செவ்வாய், 16 ஜூலை, 2019

அன்பெனும் தெய்வம்


சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் நான்கைந்து நாட்களாகவே வழியத் தொடங்கிவிட்டனஅன்னையர் நாள் கொண்டாட்டம். அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே என்று ஜேசுதாஸ் ஒருபுறம் உயிருருக, நானாக நானில்லை தாயே, நல்வாழ்வு தந்தாயே நீயே என்று எஸ்.பி.பாலா மறுபுறம் கனிந்திட, எதிர்புறம் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?’ ஹரிஹரன் குதூகலிக்க, உயிரும் நீயே, உணர்வும் நீயே, உறவும் நீயே, தாயே உன்னிக்கிருஷ்ணன்்  ஊனுருக, எல்லோருக்குமாகச் சேர்த்து மொத்தத்ததில் ‘அம்மான்னா சும்மா இல்லடா..., அவ இல்லேன்னா யாரும் இல்லடா..’ இளையராஜா உணர்வோடு உள்லமெல்லாம் கரைய நாடெங்கும் இதைக் கேட்டவர் நெஞ்சமெல்லாம் தம் அம்மாக்களின் மீது கொண்ட அன்புச் சுடராகி விடிந்தது அன்னையார் நாள். இரண்டு தமிழ் வானொலி  ஒலிப்பரப்பிலும் மாறிமாறி  தாயை மிக உயரே தூக்கி வைத்து உச்சிமோந்து மறுநாளே சுவடில்லாமல் மறந்துவிட்டு அவரவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிடும்  வகையறா மனிதர்தாமே நாம். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ ‘சொர்க்கம் தாயின்  காலடிக்கும் கீழே’ என்ற நல்லுபதேசங்களும் அம்மாவைக் கட்டியணைத்து முத்தமிட்டு அணிச்சல் ஊட்டும் ஒளிப்படங்களும் முகநூல், புலனம் போன்றவற்றில் தலைகாட்டி அம்மாவின் மீதுள்ள அன்பை ஒரேநாளில் கடுமழை வெள்ளமென கொட்டித் தீர்த்துச் செல்லும். இது மேற்கத்திய முறைமை என்றாலும் இன்றைய  பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தாயை மறக்காமல் இருக்க ஏதோ இதையாவது செய்கிறார்களே என்ற ஆறுதல் தவிர வேறொன்றும் பெரிதாகச் சொல்லத் தோன்றவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிமயமும் தாயை மறவாமல் இதயக் கோயிலில் வைத்து வணங்கிப் போற்றும் மரபுதான் நம்முடையது. உண்மையில் தாய் என்பவள் யார்?. பத்து திங்கள் நம்மை சுமந்து தன்னுயிர் ஈந்து பெற்றவள் என்ற பெருமை மட்டுமா அவளுடையது. முற்றும் துறந்த துறவிகளும் துறக்க முடியாத உறவு தாயல்லவா?. ‘முந்தி தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து’ கொல்லியிடும்போதும் மனம் வெதும்பிய பட்டினத்தார் தாயைத் துறக்க முடியாத துறவிதானே. உறவுகளில் ஒப்பற்ற இமயம் தாய்தான். நாம் இந்த உலகைக் காண வழியமைத்துத் தந்தவள் தாய்தானே. நமக்கு உடல் கொடுத்து பிற உறவையும் கொடுத்து உணர்வையும் ஊட்டியவள் தாய்தானே. தம் உதிரத்தைப் பாலாக்கி