வெள்ளி, 7 மே, 2010

தாயெனும் தேவதை...

தாய்மையென்பது கொண்டாடப்படுவதற்கு மட்டுமல்ல தினம் துதிக்கப்படுவதற்கும் அன்பால் தொழப்படுவதற்கும் என்பது நமது தமிழினத்தின் பாரம்பரிய பேருண்மை. ‘அம்மா’ என்ற சொல் உலக மொழியனைத்திற்கும் சொந்தமென்றாலும் தமிழில் மட்டும் அதன் பொருளடர்த்திக்கு வேறெதுவும் ஈடிணையாகாது. ‘அம்மா’ என்ற சொல்லில் ‘அ’ உயிரெழுத்து, ‘ம்’ மெய்யெழுத்து, ‘மா’ உயிர்மெய்யெழுத்து. ஆக அம்மா உயிரும், மெய்யும், உயிர்மெய்யும் சேர்ந்த தெய்விகம்.

‘வானம் எனது தந்தை - பூமி நமது அன்னை, உலகம் நமது வீடு – உயிர்கள் நமது உறவு’ எனும் கள்ளங் கபடமற்ற பாமர மனித அடியாளத்திலிருந்து முளைவிட்டவன் நான். எனக்குள் அடையாளம் காணப்பட்ட தாய் மனித உருவிலிருந்து கிளைவிட்டு என் பரந்த வாழ்வின் அனைத்து வெளிகளிலும் நீக்கமற நிறைந்து என்னை வாழ்விக்கிறாள். என்னை ஈன்ற தாயை எல்லா கால வெளிகளுக்கும் அப்பால் தரிசிக்கக் கற்று தந்த என் முன்னோர்களை சிலாகிக்கிறேன்.

‘மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்’ எனும் உலகநீதியாரின் தாயன்பு ததும்பும் வார்த்தைகள் என்னுள் ஆழ வேரூன்றப்பட்டுள்ளது. நிலமகளின் பரந்த மடியினிலும், தென்றலின் சுகமான தீண்டுதலிலும், சலசலத்தோடும் நதியின் பூஞ்சிரிப்பிலும், அன்றலரும் மலர்களின் மலர்ச்சியிலும், வண்டுகளின் இன்ப மீட்டுதலிலும், நிலவின் பாலூட்டும் தாலாட்டிலுமென பலவண்ண வடிவங்களிலிருந்தும் விரிந்து ஒரு கட்டமைப்புக்குள் கட்டுவிக்க முடியா தெய்வமே தாய்.

‘தாயின் காலடியிலேயே சொர்க்கம்’ இருக்கிறது என்றுரைத்த நபிகளின் உட்பொருளை நம்மில் பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அன்னையர் நாளுக்கு பரிசும் பொருளும் தந்து கொண்டாட்டி ஒரு சடங்கை நிறைவேற்றும் மனோபாவமாகவே எனக்குத் தெரிகிறது. இறைவன் எல்லா இடங்களிலும் தாயின் வடிவத்தில் நிறைந்திருக்கிறான் எனும்போது கொண்டாட்டத்தைக் கடந்து உணர்வால் துதிக்கப்பட வேண்டிய தெய்விக உறவல்லவா?

முந்தி தவங்கிடந்து முன்னூறு நாள் சுமந்து தொந்தி சரிய ஈன்றெடுத்த அன்னைக்காக ஊனுருகிய பட்டினத்தாரும் அவர் போன்ற முற்றும் துறந்த ஞானியர் பலரும் என்றுமே துறக்க முடியாத திருவுறவு தாய். உயிர் இறை தந்த பிச்சையானாலும் உடல் தாய்தந்தை தந்த உயர் பிச்சைப் பாத்திரம் அல்லவா? எந்த உயிராலும் தள்ளி வைக்க முடியாத தொப்புள் கொடியுறவு தாய்தானே.

உலகுயிர்களுக்கெல்லாம் பொதுமொழியாக இருப்பது தாய்மையொன்றே. மனித குலம் முதல் ஓரறிவு உயிர் ஈறாக ஒரு தாயின் தன்மையும் கருணையும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்துள்ளது. நான் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையில் காணும் ஒவ்வொரு பெண் குழந்தைக்குள்ளும் அன்புருவமாக ஒரு தாய் தென்படுகிறாள்.

திரு.வி.கா சொன்னதுபோல் ஓர் ஆணுக்குள்ளும் தாய்மை உறங்கிக் கொண்டிருகிறது. என் முன்னே வந்து போகும் ஒவ்வொரு ஆணுக்குள் உள்ளார்ந்து சிரிக்கும் தாயை உற்றாய்வதே என்னியல்பு.

ஒரு செடியோ கொடியோ மரமோ பூப்பூத்து சிரிக்கும்போதும் காய்காய்த்துக் குலுங்கும்போதும் ஒரு தாயின் ஆனந்த சிலிர்ப்பைக் காண்கிறேன். மரம் நிழல் தந்து உண்ணக் கனிகளைக் கனிவோடு தந்து எறும்பு, பறவை, அணில் முதல் அனைத்தும் துயில் கொள்ள மடி ஈந்தும் பேரழகில் தாயின் கருணையைத் தரிசிக்கிறேன். உலகுயிர் வாழ்வாங்குவாழ உயிர்வளி ஈந்து உலகைக் காக்கும் தாயாக பரம்பொருளின் திருக்கருணையை தாவரங்களில் காண்கிறேன்.

குருவிக் குஞ்சுகளின் ஆனந்த ஆலாபனையில் தன்னைக் கரைத்துக் கொண்டு சாலப்பரிந்து அழகுற உணவூட்டும் தாய்ப்பறவையின் சிறகடிப்பில் என் தாயையே ஆராதிக்கின்றேன். என் இளைய காலங்களில் பெருந்தவத்தோடு அடைக்காக்கும் தாய்க் கோழிகளோடு நிறைய உரையாடியிருக்கிறேன். தாயின் கதகதப்பான அரவணைப்பை அடைக்காக்கும் அந்த முட்டைகளின் இளஞ்சூட்டில் தொட்டுணர்ந்து மெய்சிலிர்த்திருக்கிறேன்.

கோழிக்குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் நிழல் தந்து மண்கிளறி வழிநடத்தும் வித்தையை ஞானோபதேசம் செய்யும் தாய்க்கோழியும் எனக்குத் தாய்தான். என் அறிவு முற்றும் விழிக்காத வயதில் விடியற்காலைப் பொழுதொன்றில் காரணம் தெரியாமல் விறைத்து இறந்து கிடந்த தாய்க்கோழி பிரிவு என் நெஞ்சைப் பிழிந்தது. இறந்த தாயின் மீது பாசத்தோடு சின்ன அலகுகளால் தாயை துயிலெழுப்ப முயலும் கோழிக்குஞ்சுகளின் தீண்டுதலில் நானும் அழுதிருக்கின்றேன். அந்தத் தாய்க்கோழியின் தலைமகனாக ஈமக் கடமைகளையும் பிரிவாற்றாமையோடு செய்திருக்கிறேன்.

எங்கள் வீட்டு மனிதர்களோடு விடுபடாத உறவாக ஏதாவது பெயரில் நாய்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். பெரும்பாலும் ஆங்கங்கே கைவிடப்படும் நாய்க்குட்டிகளின் பாதுகாப்பு இல்லமாக என் தாத்தா அமைத்த ரகசியம் இன்று எனக்குத் தெள்ளிதின் புரிகிறது.

நாங்கள் வளர்த்த நாய்களில் பெரும்பாலனவைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களே வைத்திருந்தோம். அதில் ‘பொன்னம்மா’ என்ற நாய் நான்கு தலைமுறை வரை நீண்ட ஆயுள் பெற்றிருந்தது. ‘பொன்னம்மா’ ஈன்ற குட்டிகள் கண் திறக்காதபோது அவற்றை அன்பொழுக தூக்கி தாயாய் நானும் தாலாட்டுப் பாடியிருக்கிறேன்.

