாக இன்றைய கல்விச்சாலைகளில் செயல்படுத்தப்படும் கற்றல்கற்பித்தலில் மாற்றுவழிச் சிந்தனைகளின் வெளிப்பாடு மிகமிகக் குறைவே என்று அறுதியிட்டுக் கூறலாம். வகுப்பறையில் மாணாக்கர் எதிர்கொள்ளும் அனைத்துக் கற்றல் சவால்களையும் களைந்தெடுக்க மாற்றுவழி உள்ளது. இம்மாற்றுவழிச் சிந்தனை சட்டென மாணாக்கர் கண்களுக்குப் புலனாவதில்லை. மாணாக்கர் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை ஆகியவற்றை ஆசிரியர் சரியான முறையில் மாற்றி அமைத்தால் நிச்சயம் கல்வி உலகில் பல புதுவழிகள் பிறக்கும்.

2.   கல்வி உலகில் மாற்றுவழிச் சிந்தனைகள்
எதிர்காலத்தில் கல்விக்கூடத்திலிருந்து வெளிவரும் மாணாக்கர் தமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சவால்களையும் அறிவார்ந்த முறையில் வென்றெடுக்கும் வல்லமையை ஊக்கும். இன்றைய பள்ளிச் சூழலில் பெரும்பாலும் மாணாக்கரின் சிந்தனை விரிவு பெறாமால் குறுகிய நிலையிலேயே முடங்கிக் கிடப்பது வேதனையளிக்கிறது. மாணாக்கர் கண்பட்டை கட்டப்பட்ட பந்தய குதிரைகள்போல் தேர்வு இலக்கை நோக்கியே ஆசிரியர்களின் கடிவாளத்தால் கட்டப்பட்டுள்ளனர். மாணாக்கர் மாற்றுவழிச் சிந்தனையின்றி ஆசிரியர்களின் சிந்தனை நேர்க்கோட்டில் ஓடுவதற்கு பலகாலமாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்வி உலகு மேலும் புத்துணர்வுப் பெறுவதற்குக் கல்வியில் மாற்றுவழிச் சிந்தனை இன்று மிக அவசியமாகிறது. கற்றல் கற்பித்தலில் இயல்பாக வெளிப்படும் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு இன்று இறுக்கமான கற்றல் சூழலை மாற்றியமைக்கும் அருமருந்துதான் இந்த மாற்றுவழிச் சிந்தனை. ஆசிரியரின் பணிச்சுமையும் மாணாக்கரின் மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியையும் தொடர்ந்த தேடுதலையும் ஏற்படுத்தி புதிய கண்டடைதலை மாற்றுவழிச் சிந்தனை நிச்சயம் உண்டாக்கும்.

3.   கற்றல்கற்பித்தலில் மாற்றுவழிச் சிந்தனைக் கோட்பாடுகள்
மாற்றுவழிச் சிந்தனை என்பதைக் குறுக்குவழியென கொள்ளலாகாது. ஆழ்ந்து நோக்கினால் மாற்றுவழி என்பது நமது வாழ்வில் எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் மேற்கொண்டிருப்போம் அல்லது நமது செயல்பாட்டில் வெளிப்பட்டிருக்கும். மாற்றுவழி என்பது நடப்பதற்கும் பயணம் செய்வதற்கு மட்டுமல்ல நம் மனத்திலும் சிந்தனையிலும் உடன் வந்து கொண்டேயிருக்கும். அதற்கான உரிய சூழலும் சந்தர்ப்பமும் வாய்க்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
மாற்றுவழிச் சிந்தனை என்பது ஒரு விசயத்தை இப்படிதான் சிந்தித்து செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளைத் தற்காலிகமாக மறந்துவிட்டு வெவ்வேறு விதங்களில் சிந்தித்து செயல்படுவது. பெரும்பாலும் இந்த மாற்றுவழிச் சிந்தனைகளால் நேரம் மிச்சமாவதோடு கடின உழைப்பில்லாமல் எளிதாக சிக்கல் களைந்து மேலும் உற்சாகத்தோடு செயல்படும் நிலையை எய்த வாய்ப்புள்ளது.
நமது புராணங்களில் கூட கடவுளர்களே மாற்றுவழிச் சிந்தனையில் செயல்பட்டு வெற்றியடைந்திருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு நாரதர் கொடுத்த ஞானப்பழத்தைப் பெறுவதற்கு கணபதியும் முருகனும் போட்டியிட்ட கதையை அறிந்திருப்பீர்கள். ‘யார் இந்த உலகத்தை மூன்று முறை சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்’ என்று போட்டி தொடங்குகிறது.
முருகன் உடனே மயிலோடு புறப்பட்டு உலகைச் சுற்ற தொடங்குகிறார். ஆனால் கணபதியோ மாற்றுவழிச் சிந்தனையை மேற்கொண்டார். ‘அம்மை அப்பன்தானே எனக்கு உலகம். இந்த உலகைச் சுற்றுவதைவிட என் பெற்றோரைச் சுற்றி வருவது உலகைச் சுற்றுவதாகாதா’ என நாரதரிடம் தெளிவடைந்து ஞானப்பழம் பெற்றது புராணமானாலும் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கணபதியின் மாற்றுவழிச் சிந்தனையையே.
பள்ளிச் சூழலில் ஏற்கெனவே பிறரிடமிருந்து பெறப்பட்ட முன்முடிவுகளானது மாற்றுச் சிந்தனைக்குப் பெருந்தடைக்கல்லாக அமைகிறது. முன்னமே மூளையில் திணிக்கப்பட்ட தகவல்களானது வித்தியாசமான மாற்றுவழிச் சிந்தனையைப் பெரிதும் பாதிக்கிறது. மரபுரீதியாக காலங்காலமாக ஒருவரிடமிருந்து வழங்கப்பெற்று மனத்தில் கொள்ளப்படும் முன்முடிவானது மாற்றுச் சிந்தனையின் வாயில்களை அடைத்துவிடுகிறது
கல்வியில் மாற்றுவழிச் சிந்தனை என்பது ஒழுங்குகளை மீறாமல் சட்டத்தை புறந்தள்ளாமல் வழக்கமான மாணவர் சிந்தனைத் தடத்தை மாற்றி மேலும் ஆழ்நோக்கு நிலையை வளர்ப்பதேயாகும். ஒரு விசயத்தை இப்படித்தான் அணுக வேண்டும் என்று கல்வி உலகம் வரையறுத்து வைத்திருக்கும் விதிமுறைகளை மாற்றி, கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, குறைந்த நேரத்தில் நிறைந்த பயன் எய்துவதோடு கற்றலில் உள்ள மலர்ச்சியைத் தூண்டும் ஒரு பெருமுயற்சிதான் இந்த ஆய்வை மேற்கொள்ளும் முக்கிய நோக்கமாகும்.