நம்மைச் சீராட்டி ஆளாக்கியவள் மட்டுமல்ல நாம் உறவாட தாய்மொழியும் தந்தவளாயிற்றே. தனது துன்பம் பொறுத்து கண்ணை இமை காப்பதுபோல நம் நலம் ஒன்றையே அல்லும் பகலும் சிந்தித்தவளாள் தாய் மட்டும்தானே. தான் அடையாத அத்தனை உயரங்களையும் தாம் தவமிருந்து பெற்ற பிள்ளை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தியானிக்கும் தெய்வம்தானே தாய். எத்தனையோ வேதனையையும் சோதனையையும் தனதாக்கிக் கொண்டு நமக்காக சந்தனமாய்த் தேய்ந்து என்றும் மணந்து கொண்டிருப்பது தாயாக மட்டும்தான் இருக்க முடியும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாய்தான் பிள்ளைக்காக வழிநெடுக கல்லிலும் முள்ளிலும் நடந்து தம் பிள்ளை பூப்பாதையில் நடந்து செல்வதற்கு காரணமாகிறாள். எந்த உயிரும் தவிர்க்க முடியாத புனித உறவு தாய். தாயை மதித்து அவள் சொல் தட்டாமல் வாழத்தான் தமிழில் அகரத்தை அறிமுகப்படுத்தும்போது ‘அம்மா’ என்ற சொல்லைக் கொண்டே தொடங்குகின்றோம். அம்மாவில் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் தலையெழுத்து நல்லதாகவே இருக்கும் நம்பிக்கையில்தானோ?.அந்தப் புனித உறவையும் மறந்து போகும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது? எதிரும் புதிருமான இருவகைத் தாய்களைச் நான் சந்தித்திருக்கின்றேன். ஒரு தாய்  பதினெட்டாண்டுகளுக்கு மேலாக எனக்கு நன்கு பழக்கமானவர். கோயில் நிகழ்ச்சிகளில் சிறுசிறு உதவிகள் செய்யும் அந்த அம்மாவைச் சந்திக்கும்போதெல்லாம் தாம் பெற்றெடுத்த மூன்று ஆண்பிள்ளைகளும் அவரை தனியே விட்டுச் சென்று இதுவரை திரும்பி வந்து பார்க்காத துயரம் அவர் முகத்தில் பளிச்சென்று தெரியும். மற்றொரு தாய் தாம் பெற்றெடுத்தப் பிள்ளை ஊனமுற்றது என உணர்ந்தும் கருணையில்லாமல் ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வேறொரு புதிய ஆணோடு உடன்போக்கு சென்றவர். அந்தத் தாயை அலைந்து தேடி “பிள்ளை வேண்டுமா? அல்லது  புதிய அவர் வேண்டுமா?” என்று காப்பகம் நடத்தும் மருத்துவ நண்பரும் நானும் கேட்டபோது சட்டென்று புதிய அவர்தான் வேண்டுமென கொஞ்சமும் தாய்க்குரிய கருணையில்லாமல் அவர் சொன்ன வார்த்தை கேட்டு அதிர்ந்தோம். இரண்டு நிலையிலும் இதயம் கனக்கிறது. தாய் வாழ்த்துக்குரியவர் மட்டுமல்ல என்றும் நம் வணக்கத்துக்குரியவர். தாய்மையுள்ளம் கொண்ட பெண்கள் அனைவர்க்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள். அன்பெனும் தெய்வம்தானோ உயிர்பெற்று  நம்முன் அன்னையாக நிற்கிறது

