திங்கள், 23 பிப்ரவரி, 2009

மரண தேவதையே!

மரணமே! உன்னை நான் நேசிக்கின்றேன்
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம்
மலரின் முடிவில் காயின் பிறப்பு
காயின் இறப்பில் கனியின் சிரிப்பு
ஒன்று உரமாகி இன்னொன்று உருவாகும்
சருகுகள் உதிராவிட்டால் புதிய தளிர்களுக்குப் பிறப்பேது?
கரையே இல்லாத கடல் எங்கேயாவது நீங்கள் கண்டதுண்டா?
முடிவே இல்லாத நதி பூமியில் நடை பயின்றதுண்டா?
ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது
ஆதலால் மரணமே உன்னை நேசிக்கின்றேன்
மரணம் என் நேசத்திற்குரிய நெருங்கிய நண்பன்
அதன் வலிமை என்றும் என் ஆராதனைக்குரியது
ஞானம் போதிப்பதில் எந்த ஆசானும் மரணத்திற்கு ஈடில்லை
பலர் ‘மனிதர்களாக’ வாழ்வதே மரண தரிசனத்தில்தான்
மரணம் இன மத நிற வேற்றுமையின்றி நம்மை அரவணைக்கும் தலைவன்
‘காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கின்றேன்
உனை என் காலாலே மிதிக்கின்றேன்’ என்று பாரதிபோல் சவால்விடவும் தெரியாது
‘சாவே உனக்கொரு நாள் சாவுவந்து சேராதோ -
தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ’
என்று கவியரசு கண்ணதாசன்போல் புலம்பவும் தெரியாது
மரணம் எனைத் தேடிவரும்போது
அதை ஒரு தேவதையைப் போல் வாழ்த்தி வரவேற்பேன்
தெய்விக அமைதியுடன் அதன் தாய்மடியில் கண் துயில்வேன்
ஏனென்றால் மரணமே வாழ்வைப்போல் உன்னை நேசிக்கின்றேன்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நெஞ்ச வயலில் நம்பிக்கை விதைப்போம்.

என் அன்பு சோதரனே,
வாழ்வின் வசந்தத்தை எல்லாம் நாடு வளர பிறர் வாழ வாரி இரைத்து நலிந்துவிட்ட தோழனே, உன்னோடு என் உள்ளப்பூர்வமான வார்த்தை பரிமாறல்கள். அன்று உடல் உயிர் பொருளென உன் வாழ்வையே அர்ப்பணித்தாய். இன்று குழிவிழுந்த கண்களோடும் உடைந்த மார்போடும் கூன் விழுந்த முதுகொடும் சரிந்த தோளோடும் உரமற்ற நெஞ்சோடும் நீ உலாவருவதை பார்க்கும்போது என் இதயத்துள் இரத்தம் கசிகிறது.

என் இனிய நண்பனே,
அனைத்தும் உன்னைவிட்டு சென்றுவிட்டாலும் நீ இழக்காதா நம்பிக்கை வைரமாய் ஒளிருகிறது. இந்த உலகத்தில் நீ தொடர்ந்து போராடி வாழ்வதற்கு உனக்குத் தேவைப்படும் மூலதனமே நம்பிக்கைதான். மறந்திடாதே, ‘வெறுங்கை என்பது மூடத்தனம் உன் பத்து விரல்களும் மூலதனம்’. மீண்டுமொரு உதயம் உன்னால் உருவாகட்டும்.

என் அருமைத் தோழனே,
இரவுகள் என்பவை நிரந்தரமானவை அல்ல; ஒவ்வொரு பொழுதும் புலரவே செய்கிறது என்பது இயற்கையின் நியதி. இருளின் திரையைக் கிழித்தெரியும் கதிரவனைப்போல் உன் மன ஆழத்திலே ஊற்றெடுக்கின்ற நம்பிக்கை துளிகள்தாம் உனக்கொரு திருநாளைக் கொண்டுவரப் போகிறது. கோடையின் வெப்பம் குளிரில் மறைவதுபோல் நீ வறுமையின் கோரப்பிடியில் விடுகின்ற ஏக்கப் பெருமூச்செல்லாம் நம்பிக்கை நீரூற்றால்தான் தணியப்போகிறது.