அந்த ‘பொன்னம்மா’ தாய் என்னை மட்டுமே தன் குழந்தைகளைத் தூக்க அனுமதிக்கும். ஒருமுறை என் நண்பன் குட்டியைத் தூக்கியபோது ‘பொன்னம்மா’விடம் தொடையில் கடி வாங்கியத் தழும்பு இன்றும் அவனை ஞாபகப்படுத்தும். அந்தளவிற்கு என்னை மதித்த ‘பொன்னம்மா’வில் தாய்மையைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அதற்குப் பிறகு ‘பொன்னம்மா’ மகள் ‘சக்கரவேணி’யிலும் தாய்மையைப் பார்த்தேன்.

வீட்டின் பின்புறத்தில் தொழுவம் இருந்தாலும் அங்கே ‘இலட்சுமி’,’காமாட்சி’ போன்ற பசுவுரு தாங்கிய தாய்களைத்தான் நான் கண்டிருக்கிறேன். ‘இலட்சுமி’,’காமாட்சி’ அம்மாக்களின் பாலில் வளர்ந்த உடம்பு எனுடையது. எத்தனை ஆயிரம் முறை அவற்றை இறுக அணைத்து தாயின் சுகம் கண்டிருக்கிறேன். அவற்றின் வாசம் என் சுவாசப் பைகளில் இன்றும் பத்திரமாக சேர்த்துவைத்திருக்கிறேன்.

தாய்க்கு பிரசவம் பார்த்த பிள்ளைகள் மிக அரிதுதானே. ஒரு கார்கால மாலைப் பொழுதொன்றில் வீடு திரும்பாத ‘இலட்சுமி’யைத் தேடி நானும் தம்பியும் அலைகையில் பிரசவ வலியில் துடிப்புக்கு ஆறுதலும் தேறுதலும் அன்பும் அரவணைப்பும் தந்து மெல்ல புதுவுயிர் பிறப்புக்குத் துணை செய்தது இறக்கும் வர மறக்கமுடியாது. நன்றியோடும் வாஞ்சையோடும் அன்று ‘இலட்சுமி’ என்னை நோக்கிப் பார்த்த பார்வை இருக்கிறதே அதன் பொருளை உணர்த்த எந்த மொழிக்கும் வலிவிருக்காது.

இன்றுவரை எனக்கு எல்லாமுமாக இருக்கின்ற என் தாயின் மெளனத்தின் பொருளை முழுதாக மொழிபெயர்க்க இயலவில்லை. அறிவு நிலைகளில் நான் அம்மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தூரம் வந்தாலும் அன்பாலும் உணர்வாலும் என்றுமே வெல்ல முடியாத உயரத்திலே இருக்கிறார். உலகில் தலைச்சிறந்ததெல்லாம் தாயின் பூரணத்திலிருந்துதான் உருக்கொண்டதோ?. பாமரத்தனமான கரவற்ற எந்தப் பிரதிபலனும் கிஞ்சிற்றும் எதிர்பார்க்காத அன்புத் திருவுருவான என் தாயை மொழிக்குள் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

பாலைவனவெளிகளில் ஊடாடித் திரிந்த கலீல் ஜிப்ரானிடம் பாரதிபோல் எனக்கு தனிக் காதலுண்டு. கலீல் ஜிப்ரானின் ‘Prohpet’,’The secret of heart’...மெல்லிய உணர்வுகளில் நீந்தியிருக்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் கமீலா என்ற பெண் கலீல் ஜிப்ரானிடம் கூறினாள்,” நீ மட்டும் உலகத்தில் பிறக்காவிட்டால் வானத்தில் தேவதையாக இருந்திருப்பாய்’. அதற்கு கலீல் ஜிப்ரான், ”நான் இப்போதும் தேவதைதானே” என்கிறார். “ நீ தேவதை என்றால் உனக்குச் சிறகுகள் இருக்க வேண்டுமே” என்பது கமீலாவின் கேள்வி. அதற்கு கலீல், கமீலாவின் கைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சொன்னார், “இதோ என் சிறகுகள்”.

நம்மில் பெருபாலோர் கமீலாவை கலீல் ஜிப்ரானின் காதலியாகத்தானே முடிவு செய்திருப்போம்.. ஆனால் கமீலா, கலீல் ஜிப்ரானின் தாய் என்றதும் உள்ளத்தில் எத்துணைப் பரவசம். நமது தாய்க்குள் அந்த ஆனந்த பரவசத்தை மீட்டுவதைத் தவிர வேறுவழியெதுவும் எனக்குத் தோன்றவில்லை.

சனி, 17 ஏப்ரல், 2010

சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன்

இரண்டாயிரதொன்றாம் ஆண்டிறுதியில் ஆறு நண்பர்களுடன் மூன்றாம் முறையாகத் தமிழகப் பயண சென்றிருந்தேன். எங்கள் பயணம் வழக்கமான திருத்தலச் சுற்றுலாவாக மட்டும் அமையாமல் வாழ்வின் எல்லா நிலை மனிதர்களையும் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது.

உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தேங்காய் மட்டையில் கயிறு திரிக்கும் குடியானவர்கள், பட்டைத் தறியில் நெய்யும் நெசவாளர்கள், கட்டுமரத்திலேறி கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கள் இறக்கும் மரமேறிகள், குயவர்கள், உழவர்கள், என விளிம்புநிலை மனிதர்வரை ஒரு தேடலைத் தொடர்ந்தோம்.

இந்தத் தேடலினூடே எங்கள் பயணம் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளை நாகர்கோயில் ஊருக்கருகே சென்றதும் என் நண்பர் மணிமாறன் சுந்தர ராமசாமியைச் சந்திக்கலாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நண்பர் மணிமாறனைத் தவிர்த்து என்னோடு வந்த மற்றவர்களுக்கு இலக்கிய நுகர்வு மிகக் குறைவு. அவர் அளவுக்கு எனக்கு அப்போது சுந்தர ராமசாமியை ஆழமாகப் புரிந்து கொள்ளவிடினும் ஏதோ பெயரளவில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,’ஜே.ஜே குறிப்புகள்’ கொஞ்சம் படித்து வைத்திருந்தேன் என்பதைவிட குழம்பியிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் மணிமாறன் காலச்சுவடு தொடர்ந்து படிப்பதால் ஓரளவிற்கு அவரைக் காணும் வேட்கையில் தீவிரமாக இருந்தார்.

நான் படித்தறிந்தவரை சுந்தர ராமசாமியின் ஆளுமை என்பது நெருங்குவதற்குக் கடுமையானவர் கோபக்காரர் என்றெல்லாம் ஒரு அடையாளம் இருப்பதை அறிவேன். ஆனாலும் பல இலக்கியவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகும் பிடிப்புள்ள எழுத்தாளரான அவரைச் சந்திப்பதில் எனக்கும் உள்ளூர ஆர்வம் எழுந்தது.

அந்த டிசம்பர் மாதப் புலர்காலைப் பொழுதொன்றில் அவரின் இல்லத்தைத் தேடிச் சென்றோம். நாகர்கோயில் சாலையோரத்திலே அவரின் வீட்டை அடையாளங் கண்டுகொண்டோம். கிராமியச் சூழலை உணர்த்தும் மதில் சுவரோடு ஏழெட்டுத் தென்னைமரங்கள் பின்னணியில் ஓங்கி நிற்க எளிமையும் பழமையும் காட்டும் அந்த வீட்டின் முன்புறம் பவளமல்லி செடியிலிருந்த உதிர்ந்த மலர்கள்வரை இலக்கிய வாசத்தை என்னுள் விதைத்தது.