?

திங்கள், 15 ஜூலை, 2019

இ..ளை..ய..ரா..ஜா.. எனும் இசையருவி


ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தான் மலர்வதை உணரச் செய்யும் மாமருந்து இலக்கியமும் இசையும்தான். தன்னுள்ளே தன்னைக் கரைந்திடச் செய்யும் இசைவாணர்கள் என்றும் என் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நாற்பதாண்டுகளுக்கு மேலாக காலை கண்விழிப்பு முதல் இரவு கண்மூடி துயில்வது வரை உலகத் தமிழர் நெஞ்சங்களை காற்றில் கரைந்துருகும் இசையால் தினம் வருடும் பெயர்  இளையராஜா மட்டும்தான். இந்தப் பண்ணைபுரத்து கிராமத்து மண்ணில் தோன்றிய ராசைய்யாவின் இசையின் மகுடியில்தான் ஒட்டுமொத்த தமிழ்கூறு நல்லுகமும் நாளும் நகர்கிறது. இந்தக் காற்று மண்டலமெங்கும் இளையராஜாவின் இசைத் தீண்டலால் தேனாய் ஒலிக்கிறது. இசையின் இலக்கணத்திற்கு வேண்டுமானால் ஏழு ஸ்வரங்கள் இருக்கலாம் அவரைக் கொண்டாடும் உள்ளங்களுக்கு இ..ளை..ய..ரா..ஜா.. எனும் வெறும் ஐந்து ஸ்வரங்கள் மட்டும்தான். இன்பமோ துன்பமோ, காதலோ கவிதையோ, துள்ளலோ துவலலோ, துடிப்போ தகிப்போ, புன்னகையோ கண்ணீரோ இந்த வாழ்வில் வழிந்தோடும் இன்னும் என்னென்ன சொல்லொண்ணா மனித உணர்ச்சிகளோ அதையெல்லாம் இந்த இராகதேவன் இசையில் கரைத்து கரையேறும் பலரை நான் இந்த வாழ்க்கை வழியெங்கும் நிறையவே கண்டு வருகின்றேன். இளையராஜாவின் எண்ணற்ற இசை பேரின்பத்தில் இதயம் கரைந்து போவது மட்டுமல்ல மொழியால் உருக்கொள்ளவே முடியாத பற்பல காட்சிகள் பரந்து விரிந்து காற்றிலேறி முடிவின்றி மேற்சென்று முடிவற்ற எல்லை நோக்கி போய்க்கொண்டேயிருக்கும். என் வாழ்க்கையில் இளமை அரும்பும் பருவமான அந்த எழுபதுகளின் இடையில் இளையராஜாவின் வருகை புதியதொரு வசந்தத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. என் பக்கத்து வீட்டுப் பெட்டி போன்ற பெரிய வடிவிலான வானொலியிலிருந்து வழிகிறது அன்னக்கிளி படப்பாடல். அப்போது எனக்கு மீசை சிறிய கரிகோடாய் அரும்பத் தொடங்கிய பதினைந்து வயது. என் காதுகளில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே.. இனிய தாலாட்டாய் வந்து விழுகிறது. பின்னர் வந்த பதினாறு வயதினிலே செந்தூரப்பூவே , கவிக்குயில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் மனத்தில் பச்சைக் குத்திச் சென்றன. தொடர்ந்து வெளிவந்த உதிரிப் பூக்கள்’, முள்ளும் மலரும் போன்ற பலநூறு படப் பாடல்களும் இந்த இசை ராஜாதி ராஜனை ரசிக்கும் மனோபாவத்திலிருந்து மனத்தில் வைத்துக் கொண்டாடும் நிலைக்குத் தானகாவே உயர்த்திச் சென்றன.  இளையராஜா இசையை இரவெல்லாம் இதயம் முழுக்க சுவாசித்து சுவாசித்து நீடித்த இனிய பொழுதுகள் பல. இசையால் மணக்கும் இந்த மனிதனை மிக அதிசயமாகவே பார்க்கத் தொடங்கிய பருவம் அது. இன்று இளையராஜாமீது சிற்சில விமர்சனங்கள் வந்தாலும் அவரின் இசையால் கொண்ட அந்த வியப்பும் மலைப்பும் இன்னும் என்னுள் கிஞ்சிற்றும் குறைந்தபாடில்லை. ஏகலைவனைப் போலவே நானும் இந்த இராகதேவனுக்குத் தெரியாமலே ஒரு ரசிகனாக, காதலனாக, மாணவனாக, நண்பனாக நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவரின் இசையை நெஞ்சில் பிடித்துக்கொண்டே பயணித்திருக்கின்றேன். அவரின் இசையில் இதயம் தோய்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் பலரும் தங்கள் ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் போலவே கடந்து வந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். எந்தவொரு சூழலிலும் அன்று முதல் இன்றுவரை இளையராஜாவின் இசைதான் என் பின்னணியில் அரூபமாக நின்று ஒலிக்கும். இப்போது எழுபத்தைந்தைத் தொட்டிருக்கும் நமது இளையராஜா நூற்றாண்டையும் தாண்டி இசையால் என்றென்றும் இந்த உலகை ஆலாபனை செய்ய நெஞ்சார வாழ்த்துவோம். இறைவனைப் போலவே மிக உயர்ந்த உன்னத கலைஞர்களும் சொற்களுக்குள் சிறைவைக்க முடியாதவர்கள். அதுபோல எந்த உன்னதச் சொற்களையும் உயர்ந்த எதுவோடும் குழைத்துச் சொல்லி நம் இசை ராஜாங்கத்தின் இசைஞானியைத் தொட்டுவிட முடியாது. அவரின் இசையெனும் அமுதத்தேன் பருகியதில் ஏற்பட்ட கிறக்கத்தில் என் சிற்றறிவுக்கு எட்டிய ஆனந்தத்தில் கொஞ்சம் எட்ட முயன்று தோற்றுப் போகின்றேன். எத்தனையோ இரவுகள் என் மூத்த மகளை தோளில் சாய்த்துக்கொண்டு கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ?’ இளையராஜாவோடு ஓராயிரமுறைக்கு மேல் ஊனுயிருருகியிருப்பேன். அந்த இறைவனைப்போல அனைத்தும் கடந்து நிற்பதுதானே இசை?

காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?


நேற்று முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா?” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம்?. எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை.? அந்தக் கமனியக் கனவுகள் காண்பதற்கு நமக்குள் நம்பிக்கை விளக்கேற்ற காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?



கவிதைக் காதல்


ஒரு ரோஜா மலரின் அழகு அதன் பாகங்களின் மொத்தக் கூட்டல் மட்டும்தானா?. மண், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவற்றின் இரசாயனக் கலவையால் ரோஜா மலர் செடியில் உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் அழகு என்பது அந்தக் கலவையிலா உள்ளது? எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் ரோஜாவின் அழகை உண்டாக்க முடியாதே. அதுபோலத்தான் இதயத்தில் நிலைபெற்ற கவிதைகளும் என்றும் வாடாத ரோஜா மலரைப் போன்றதுதான். உயிருள்ள கவிதை என்பது வெறும் சொற்களால் தொடுக்கப்பட்டதல்ல அதற்கும் மேலான மெய்ப்பொருள் நிறைந்தது. நெடுநாள் திறக்கப்படாத என் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்துப் பார்த்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். பழுப்பேறிய அந்தப் பழைய புத்தகத்தில் நான் என்றோ சின்னக் கையெழுத்தில் எழுதிய வைத்திருந்த கல்யாண்ஜியின் அலைச்சல் கவிதை வரிகள் கண்ணில் மின்னியது. இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி எக்கரை என் கரை என்று மறக்கும் இடையோடும் நதிமெல்லச் சிரிக்கும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளைப் பலமுறை சிலாகித்து வாசித்ததில் அப்படியொரு சொல்லொணா சுகம் மனதுக்குள் ஊற்றெடுத்தது. மனவெளியெங்கும் பூமழை பொழிவதுபோல ஒரு சின்னக் குழந்தையின் குதூகலத்தில் மனம் துள்ளிக் குதித்தது. இப்போது ஒரு தரிசனத்தால் ஈர்க்கப்பட்டதுபோல இந்தக் கவிதையால் முழுதும் வசீகரிக்கப்பட்டேன். அன்றைய புரிதலில் வேறாகத் தெரிந்த கவிதை இன்றைய வாழ்வனுபவத்துக்கு முற்றிலும் நெருக்கமாகி வேறொரு பொருள் உரைத்தது. இந்தக் கவிதையை ஆராதிக்கும் தருணத்தில் எக்கரை என் கரை என்ற இரண்டு சொற்களுக்களுக்கான இடைவெளியில் நின்ற மெளனத்தில் கரைந்தும் என்னை மறந்தும் போனேன். அந்த இரு சொற்களுக்கிடையேயுள்ள மெளனம் எவ்வளவு ஆழமானது அழகானது. இடையில் நதிமெல்லச் சிரித்தது வாழ்வின் மாறுபட்ட பிணைப்பை ஆழத்தை அடையாளங்காட்டிச் சென்றது. நீர்க்குமிழியொன்று காற்றில் கொஞ்ச நேரம் பறந்தலைந்து திரிந்து உடைவதுபோல நிலையில்லாமை அந்த வரி உணர்த்துவதாகவே ஒரு பிம்பம் என்னுள்ளே தோன்றி மறைந்தது. மனம் சொற்களைக் கடந்து எதனெதனோடோ தொடர்புப்படுத்தி நீண்ட அகத்தாய்வும் செய்யத் தொடங்கிவிட்டிருந்தது. அதிலிருந்து விடுபட்டு திரும்புவதற்கே எனக்கு நெடுநேரமாகிவிட்டது. ஒரு சொல்லுக்குள் பயணம் செய்வதை கவிதை எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. கவிதையின்  தனிச்சிறப்பே அதை வாஞ்சையோடு தொடுபவரின் இதயத்தில் சிம்மாசனம் போட்டமர்ந்து மானசீகமாக உரையாடுவதுதான். சில சமயம் கவிதையின் ஒருசில சொற்கள் மனதோடு உரையாட தொடங்கிவிடும். சில கவிதைகள் வாசித்து முடித்துவிட்டப் பிறகு என்றோ ஒரு தருணத்தில் சட்டென்று உயிர்தெழுந்ததுபோல நம்மோடு உரையாடத் தொடங்கிவிடும். சில கவிதைகள் ஊதுவத்தியின் மணம் அறைமுழுதும் நிரம்பி இருப்பதுபோல என்றும் மனம் முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஊதுவத்தி எரிந்து அடங்கினாலும் அதன் வாசனை அடங்காததுபோல படித்த அந்தக் கவிதையின் வாசனை பலகாலம் சென்ற பின்னும் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். எனக்குக் கவிதையைக் கொண்டாடுவதே உணர்வுமிக்க ஆன்மிக அனுபவம்தான். தமிழ் கவிதையெனும் பூக்காட்டில் அடர்ந்து செழித்திருக்கிறது. கவிதையைக் காதலிப்பதும் நந்தவனத்தில் தினம் தும்பியாய் மலர்களோடு பேசுவதும் ஒன்றுதானே?