என் நேசத்திற்குரியவனே,
மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான் என்ற கருத்தை உன் இதயத்தில் ஆழமாக செதுக்கி வைத்துக்கொள். நம்பிக்கை ஆணிவேர்கள் ஆழ வேரூன்றிய உன் மனத்தில் சூறையென துன்பம் சூழ்ந்தடித்தாலும் புயலெனப் படை பாய்ந்தெதிர்த்தாலும் அதையெல்லாம் இடுப்பொடித்து தவிடுபொடியாக்கும் பட்டை வைரமாய் ஒளிவீசுகிறது.

என் நெஞ்சிற்கு நெருக்கமானவனே,
“சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்” என்ற பாரதியின் வாய்மையைப்போல் நம்மை ஆயிரம் சோதனை ஆர்த்து வந்தாலும் அவற்றை அழித்து ஆக்கும் சக்தியாக வெற்றிக் கொள்ளச் செய்ய திருமுருகன் நமக்கு அளித்துள்ள வேலாயுதம் நம்பிக்கைதான். இராமன் தம்மை இராவணனிடமிருந்து விடுவித்து வாழ்விப்பான் என்ற அசோகவன சீதையின் நம்பிக்கை; தம் கணவன் கள்வனல்ல என்று பாண்டிய மன்னனிடம் நீதியுரைத்த கற்புக்கரசி கண்ணகியின் வாய்மையான நம்பிக்கை; துச்சாதனன் பலரறிய அவைக்களத்தில் துகிலுரித்தபோது தம்மையே கண்ணனிடம் தந்துவிட்டு சரண்புகுந்த தெளரபதியின் நம்பிக்கை இதிகாசங்களையும் காப்பியங்களையும் மட்டும் வாழவைக்கவில்லை மானுடத்தையும் தாங்கிப் பிடித்து உயர்த்தியிருக்கின்றன.

என் அன்பு சிநேகிதனே,
ஆற்றங்கரையோரம் ஓடுமீனோட உறுமீன் வருமளவு மெளனத்தவமிருக்கிற கொக்கின் நம்பிக்கையை நீ கூர்ந்து கவனித்ததுண்டா? கொக்கை விடவா நீ நம்பிக்கையில் தாழ்ந்தவன்?. சின்னஞ்சிறிய மீன்கள் தன் கால்களினூடே துணிச்சலோடு அனுமதிக்கும் கொக்கு, பெரிதான மீன் வருவதென்னவோ உறுதி என்றுதானே அத்துணை நம்பிக்கையோடு பொறுமை காத்து நிற்கிறது. எனக்குத் தெரியும் நீ கடுமையாய் உழைத்து களைத்திருக்கிறாய். நீண்ட வழிநடந்த களைப்பால் ஓரடி எடுத்து வைக்க தெம்பில்லாமல் மனம் தடுமாடுகிறாய். சற்றே அமர்ந்து நீ நடந்து வந்த பல்லாயிரம் பாதத் தடங்களை மெல்ல திரும்பிப்பார். நீ முதலில் எடுத்து வைத்த நம்பிக்கையே இதுவரை உன்னை சுமந்து வந்திருக்கிறது இனியும் உன்னை வானம் தொடும் தூரம்வரை இட்டுச் செல்லும்.

என் நம்பிக்கைச் சுடரே,
“நம்பிக்கைகளே வானத்தின் நட்சத்திரங்கள்; வாழ்க்கையின் எல்லைக் கற்கள்; சகாரா பாலைவனத்தில் நீ நடைபயின்றாலும் நம்பிக்கைகளே உன் தாகம் தீர்க்கப்போகும் தண்ணீர்ப் பந்தல்கள்; நம்பிக்கை என்றும் மகத்தானது; உலகை என்றும் செழிப்பில் வாழ வைப்பது” என்றோ நான் படித்த இந்தப் பேருண்மை வரிகளுக்குச் சொந்தக்காரனை நேசமுடன் `இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்’ என்ற தமிழ் நம்பிக்கையின் சிகரம் திருவள்ளுவரின் திருப்பாதங்களுக்கு பூத்தூவ காத்து நிற்கிறேன்.