4.   அகத்தூண்டலை ஊக்கும் மாற்றுவழிச் சிந்தனைக் கற்றல்கற்பித்தல்
மாற்றுவழிச் சிந்தனை என்பது நடனம், ஓவியம் போன்ற கலைகள்போல் பிறவியில் அமைந்தாலும் சிக்கல் ஏற்படும்போது பெரும்பாலோர் தம்மையறியாமலே இம்முறையைப் பின்பற்றத் தவறுவதில்லை. வழக்கத்தில் எந்த ஒரு பணியையும் இப்படிதான் செய்யவேண்டும் என்று எழுதப்படாத ‘நேர்’ வழிமுறை இருக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்றி யோசிப்பதைத்தான் மாற்றுவழிச் சிந்தனை என்கிறோம்.
ஆசிரியரொருவர் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களின் கூட்டுத்தொகையை யார் விரைவில் சொல்வது எனக் கேட்டார். பலரும் 1+2+3+4+5+6+7+8+9 = 45 என விரல் விட்டுக் கூட்ட ஒரு மாணவன் மட்டும் எண்களைப் பத்தின் அடிப்படையில் இணையாக்கி  (1+9, 2+8, 3+7, 4+6, +5= 45) என்று நொடியில் பதில் சொல்கிறான்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் எல்லா மாணவரும் நேர்வழியைப் பயன்படுத்த அந்தக் குறிப்பிட்ட மாணவன் பயன்படுத்திய நுட்பத்தைத்தான் மாற்றுவழிச் சிந்தனை என்கிறோம்.
மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் நினைவில் எளிதாக வைத்திருப்பதற்கு ஆசிரியர் மாற்றுவழிச் சிந்தனை மூலம் ஊக்கலாம். வகுப்பறையில் அறிவியல் ஆசிரியர் கிட்டப் பார்வை உள்ளவர் குழி ஆடியும் தூரப் பார்வை உள்ளவர் குவி ஆடியும் அணிய வேண்டும் என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் எத்தனை மாணவர்களின் நினைவில் நிலைத்திருக்கும். அதையே ‘கிட்டக் குழி வெட்டி எட்டக் குவி என்ற தொடரால் அகத்தூண்டலை உண்டாக்கலாம். இத்தொடரை விளக்கினால் கிட்டத்தில் குழி வெட்டி மண்ணை தூரத்தில் குவித்து வைக்கிறோம். இதை நினைவில் வைத்துக்கொண்டால், கிட்டப் பார்வைக்குக் குழி ஆடி, தூரப் பார்வைக்கு குவி ஆடி என்பதை மாணவர் எளிதில் நினைவில் நிறுத்திக் கொள்வர்.
தினமும் நாளிதழ் படிக்கிற அனைவரும் எல்லா விளம்பரங்களையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. நாளிதழில் வெளிவரும் விளம்பரங்களுள் ஏதேனும் ஒரு விளம்பரம் தலைகீழாகவோ வித்தியாசமாகவோ அச்சிடப்பட்டிருந்தால் வாசிப்பவர் நினைவிலிருந்து அது தப்பாது. இயற்கையில் நடக்கும் இதையே நாமாக மாற்று வழியில் சிந்தித்துக் கற்பதே ஒருவித புத்திசாலித்தனம்தான். இம்மாற்றுவழிச் சிந்தனையைப் பயன்படுத்தி நினைவாற்றலை திறம்பட வளர்த்துக் கொள்ளமுடியும்.
எதையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாமல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டால் மாற்றுவழிச் சிந்தனையால் எதையும் அடையலாம். ஆனால் கற்பனைக் காட்சியில் எல்லாக் கூறுகளும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளதாக இருப்பது அதிமுக்கியம். எப்போதும் பார்க்கும் கோணத்தை கொஞ்சம் மாற்றினாலே அதன்மூலம் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு காட்சியைப் பார்த்த உணர்வும் சிந்தனையும் மகிழ்ச்சியும் பெறலாம்.

5.   மாணவர் சிந்தனையை மையப்படுத்தும் கருத்தூற்று முறைமை
‘மனமும் வான்குடையும் ஒன்று’ என்று ஒரு மேலைநாட்டு பொன்மொழி உண்டு. இவை இரண்டும் திறந்திருந்தால்தான் பயன் தரும். கற்றல்கற்பித்தலில் எந்த ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும்போதும், அதைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாணாக்கரைத் தூண்ட வேண்டும். மாணாக்கரின் கோணங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாவிடினும் அசட்டுத்தனமாகத் தோன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அவ்வாறு சிந்திப்பதைத் தூண்டிக் கொண்டே இருத்தல் அவசியம். ‘சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்’ என்று சொல்வது தப்பானது. ஏற்கெனவே இருக்கும் புவி ஈர்ப்பு விசையை மற்றவரைவிட மாறுபட்ட கோணத்தில் அடையாளம் கண்டதுதான் அவரின் சாதனை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும்.
கற்றல்கற்பித்தலில் கருத்தூற்று முறைமையானது மாணாக்கர் மாற்றுவழிச் சிந்தனைக்குப் பயன்படும் சிறந்த மேலாண்மை உத்தியாகும். ஒரு குறிப்பிட்ட சிக்கலை எடுத்துக்கொண்டு அனைவரும் அதைத் தீர்ப்பதொன்றே நோக்கமாக எண்ணிச் செயல்பட ஆசிரியர் வழிகாட்டலுடன் தூண்டினால் சிறந்த விளைபயன் எய்தலாம். எடுத்துக்காட்டிற்கு பணி ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியருக்கு எத்தகைய வித்தியாசமான பரிசு தரலாம் என்பதைக் கருத்தூற்று முறைமையில் மாணாக்கரிடம் கேட்கலாம். என்ன வித்தியாசமான பரிசுப்பொருளை ஆசிரியருக்குத் தருவார்கள் என்பதைவிட கிடைத்த பணத்திற்கொப்ப கைக்கடிகாரம், நூல், சட்டை என ஒவ்வொருவரும் காரண காரியத்தோடு தொடர்புப்படுத்திச் சொல்வதை கண்டறியலாம். பல மூளைகளின் கற்பனையை ஒன்றாகச் சாறு எடுத்துத் தரக்கூடிய அற்புத அணுகுமுறை இது. இந்த மாணாக்கர் மூளைகளெல்லாம் ஒன்றாகச் சேரும்போது கிடைக்கும் விவாதக்களம் புதிய சிந்தனைகளுக்கான சூழலை உருவாக்கித் தருகிறது.
இந்த மாற்றுவழிச் சிந்தனையான கருத்தூற்றுமுறைமை வகுப்பறையில் செயல்படுத்தும்போது ஆசிரியர் சிக்கலை எளிமையாக விளக்குவதோடு எம்மாதிரியான தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மாணாக்கரின் கருத்து சரியா பிழையா என்றெல்லாம் புறந்தள்ளாமல் தங்கள் சிந்தனைக்குத் தோன்றுவதைத் துணிவோடு கூறுவதற்கு ஊக்கமூட்ட வேண்டும். அவற்றை கவனமாகப் பதிவு செய்வதோடு மாற்றுவழிச் சிந்தனைகளை வரவேற்கும் விதத்தில் மாணாக்கரைத் தூண்டுவது அவசியம். அந்தத் தீர்வுகளில் மறுத்துப் பேசும் விவாதங்களை முறைப்படுத்தி ஆரோக்கியமான அலசல் ஏற்பட நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா மாணாக்கருக்கும் பேச வாய்ப்பளிப்பதோடு ஒரே சிந்தனையை நெடுநேரம் விவாதித்து வீணடிப்பதைத் தவிர்ப்பதோடு அடுத்த நிலைக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஒருவருடைய மாற்றுச் சிந்தனையை மற்றொருவர் ஏற்றுக் கொண்டு மேம்படுவதை ஊக்கவேண்டும். அனைத்து மாணாக்கரின் சிந்தனைகளைத் தொகுத்துச் சொல்லி வழிநடத்துவதும் அவற்றில் சிறப்பான மாறுபட்ட சிந்தனையை தேர்வு செய்து பாராட்டுவதும் மாணாக்கர் மனத்தில் நம்பிக்கை உரமூட்டும்.
புராணங்களில் தறிகெட்டு ஓடாமல் ஏழு குதிரைகளையும் கடிவாளத்தால் சரியான திசைநோக்கிச் செலுத்தும் சூரிய பகவானப்போல் ஆசிரியர் செயல்பட வேண்டும். தொடக்கத்தில் ஆசிரியர் செய்யும் இப்பணியை நாளடைவில் சுழல்முறையில் மாணாக்கரே செயல்படுத்த ஊக்குதல் அவசியம். ஆசிரியர் தேவையானபோது மட்டுமே உள்நுழைவு செய்தல் வேண்டும். இம்முறை வழி மாணாக்கர் மையக் கற்றல் அதிகரிப்பதோடு தங்கள் செயல்பாட்டில் தன்னிறைவு கொள்ள வாய்ப்புண்டு.