அறிவின் வழிபாடு


வாழ்க்கை என்பது சிலருக்கு வெறும் வயிற்றுப் பாட்டிலேதான் அடங்கிக் கிடக்கிறது; சிலருக்கு அறிவின் செயல்பாட்டிலேதான் முடங்கிக் கிடக்கிறது; ஏதோ இடைப்பட்ட சிலருக்கு மட்டும்தான் இதயத்துக்காக இந்த வயிறும் மூளையும் இயங்குகிறது என்ற தெளிவு இருக்கின்றது. நேற்று உலகப் புத்தக நாள் என்ற நினைவூட்டல்போல சில புலனச் செய்திகள் கைப்பேசியில் வந்து விழுந்தன. ஏதோ இந்த நாளில் பத்து நிமிடம் படித்துவிட்டால் உலகப் புத்தக நாளைக் கொண்டாடிவிட்டதாக அலப்பறைகள் முகநூலில் வேறு அங்குமிங்கும் வழிந்திருந்தன. “புத்தக நாளின் தோற்றுவாய் என்ன?” என்னைக் காண வந்து நொடிக்கொருதரம் கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்த பழக்கமான அந்த இளைஞனைக் கேட்டேன். “கூகுள் கடவுளிடம் கேட்டால் தெரிஞ்சிடும் சார்...ஒரு நிமிசம்...ம்ம்ம்” சில நிமிடங்களில் “மிகுள் டே சர்வீன்ஸ் மறைந்த ஏப்ரல் 23 நாளை நினைவுப்படுத்தும் விதத்தில் ஸ்பெயினிலிருக்கும் காடலோனியா புத்தக வியாபாரிகள் புத்தக நாளை 1923 முதலில் கொண்டாடினார்கள்” எனப் பதில் சொன்ன மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. “சரி நாம் எதற்கு புத்தக நாளைக் கொண்டாட வேண்டும்?. இதற்கு கூகுள் கடவுள் வேண்டாம். உன் அறிவிலிருந்து சொன்னால் போதும்” என்றதும் கெக்கபிக்கவென தலையாட்டியபடியே சிரித்தான். “உண்மையைச் சொல் நீ புத்தகம் தொட்டு எத்தனை வருடங்களாச்சு?” உரிமையோடு அவன் தோள் தட்டிக் கேட்டேன். “அதான் எல்லாம் இதுலே இருக்குதே பின்ன புத்தகம் எதற்கு?” கைப்பேசியை தூக்கிக்காட்டியவாறே சொன்னான். நாம் வாழ்க்கைச் சாலையில் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்களின் நிகராளியாகவே எனக்கு அவன் தோன்றினான். அவர் வாய்ச்சொல்லில் நேர்மை இருந்தது என்றாலும் அது உண்மையானது அல்ல. அறிவுலகப் பயணத்தில் நம் இளைஞர்களுக்கு வேகம் இருக்கிற அளவுக்கு இன்னும் விவேகம் இருக்கவில்லை என்பது என் கருத்து. “உண்மையிலேயே திருக்குறள் மிக உயர்ந்த நூலா?” வழக்கம்போல என்னை மடக்குவதற்கு சற்றே தயங்கிக் கேட்டாலும் அவனின் திடீர் கேள்வியிந் உளோட்டம் எனக்குப் புரிந்தது. “என்னைப் பொறுத்தவரை திருக்குறளின் அருமை அறியாதோர் வாழ்வை வறிதே கழிக்கும் உயிர்ப்பிணமாகவே