என் இதய நாயகனே,
நம்பிக்கைத் துளிர்கள் காணாத விதைகள் பசுஞ்சோலையிலும் உயிர்ப்பதே இல்லை. நம்பிக்கை வெள்ளம் பாயாத மணற்பரப்பில் பசுமை பூப்பதே இல்லை. `நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறில்லை’ என்று வறட்டு வேதாந்திகள் தம்மீது நம்பிக்கை கொள்ளாமல் நாளும் பொழுதும் தங்கள் இயலாமையை புலம்பிக் கொண்டு திரிவதை எண்ணி வெட்கப்படு தோழா. அவர்கள் மீது அறிவுவாள் வீசுவோம்.

என், உதய நிலவே,
‘நாளை இறக்கப்போவதற்காக இன்றே கண்ணீர் சிந்தும் அறிவிலிகள் கவலைப்படுவதாலும் துயரப்படுவதாலும் உங்கள் உயரத்திற்கு மேலே ஒரு முழம் கூட்ட உங்களுக்குள் எவரால் இயலும்’ என்று இயேசுநாதர் கேட்பதை சிந்தித்துப்பார். ‘காலா எந்தன் காலருகே வாடா - சற்றே உன்னை மிதிக்கின்றேன்’ என்ற பாரதியின் கண்ணொளியில் பிரகாசிக்கும் நம்பிக்கையை உன்னிப்பார். அடிவானம் எட்டாக் கனியாய் இருக்கலாம் அருகே செல்லச் செல்ல தொலைதூரம் போகலாம் ஆனாலும் தொடவேண்டுமென்ற நம்பிக்கைதான் வாழ்வை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

என் இளஞ் சூரியனே
நம்பிக்கைதான் இந்தப் பூமியை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பு. நம்பிக்கை இருக்கிறவரை பூமி செழிப்பில் சொர்க்கமாய் சிரிக்கும்; நம்பிக்கை அற்றுப் போனால் இருண்ட நரகமாய் விளங்கும். நம்பிக்கை நெஞ்சுரங் கொண்டவனே,` பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகள் திறந்தன, சிறுத்தையே வெளியே வா’ என்று பாரதிதாசன் உன்னை அழைப்பது செவிகளில் விழவில்லையா?. இன்னுமென்ன தயக்கம்?. உலகம் உன் பொன்வரவுக்காக காத்து நிற்கிறது. நம்பிக்கையோடு புறப்படு தோழா, காலம் உனக்கொரு காவியம் பாடும்.

(பெரும்பாலான நம்மின இளைஞர்களைப் பார்த்து கவிஞர் வைரமுத்து முப்பது வயதுக்குள்ளே முதுமை வந்து தளர்ந்துவிட்டனாக இருக்கின்றான் என்று கவிதைச் கணையால் உணர்த்தியுள்ளார். அந்தக் கருத்திற்கும் எனது நோக்கிற்கும் உடன்பாடு உண்டு. இன்றைய இளைஞர்களின் தோற்றமும் வாழ்க்கையில் ஒரு தேடுதலும் இலக்குமின்றி உடலையும் உயிரையும் பேணாமல் மனமும் ஆன்மாவும் மலராமல் சிந்தனைக் குறுகி நம்பிக்கை வற்றி நடைப் பிணமாகத் தேங்கியக் குட்டையாய் வாழ்ந்து விதிவந்து சாவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஒவ்வொரு இளைஞனையும் மாசக்தியாக உருவாக்கும் தார்மிகப் பொறுப்பும் சமூகக் கடப்பாடும் அனைவருக்குமுண்டு. இராமாயணத்தில் தன்னுடைய ஆற்றல் புரியாததால் கடலைக் கடந்து இலங்கைக்கு செல்ல முடியாமல் வாயு புத்திரனான அனுமான் மனம்வாடி நின்றபோது ‘சாம்பன்’ என்ற வானரம் அனுமனின் ஆற்றலை அறிந்து வீரதீர வார்த்தைகள் வலிமையோடு உச்சரிக்க அனுமன் தன்னையுணர்ந்து மெல்ல பேருருவம் எடுத்து இலங்கைக்குப் பறந்து செல்வதாகக் காட்சியுண்டு. இங்கே எனக்கு அந்தச் ‘சாம்பன்’ போன்று நம்மின இளைஞர்களுக்குப் பெரியோர்கள் நம்பிக்கை நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தால் விரைவிலேயே நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். ஒரு இளைஞன் சொன்னது `we are not useless but we are used less’. என் பங்குக்கு இன்றைய சோர்ந்த இளைஞனை தட்டிக் கொடுக்கும் நோக்கிலே இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன்)