வாயில் இருப்புக் கதவை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தோம் அவரை சந்திக்கும் ஆவலோடு. எங்களின் குரல் கேட்டு நீல டீ சட்டையும் வேட்டியுடம் அணிந்த உயர்ந்த உருவத்தோடு எங்கள் முன்னே அவர் வந்தது என் நினைவுகளில் இன்றும் கல்வெட்டுகளாய் பதிந்துள்ளது. எங்களைப் பற்றி அன்பொழுக விசாரித்துவிட்டு உள்ளே அழைத்துப் போனார். வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரின் மகளிடம் எங்களை அறிமுகம் செய்தார். பிறகு மெல்ல அவரின் கதைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது

எங்களோடு அவரின் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் என்னையும் மணிமாறனையும் விட்டுவிட்டு வெளியே உலவ சென்றுவிட்டனர். அவரின் சில கேள்விகள் எங்களின் வாசிப்பு ஆழத்தை உழுவதாகவே எனக்குப் பட்டது. ஏதோ ஒன்றிரண்டு பொருத்தமாக நான் சொல்ல நண்பர் மணிமாறன் அவரின் கதைப்போக்கையும் ஆளுமையையும் சிலாகித்துப் பேசினார். பொறுமையோடு ஆழ்ந்து கேட்கும் அவரின் தன்மையும் மென்மைப் பேச்சும் என்னுள் அவரின் மீதுள்ள மதிப்பை உயர்த்தின.

அவர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கும் நண்பருக்கும் பரிசளித்ததும் எங்களோடு சேர்ந்து நிழற்படமெடுத்ததும் மறக்கமுடியாது. ஒரு இலக்கிய விமர்சனத்தால் மேலும் ஒளிரும் நட்சத்திர எழுத்தாளரைச் சந்தித்தத் திருப்தியோடு விடைபெற்றோம். அவர் பரிசளித்த அந்த ஒரு புளிய மரத்தின் கதையை அண்மையில் மீண்டுமொருமுறை வாசித்தேன். அக்கதையின் சாரத்தை பருகுங்கள்.

பெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.

புளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.

புளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை. புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.

(இரு வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையை மறுவாசிப்பு செய்தேன். அந்தக் கதைப் புத்தகத்தைத் தொட்டதும் அவரைச் சந்தித்த நினைவுகள் என்னுள்ளே மலரத்தொடங்கின. அதை ஒரு இனியச் சந்திப்பாக இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அவரோடு இணந்து நிழற்படம் எடுத்துக்கொண்டாலும் அந்தப்படம் என் நண்பர் மணிமாறனிடம் மட்டுமே உள்ளதால் இதில் இணைக்கவில்லை)

என் காதல் என்றும் தமிழோடுதான்

நினைத்தாலே நெஞ்சக் கருவறையும் தித்திக்கும்; சொன்னாலே உதடுகளெல்லாம் தேனமுதாய் இனிக்கும் தமிழ்மொழியாம் நம் தாய்மொழியை நேசிப்பது இயல்பானது மிக இயற்கையானது. தமிழ்மொழியும் அதனூடே பின்னிப்பிணைந்த மரபும் காலங்காலமாக முன்னோர் மிக விழிப்புடன் பேணிப் பாதுகாத்து நமக்களித்துள்ளதே நாம் பெற்ற பெரும்பேறு.

தாயை நேசிப்பது எவ்வளவு இயல்பானதோ அது போன்றே தமிழை நேசிக்க வேண்டும். பள்ளிக் காலத்தில் என்னைப் பார்த்து ஒரு சில மூடர் தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று வழித் தடத்தை மாற்ற முற்பட்டார்கள். தமிழ் சோறு போடுமா? என்பது இன்றுவரை தமிழர்களிடையே பேசப்படுவதைக் கண்டு என்னுள்ளே நீருபூத்த நெருப்பாய் அறச்சீற்றம் எழும்.

சோறு மட்டும்தான் வாழ்க்கை என்றால் உயிருக்குச் சுதந்திரம் எதற்கு?. அடிமை வாழ்க்கையில் வேளாவேளைக்குச் சோறு கிடைக்குமே! ஒரு தொழிலுக்காகத் தாய்மொழியைக் கற்க நினைப்பதவிட மூட நினைப்பு வேறில்லை. இன்றுங்கூட சோற்றுக்கு வழி தேடுவதில் என் மலேசியத் தமிழினம் சுயநலமாகச் சுருங்கிவிட்டது. அதனால்தான் தமிழ் படிப்பது தமிழருக்கே வேம்பாய் கசக்கிறது.

இந்தப் பேதை மனிதருக்கு மொழி என்பது வெறும் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடித் தரும் அட்சயபாத்திரம். தாய்மொழி என்பது ஊனோடும் உயிரோடும் இணைந்த தொப்புள் கொடி உறவு என்பது இந்த மூடர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை?. தமிழில் பேசுவது பாவமானது; தமிழ் நூலைக் கையில் வைத்திருப்பது கேவலமானது; தமிழனாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறானே இவனைவிட ஈனப் பிறவி வேறுண்டோ?.

உலகத்தில் ஒருவனுக்கு அடையாளத்தைத் தேடித் தருவது அவன் பிறந்த இனமும் அந்த இனம் பேசும் மொழியும்தான். மொழியைச் சார்ந்துதான் இனம் நிற்கிறது; இனத்தின் துணையுடன்தான் மொழி நடக்கிறது. என் இனத்தையும் மொழியையும் நான் மறந்தால், என் முகத்தையும் முகவரியையும் இழந்துவிடுவேன் என்ற அடிப்படை அறிவுகூட தமிழர் பலருக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை?.

தமிழனிடம் ஆழமான அறிவும் ஆற்றலும் இருக்கிறது ஆனால் தேவையான மொழிப்பற்றில்லை என்பதால்தான் பிற இனங்களைக் காட்டிலும் இன்னும் தலைகுனிந்தே இருக்கிறான். உலகில் பல இனத்தாருக்கு மொழி என்பது வெறும் தொடர்புக்கருவி மட்டுமே. தமிழர்க்குத் தமிழ் என்பது உணர்வு கலந்த ஆன்மிகம். தமிழர்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக அமைந்தது தற்செயலானது என்ற கருத்துண்டு ஆனால் அது எனக்கு நெடுங்காலம் நான் செய்த தவப்பயன் என்றே மிக ஆழமாக நம்புகிறேன்.

தமிழ் என் பயணத்தில் வழித்துணையாய் மட்டுமல்ல வாழ்க்கைத் துணையாகவும் நின்றுதவுகிறது. தலைமுறை தலைமுறையாக முன்னோரிடமிருந்து தோள்மாற்றிக் கொடுக்கப்பட்டத் தமிழை என் தந்தை என்மீது இறக்கிவைத்தபோது அதை சுமையாக அல்ல சுகமாக ஏற்றுக் கொண்டேன். அந்த மொழி வழிப்பட்ட பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையின் தோள்களிலே நான் சரியாக இறக்கிவைக்காமல் போனால் நான் வாழ்ந்ததே பொருளற்றதாகப் போகும்.

தமிழ் இலக்கியம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகளை மறந்ததால்தான் இன்று தமிழனின் வாழ்க்கையே திசைமாறிப்போனது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனித குலத்திற்கே தோழமைப் பண்பையும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ நடைமுறை பேருண்மையையும் உலகத்துக்கே ஓங்கி உரைத்தது தாய்மொழி தமிழல்லவா?.மொழிக்கும் வாழ்வுக்கும் ஒரு சேர வழிகாட்டும் தொல்காப்பியமும் வாழ்வியல் மனப்பிணி நீக்கும் அருமருந்தாம் திருக்குறளும் தமிழர் மேன்மையுற கிடைக்கப்பெற்ற அருஞ்செல்வங்கலல்லவா?.

தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத திருநாவுக்கரசரும், சீலமாய் செந்தமிழை செழுந்தமிழாக்கிய திருஞானசம்பந்தரும், சுந்தரத் தமிழில் திருப்பாட்டிசைத்த சுந்தரரும், திருவாசகமாய் உள்ளொளி உருக்கிய மாணிக்கவாசகரும் மேலும் ஆழ்வார் பாசுரங்களும் நீதி இலக்கியம் முதல் இன்றைய நவின இலக்கியம் வரை வாழ்வை மேம்படுத்த எத்தனை இன்பப் புதையல் தமிழன்னைக் காலடியில் பந்தி வைக்கப்பட்டுள்ளன.

பிற மொழியிலெல்லாம் அகர எழுத்தை அடையாளம் காட்டும்போது (a for apple –english / a untuk ayam –malay) கனியோடும் பிராணியோடும் வெறும் உணவுகளோடு அடையாளங் காட்டுகையில் தமிழ் மட்டும் ‘அறஞ்செய விரும்பு’ என உணர்வோடு அறத்தை சார்ந்தது நம் வாழ்வு என்று ஒளவை சுட்டிக் காட்டுவதை உணரமுடியவில்லையா?

இன்று பெரும்பாலான மலேசியத் தமிழ் இல்லங்களில் பொய்மைக் கலந்த இனிய மயக்கமுண்டு. வீட்டில் அறைகுறை தமிழும் வெளியில் பகட்டுக்காக ஆங்கில மோகமும் வாழும் வகைக்கு மலாயும் கைகொடுக்குமென்ற போலித்தனம் பரவலாக உலவுகிறது. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஒவ்வொரு தமிழரும் குடும்பத்திலும் சமூக உறவுகளில் தமிழ் பேசுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழர் வாழ்வதற்கு எந்த மொழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளட்டும் ஆனால் தாய்மொழியாம் தமிழை கற்றுக்கொள்ளத் தவறக்கூடாது; கூடுமானவரைத் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படாமல் மாறாக பெருமைக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரையும் தமிழ் பேச ஊக்கப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.

இதயத் தூய்மையுடன் தமிழை நேசிக்கும் தலைமை இல்லாததால்தான் தமிழன் இன்று தமிழனாக இல்லை. அதற்காக நான் என் மொழிப்பற்றை எதன் பொருட்டும் எவருக்காகவும் விட்டுத் தர முடியாது என்பதில் மிக உறுதியாக உள்ளேன்.


வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஒளியோடு ஒரு அதீத காதல்

ஜென் தத்துவத்தில் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாம் வகையினர் இருளிலே வாழ்ந்து கொண்டிருப்பதை உணராதவர்கள்; இரண்டாம் வகையினர் இருளில் வாழ்ந்து கொண்டு ஒளியை நோக்கி ஏக்கம் கொள்பவர்கள்; மூன்றாம் வகையினரோ ஒளியை நோக்கிப் பயணிப்பவர்கள். அந்த மூன்றாம் பிரிவைச் சார்ந்த மனிதனாக எண்ணியே என் பயணம் இதுவரை தொடர்ந்து வருகிறது.

ஒளியைப் பற்றியச் சுவையும் தேடுதலும் என்னுள்ளே உருவாகக் காரணமாயிருந்தது சினிமா எனும் ஒளி ஊடகம்தான். எப்படி இந்த வெள்ளைத் திரையில் நடிகர்கள் வந்து போகிறார்கள் அவர்களோடு ஆறு, விமானம், சூரியன், பறவை, தெய்வம் எல்லாம் வந்து போகிறன்றன?. சினிமா அரங்குக்கு பின்னே அதுவெல்லாம் எப்படி சாத்தியம்?.தோட்டப் புறங்களில் திருவிழாக் காலங்களில் திறந்த வெளியில் சினிமாவை வெள்ளைத் திரையிட்டுக் காட்டுகையில் எனக்கு குழப்பமே ஏற்படும்.

ஏழு வயது சிறுவனாக நான் நெஞ்சிலே தேக்கி வைத்தக் கேள்ளிகளை என் தாத்தாவிடம் கேட்டேன். அவர், ‘அதோ அந்த சக்கரம் மாதிரி சுழலுதே ரீல்லு அதுலேந்து வர வெளிச்சத்துலதாம்பா அவங்களெல்லாம் வந்து போறாங்கன்னு’ தமது அறிவியல் அறிவைப் பொத்தம் பொதுவாக எனக்குள் சொல்லி விதைத்தார்.

அன்றிலிருந்து சினிமா பார்க்க அரங்கத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்த இருட்டில் ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்றை இமைக் கொட்டாமல் யார்யார் அதனுள்ளே ஒளியாகச் செல்கிறார்கள் என்று துருவித் துருவி தேடிப்பார்ப்பதே என் வேலையாகிவிட்டது. எத்தனையோ முறை என் தாத்தா, ‘அத ஏம்பா பாக்குறே திரையைப் பாருன்னு’ சொல்லிக் கொண்டே இருப்பார்.

தாத்தாவின் வார்த்தைகள் ஒளியைப் பற்றிய அதீத ருசியை என்னுள்ளே ஏற்படுத்தியிருந்தது. அந்த பூபாளப் பொழுதுகளில் என் கண்கள் ஒளியைத் தெய்வீகமாய் ரசிக்கத் தொடங்கிவிட்டன. காலைச் சூரியனின் ஒளியைக் ஒரு காதலியைபோல் தினமும் தரிசிக்கக் காத்திருப்பேன்.

அந்த ஒளியில் எந்த தெய்வமாவது வந்திரங்குகின்றதா என்று ஆராய்வேன். தமிழ்த் திரைகளிலே தெய்வங்களெல்லாம் திடீரென ஒளியிலிருந்து வடிவெடுக்குமே அந்த மாதிரி ஏதேனும் என் முன்னே நடக்குமென நம்பிக்கைக் கொண்ட சிறுவனாய் காத்திருந்தேன் ஒரு பெருந்தவத்தோடு.

தென்னங்கீற்றினூடே ஒளி சின்னச்சின்னதாய் கிளைவிட்டு பிரிவதையும் அந்த ஒளிக்கற்றைக் கையில் பிடித்துக் கொண்டே மேலுலகம் செல்வது போன்ற பாவம் அந்தச் சிறுபிராயத்திலே என்னுள்ளே ஏற்படும். இளங்கதிரின் ஒளியைத் தாண்டி உச்சி வெயில் சூரியனையும் கூசும் கண்களால் தேடுவேன். கண்கள் மிகுந்த ஒளியால் பழுது பட்டுவிடுமென என் பாட்டி எப்போதுமே என்னைக் கண்டிப்பது வழக்கம்.

இரவு வேளைகளில் நீலமும் பச்சையும் கலந்து மினுமினுக்கும் நட்சத்திரங்களின் ஒளியை பார்ப்பதின் அலாதி சுகம் இன்றுவரை எனக்குள் விலக்கமுடியாத பழக்கமாகவே வேர்விட்டுள்ளது. பெளர்ணமி நிலவின் மஞ்சள் ஒளிவட்டத்தின் தூரத்தைக் கணக்கிடுவதும் அந்த நிலவுக்குள் யார் தினமும் விளக்கேற்றுகிறார்கள் என்றும் ஆராய்வேன். நம் பாட்டியால் செல்ல முடியாத நிலவுக்கு ஒளவைப்பாட்டி மட்டும் எப்படி நிலவுக்குச் செல்ல முடிந்ததது என்று யோசிப்பேன்.

கார்கால பூமழைத் தூவும் நீளப்பொழுதுகளில் வானவீதியில் நெளிந்தோடும் மின்னலின் ஒளித் தெறிப்பை பயத்தோடும் பரவசத்தோடும் பார்த்து மகிழ்வேன். அப்படி பார்க்கும்போதெல்லாம் ‘கண்ணு போயிருண்டா’ என்று பாட்டி திட்டுவார். கண்களைக் கையால் மூடிக்கொண்டே விரல்களின் சிறுசிறு துவாரங்களின் வழி உருகியோடும் மின்னலின் அழகை ஆராதிப்பேன்.