6.   மாணவர் மனத்தை விரிவாக்கும் மனவோட்டவரை
மாணாக்கரின் அறிவில் மாற்றுவழிச் சிந்தனைகளை விதைப்பதற்கு மனவோட்டவரை முறையை மேற்கொள்ளலாம். இயல்பிலேயே மாணாக்கர் மனம் எழுத்துகளை மட்டுமல்ல படங்கள் வண்ணங்கள் போன்றவற்றை தொடர்புப்படுத்தியே பார்க்க விரும்புகிறது. எதையும் ஓர் ஒழுங்கோடு பார்க்க கற்றல்கற்பித்தலில் மாணாக்கர் மனத்தைப் பழக்கினால் அவர்கள் பொதுத்தன்மையோடும் தர்க்கரீதியாகவும் நோக்கும் ஆற்றல் பெறுவர். மேலும் எழுத்துக்களாக அனைத்தையும் கொடுப்பதைவிட மனவோட்டவரை துணையுடன் காட்சிபூர்வமாக்கினால் புதிய  உடனடித் தீர்வுகளை எளிதில் புரிந்து கொள்வர்.
பாடத்தில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்வரை மனவோட்டவரையில் மையத்திலிருந்து முதல் கிளைகள், வேறு உபகிளைகள், சிறுகிளைகளென சிந்தனையைப் பல கோணங்களில் படரவிடலாம். ஒவ்வொரு கிளையிலும் குறைந்த வார்த்தைகளில் நிறைய விசயங்களைச் சொல்லப் பழக்க வேண்டும். வெளிப்படும் அனைத்துக் கருத்துகளையும் வரைபடமாகக் குறித்து வைக்க மாணாக்கரைப் பழக்கினால் எதிர்காலத்தில் வாழ்வில் எதிர்ப்படும் எந்தச் சிக்கலையும் மனவோட்டவரைவின் மூலம் அணுகி வெற்றி பெறுவர்.
அன்றாட கற்றல்கற்பித்தல் செயல்பாடுகளில் வண்ணங்கள் மாணாக்கர் மனத்தில் பல்வகையான தாக்கங்களையும் குணங்களையும் ஏற்படுத்துகின்றன. ஆக இம்மனவோட்டவரை மேலும் மாணாக்கர் மனத்தில் ஆழப்பதிய மூன்று அல்லது நான்கு விதமான நிறங்களை பயன்படுத்த ஆசிரியர் ஊக்குதல் சீரிய விளைபயன் நல்கும். தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் அவசியம். எடுத்துக்காட்டுக்கு முதன்மைத் தீர்வுக்கு பச்சை நிறமும் அடுத்த நிலைக்கு மஞ்சள் நிறமும் குறைவான சாத்தியம் உடையவற்றுக்கு சிவப்பு நிறமுமென வகைப்படுத்தத் தூண்டலாம்.
மாணாக்கர் மனவோட்டவரையைக் கைவரப்பெற்ற நிலையில் ஏற்புடைய பொம்மைச் சின்னங்களையும் இணைத்துக் கொள்ள தூண்டலாம். மனவோட்டவரையில் எங்கெல்லாம் புதிய சிந்தனை இருக்கிறதோ அங்கெல்லாம் சூரியனையும் நிச்சயமில்லாத விசயங்களுக்கு கேள்விக்குறியையும் இதுபோல ஏற்புடையவற்றை  வரைய மாணாக்கரைத் தூண்டும்போது மகிழ்ச்சியான விளையாட்டாய் கற்றலில் ஈடுபடுவர். மனவோட்டவரையில் தகவல்களை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமென்று கருத்து இருந்தாலும் மாணாக்கர் நிலைக்கு இடமிருந்து வலப்பக்கமாக எழுதத் தூண்டுதல் வேண்டும். மையத்தில் தொடங்கிப் பிரியும் கிளைகளை அவற்றின் முக்கியத்துவ அடிப்படையில் கடிகாரச் சுழற்சிமுறையில் எழுதுதல் நலம். கடிகார முள் பன்னிரண்டில் தொடங்கி நகர்வதுபோல மாணாக்கரின் மனவோட்டவரை கிளைகளும் விரிந்தால் வாசிப்பதற்கு வசதியாக இருக்கும்.
வண்ணங்களையும் சின்னங்களையும் சரியான ஒழுங்குடன் பயன்படுத்தி மனவோட்டவரை செய்தால் மீள்பார்வை செய்யுங்கால் நேரம் மிச்சமாவதோடு  வண்ணங்களே பல விசயங்களை சட்டென்று குறிப்பாக உணர்த்திவிடும். மேல்நிலை வகுப்புகளில் காகிதத்தில் வரையப்பட்ட இந்த மனவோட்டவரையை மென்பொருள் துணைக்கொண்டு கணினியில் வரைவதற்கும் தூண்டலாம். மனவோட்டவரை மாணாக்கரின் வழக்கமான சிந்தனைப் போக்கிலிருந்து விலக்குவதோடு சார்பு எதிர்வு கருத்துகளையும் அலசி ஆராய்வோதடல்லாமல் புதிய முறையில் யோசிக்கவும் அகத்தூண்டலை ஏற்படுத்துகிறது.

7.   தொகுப்புரை
வகுப்பறைக் கற்றல்கற்பித்தலில் ஏற்படும் எத்தகையச் சிக்கலையும் மேற்கண்ட மாற்றுவழிச் சிந்தனையைப் பாடத்தினூடே செயல்படுத்துவதனால் ஆசிரியர் சீரிய விளைபயன் அடையலாம். இம்முறைமையானது மாணாக்கரிடம் நேர்மறைப் பண்பையும் இணக்கப்போக்கையும் தன்னம்பிக்கையையும் பிறரின் மாற்றுக்கருத்தை ஏற்கும் திறந்த மனப்போக்கையையும் வளர்க்கிறது. இம்மாற்றுவழிச் சிந்தனையானது நாளடைவில் மாணாக்கர் கற்பனைத் திறத்துக்கேற்ப எந்த வரையறைக்குள்ளும் கட்டுப்படாமல் வித்தியாசமாகச் சிந்தித்து தினசரி வாழ்வில் வெற்றியடைய வழிவகை செய்கிறது. மாணவர் இதற்குமுன் தம்வாழ்வில் கற்பனைகூடச் செய்திராத பல புதிய வாசல்களை இம்மாற்றுவழிச் சிந்தனைகள் நிச்சயம் திறந்து வைக்கும்.




துணை நூல்கள்:

மீனாட்சி சுந்தரம், அ. கல்விப் புதுமைகள் மற்றும் மேலாண்மை, காவ்யமாலா
   பப்ளிசர்ஸ், சின்னாளப்பட்டி, 2010

சாலமன், சிபிகே. மாறுபட்டு யோசித்தால் ஜெயிக்கலாம், கிழக்குப் பதிப்பகம்,
   சென்னை, 2009

David J.Schwartz, The Magic of Thinking BIG,  New Literacy Learning, 2007

Neil, Diane & Carol, Educational Game: Answering The Call, United Publications,
   London, 2007

இணையதளம்:

Mind manager (http://www.mindjet.com/)









மின்னியல் விளையாட்டுகள் மூலம் சுயக் கற்றலை மேம்படுத்துதல்


1.       அறிமுகம்
ஒவ்வொரு குழந்தையும் தனியாகவோ கூட்டாகவோ சுயமாக விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்களாகவே பிறக்கிறார்கள். உண்மையிலேயே இந்தச் சுயமான விளையாட்டுகள்தான் நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப அவர்களை உடல், மனம், அறிவு, ஆன்மிக நிலைகளில் முழுமைப் பெற்ற மாந்தராக பின்னாளில் உருவாக பெருந்துணை புரியும். குழந்தைகளின் நுண்ணுணர்வை மதித்து அவர்களுக்கேற்ற மின்னியல் விளையாட்டுகளின் மூலம் தேவையான சுதந்திரம் அளித்து, ஒவ்வொரு மாணவரின் சுயக்கற்றலைத் தூண்டினாலே கல்வி உலகம் மிகச் சிறந்து விளங்கும் என்பதை முன்மொழிகிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