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

கவியரசரின் கூர்த்த மதி

இலக்கியக் கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து
" கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை" என்றுகேட்டாராம்.
உடனே கண்ணதாசன்," கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான்! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .

தமிழை சுவாசி....

திருக்குறளைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்பார் மாணிக்கவாசகர். நம் குழந்தைகளைத் திருக்குறளை ஒப்பிக்கும்படி பழக்குகிறோம். அது நல்ல பழக்கம். ஆனால் பெரியவர்கள் குறளின் பொருளைப் பலமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், திரும்பத் திரும்ப நினைத்தல், திரும்பத் திரும்பச் செயல்படுத்த முயலுதல் .. இவையே உருவேற்றுதல் ஆகும். இதைச் ‘ஜெபம்’ என்றும் ‘பாராயணம்’ என்றும் வடமொழியில் கூறுவர். தமிழில் ‘உரு’வேற்றுதல் என்பது மிக அழகான, பொருள் பொதிந்த சொல். ‘உரு’வாகிறது அது; பலமுறை .. நூற்றி எட்டு முறை .. ஆயிரத்து எட்டு முறை சொல்லுங்கள். எழுதுங்கள்.

நீங்கள் நினைப்பது முதலில் மனத்தில் ‘உரு’வாகும் பிறகு வாழ்க்கையில் உருவாகும். அதனால் நினைத்ததை அடைவீர்கள். இவ்வாறு செய்தால் நாம் திருவாசகம், தேவாரம், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்றவை தொடங்கி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரை நாமே மனப்பாடம் செய்கிற பழக்கம் வரும்.

இது நம்மைப் பார்த்து நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே மிகமிகக் கூடுதலான பக்திப் பாடல்களைக் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும். அதைப் பாடிப் பரவி உலகெலாம் ஒலிக்கச் செய்வது நம் கடமையாகும்.”

வாரியாரின் பதில்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்." பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?".வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார்.

ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், " தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்.

என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே!" அதற்குப்பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. வாயடைத்துப் போனான்

வாழ்வின் தேடல்....

வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்! நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்! ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம்மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல? வாழ்வென்பது என்ன? மூச்சுவிடுதல் மட்டுமா?

உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா? இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா? கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?தேடல் என்பது என்ன? வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.. என்று
புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே.. வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?
“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை; இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”காட்டுப்âக்களாய்மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஏற்போம் சபதமே


படை திரட்டுவோம் – ஈனப்
பகை விரட்டுவோம் – வீர
நடை முடுக்குவோம் – வெற்றி
நகை முழக்குவோம் ... (படை)
திங்களோடு தென்றலோடு
வந்ததெங்கள் தமிழ்மொழி
எங்கிருந்து வந்தவர்க்கும்
வாழ்வளித்த பெருமொழி
சிங்கமக்கள் பெற்றெடுத்த
சீருலாவும் திருமொழி
பங்கமொன்று வருகுதெனில்
பார்த்திடவோ எம்விழி ... (படை)
ஆண்டதமிழ் மீண்டும் ஆள
வேண்டுமிந்த உலகிலே
மாண்டபுகழ் மீண்டுமிங்கு
மலரவேண்டும் கண்ணிலே
தோன்றின் புகழோடு நீயும்
தோன்ற வேண்டும் தமிழனே
ஈன்ற தாயின் நெஞ்சினிக்க
ஏற்கவேண்டும் சபதமே ... (படை)