திருவிழாக் காலங்களில் ஒளிப் பூக்களாய் அலங்கார விளக்குகள் சிரிப்பதை மிக நெருக்கமாய்க் கண்டு ரசிப்பேன். இந்த விளக்குகள் எப்படி ஒளியை உமிழ்கின்றன அது எப்படி இந்தச் சின்னக் குடுவைக்குள் இவ்வளவு ஒளி அடங்கி இருக்கிறது என்று ஆவலோடு தேடுவேன். ஒளியின் மூலத்தைத் தேடுவதில் ஒரு தேவசுகம் உள்ளது.

கார்த்திகைத் திருநாளில் தோட்டத்து எல்லோர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றி வைத்திருப்பதை காண்பது பெரும் மகிழ்ச்சித் தரும். அகல் விளக்குகளால் ஒவ்வோர் இல்லமும் தெய்வீகம் பெற்றுவிட்டதாய் எனக்குத் தோன்றும். வானத்து தேவதைகள் ஒளியலங்காரத்தோடு ஊர்வலம் வருவது போன்ற தீராக் காத்திருப்பு எழும். அந்த நாள் முடியும் பொழுது மீண்டும் இன்னொரு கார்த்திகை எப்போது வரும் என்ற ஏக்கம் என்னுள் தொக்கி நிற்கும்.

அகல் விளக்குகள் ஏற்றுவதையும் அதன் ஒளி காற்றில் வளைந்து நெளிந்து ஒளிர்வதையும் காண்பது மிகப் பிடிக்கும். இன்றுவரை என் விரல்களால் அகல் விளக்குகளை ஏற்றியுள்ளதேயன்றி என்றுமே அணைத்ததில்லை; அது தானே அணைவதைக்கூட காண பொறுப்பதில்லை. அந்தளவுக்கு எனக்கும் அகல் ஒளிக்கும் ஒரு ரகசிய நட்புண்டு. வலம்புரிஜான் நூலொன்றில் குறிப்பிட்டதுபோல்’ இருட்டு விலகட்டும் விலகாமல் போகட்டும் விரல்கள் விளக்கேற்றுவதை விட்டுவிடக் கூடாது’ என்ற வாசகம் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று நட்புப் பாராட்டுவேன்.

புற்றீசல் பொலபொலத்து வரும் மழைக்கால இரவுகளில் மின் விளக்கை அணைத்து தோட்டத்து ஒவ்வொரு வீட்டின் முன்னும் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள்ளே மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுத்திரி ஏற்றி வைப்பார்கள். என்னைப்போல் வெளிச்சத்தை விரும்பும் ஈசல்களும் விட்டில் பூச்சிகளும் எதைத்தேடி இங்கே வந்து மாட்டி மடிந்தன என மனம் கணக்கும். இரவின் சுகத்தை தனது மினுமினுப்பால் அழகூட்டும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து கண்ணாடிக் குடுவைக்குள் அடைத்து அதன் ஒளியழகை பல பொழுதுகள் ஆராதித்திருக்கிறேன். மரகதம் போல மின்னும் அதன் பச்சை மினுமினுப்பில் தனிக்காதலுண்டு.

ஒளியின் தேவரகசியத்தைத் தேடியலைந்த அந்த இளைய நாள்கள் மிகமிக இனிமையானவை. ஒளியை உள்வாங்கும் கண்கள் மனிதர்களுக்குக் கிடைப்பதற்கரிய வரமாகத் தோன்றும். ஒளியை அருளாகப் பெறும் கண்களை மிகவும் சிலாகித்துப் போற்றுவேன்.

பார்வையற்றவர்களுக்கு நமக்குக் கிடைத்தப் பேறு வாய்க்கவில்லையே என பல காலம் எண்ணி மிக வருந்தியுள்ளேன். இந்த ஒளியின் சுவையை உணரமுடியாமல் தவிக்கும் அவர்களின் இயலாமை என்னுள் என்றும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தும். என் கண்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளை பார்வையில்லாதவரின் ஒளியற்ற இருளுலகை மனதால் எண்ணி உருகுவேன்.

ஒரு நிலாக் கால இரவில் வீட்டின் முற்றத்தில் பார்வையற்றவர்களைப் பற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது என் தாத்தா சொன்ன வார்த்தைகள் எனக்குள் புதியதொரு வியப்பை ஏற்படுத்தின. இருட்டுக்குள்கூட ஒளியிருக்கும் என்றும் அதேபோல எல்லாப் பொருளுக்குள்ளும் நன்றாய்ப் பார்த்தால் ஒளி தெரியும் என்று சொல்லி எனக்குள் புதியதொரு தேடலை கொளுத்திப் போட்டார்.

இருள் நிலையானது ஒளியோ வந்து போவது என்ற ஓஷோவின் கருத்துகள் இன்று எனக்குப் புரிந்தாலும் அப்போது என்னுள் ஒன்றையொன்று விஞ்சி வருவதே இரவுபகல் என புரிதல் மட்டுமே இருந்தது.

ஒளியைப் போலவே இருளில் புதைந்திருக்கும் அந்த ஒளியழகை தேடும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. இருளை கூர்ந்து நோக்க மெல்ல மெல்ல என் கண்களைப் பழக்கினேன். இருண்ட பொழுதுகளில் பயங்கலந்த உணர்வோடு தாத்தா சொன்ன ஒளித் தேடல் தொடங்கியது. அந்தத் தேடுதல் பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னுள் தொடர்கிறது ஒரு முடிவற்ற முடிவைத்தேடி.

செவ்வாய், 16 மார்ச், 2010

உமக்குத் தொழில் அன்பு செய்தல்!!!

மனித வாழ்வை இன்பப் பூஞ்சோலையாக்கும் வல்லமை அன்புக்குண்டு. அன்பு தழைத்தோங்கும் இடமே சொர்க்கம்; அன்பற்ற நலிவிடமே பாழும் நகரம். இதயம் அன்பின் தித்திப்பில் திளைத்திருந்தால் காணும் உயிர்களிலெல்லாம் தம்மையேக் காணலாம் என்பது சான்றோர் வாக்கு.

மனிதனை மேன்மைப்படுத்தும் வல்லமை கொண்டது அன்பென்பதால் பாரதி,
‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’
‘அன்பென்று கொட்டு முரசே’
‘அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’
‘ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம்’
‘துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே’ என்று அன்புருக கரைந்தான். ‘உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை’ என அனைத்து உயிர்களிலும் இறைமையைக் கண்டான் பாரதி. பாரதியின் அடியொற்றிய பாரதிதாசன்,’ இதயமெல்லாம் அன்பு நதியில் நனைப்போம்’ என்று மானுடத்தை நோக்கி முழங்கினான். ‘அன்பெனும் ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததில்லை’ என்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் வியந்து பாடினான்.

‘அப்பா நான் வேண்டுதல் கேட்டருளல் வேண்டும் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செய்தல் வேண்டும்’ என்ற வள்ளலாரின் அன்புப் பார்வை ஆன்மநேயத்தின் அடிநாதமாய் ஒளிருகின்றது. அன்பும் ஈரமும்தான் சமயங்களின் சாரம்.

‘அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே’ என்ற தாயுமானவரின் அன்பின் உருக்கம் இறைமையோடு இரண்டறக் கலப்பது நம் எண்ணமெல்லாம் இனிக்கிறது.

அன்பிருக்கும் இதயமே ஆண்டவன் இருக்கும் ஆலயம். அன்பே ஆண்டவன் என்றுணர்தலே உண்மை ஞானம். ‘அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ என்ற திருமூலரைவிட அன்பின் வலிமையை யார் சொல்லிட இயலும்.