நம் சமூக அமைப்பில் விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்காகவும் வெறுமனே நேரத்தைக் கழிக்கின்ற செயலாகவும் தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. அதற்கு மாறாக கற்றலால் களைத்துப்போன குழந்தைகளுக்கு விளையாட்டானது மனத்தாலும் அறிவாலும் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிழலாக உதவும் ஒன்றாகவும் திகழ்கிறது. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மன மலர்ச்சிக்கும் அறிவு திறப்புக்கும் ஆன்மிக விழிப்புக்கும் இன்றைய நவீன மின்னியல் விளையாட்டு மிக இன்றியமையாததாகும்.
                                         
2.       கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகள்
உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கினால், குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும்  தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தன் வயதுக்கேற்ற மனத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தேவையான விளையாட்டைத் தானே உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நுண்ணறிவுடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூரிப்புடன் பலநூறு தடவை திரும்பத் திரும்ப சளைக்காமல் விளையாடுவது, அதனுடைய தொடர்ந்த வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகிறது. சிறுவர்களின் அறிவுக்கும் மனவளர்ச்சிக்கும் சிறந்த விளைபயன் நல்கும் ஏற்புடைய மின்னியல் விளையாட்டுகள் மனத்தைக் கவரும் வகையில் அமைந்ததாகவும் மனமகிழ்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை செயல்பாட்டைத் தூண்டுவதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம் (Rubin,Fein & Vandanberg, 2009)
இன்றைய கல்வி உலகில் மின்னியல் விளையாட்டுகளின் வரவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பயன் நல்குவதாக அமைந்துள்ளது. மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆசிரியரின் கற்பித்தலில் எளிமை, ஈர்ப்பு, வளமை போன்ற புதுமைகள் நிகழ்ந்துள்ளன. மாணாக்கர் கற்றலில் மனமகிழ்வு, இனிமை, நுணுக்கம் விரிவடைந்துள்ளது கண்கூடு. காலச்சுழச்சிற்கேற்ப மின்னியல் விளையாட்டுகள் கற்றல் கற்பித்தலுக்கு துணைநல்கும் பொருட்டு பல்வகை மென்பொருள்களாக விற்பனைச் சந்தையிலும்  வலைத்தளங்களில் நாள்தோறும் பெருகி வருகின்றன.

இன்றைய கற்றல்கற்பித்தல் விளைபயன் மிக்க தாக்கங்களையும் ஆக்ககரமான உருமாற்றங்களையும் மின்னியல் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ளதை ஆய்வுகள் வழி கண்டறியலாம். இன்றைய மின்னியல் விளையாட்டுகள் சிறுவர்களை பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஆர்வத்தோடு கற்கும் ஆற்றலைத் தூண்டும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன (Ardyanto et al.,2008). இந்த மின்னியல் விளையாட்டுகள் கற்றலில் சிறுவர்களின் சிந்தனைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் பன்மடங்கு ஆர்வத்தையும் தூண்டும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது (Sobel & Maletsky., 2005)

3. கல்வியில் மின்னியல் விளையாட்டுக் கோட்பாடுகள்

இன்றைய நவீன கற்றல்கற்பித்தல் சூழலில் எந்தவொரு பாடப்பொருளறிவும் மாணாக்கரின் பட்டறிவுக்கு நேரடி தொடர்புடையதாக இருப்பது இன்றியமையாததாகிறது. நெடுநாள் அச்சு ஊடகங்களின் வாயிலாகவே ஆசிரியர் நடத்திய கற்றல்கற்பித்தல் மாணாக்கர் பெரும்பாலோர்க்கு பெரும் மனச்சோர்வையும் சலிப்பையுமே தந்துள்ளது. ஆக கற்றலில் புத்துணர்வையும் சுயத்தேடலையும் ஏற்படுத்தும் விதத்தில் மின்னியல் விளையாட்டுகள் பெரும் பங்காற்றுகின்றன. மாணாக்கர் தாமாகவே சுயமாகக் கற்பதற்கும் புதியனவற்றைக் கண்டறிவதற்கும் தொடர்ந்து அகப்புற நிலைகளில் தம்மை விரிவாக்கம் செய்து கொள்வதற்கும் மின்னியல் விளையாட்டுகள் உறுதுணை புரிகின்றன. மின்னியல் விளையாட்டானது ஏரணமாகவும் விளையாட்டு விதிகளையும் வரையறைகளையும் சுய மதிப்பீடு செய்யும் முறைகளையும் கொண்டிருக்கும். மேலும் மாணாக்கர் சுயமாக தம்மைத் தாமே மதிப்பீட்டு மேம்படுத்திக் கொள்வதற்கு இம்மின்னியல் விளையாட்டுகள் வழிவகுக்கும்.

4. மின்னியல் விளையாட்டுகளின் வழிக் கற்றல்கற்பித்தல்
சுயக்கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியரானவர் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் மின்னியல் விளையாட்டுகளை அமைவதை ஆசிரியர் முதலில் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து மாணாக்கர் அகவைக்கும் அறிவுநிலைக்கும் மனவளர்ச்சிக்கும் உகந்ததாக அமையும் மின்னியல் விளையாட்டை உறுதிபடுத்துதல் அவசியம். மேலும் அவ்விளையாட்டுகள் போட்டியுணர்வை கொண்டதாக அமைதலும் வேண்டும். மின்னியல் விளையாட்டுகளின் உள்ளடக்கம் மாணாக்கர் நிலைக்கேற்பவும் கற்றல் நெறிகளுக்கேற்பவும் தெரிந்ததலிருந்து தெரியாததை நோக்கியதாக இருப்பதை ஆசிரியர் வகைப்படுத்துதல் வேண்டும். மாணாக்கர் தங்கள் விருப்பத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் குறிப்பிட்ட காலவரையறையின்றி எந்நேரத்திலும் மின்னியல் விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆனால் பள்ளிச் சூழலில் காலையில் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்னரும் ஓய்வுவேளையின்போதும் பள்ளி முடிந்த பின்னரும் மாணாக்கர் ஈடுபடுவதை ஆசிரியர் திட்டமிட்டு ஊக்கலாம். ஆசிரியர் மாணாக்கர் இடையிலான கற்றல்கற்பித்தல் தடைகளை முறியடிப்பதோடு சுயத் தேடலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றது.

 


மாணக்கரின் சுயக்கற்றலை மேம்படுத்தவும் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையோடு செயல்படுத்தவும் மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் துணைபுரியும்(Smaldino, Rusesell,Heinich&Molenda ;2005). மின்னியல் விளையாட்டுகளை மேற்கொள்ளும்போது மாணாக்கர் சரி அல்லது தவறு அடிப்படையில் தெரிவு செய்யும்போது இரண்டு மாறிகளுக்கிடையிலான பயன்பாட்டை முறையாக அறிந்து செயல்படுவர். சரியான விடையைத் தெரிவு செய்த மாணாக்கர் தொடர்ந்து சவாலான விளையாட்டை மேலும் தொடர்வர். தவறான விடையைத் தெரிவு செய்பவர் குறையைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு சரியான விடையைப் பற்றிய புதிய அறிவையும் பெறுவர்.