வாழ்பவராவார். சமயச் சாத்திரங்கள் மனிதனை சமயச்சிமிழுக்குள் அடைத்து அறிவை தளைப்படுத்திவிடுகின்றன. ஆனால் திருக்குறள் மனிதனுக்கு விரிந்து பரந்த சிந்தனை வழங்கி அறிவுத்தேட்டமும் ஆற்றலும் பெற்றிலங்கச் செய்கிறது. பல மில்லியன் டாலர் செலவில் ஆய்ந்து சொல்லும் இந்த விசயங்களில் பலவற்றை நமது நீதிநூல்கள் நிறையவே  சொல்லிவிட்டன. என்ன ஒரு சிறு வேறுபாடென்றால் சதாசர்வ காலமும் கைப்பேசியிலே உறைந்திருக்கும் உன்னைப் போன்ற இளைஞர்களை சம்மணமிட்டு உட்காரவைத்து உரிமையோடு நறுக்கென தலையில் குட்டி சொல்லித்தர தமிழ் ஆசிரியர், தமிழ்ப் பெற்றோர், தமிழ்க் கோபம், தமிழ் அறம் ஆகியோரைத்தான் இன்று சுற்றும் முற்றும் தேட வேண்டியுள்ளது?” என்றதும் கொல்லெனச் சிரித்துவிட்டான். திருக்குறள் எனும் பேரறிவுக்கருவூலம் வாழ்வியற் பல்கலைக் களஞ்சியமாகவும் மனித நேயத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் மனித அறிவைத் துலங்கச் செய்யும் அறிவு வளர்ச்சிக் கருவியாகவும் போரும் பிணக்கும் பூசலுமற்ற உலக அமைதிக்கு வழிகாட்டும் உலகப்பொது மறையாகவும் விளங்குகிறது. பட்டறிவு, ஏட்டறிவு, நுண்ணறிவு, மெய்யறிவு என்று பலவாறு அறிவைப் பற்றி வாழ்க்கையில் பட்டும் கேட்டும் புரிந்திருப்போம். வால் அறிவு (குறள் 2) கார் அறிவு(குறள் 287), பேரறிவு (குறள் 215), புல்லறிவு (குறள் 331 அதிகாரம் 85: 881 முதல் 890வரை) அறிவின் ஆழத்தை அறிந்த தெய்வப் புலவர் அறிவை ஆய்ந்து வகைமைகளாக வகுத்துரைக்கும் திறத்தைக் கண்டு வியப்பு மேலிடுகிறது. அறிவின் பல்திறப்பாங்கையும் திருவள்ளுவர் ஆழச் சிந்தித்து பல்வேறு கோணத்தில் எடுத்தியம்புகிறார். இதையெல்லாம் சீண்டி பார்க்காமல் இன்றைய இளைஞர்கள் கைப்பேசியிலே எல்லாவற்றையும் அறிந்துகொண்டு உலகம் முழுக்க ஏதேதோ செயலிகளின்  துணையால் எளிதில் தம்பட்டம் செய்ய முடிவதால் பெரும் அறிவாளியாகிவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். தாங்கள் அறியும் ஒவ்வொன்றிலும் அறியாமை சூழ்ந்துள்ளதை முதலில் உணர வேண்டும். முதலில் நம்மிடமுள்ள அறியாமையைக் களையெடுக்க  வேண்டும். பாரதி சொல்லும் ‘அறிவின் வழிபாடு’ நமக்குள் தொடங்காதவரை ஒவ்வொரு ஆண்டு வரும் புத்தக நாளும் மற்றொரு நினைவுநாள் போன்றதுதானே?