மானுட வாழ்க்கையில் ஏன் இத்துணை துன்பங்கள்! சிக்கல்கள்!. நமக்கு எல்லாம் தெரிகிறது ஆனால் ஒரேயொரு தொழில் மட்டும் செய்யத் தெரியவில்லை. அது பாரதி சொன்ன தொழில்!

‘உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்’. ந்ம்மில் பலர் பாரதி சொன்ன தொழிலை இன்னும் கற்றுக் கொள்ளவேயில்லை.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தாவரங்களோடு ஒரு தவம்

என் மனத்துக்குள்ளே செடி, கொடி, தளிர், மலர் மரமென முழுவதும் விரிந்து கிடக்கிறது ஓர் இரகசிய உலகம். அந்த மனித ஓசைகளற்ற உலகத்தில் மரங்கள் பேசும் மொழியில் ஒரு தெய்விகம் ஒளிருகிறது.

ஒரு விதையானது மண்ணிலிருந்து கிளர்த்தெழுந்து முளைவிட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு, பூவிட்டு, காய்விட்டு, கனிவிட்டு தன்னையே ஈந்து பட்டுபோகும் ஒவ்வொரு தாவரத்திலும் ஒரு மனிதனை தரிசிக்கின்றேன்.

நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்திற்குப் பிறகும் என்னை உற்சாகமாகவும் உயிர்த் துடிப்பாகவும் வாழ வைத்துக் கொண்டிருப்பது என் தாவர தோழர்களே. கண்ணைமூடி நான் அமரும்போதெல்லாம் என் முன்னே விரிந்தாடும் மறைந்துபோன மரங்கள் சிலநூறு; மனித மூர்க்கத்தால் பலவாறு அழிந்த மரங்கள் பலநூறு.

சின்னஞ் சிறு வயதில் நான் பார்த்த மரங்கள் இன்னும் பசுமையாய் என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறன. அவை எத்தனையோ மனித காயம்பட்டு இன்று காணாமல் போனாலும் என்னுள்ளே நித்தம் நீரூற்றி வளர்க்கப்பட்டே வருகின்றன.

என் பாட்டியும் தாத்தாவும் காட்டிய வேலம், கல்யாண முருங்கை, நொச்சி, எருக்கம், வில்வ, புன்னை, ஆவாரம், ஆலம், அரச, புளிய, வேப்ப மரங்களைக் காண்கையில் இனம்புரியாத நேசம் நெஞ்சில் பூக்கிறது.

எத்தனையோ மரங்கள் இருந்த இடம் இன்று மனை மாடியென உருமாறி போயிருந்தாலும் அங்கே செல்லும்போதெல்லாம் எனக்குள் உறவைப் பிரிந்த சோகம் இதயத்தில் வலிக்கிறது. பெரும்பாலும் அந்த மரங்கள் வாழ்ந்த மண்ணை வாஞ்சையோடு தொடும்போது அதன் இளஞ்சூட்டை உள்ளூர உணர்கின்றேன்.

மண்ணை இதயத்தோடு அணைக்கையில் மறைந்துபோன மரத்தின் வாழ்ந்ததற்கான ஓசை சுவடுகள் மெல்லியதாய்க் கேட்கும். மரத்தின் வேர்பிஞ்சுக்கால்கள் உறைகளாக அணிந்த புதைந்த மண்ணின் வாசம் என்னால் நுகர முடிகிறது.

இன்றும் கூட நான் எந்தெந்த மரம் எங்கெங்கு வாழ்ந்தது இருந்தது என நண்பர்களிடம் கூறும்போது என்னை ஒரு மாதிரியாகவே பார்ப்பார்கள். என் பால்ய பருவத்திலே நான் வாழ்ந்த தோட்டத்து முழுமைக்கும் இருந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை அறுபத்து ஏழு. ஒவ்வொரு மரமும் நின்ற இடமும் தன்மையும் என்னுள் நிலையாக உள்ளன.

தோட்டத்து எல்லா மனிதர்களின் பெயர்களும் அவர்களின் இயல்புகளும் வாழ்ந்த வீடும் நினைவில் இருப்பதைப் போல எல்லா மரங்களும் அதன் மீதுள்ள அடையாளங்களும் மனிதன் ஏற்படுத்தியக் காயங்களும் நானறிவேன்.

நிழல் மரம் எனும் பொதுப்பெயரில் தோட்டத்து கீழ்ப்புற மையத்தில் ஒன்றும் தோட்டப் பள்ளியின் நடுவிலே ஒன்றும் மேல்புறத்தில் மாட்டுக் கொட்டகையின் ஓரம் ஒன்றும் அழகு சேர்த்தன. தோட்டத்தில் சிறுவர்களின் குண்டு விளையாடுதலின் சீண்டுதலில் சிலிர்த்துப்போகும் வேப்ப மரங்கள். பெரியவர்கள் கால்விரித்து கலந்துரையாட குடைப்பிடித்த கிழக்கு புளியமரம். பருவக் காலங்களில் பழங்களால் பூத்துக் குலுங்கி கற்களால் காயம்பட்டழும் ரம்புத்தான் மரங்கள்.

மாட்டுத் தொழுவத்தின் ஓரங்களில் வெளிறிய தோலோடு நின்ற ஐந்து கொய்யாமரங்கள் எங்களுக்கு ஊட்டச்சத்து தந்த தாய்கள். மலக்கூடங்களின் அருகில் செழித்து நின்ற பப்பாளி மரங்கள் பழங்கள் மட்டும் தந்தன?. எங்களின் சோப்புக் குமிழ்ப் போட்டிகளுக்கு காம்பையும் அல்லவா தாரை வார்த்தன.

தோட்ட கிராணியார் வாழும் மேட்டுப் புறங்களில் பூக்களே இலைகளாய் வீற்றிருக்கும் கொம்புகளடர்ந்த மூன்று மரக்கிளைகளில் சஞ்சாரம் செய்ததை மறக்க முடியாது. பட்டம்விடும் காலங்களில் அந்த மரத்தடிகள்தான் எங்கள் போதி மரங்கள்.

எந்ததெந்த பறவை எந்தெந்த மரத்திற்குச் சொந்தம் என்ற கணக்கெடுப்பும் என்னிடம் உள்ளது. மைனாக்களின் ஆலாபனையில் கிணற்றோரம் கண்துயிலும் ஏழு தென்னைமரங்களும், புறாக்களின் அழகிலே அசைந்தாடும் அகத்தீ மரமும், கடையோரத்தில் நிற்கும் முந்திரி பழத்துக்காக காத்திருக்கும் சிறுவர்களோடு போட்டிபோடும் காகங்களும், மரங்கொத்தி, மீன்கொத்திகளோடு பெயர் தெரியாத எத்தனையோ வண்ணப் பறவைகள் தங்கிச் செல்லும் ஆலயமாக விளங்கும் நெடிதுயர்ந்த டுரியான் பழ மரங்களும் தோட்டத்தையே வனப்போடு வைத்திருந்தன.

ஒதுக்குப்புறமாக நின்ற புளியமரம் பெரியவர்களால் காவல் தெய்வம் குடிகொண்டிருக்கும் இடமென பயமுறுத்தப்பட்டாலும் உச்சி வேளையைத் தவிர பிற பொழுதுகளில் சிறுவர்கள் விளையாட பயந்ததாக ஞாபகமில்லை.

தோட்டத்து மயான எல்லையில் நிற்கும் நடுகாட்டன் மரம் அவ்வளவு பெரியது இல்லையென்றாலும் அதைக் கடந்து போகும்போதெல்லாம் இறந்துபோனவர்கள் வெள்ளுடையிலே தொங்குவது போன்ற அம்புலி மாமா விக்கிரமாதித்தன் பேய்கள்தான் நினைவில் வரும்.