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்


(பாரதியின் ‘குயில் பாட்டு’ எனது மனத்தில் ஏற்படுத்திய மற்றொரு தாக்கத்தின் விளைச்சல்தான் இந்த எழுத்துக்கள். ‘நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலம்பரிராகம்’ எழுதிய ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு இதை எழுதியதாக இந்த எழுத்துச் சுவடியில் குறிப்பிட்டுள்ளேன்.(டிசம்பர் 1987) இயற்கையை முழுமனதோடு எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. இன்றுவரை அவனது கையைப் பிடித்துக் கொண்டே வாழ்க்கையின் விரிந்த எல்லைகளை நான் அளந்து வருகின்றேன். ’காக்கை குருவி எங்கள் சாதி’ என்று அவன் உறவு கொண்டாடியதுபோல் நானும் என் வீட்டுக் கூரைகளிலும் இதயத்திலும் கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவிகளின் மீது அமரக் காதல் உற்றேன். எந்த தேசத்தில் நான் சிடுக்குருவியைப் பார்த்தாலும் எனக்குள் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவிபோலே’ என்ற் பாரதியின் அன்புணர்வுப் பொங்கியெழும். விட்டக் குறையோ தொட்டக் குறையோ இன்றுவரை என் வீட்டுக் கூரைகளில் சிட்டுக்குருவிகள் இன்பமாக குடும்பம் நடத்தி வருவதைப் பார்த்து மகிழ்கிறேன். அவற்றின் ஆனந்த கீச்சிடும் ஒலிகள்தாம் என் வைகறை பொழுதின் திருப்பள்ளியெழுச்சி. இளவயதில் நான் எழுதிய கீழேயுள்ள இந்தக் கட்டுரையை என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே மறைந்தும் மறையாமலும் வாழும் உறவுகளும் தோழர்களுமான என் வீட்டுச் சிட்டுக்குருவிகளுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்)