கற்றதன்வழி நிற்க


இரண்டு நாட்களுக்கு முன் சமூகவலைதளத்தில் வெளியான யாப் ஊ லிங் என்ற ஆசிரியரின் இறப்புச் செய்தி அதைத்தான் எனக்கு உணர்த்தியது. விடுமுறைநாள் என்றாலும்  சிபுவிலுள்ள இடைநிலைப்பள்ளியொன்றில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு போதித்துக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலே இறந்த அவரின் மறைவு வேதனையளிக்கிறது.  தமது ஆயுளின் இறுதிவரை அர்ப்பணிப்போடு பணிசெய்த இதுபோன்ற ஆசிரியர்களின் தியாகம் என்றென்றும் மறக்கலாகாது. தம்மிடம் பயிலும் மாணவர்களை உயர்த்த வேண்டும் என்ற உயர்வெண்ணம்  உண்மையான ஆசிரியர்களின் ரத்த நாளங்களில் என்றும் ஊறிக்கிடக்கும் என்பதற்கு அந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்தது. மாணவர் உலகத்தோடு பழகும்போதுதான் நம்மால் அவர்களின் எண்ண அலைகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாணவன் என்ன நினைக்கின்றான் அந்த மாணவி என்ன சொல்ல வருகிறாள் என்ற மனக்குரல்களை ஓர் அனுபவமிக்க ஆசிரியரால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் மனத்திற்குள் அதிகம் நிறைந்தும் மறைந்திருக்கின்ற எண்ணங்கள்தாம் அவர்களைப் பின்னாளில்  உயரச் செய்கின்றன. இந்தச் சூட்டுமத்தை ஆசிரியரானவர் நுணுகி ஆராய்ந்து  அறிந்துகொண்டால் சரியான இலக்கை நோக்கிக் கற்றல் கற்பித்தலை நடத்தலாம். அறிவியல் ஆசிரியர் ஒருவர் தம் வகுப்பில் கம்பளிப் புழுவானது வண்ணத்துப் பூச்சியாக மாறும் காட்சியைப் பாடமாக நடத்தினார். அதற்காக அவர் கூட்டுப்புழுவாக இருந்த  எருக்கஞ் செடியை வகுப்புக்கு கொணர்ந்து அது புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சியாக உருவெடுக்கும்வரை கூர்ந்து கண்காணிக்கச் சொன்னார். பல மாணவர்களின் கூட்டுப்புழுவானது வண்ணத்துப்பூச்சியாக மாறி பறக்கையில் ஒருவனுடையது மட்டும் புழுவாகவே இறந்து கிடந்தது. மறுநாள் இதைப் பார்த்த ஆசிரியர் மாணவனிடம் காரணம் கேட்க, “இந்தப் புழு கூட்டைவிட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டது. அதற்கு உதவி செய்யலாம்னு வெளியே எடுத்து விட்டேன்.” அமைதியாகச் சொன்னான். “நீ அதற்கு உதவி செய்யவதாக நினைத்து அதைக் கொன்றுவிட்டாய். புழுவானது தானே கூட்டை உடைச்சிக்கிட்டு வெளியே வரணும். அப்படி வந்ததாதான் அதற்கு வலிமையான கால்களும் உறுதியான சிறகுகளும் கிடைக்கும். அவ்வாறு வந்தால்தான் இயற்கைச் சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்ள முடியும்.  இதுதான் வாழ்க்கை. துண்பங்களைத் தடைகளை துயரங்களை எதிர்கொள்கிறவர்கள்தாம் வாழ்க்கையில் வலிமையாக வாழ்கிறார்கள்.  இருந்த எதிர்மறையாக  ஒருவர் தாம் படித்து அறிந்தற்கும் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். திருவள்ளுவர் சொல்லும் கற்க மட்டுமல்ல கற்றதன்வழி நிற்க சற்று கடினம்தான் என்றாலும் முயற்சியோடு கற்றதை வாழ்வில் ஒழுகுவதுதானே மாந்தர்க்கு அழகு? மாணவர்களை விழிப்புறச் செய்ய எந்தச் சூழலிலும் விழித்துக் கொண்டேயிருப்பதுதானே ஆசிரியம்? 