மூளையானது புதிய அறிவை உள்வாங்கி, நிர்வகித்து, வகைப்படுத்தி, சேமித்து தேவையான போதில் வெளியிடுவதே கற்றலில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மாணாக்கரின் முன்னறிவையும் பட்டறிவையும் கருத்தில் கொண்டு பாடங்களுக்குரிய மின்னியல் விளையாட்டின் அறிவும் உள்ளடக்கமும் முறைப்படுத்தப்படுவது அவசியமாகும். மாணாக்கர் ஏற்கெனவே தங்களிடமுள்ள முன்னறிவின் அடிப்படையிலே புதிய அறிவைப் பெறுவர். மின்னியல் விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் தங்கள் முன்னறிவு சார்ந்தும் உணர்வு சார்ந்தும் புதிய பல சிக்கல்கள் களையும் அல்லது முற்றாகத் தீர்க்கும் வழியைக் கண்டறிவர் (Steffe & Kieren ;1994)

5. கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுகள்
·            சவால் விளையாட்டுகள்
சவால் விளையாட்டானது மிக விரைவில் விளையாடப்பட வேண்டியதொன்றாகும். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மாணாக்கர் சிக்கல் களைவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
·            புதிர் விளையாட்டுகள்
புதிர் விளையாட்டுகள் மாணாக்கரின் சிந்தனைத் திறப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு வாழ்வியல் நிலைகளோடு தொடர்புப்படுத்தும் தன்மையையும் கொண்டதாக அமைந்திருக்கும்.
·            நிர்வகிப்பு விளையாட்டுகள்
சுய உருவாக்க திறத்தின் அடிப்படையில் இவ்வகை விளையாட்டுகள் அமைந்திருக்கும். குறைந்த மூலங்களைக் கொண்டு நகரம், கட்டடம் போன்றவற்றை உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
·            தேடுதல் விளையாட்டுகள்
கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பெற்ற தேடுதல் விளையாட்டுகளில் மாணாக்கர் வரையறுக்கப்பட்ட விதிகளைக் கட்டாயம் கடைப்பிடித்து விளையாடுவதோடு கற்பனைத் திறத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருக்கும்
·            போல செய்யும் விளையாட்டுகள்
விளையாட்டாளரே முதன்மை கதைமாந்தராகி புதிய ஆற்றலும் திறனும் பெற்று எதிரிகளை அழித்து வெற்றி நாட்டுவதாக அமையும். இவ்வகை விளையாட்டுகளின் வழி சிக்கல் தீர்த்தலும், அனுமானித்தலும், தடையைச் சாதூரியமாக எதிர்க்கொள்ளும் முடிவெடுக்கும் திறமும் கிடைக்கப்பெறும்.

மேற்குறிப்பிட்ட மின்னியல் விளையாட்டுகள் பலவகை வடிவங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. நவீன மின்னியல் விளையாட்டுகள்  மாணாக்கரின் மொழியாளுமைக்கும் பயன்பாட்டிற்கும் உகந்ததாகவே திகழ்கின்றது. பெரும்பாலும் எழுத்துக்களாலான பகுதிகளும் படங்களுடன் கூடிய வரிபடக் கருவிகளால் அமைந்தவையும் செவிப்புலனுக்கேற்ற ஒலி வகைகளும் கட்புலனுக்கேற்ற ஒளியிலான அசைவு படங்களும் இவற்றுள் அடங்கும்.

6. மின்னியல் விளையாட்டுகளின் கூறுகள்
·            வரையறுக்கப்பட்ட இலக்கு
·            விதிமுறைகளும் சவால்களும்
·            போட்டியுணர்வும் கற்பனை விரிவும்
·            பாராட்டும் மனநிறைவும்

மின்னியல் விளையாட்டுகள் மூலம் ஆண் பெண் இருபாலரிடையேயும் தன்னம்பிக்கையை அதிகரித்து கற்றல் விளைபயனானது பன்மடங்கு பெருகுகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன (Matthew;2007). மேலும் மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கரின் அறிவில் நேர்மறைச் சிந்தனைகளை விதைப்பதோடு மதிப்பீட்டு அடைவுநிலையைக் கூட்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது (Neil, Diane & Carol; 2007). மின்னியல் விளையாட்டுகளால் கட்டுப்படுத்தப்பட்ட மாறி வகுப்புக்கும் கட்டுப்படுத்தப்படாத மாறி வகுப்புக்கும் இடையிலான முடிவுகள் மிகுந்த வேறுபாட்டைக் காட்டுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட வகுப்பின் அடைவுநிலை கற்றல் செயல்பாடுகளில் பன்மடங்கு உயர்வைக் காட்டுகிறது (Emram Yunus;2010).

7. தொகுப்புரை
இந்நவீன மின்னியல் விளையாட்டுகள் வழி ஆசிரியரை மையப்படுத்திய பழமையான கற்பித்தல் முறை மெல்ல மறைந்து மாணாக்கரின் சுயக்கற்றல் மேலோங்க வழி செய்கிறது. எந்த வற்புறுத்தலின்றியும் குறுக்கீடு இன்றியும் மாணாக்கர் தாமே விரும்பிக் கற்கும் மகிழ்ச்சியான கற்றல் சூழலும் ஏற்படுகிறது. மாணாக்கர் முழுக் கவனத்தோடும் கற்றலில் தன்னம்பிக்கையோடும் ஈடுபட வழிவகுக்கிறது.
இம்மின்னியல் விளையாட்டுகள் மாணாக்கர் தேவையறிந்து உதவவும் தொடர்ந்து அவர்கள் சுயமாகச் செயல்படவும் ஆசிரியருக்குத் துணை புரிகிறது. கற்றலில் ஆசிரியரிடமிருந்து ஒருவழிப்பாதையாக பெறும் அறிவாக இல்லாமல் பல்வழிப்பாதையாக மின்னியல் விளையாட்டுகள் விளங்குகிறன.(Rahimi Md Saad et al;2007).
மூளையில் புதிய உயிரணு இணைப்புகள் உருவாவதற்கு இந்த மின்னியல் விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன. தாங்களாகவே விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் பெரியவர்களும் கலந்துகொண்டால் அவர்களுக்கு நம்முடன் இருக்கும் இணைப்பும் உறவும் மேலும் ஆழமாகும். இவ்வாறு தன்னிச்சையாக விளையாடும் மின்னியல் விளையாட்டுகளின் மூலம் புதிய அறிவையும் அனுபவத்தையும் பெற வாய்ப்புண்டு. ஒரு மாணாக்கர் ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற மின்னியல் விளையாட்டுச் சூழலை உருவாக்கிக் கொடுத்தாலே அவர்களின்  நுண்ணறிவு மிகச் சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும்.


துணை நூல்கள்:
மீனாட்சி சுந்தரம், அ. கல்விப் புதுமைகள் மற்றும் மேலாண்மை, காவ்யமாலா பப்ளிசர்ஸ், சின்னாளப்பட்டி, 2010

நக்கீரன், பி.ஆர். தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் ஒரு கண்ணோட்டம், தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை, 2010

Matthew Johnson, The Effective Integration of Digital Games and Learning Content, New Literacy Learning, 2007

Neil, Diane & Carol, Educational Game: Answering The Call, United Publications, London, 2007