சிட்டுக்குருவிக்கு என் காதல் கீர்த்தனங்கள்
அதோ புலர்ந்தும் புலராத வைகறைப் பொன்வான விரிப்பிலே இயற்கையே உன்றன் உயிரோவியம். உன்னைக் கண்டதும் என்னிதய வீணையெங்கும் ஓர் இசையருவியின் ஆனந்த ஆலாபனை. முத்தச்சுவைக்காட்டி முத்தமிழை ஊட்டும் திருமுகமே, உன்னை தரிசிக்கும் போதெல்லாம் நான் புனிதம் அடைகின்றேன்; நித்தம் புதுப்பிறவி எய்துகின்றேன்.
எனது உயிரினில் கலந்திட்ட உறவே, உன்னை எண்ணும்போதெல்லாம் என்னுயிர் தொட்டெழுகிறது ஒரு பாட்டு. காலைப் பசும் பயிர்களைக் கொஞ்சி வரும் தென்றலின் தழுவலில் உன் காதலின் பெருஞ்சுகம் கட்டுண்டு கிடக்கிறது. கனிச்சாறே, குளிர் நிலவு முகிலை மெல்ல கொஞ்சி போவதுபோல் கூடல் நீக்கிச் செல்கின்றாய் எனை வாடவிட்டுச் செல்கின்றாய்
மாசில்லா மணியே, உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே, வழி தப்பியப் பறவை போல் உன்னிடம் பிடிபட்டேன். என்னுள்ளத்தை உலுக்கினாய்; உனது எல்லையற்ற கீதவலையில் மயங்க வைத்து என்னுள்ளத்தைப் பிடித்தாய். வான்மழியில் குள்த்தால் உடலும் உயிரும் சிலிர்ப்பதுபோல் எனது யாழின் நரம்புகளை தடவும்போது என் நெஞ்சம் இசைக்கிறது; என்னுயிரும் உன் பாடலோடு ஒன்றி நிற்கிறது.
யாழ்தன் இசையைத் தாங்வதுபோல நான் உன் அன்பைத் தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் ஆருயிரோடு அளிப்பேனாக. கவின் பெருவனப்பே, ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் புதியதோர் பொற்கடிதத்தை என் முன்னே நீட்டுகின்றாய். கார்மேகத்தில் பளிச்சிடும் மின்னல் கீற்றுபோல் பொருள் பொதிந்த பன்னகையைச் சிந்தி என் பாட்டு அலங்காரங்களை மெளனத்தால் கட்டி வைக்கிறாய்.
தாயினும் சாலப்பரிந்து பாலூட்டும் வானமுதே, வாழ்வின் பெருநிதியே, விழிவணக்கம் செய்தபடி வாயில் வீணை விளைவிக்கும் இசைக்கூட்டி நாளும் கவிமழைப் பொழிகின்றேன். உனை நாளும் பொழுதெல்லாம் கூட்டுக் குருவியைப்போல் எனதுள்ளம் கூட்டி மகிழ்ந்திருந்தேன்.
எழுதா பொன் சித்திரமே, எனது ஞாபகப் புறாக்கள் விண்ணில் சிறகடித்துப் பறக்கின்றன. கடலலையின் நுரைச்சுழி அலைகளால் கரைந்துபோன காலத் தடயங்களை இதமாக தடவிப் பார்க்கின்றேன்; அங்கே குறுமணலாய் உன் நினைவுகள் மட்டும் தேங்கிக் கிடக்கின்றன.
அன்றொருநாள் கடலலைகள் கவிதைப் பாடும் மணற்மேட்டில் காதல் இன்பத்தே நாமிருவர் திளைத்தப் பொழுதில் இளந்தென்றல் நம்மிருவர்க்கிடையில் செல்ல துன்புற்று சினந்திருக்க அதை நித்தம் நினைந்துருகி துயில் கொள்ளாமல் மன்றத்து சுடர்விளக்காய்த் துடிக்கின்றேனே. தேன் மறந்து வாழ்கின்ற வண்டு உண்டா? நாளும் உனையெண்ணி நலிகின்ற என் நெஞ்சுள்ளே என்றுறைவாய்?. இங்கு நீயின்றேல் நானில்லை.
நின்னிதழில் அமுதுறிஞ்சிய மங்காத நினைவென்றன் உளத்தெழுந்து வதைக்குமென்னை; புத்தமுதே, வீணை நாதம் இழந்துவிடில் என்ன பயனோ அதுபோல வெந்தழியும் சிந்தையிலே மெழுகாய் உருகுகிறேன். நித்தம் நித்தம் பலவெண்ணி நெஞ்சமெல்லாம் புண்ணாகிப் பித்தாகி மனமுடைந்து பின் தெளிந்து நாளோட அதைத் தொடர்ந்து தானோட காதல் வேள்வித் தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.
காசு பணம் இல்லாத ஏழை என்னால் காதலுக்குத் தாஜ்மாகல் போல் கலைக்கோயில் கட்டமுடியாமல் போனாலும் காலத்தாலும் துடைத்தழிக்க முடியாத சொற்கோயில் கட்டுவேன். தோண்டிய மணலிலே ஊறிடும் சுடர்மணி நீரினைப்போல் உன்னை நினைக்கும்போதெல்லாம் கவிதை ஊற்றாய் பிறக்கிறது.
