புதன், 8 ஏப்ரல், 2009

சங்கத் தமிழ் சாரம்

குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.

பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.

நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.

மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.

பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.

சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.


பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.

புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.

குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.

நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.

மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.

முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.

இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.

‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.

அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.

குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.

‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.

தந்தைக்கு நினைவாஞ்சலி

‘அப்பா’வென்று என்செல்லக் குழந்தைகள் அழைக்கையிலே
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது

தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்

குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே

சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே

எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா

(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)