சனி, 29 ஆகஸ்ட், 2015

‘வானகமே இளவெயிலே மரச்செறிவே...நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ’ என்ற பாரதியின் குரல் என்னுள் ஓராயிரம் முறை ஓங்கி ஒலிக்கிறது. மனிதனுக்கு மட்டுமல்ல பிறந்த எல்லா உயிர்களுக்கும் என்றுமே தாய்மடியாய் விளங்குவது  வனம்தான். தொல்காப்பியர் பகரும் பல்லுயிரும் சரண் புகுந்து வாழ்வைத் தொடங்கியது இந்த வனமென்னும் வீட்டில்தான். அடர்ந்த மரங்கள் வனத்தின் காவலர்கள்; செடிகொடி புல்பூண்டுகள் வனத்தின் மானங்காக்கும் மேலாடை; பறவைகளின் சிறகடிப்பு வனத்தின் விடுதலை; வண்டுகளின் ரீங்காரம் வனத்தின் உயிர்ப்பு; விலங்குகளின் துள்ளல் வனத்தின் வசீகரம்; பச்சை இலைகள் வனத்தின் முகம்; உயர்ந்த மலைகள் வனத்தின் முகவரி; கல்லும் மண்ணும் வனத்தின் திருமேனி; சங்கீத இலயத்தோடு வீழும் அருவி வனத்தின் இதயத்துடிப்பு; ஓடும் நதி வனத்தின் வெண்குருதி...மனிதன் செய்யும் கொடுமை எல்லாம் பொறுத்துக் கொண்டு கருணைமிக்க கடவுளாக இன்னும் இந்த வனம்தானே காத்து வருகிறது. இந்த உயிர்ச்சங்கிலியில் எந்தக் கண்ணியும் அறுந்துவிடக் கூடாதென இந்த வனம்தானே நம்மைக் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. வனம் இருந்தால்தான் முகில்கள் கர்ப்பம் தரிக்க முடியும். வனம் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் உயிர்க்குலம் முழுதும் இன்புற்று வாழ முடியும். பிணமாவதற்கு முன்னால் மனிதா இனியாவது வனத்தை வணங்குவாயா? 
நானறிந்தவரை தமிழ்மொழி வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாளை முற்றும் முழுதாக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்குத் தமிழர்கள் நன்றி பாராட்டுதலும் அவர்களின் தொண்டினைப் போற்றுதலும் மிகக் குறைவே. வாழும் காலத்தில் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் உச்சபச்ச பாராட்டும் புகழும் தப்பித்தவறி மொழிக்காகப் பாடாற்றிய அறிஞனுக்குக் கிடைப்பது மிகக் குறைவே. அந்த வகையில் இந்த மலைநாட்டில் நான் நெருக்கமாகப் பார்த்துப் பழகிய தமிழறிஞர்கள் சிலரில் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் என்றுமே தமது எண்ணத்திலும் எழுத்திலும் ஒட்டுமொத்த வாழ்விலும் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். அமுதத் தமிழைத் தம் உயிருக்கு நேராகக் கருதியவர். அவரின் பேச்சும் மூச்சும் மட்டுமல்ல இருதயமும் குருதியும் தமிழாகவே துடித்தது. தமிழின் தொன்மத்தையும் வளத்தையும் தமிழரின் பண்பாட்டுச் செழுமையையும் பறைசாற்றும் தொல்காப்பியத்தை முழுதும் சாறுபிழிந்து அந்தத் தமிழமுதத்தை நாமும் மாந்தியுண்பதற்கு வழியமைத்துக் கொடுத்தது ஐயாவின் மிக உன்னத அரும்பணி. ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’ போன்ற நூல்கள் தொல்காப்பியத்தின் அற்புதப் பிழிவு. இன்று உலக அரங்கில் பிற இனங்களைக் காட்டிலும் தலைநிமிர்ந்து நடக்க முடியுமென்றால் தமிழருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் கருவியும் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை என்று உறுதியாக நம்பினார். அதற்காக தொல்காப்பியத்தை அகழ்ந்தாய்ந்து ஒவ்வொரு தமிழரும் ஓதியுணரும் வகையில் நாடுதழுவிய நிலையில் பையிலரங்குகளும் இலக்கணப் பட்டறைகளும் விளக்கங்களும் சளைக்காமல் வழங்கினார். அவரின் இந்த அரிய பெரிய முயற்சியை ஏற்றுப் போற்றும் வகையில் இந்த மலைநாட்டிலே முதன்முறையாக நானும் நண்பர்களும் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் வாயிலாக ‘தொல்காப்பியரோடு ஒரு மென்மாலைப் பொழுது’ என்ற தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தோம். அந்தச் சொற்பொழிவுகளை நடத்தும்போது ஐயா முழுக்க தொல்காப்பியராகவே மாறி மிகமிக எளிய முறையில் நமக்கு ஒவ்வொரு சூத்திரத்தின் நுட்பத்தையும் தெளிவுடன் விளக்கி புரிய வைப்பார். பல்கலைக்கழகங்களில்கூட நடைபெறாத இதுபோன்ற உயரிய தொல்காப்பியக் கலந்தாய்வை ஐயாவின்வழி நேரிடையாகப் பெற்றோம் என்ற மனநிறைவு இன்று சற்றே ஆறுதளிக்கிறது. எங்களைப் பின்பற்றி பலரும் அவரை தமிழுக்காக பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியே. இந்த நாட்டைப் பொறுத்தவரை மாணவர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரைக்கும் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் ஏற்படும் ஐயங்களுக்கு சரியான மருந்து தரும் முதன்மை பேராசான் ஐயாதான். எந்த நேரத்திலும் எதைக் கேட்டாலும் உடனுக்குடன் அதற்கான நுட்பத்தையும் விளக்கத்தையும் தரும் நடமாடும் பல்கலைக்கழகம் ஐயா. அவர் தொல்காப்பிய அமுதத்தை துளித்துளியாக வானொலியில் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் பெருமுயற்சியோடு ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ எனும் நூல்வடிவில் கொண்டு வந்துள்ளோம். இந்த நூலின்வழி ஐயாவின் படைப்பை ஆவணப்படுத்துவதோடு அவரின் கண்டடைவை உலகுக்கு உணர்த்தும் கடப்பாடு நமக்குள்ளது. மேலும் தமது குடும்ப நலனை என்றுமே முன்வைக்காத ஐயாவின் குடும்பத்தார்க்கு பொருளுதவி செய்யும் நோக்கிலே இந்த நூலை வெளியீடு செய்கிறோம். துளிரும் 16.9.2015 (புதன்கிழமை- பொதுவிடுமுறை) பாரதி இலக்கிய நெஞ்சங்களும் லுனாஸ் தியான ஆசிரமும் இணைந்து தியான ஆசிரம மண்டபத்தில் மாலை மணி 4.00 முதல் 6.30க்குள் நூல் வெளியீடு செய்யவுள்ளோம். இதுகாறும் பல நன்னெஞ்சங்கள் சிறப்பான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவது பேருவகை அளிக்கிறது. தமிழால் பிழைப்பு நடத்தும் நம்மைப் போன்றவர்கள் அவர்க்கும் குடும்பத்தார்க்கும் மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளோம். காலமெல்லாம் தமிழுக்குப் பாடாற்றியவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில், ரிம.30.00 கொடுத்து இந்நூலைப் பெற்று ஆதரவு நல்குமாறு இந்த நிலைத்தகவலை படிக்கும் தமிழ்த் தொப்புள்கொடி உறவுகளே உங்களை நோக்கி அன்போடும் உரிமையோடும் விழைகின்றேன். தமிழர்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்தானே?