தோட்டத்து காதல் சின்னங்கள் பதிவான சில மரங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. முனியாண்டி கோயில் பக்கத்தில் நின்ற நெல்லி மரத்தில் மேல் கிளையில் ‘கண்ணு-சரோ’ காதலும் குப்பைக் மேட்டருகில் முளைத்த கள்ளி செடியின் மீது பால்வழியும் பல்வித காதல் குறியீடுகளும் காவிய வலிவுடையவை. எத்தனையோ காதல் மொழிகளில் இன்னும் அடையாளம் காணமுடியாமல் நான் இருப்பது ‘மனோ- திமா’ என்ற கல்லறை இலையைத்தான்.

தேன்சிட்டு பறவைகள் வட்டமிடும் சூசைமரங்களின் நிழலில் தங்கிச் செல்லும் ஆசை இன்றும் எனக்குண்டு. டப்பா பழச் செடிகளைக் கேட்காமலே பறித்து தின்னும் ஆசைகளும், குவளை மலர்களின் கொடிகளைத் தழுவும் சுகமும், தொட்டாற் சிணுங்கிகளின் பொய்க் கோபமும், ஒட்டுப் புற்களின் உதிராத நட்பும், கோரைப் புற்களின் சிலிர்த்த அழகும், அந்தி மந்தாரை, பவலவல்லி, மல்லிகை, செம்பருத்தி போன்ற வண்ண வண்ணப் பூச்செடிகளின் அணிவகுப்பும் என்றும் இனிக்கும் வசிகரமுடையன.

வாழை மரக் குறுத்து இலைகளின் இளம்பச்சைகளின் மேல் என்றுமே எனக்கு மயக்கமுண்டு. வாழையிலைகளின் வாசமும் அதன் விரிந்த இலைகளிலே உருண்டோடும் மழைத்துளிகளைக் காண்பதும் தனிசுகம். தோட்டத்து ஒதுக்குப்புறத்தில் வளைந்தோடும் ஆற்றங்கரை மேடுகளில் தோகை விரித்தாடும் மூங்கில் புதர்களில் நெஞ்சம் பறிகொடுத்திருக்கிறேன்.

புலராத காலைப் பொழுதின் பனித்துளிகள் மூங்கிலின் மெல்லிய இலைகளில் ஊஞ்சலாடுவதை கண் மாறாமல் பார்க்க பிடிக்கும். அந்தத் உணர்வுதான் இன்றும்கூட என் வீட்டு சுற்றுப்புறத்தில் மூங்கில் நட்டு வைத்திருக்கிறேன்.

மாலை நேர பறவைகள் கீச்சல்களோடு வந்தமரும் தென்னை இளங்கீற்றுகளை ஏக்கத்தோடு பார்ப்பேன். தென்னை ஓலையை குழந்தையின் அன்போடு அணைப்பது இன்றுவரை தொடர்கிறது. ரப்பர் மரக்காடுகளில் மகிழ்ச்சியோடு பயணம் போவதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

இலையுதிர் காலங்களில் மரக்கிளைகளிலிருந்து உதிரும் இலைகள் பூமியைத் தொடும் வரை அதோடு பறந்தது எத்துணை இன்பம். ரப்பர் இலைகள் துளிர்விடும் காலங்களில் மஞ்சள் நிற செந்தூர மகரந்த துகள்களின் மணம் இன்றும் என்னுள்ளே மணக்கிறது. என் அப்பா இறந்துவிட்ட நிலையில் அவர் வளர்த்த வெற்றிலைக் கொடிகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு புது இலை துளிரிலும் அவரின் முகம் தெரிகிறது. அவரது கைப்பட்டு வளர்ந்த அந்த வெற்றிலை செடிகளைத் தொடும்போது அவரைத் தொடும் சுகம் பிறக்கிறது.

என் வயதோடு வளர்ந்த மரங்களைக் காணும்போது என் வளர்ச்சியைக் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த மரங்களோடு எனது தோழமையும் தொடர்கதையாய் செல்கிறது. இன்றும் என் வீட்டைச் சுற்றிலும் உறவுகளாக விரிந்திருப்பது மரஞ்செடி கொடிகள்தான். ஒவ்வொரு காலையும் அந்தச் செடிகளின் முகங்களில் விழிப்பது இன்பம். என் குழந்தைகளுக்கு சகோதரர்கள் நான் வளர்க்கும் செடிகளே.

என் வீட்டில் வளரும் மரஞ்செடி கொடிகளுக்கு தனிச்சிறப்புண்டு. ஒவ்வொரு செடிகொடிக்கும் என்னோடு தோட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பெயரை வைத்துள்ளேன். என் குழந்தைகளுக்கு அந்த மனிதர்களின் பெயரையும் அவர்களின் பண்பு இயல்புகளையும் சொல்லியே செடிகொடிகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஒவ்வொரு மாலைப் பொழுதும் நீரூற்றும் வேளையில் அச்செடிகளோடு கந்துரையாடுவதும் அன்பொழுக அணைப்பதும் இனிதே நடக்கிறது.

வீட்டின் முன்னே கிளை பரப்பி நிற்கும் நெல்லி மரத்திற்கு என் பாட்டி ஆதிலெட்சுமியின் பெயரும் மூங்கில் செடிக்கு தாத்தா வேதாசலத்தின் பெயரும் மூக்காயி, பொன்னம்மா, சின்னையா, பலராம் பாரதி, ஒளவை, வள்ளுவன் என என் வீட்டு எல்லாத் தாவரங்களுக்கும் பெயருண்டு. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் அவர்களோடு நானும் குழந்தைகளும் பேசுவோம். நீரூற்றுவது, மண் அணைப்பது, களை நீக்குவது என அந்தத் தாவர மனிதர்களோடு இன்பமாக வாழ்கிறோம்.

நான் பணிசெய்யும் இடத்தும் என்னோடு ஒரு செடியை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். நான் தினமும் அச்செடியோடு பேசுவதும் அன்பு கொள்வதும் எனை மீண்டும் உணர்வால் புதுப்பிக்கின்றது. ஒரு ரகசியம் சொல்லட்டுமா?. என்றோ படித்த ‘போஸ்’ என்பவரின் தாவர ஆராய்ச்சி. நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது உங்களின் வருகையை முதலில் அறிவதும் உணர்வதும் ஆனந்தப்படுவதும் உங்கள் வீட்டு தோட்டத்துத் தாவரங்களே. அவைக்குப் பிறகுதான் நீங்கள் வளர்க்கும் செல்ல நாய், பூனை, மீன் எல்லாம். இறுதியாக உங்களை வரவேற்பதுதான் உறவுகள்.

நினைவில் நிறுத்துங்கள், உங்களுக்கு உடம்பில் காயம் பட்டால் முதலில் உங்களுக்காக கலங்குவதும் வருந்துவதும் துடிப்பதும் தாவரங்களே. உணர்வுப்பூவமாக சொல்கிறேன் தாவரங்களோடு நேரம் ஒதுக்கி உரையாடிப் பாருங்கள், வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் புரிதல்களைச் சொல்லும். மலர்கள் மெல்ல மொட்டவிழும் மெல்லோசை செவிமடல்களில் தேனாக பாயும். மழையில் இலைகள் நனைந்த ஆனந்த சிலிர்ப்பு உங்கள் கண்களுக்குத் தெரியும். என்றேனும் ஒரு நாள் சில மணித்துளிகளாவது ஏதாவதொரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்து வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா?. உங்கள் மீது இலைகளும், கிளைகளும், மலர்களும், காய்களும், கனிகளும் முளைப்பதை கவனித்துப் பாருங்கள். அந்தச் சுகானுபவத்திற்காக இன்னும் பல பிறப்புகள் தாவரங்களாய் பிறக்கலாம்.