தேனமுதே, பழரசமே என் மனக்குகையிலெல்லாம் மெளனமாய் நீ வரைந்த காதல் உயிரோவியங்கள் அஜுந்தாவைப்போல் அழியாமல் சிரிக்கிறது. நான் மட்டிலுமே இந்த உயிரோவியக் கூடத்திற்குள் சொர்ணச் சிற்பமாய் உள்ளம் நெகிழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் நெஞ்சப் பொய்கையில் உன் பொன்வரவால் தளையவிழ்த்த தாமரை இன்னும் உன் தடம் பார்த்து விழிபூத்து நிற்கிறது.
உன் அழகிய ஆழக்கருவிழிகளோ ஆழங்காணமுடியாத உயிர்ப்பு மொழியில் தெய்விகத் தன்மை வாய்ந்த காதலின் கீதத்தை சோகமான திகட்டுதலோடு வெளியிடுகிறது. உன் இமைச்சிறகுகளின் கந்தர்வத் துடிப்பு என் நெஞ்சக அடுப்பில் அணைந்து போகாமல் கனன்றெரியும் காதல் பெருநெருப்பிலிருந்து சாம்பலையும் தீப்பொறிகளையும் வீசிறிச் சிதறச் செய்கிறது.
கவிதையின் விளைச்சலே, கற்கண்டு ஊற்றே, இமைப்பொழுதும் மறவா இனிமைத் தவிப்பினிலே நான் இருந்தபோது அன்பின் இன்ப இரகசியத் தாழ்த் திறந்தாய். எண்ணிய போதினிலே எதிர்வந்த இன்பப் பொருளினைப்போல் புண்ணியம் செய்தவர்க்கே கிடைத்திடப் போற்றும் திருவினைப்போல் பிறைநிலவாக நீ வந்தாய். நீ வந்த நாள் முதலாக செந்தமிழ்ப் பூக்காட்டில் வாசத்தேனெடுத்து புத்தம்புது பூங்கவிதைத் தொடுத்து வந்தேன்.
உன்னுடைய பேரமைதி நிரம்பிய நல்லொளியினிலே ஒளியை அள்ளி என்னிதய அறையிலுள்ள இருளைத் தட்டிவிட்டேன். உன் விழிவழி ஒளியைத் தந்துவிட்டு இன்று சிறகொடிந்த பறவையாக என்னை தவிக்கவிட்டுச் சென்றாய். இந்த வைகறைப் பொழுதின் உறவினிலே இதயத்தைப்போல் என் வார்த்தைகள், என் கவிதைகள் யாவும் தடுமாறுகின்றன. உனது கனிந்த பார்வை எனை சில சமயங்களிலாவது நோக்காதா என்ற பேரேக்கம் என்னுள் கடலாய் எழுகிறது.
என் இலட்சியப் பெருங்கனவே, உன் தெய்விக நினைவுகளே என்னை ஒரு கவிஞனாக்கி இயற்கைக் குமிழிகளிலே மூழ்கி மூழ்கி நித்தம் பறந்துவரச் செய்கிறது. இன்பவெறியின் உச்சியிலே நான் இசைக்கருவியாய் ஆவேச முழக்கம் புரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மெளனராகம் மீட்டுகின்ற தெய்விகமே, உன் விழிகள் பேசும் மொழியையாவது எனக்குச் சொல்லிக்கொடு. முதல் மழைச் சாரலில் சிலிர்க்கின்ற ரோஜா இதழ்கள் போல் உன் பார்வை இதயவாசல் நுழைந்த நாள் முதலாக இனிய தென்றல் வீசினாலும் பிரிவு புயலாய் என்னை பயமுறுத்துகிறது.
என் காதல் செங்கரும்பே, உன்னை சேரக் குளிர்விக்கின்றாய் சென்றிட்டால் விலகி என்னைத் தீய்கின்ற வித்தையினை எங்கிருந்து பெற்றாய்?. கண்ணிரண்டில் காதலெனும் நோயைத்தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய். கனவிlல் வந்தும் பேதையினை வாட்டுகின்றாய். உன் பிரிவால் என் நெஞ்சே எரிமலையாய் போனது. கொட்டுகின்ற குளிர் அருவியில் குளித்தாலும் காதல் இதயவெப்பம் இன்னும் கனன்றெரிகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழ் நம் தாய்மொழி
உறவினில் சிறந்தது தாய்மை
தாய்மையைப் போன்ற இன்பத்தமிழை
இதயத்திலும் இல்லத்திலும் இனிதாக ஏற்போம்
இந்த உலகத்திலும் இணைந்து வளர்ப்போம்
இன்பத் தமிழை இணைந்து வளர்க்க
நாம் இக்கணமே
தமிழ் மக்களை தமிழின்பால்
அன்போடு விழிப்புறச் செய்ய வேண்டும்
நாளும் தமிழ் பயில்வோரை
என்றும் வாழ்த்திப் போற்ற வேண்டும்
உயர்ந்த தமிழ் கலைகளை
ஊக்க உரமிட்டு வளர்க்க வேண்டும்
இன்பத் தமிழுலகம் நாளை உருவாக
தமிழ் உணர்வுடன் பாடுபட வேண்டும்