ஞாயிறு, 31 மார்ச், 2013

ஆன்ம இளைப்பாற்றும் ஆறாம் விரல்

தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்கிற மூன்றாவது இலக்கியப் படையல் புதிய புறப்பாட்டோடு மீண்டும் உள்ளவீதியில் மேளதாளத்தோடு உலா வரத் தொடங்கிவிட்டது. பெளர்ணமி நிலவின் பரிணமிப்பில் தித்திக்கும் திருவுள்ளத்தோடு இந்நூல் ஏடுகளை அன்பொழுக புரட்டும்போது இதயத் தாமரை முகையவிழும் மெல்லோசை கேட்கிறது. சிதைந்தும் சிதையாமலும் வேரோடி விட்டிருக்கும் மானிட வாழ்வியல் உள்ளோட்டங்களை உயிரோட்டங்களாக கூர்மையான பார்வையோடும் நேர்மையோடும் எளிய மனிதர்களின் மனசாட்சியாகப் பதிவு செய்திருக்கும் தவத்திருவின் திருவடிக்கு முதற்கண் நன்றி மலர்கள் சொரிகின்றேன். ஆன்மிகத் தேனமுதை தமிழ் ஞானப்பால் கலந்து அறிவு தீஞ்சுவைப் பிழிந்து அன்பு மணம் கமழ வாழ்வியல் சுவைக்கூட்டி தரும் தவத்திருவின் சொற்பொழிவு நாளும் நெஞ்ச முழுவதும் புதியதொரு வைகறை வெளிச்சம் பாய்ச்சுகிறது. தெளிந்த ஞானத்தை இளந்தென்றல் தழுவிச்செல்லும் இனிய பேச்சாலும் எழுத்தாலும் இசைத்துப் புல்லாங்குழலாய் நெஞ்சில் புதுராகம் மீட்டுகிறார். இயல்பான நீரோடை போன்ற அவரின் பேச்சில் இடையசைத்து வரும் தென்றலாய் மண்மணமும் வசந்தத்தின் பூங்கொத்தாய் புன்னகையும் இதயத்தை என்றும் வருடிக் கொடுக்கும். சுவாமி தம்மையே ஆழத் தோண்டி சேர்த்த ஞானத் தெறிப்பின் திவலைகளில் ஆன்ம எல்லைகள் பளிச்சிடுகின்றன. சுவாமியின் சொற்பொழிவின் சொல் வார்ப்புகள் நெஞ்சை ஆட்சி செய்யும் வல்லமைக் கொண்டவை. அவரின் எழுத்தோ எண்ணற்ற கருத்துக் கருவூலங்களில் தத்துவத் தேரோட்டமாய் ராஜபவனி வருபவை. என் இதயத்தில் சுவாமி அவர்கள் அமைதியின் மோனத்தில் ரமணராக, அன்பின் நெகிழ்வில் ராமகிருஷ்ணராக, ஆழ்ந்த சிந்தனையில் ஓஷோவாக, வீறு கொள்வதில் விவேகானந்தராக, இயல்பான ரசனையில் பாரதியாக தெரிகிறார். நான் வனாந்திரக் கனவுகளில் தனிப்பறவையாய் சிறகு விரித்தபோதெல்லாம் அவரின் ஆன்மிக ஆலமரக்கிளைகளில் ஆர்வத்தோடு வந்தமர்வேன். கடலைத் தீராத் தாகத்தோடு தேடும் ஒரு மழைத்துளியின் பசியோடு வரும் எனக்கு மதங்களைக் கடந்து நிற்கும் உண்மைகளால் நெகிழ வைக்கிறார். மரபுகளை மதித்தாலும் மூடப்பழமையின் முனை முறித்து உண்மைகளை நெஞ்சில் நங்கூரமாய் பாய்ச்சும்போது நம் உயிரிலும் பூ மலரும். இன்றைய தலைமுறையால் தீண்டப்படாத பெருஞ்செல்வமாக நமது முன்னோர் விட்டுச் சென்ற புராதன ஆன்மிகக் கருத்துகளால் அமுதம் கடைந்து என் போன்றோரை அதிர வைக்கிறார். சுவாமி அவர்களின் இதயத்தில் அடிநாதமாக ஊறும் மானுட நேசம் கனிந்த ஞானமாக எழுத்து நதியெங்கும் கரைந்தோடுகிறது. உலக வாழ்வில் மானுட உறவைப்போல் மிக இனிமையானதும் அதேவேளையில் மிகச் சிக்கலானதும் வேறெதுவுமில்லை. உறவுகளின் உரசல்களாலும் முரண்பாடுகளாலும் மனமுடைந்தவர்கள் நடந்த பாதையை தாம் தரிசித்த உண்மைகளோடு அரிதாரம் பூசாமல் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இடைவிடாத ஆன்ம விழிப்போடு சுவாமி அவர்கள் கீதையில் திருவாய் மலரும் போதெல்லாம் அயர்வில்லாத காதலனாய் கண்ணனில் நான் கரைந்ததுண்டு. உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களிலிருந்து நழுவி இன்று வெறும் சடங்காய் நிறம் மாறிப்போன சமயத்தின் சாறுபிழிந்து மதம் கடந்த ஆன்மிக விருந்து படைக்கிறார். செவ்வியல் இலக்கியச் சுவையோடும் உபநிடதங்கள் உரைக்கும் உண்மைகளோடும் வரலாற்றுச் சான்றுகளோடும் தாம் சந்தித்த மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் எழுத்துத் தூரிகையால் ஓவியமாக்கி நம்மோடு உரையாட வைக்கிறார். சின்னஞ் சிறிய நிலையற்ற நீர்க்குமிழ் போன்ற வாழ்க்கைதான் என்றாலும் இதைப் பிணைப்பதற்கா மனிதனிடத்து இத்தனை கண்ணிகள்?. நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோமேயொழிய பெரும்பாலும் வாழாமலே மறைந்து விடுகிறோம். குளிர் காய்வதற்கு சுள்ளி பொறுக்கச் சென்றதிலே காலம் கரைத்துவிட்டோம் என்ற எச்சரிக்கை உணர்வு ஊட்டுகிறார்.இருட்டில் உழன்று அதையே ஏற்றுக் கொண்டவர்க்கும், என்றேனும் ஒளி வாராதா என்று காத்துக் கிடப்பவர்க்கும், ஒளியை நோக்கித் துணிவோடு நடப்பவர்க்கும் இந்நூல் அற்புத ஞான ஒளிப்பாதை அமைக்கும். தவத்தின் வலிவோடு எழுந்த ‘குறையொன்றுமில்லை’ எனும் இந்த திருவெழுத்து மானுட வாழ்வின் விளக்கத்திற்கு என்றும் வழிகாட்டும் கைவிளக்கு. அறிவார்ந்த கருத்துக் கருவூலமாய் திகழும் சுவாமியின் எழுத்து ஆன்மஞான விளக்காக என்றும் ஒளிவீசும். வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை அந்தரங்கத்தில் அழுகிப்போன அவலங்களை அங்கதம் கலந்த இலக்கிய இனிமையோடு நேரடிச் சொற்களால் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பலரில் வாழ்வு நிறைவின்மையால் தொலைந்து போனவை இலக்குகள் மட்டுமன்றி இருப்புகளும்தான் என்பதை சுவாமி அவர்களின் வாழ்வுசார் நுண்ணிய அவதனிப்புகள் பிரமிப்பூட்டுகின்றன. இந்நூல் மானுடம் மீதான நம்பிக்கையைத் துளிர்த்து வாழ்வில் எதிர்ப்படும் அச்சத்தை அறுத்து தனியொருவரின் சுயத்தை மேன்மையுறச் செய்யும் வித்துக்களை வீரியமாகக் கொண்டுள்ளதை நெடுகக் காணலாம்.வாழ்க்கை எனும் சொல்லுக்குள் ‘வா’,’வாழ்’,’கை’,’வாக்கை’,வாகை’ என ஐந்து சொற்கள் ஒளிந்திருக்கின்றன. முதலில் வாழ்க்கை ‘வா’ என்று அழைக்கிறது; ‘வாழ்’ என்று சொல்கிறது. ‘கை’யை நம்பி உழை என்கிறது; ‘வாக்கை’ காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது; இறுதியில் அடைவது ‘வாகை’ என்று உறுதி செய்கிறது. இத்தனை சொற்களைச் சூல்கொண்ட வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது. கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன. இனிமையும் மகிழ்ச்சியும் இதயத்தில் நிலைப்பெற்றால் என்றும் வாழ்க்கை தேன்கூடுதான். மனநிறைவோடும் மகிழ்வோடும் புன்னகையோடும் உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக நம்மீது பூக்கள் சொரியும் என்பதை உயிர்க்காற்றின் ஒலித்தடத்தில் உள்ளக் கணுக்கள் நெகிழ சுவாமி ஓங்கி உரைப்பது உள்ளுணர்வால் உணர முடிகிறது. இதிலுள்ள எழுத்துகள் தோழமையுணர்வோடு கதைபோல் வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் நேரடியாகச் சொல்பவை. நாம் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் சுவாமியின் படைப்புகளைக் கூர்ந்து நோக்கும்போது புரிகிறது. ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் மனிதனை உருக்கி வார்த்ததும் சுவாமியின் ஆகிருதிகள்தான். நம்மை அறியாமலே நம்முள் இருக்கின்ற அனுபவப் பிழிவுகளை மெல்லிய உணர்வுகளோடு தொட்டுத் துழாவுகின்றார். அந்தத் தொடுதலில் உறவின் இறுக்கங்கள் கட்டுடைப்பட்டு புதுவெளிச்சம் பூக்கின்றன. இந்தச் சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனத்திலும் சிலசுவடுகள் அழியாத ஓவியங்களாய் ஆழமாய்ப் பதிந்து கிடக்கின்றன. சிதிலமடைந்த வாழ்வு தடத்தையும் அன்பின் கசிவையும் வாஞ்சையோடு ஏற்று அடர்த்தியான கூறுமொழியாலும் கவித்துவமான குறியீட்டுப் படிமங்களாலும் ஒளியூட்டுகின்றார். வாழ்வின் உயிர்ப்பை உயிர்ப்பின் இருப்பை இருப்பின் தேடலை பாலிலே நெய்யைத் தரிசிப்பது போன்ற அகத்தாய்வுப் பார்வையால் ஆன்ம இளைப்பாறலுக்கு ஆறாம் விரலால் ஞான விளக்கேற்றுகிறார். நித்தம் புதுமலராய் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் மலரும்போது மனிதன் மட்டும் மலராமல் இருப்பது முறைதானோ?. கோயில் கருவறைக்குள் கொண்டு செல்லப்படும் நீர் தீர்த்தமாக, நீறு திருநீறாக, மலர் பிரசாதமாக திருமாறி வரும்போது மனிதன் மட்டும் மாறாமல் வருவது தருமம்தானோ?. இந்த உலகத்தில் யாருடைய சுவாசக் காற்றை யார் களவாட முடியும்? யாருடைய பூமியை யார் திருடிவிட முடியும்? யாருடைய ஆகாயத்தை யார் பறித்துவிட முடியும்? யார் புகழை யார் மறைக்க முடியும்?. நமக்கென்று உள்ளதை எவரும் மறைத்துவிடவோ பறித்துவிடவோ முடியாது என்பதை உணர வைக்கின்றார் நம் உழைப்புக்கும் முயற்சிக்கும் தகுதியானது யார் தடுத்தாலும் நம்மை நாடி வந்தே தீரும் என்பது இயற்கை நியதி. எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வெல்லமுடியும்... யாரும் யாரையும் தோற்கடிக்காமலேயே...என்ற இயற்கை நியதி சிந்தனையில் மிளிருகிறது. இருளும் ஒளியும் நாளும் வரையும் வாழ்க்கை வண்ணங்களில் கரைந்த பாரதி மண்ணில் இன்பம்...விண்ணில் இன்பம்... எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா..? என்ற ஆனந்த நர்த்தனம் சுவாமியின் எழுத்தில் எத்திக்கும் எதிரொலிக்கிறது. வாழ்க்கை என்பது தண்டலையல்ல அது நமக்குக் கிடைத்தத் தெய்வீகப் பரிசு. இயற்கை நம் மூலமாக சுவாசிக்க, காதலிக்க, கீதமிசைக்க, நடனமாட நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை வாழ்ந்த செயற்கை வாழ்வைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பொலிவோடு புத்தம் புதுமலராய் தினம் மலர அறிவு விளக்கு ஏற்றுகிறார் வாழ்க்கையெனும் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அற்புதமான காவியம். வழிநெடுக ஏற்படும் மான அவமானங்களும் புகழ்ச்சி இகழ்ச்சிகளும் நமக்காக உலகம் நடத்தும் பாடமென்ற அறிவால் ஏற்றுக் கொண்டால் துன்பமில்லை எந்நாளும் இன்பமேயென உற்சாகம் ஊட்டுகிறார் நம்மைத் தவிர வேறுயாரும் நமக்கு மனநிறைவைத் தரமுடியாது. நம்மிலே நாம் மலர்ந்தாலன்றி வேறெதுவும் நம்மை மலர்விக்க முடியாது. உள்ளங்கையில் குழையல் சோறாய் போன வாழ்வையும் ஏற்றுக் கொள்ளும் மனமாற்றத்தை அன்போடு முன்மொழிகிறார். நம் கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கை விரல்களை நம்மோடு சேர்த்து கொள்ளத்தான் என்று குறை களைய வழிகோலுகிறார். வாழ்க்கை ஒரு சக்திமிக்க வரமென்பதைக் கொண்டாடத் தெரியவேண்டும். ஒருநாள் முழுதும் வாழ முடியவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்களையாவது உளப்பூர்வமாக வாழ பழக வேண்டும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு ஒருநாள் திடீரென்று விடைபெறுவது சாதனையல்ல மாபெரும் வேதனை என்று எச்சரிக்கின்றார். வாழ்க்கையின் முழுமையான நோக்கமே குறையொன்றுமில்லா மனத்தோடு நிறைவாக வாழ்வதுதான். இந்த வாழ்க்கையை ஒரு வழிபாட்டுணர்வுடன் மதித்து, முழுமையான ஈடுபாட்டுடன் அணுகும் ஞான விதைகளை வாசிப்போர் நெஞ்சவயல் முழுதும் பாவுகிறார். வாசித்த பொழுதுகள் மட்டுமே வாழ்ந்து பொழுதுகளாய்க் கருதும் என்னை ‘இருத்தல்’ என்ற நிலையில் இருந்து ‘வாழ்தல்’ என்ற நிலைக்கு இந்நூல் உயர்த்துகின்றது. இந்நூலில் இழையோடும் வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும் சிந்தையில் சிதையாய்ப் பற்றி அறிவில் கொழுந்தாய் எழுந்து ஞானத்தில் உள்ளொளி பரப்பும். பரந்த வானத்தின் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடியும்; விரிந்த கடலின் ஒரு அளவைத்தான் காண முடியும்.ஒளிவீசும் வைரத்தின் ஒரு கோணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன். இனி நான் காணாததை தேர்ந்த சுவைஞனாக நீங்கள் கண்டின்புற வேண்டுகின்றேன். கருத்தோடு சுவைப்பவர்க்கு இந்நூல் நுனியிலிருந்து அடியை நோக்கி உண்ணப்படும் கரும்பாய் இனிக்கும் என்பது உறுதி. ‘அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே’ என சான்றோர் மொழிக்கொப்ப ஒப்பற்ற உயர்நூல் வரிசையில் சுவாமி அவர்களின் ‘குறையொன்றுமில்லை’ என்றும் வாசிக்கும் உள்ளங்கள் அனைத்திலும் அன்பும் அருளும் நிலைபெற்றொளிர இதயப்பூர்வமாக வாழ்த்தி வணங்குகின்றேன். இந்நூல் மண்ணையும் மனிதனையும் இறைமையையும் வாழ்க்கையெனும் இருப்புக்குள் கரு கொண்டிருப்பதால் இனி என்றும் ‘குறையொன்றுமில்லை’. அன்பெனும் உறவுகோல் நட்டு, அறிவெனும் உணர்வுக் கயிற்றால் கடைந்து, ஞானமெனும் வெண்ணையை ‘குறையொன்றுமில்லை’யில் கிஞ்சிற்றும் குறைவில்லாமல் நாம் அனைவரும் திருவமுதுண்ண ஞானவேள்வியில் உழவாரப் பணி செய்த சுவாமி அவர்களின் திருத்தாள் போற்றி விடைபெறுகிறேன். அன்புடன், ப.தமிழ்மாறன்