அறிவை வென்றுவா


 சென்றுவா மகனே சென்றுவா, அறிவை வென்றுவா மகனே வென்றுவா,..அறிவுலகம் உன்னை அழைக்கின்றது இந்த மகாகவி காளிதாஸ் படப்பாடல்தான் இதயத்தில் ஒலிக்குந்தோறும் என் மனத்திரையில் தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் நிழலுருவே சித்திரமாகத் தோன்றி மறையும். இன்று மின்வெளியில் பலவாறாகத் தம் சுயத்தையும் படோடபத்தையும் பிதற்றித் திரியும் இளையர்களுக்கு மத்தியில் கடந்த தலைமுறை எப்படியெல்லாம் அறிவைத் தேடியிருக்கிறது என்பதற்கு தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் வாழ்வும் அவரின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் வாழ்வும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. சீண்டுவாரற்று பரண்களிலும் கோயில்களிலும் கரையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த  இலக்கியச் சுவடிகளையெல்லாம் ஊரூராகக் கால் கடுக்க நடந்து அலைந்து தேடித் தேடி உடல் களைத்தாலும் கிஞ்சிற்றும் மனம் சோராமல் தம்வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி செய்தவரை நாம் மறப்பது அறம்தானா?. ஓலைச்சுவடியில் சிதிலமடைந்திருந்த படைப்புகளையெல்லாம் பொன்னாகப் பொறுக்கி எடுத்து தம் சொத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு அச்சுக்கூடத்தில் உயிர்பித்தவரை நாம் மறந்துவிட்டால் நம்மைவிட நன்றிகெட்டவர் யாருளர்?. தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் எனது சரித்திரம் ஒவ்வொரு தமிழரும் படித்து பின்பற்ர வேண்டிய காவியம் என்பேன். கண்கள் பழுதுபட்டபோதும் குவியாடியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாகப் படித்துப் படித்து ஆயுள் அழித்த அந்தத் தியாகத்திற்கு ஈடாக வேறில்லை .அது ஒரு புறமிருக்க தமிழ்த்தாத்தாவின் குருவான தமிழ்க் கொண்டல் மகாவித்வான் தெ.பொ.மீயின் தமிழ்ப்பணி நெஞ்சை உருக்குகிறது. இளமையில் வறுமை வாட்டியெடுத்தாலும் தமிழ் கற்கும் வாட்டம் சிறிதும் அவரிடமில்லை. தாம் கற்க வேண்டிய இலக்கணச் சுவடியொன்று ஒரு பரதேசியிடம் இருப்பதை அறிந்து அவரிடம் பலமுறை கெஞ்சி கேட்டும் கிடைக்காமல் தவிக்கிறார். பணம் இருந்தால் மட்டுமே அந்தச் சுவடியைத் தருவதாக தீர்க்கமாகக் கூறும் அந்தப் பரதேசியிடம் நாளும் மன்றாடி கல்லும் கனிந்துருகும்படி  கெஞ்சக் கெஞ்ச பரதேசியின் மனம் இரங்குகிறது. “சரி, பணம் இல்லையென்றால் பரவாயில்லை; நான் சொல்கின்ற வேலை செய்ய முடியுமா?” என்று அதிகாரத் தொனியோடு பரதேசியின் குரல் ஒலிக்கிறது. “தங்கள் உத்தரவு” என்று நெடுநாள் சுவடியைக் காணும் ஆவலுடன் காத்திருந்த தமிழ்க் கொண்டல் சொல்ல “நாளையிலிருந்து எனக்குப் பதிலாக இந்தப் பிச்சைப் பாத்திரத்தை வீடு வீடாக தூக்கி வர வேண்டும். அன்னக்காவடி பாத்திரத்தில் பிச்சையெடுத்து வந்து கொடுத்தால்தான் இந்தச் சுவடியைத் தருவேன்” என்று பரதேசி எதிரொலிக்க “அப்படியே ஆகட்டும்” என்று பிச்சையெடுத்து அந்தச் சுவடியை மீட்டார் தமிழ்க் கொண்டல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கே நன்று என்ற நறுந்தொகையின் பாடலுக்கு உண்மையாகப் பொருள்படும்படி வாழ்ந்தவர் தெ.பொ.மீ. நெஞ்சை சிறு வயதிலிருந்தே நூல்கள்தான் அறிவை வழங்கும் தோழன்; ஆசான்; வழிகாட்டி என்றெல்லாம் ஆசிரியர்கள் பெரியவர்கள் சொல்கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைத்தாலே நெஞ்சம் உருகும். அவர்கள் பெருமுயற்சியோடு திரட்டித் தந்த பனுவல்களை இன்றைய தலைமுறை படித்து சமூகத்துக்கு அதன் கருத்துகளைப் பரப்ப வேண்டும். எவ்வளவுதான் இணையவெளியில் படித்துப் படித்து மகிழ்ந்தாலும் நூல்களை கையில் குழந்தைபோல் எந்தி சுமந்து நெஞ்சில் அணைத்தவாறு பூரிப்பதிலுள்ள சுகானுபவம் சொல்லுக்குள் சிக்காது. இன்றைய தாய்மொழி நாளிலாவது தமிழர்களான நாம் நல்ல தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கத்தை வேள்வியாகக் கொள்வோமா?