நூல்களோடு ஒரு காதல்

எனது இதயம் நூல்களால் பின்னப்பட்டது. எந்த நூலைக் கண்டாலும் தாயினும் சாலப் பரிந்திடும் அன்போடு அதன் பின்னே ஓடுகிறது என்னிளமனது. நெடுங்கால வறட்சிக்குப்பின் மழை பெய்தபோது கிளர்ந்தெழும் மண்ணின் வாசத்தைப்போல இலக்கிய நூலின் வாசம் எங்கிருந்தாலும் என்னால் நுகர முடிகிறது.

பள்ளிப் பருவத்திலே நூல்களின் மேல் தீராத என் காதலுக்கு காரணமானவர்கள் நால்வர். நான் வாழ்ந்த விக்டோரியா தோட்டத்து சூழலும் அதன் அழகும் என்னுள் இயற்கையாகவே எனக்குள் ஒரு சொல்ல முடியா வாசிக்கும் பரவசத்தைத் தந்தது. தோட்டத்து மக்களும் மண்வாசனையும் என்னுள் இகசிய வாசிப்பை ஏற்படுத்தினர்.

என் தாத்தா வேதாசலத்தின் தூண்டுதலும் அவரின் கதை சொல்லும் பாங்கும் என்னுள் கற்பனை வளத்தையும் கதைகளின் மீதான ஆவலையும் அகலப்படுத்தியது. தோட்டத்து மக்களிடையே பால்வெட்டுத் தொழிலாளியானாலும் பரந்துபட்ட தமிழ் வாசிப்பைக் கொண்டவரான திரு.இராமரெட்டியைக் காணும்போதெல்லாம் எனக்குள் வாசிக்கும் ஆர்வம் ஊற்றெடுக்கும்.

அவர் பெரும்பாலும் வாசித்த நாவல்களிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டும்போதெல்லாம் அந்நூல்களை வாசிக்க மனம் ஆவலுறும். மறைமுகமாக அவரின் தூண்டுதலால் தீவிர வாசகனானேன். ரப்பர் மரம் சீவிவிட்டு ஓய்வு நேரங்களில் அவர் சாண்டில்யன்,மு.வ.,அகிலன் என எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

அடுத்து எழுபதுகளில் என் அண்டை வீட்டுக்காரரான திரு.நடேசன் அவர்களிடம் காணப்பட்ட எனக்குப் பிடித்த பழக்கம் வாசிப்பது. அவரிடமிருந்து கல்கண்டு இதழை வாரந்தவறாமல் படிப்பது எனக்கு இனிய பழக்கமானது.

கல்லூரி காலங்களில் பெரும்பாலும் மெளனத்தின் ஆழத்திலே நான் புதையுண்டிருந்தாலும் என்னோடு இணைபிரியாமல் பேசிக்கொண்டிருந்தது நூல்களே. நா.பா,,மு.வ, அகிலன், ஜெயகாந்தன் என நாவல்களில் நீராடியதும், புதுமைப்பித்தன், மெளனி, பிச்சைமூர்த்தியென சிறுகதைகளோடு உலவியதும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா கவிதைகளோடு கைக்குலுக்கியதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

தமிழ் இலக்கிய நூல்களோடு இருந்த நெருக்கம்தான் என்னை உள்ளூர சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் ஆனந்த பிடியிலே தொங்கிக் கொண்டுதான் ஆங்கில இலக்கியவான்களான செக்ஸ்பியர், மில்டன், ஒர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பெர்னாட்ஷாவோடும் கொஞ்சம் உறவு கொண்டேன்.

என் இருபதுகளில் பெர்னாட்ஷாவின் கருத்துகள் என் வாழ்க்கையைப் பாதையைப் பெரிதும் திருப்பிப் போட்டன. அவரின் சீர்த்திருத்தக் கருத்துகளும் கிண்டலும் கேலியும் என்னுள்ளே புரட்சி விதையை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் தமிழில் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தேன். அமைதியாக நீருபூத்த நெருப்பு என்னுள்ளே வளர்ந்தது.

ஆங்கிலத்தில் தழுவல்களாக வெளியான ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மனதை இளகச் செய்தது. பாலைவன கவியரசன் கலீல் ஜிப்ரானின் ‘ப்ரொபெட்’ எதிர்பாரதவிதமாக தொட்டதும் என்னுள்ள பள்ளத்தாக்கிலும் கவிப்பூக்கள் மொட்டவிழத் தொடங்கின.

மலாய் இலக்கியவாதிகளான சானோன் அமாட்டின் ‘ரஞ்சாவ் செபான்ஞ்சாங் ஜாலான்’, சமாட் சைட்டின் ‘சலீனா’, இந்தோனேசிய நாவலான ‘கெலுவார்கா கெரில்யா’எனக்குள் மொழிபேதத்தைத் களைந்து மனிதத்தைக் காட்டின. கிரிஸ் மாஸின் ‘கே மாக்காம் பொண்டா’வையும் சைரில் அன்வாரின் ‘புரோங் புஜாங்கா’வையும் வாசிக்கையில் கவிதைகளில் மனித உணர்வையுந் தாண்டிய உயிர்களின் பொதுமைப் பண்பு தெரிந்தது.

இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், இறையன்பு, சுகி சிவம் ஆகியோரின் வாழ்வியல் கட்டுரைகளில் தனிக் காதலுண்டு. வாழ்வின் நம்மால் கவனிக்கப்படாத எத்தனையோ ரகசியக் கதவுகளை திறந்து காட்டியிருக்கிறார்கள். என்றுமே ஓஷோவின் கருத்துகளுக்கு என்னுள் தனியிடம் உண்டு. ஓஷோவைப் படித்தப் பிறகுதான் வாழ்க்கையின் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும் ஆழப் பார்க்கும் பார்வை பிறந்தது. சமூக நடப்புகளிலிருந்து மெல்ல என்னை விடுவித்து கொண்டு சுதந்திர பறவையாய் சிறகு விரிக்க நினைக்கிறேன்.

என் வாழ்க்கை வழியெங்கும் நான் தொட்ட புத்தகங்களெல்லாம் என்னைக் கேட்காமலேயே என்னைச் செதுக்கின. கல்லூரியெனும் பத்தக மூங்கில் காட்டுக்குள் என்னைத் தொலைத்தேன். இலக்கியத் தாகத்தால் எந்த வழிகாட்டலும் மேய்ப்பனுமின்றி தனியே என் பயணம் இன்றும் தொடர்கிறது. இன்னும்கூட ‘மோகமுள்ளின்’ வலியும் ‘மரப்பசுவின்’ உரசலும் ‘விஷ்ணுபுரத்தின்’ விளைச்சலும் இதயத்துள் விரிகின்றது.

ஜெ.ஜெ.குறிப்புகளுக்குப் பிறகு சுந்தர ராமசாமியை நானும் நண்பர் மணிமாறனும் அவர் இல்லத்துக்கே தேடிச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியது மறக்கவியலாது. இன்றைய ஜெயமோகன், வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், என வாசிப்பு விரிந்து சென்றாலும் எனக்குள் நானே விமர்சனம் செய்த எத்தனையோ இலக்கியப் படைப்புகள் கனவிலும் கல்லெறிந்து கொண்டிருக்கிறன.

தமிழில் அறம் பாடிய வள்ளுவன் தொடங்கி மறம் பாடிய பாரதிவரை ஒவ்வொரு வரியாக வாசித்து சிலாகிக்க மனம் ஏங்குகிறது. சங்கத் தமிழும் பக்தி பதிகமும் சல்லடையாய் அலச அறிவு துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கிய இன்பத்திலே கரைவதற்கு இதயம் தவிக்கிறது. ஒரு கோப்பைத் தேநீரோடு இலக்கிய அமுதம் பருக என்னோடு இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.