சனி, 31 ஜனவரி, 2009

மு.வரதராசனார்.... ஒரு பல்கலைக்கழகம்

மு.வரதராசனார்.... ஒரு பல்கலைக்கழகம்

(மீசை சிறு கோடாய் அரும்பத் தொடங்கிய வயதில் மு.வ. எனும் பெயர் என் செவியில் நுழையக் காரணமாய் இருந்தவர் எங்கள் விக்டோரியாத் தோட்டத்துப் பாட்டாளியான திரு.இராமரெட்டி அவர்கள். பால்மரம் சீவும் பாட்டாளியானாலும் மு.வ.வின் அறிவுப் பட்டொளி வீசும் வாசகர் அவர். அவர் வீடு முழுவதும் மு.வ., அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன் என நூல்கள் கொட்டிக் கிடக்கும். பால்மரன் சீவிவிட்டு இடைப்பட்ட ஓய்வில்கூட அவர் நாவல் வாசிப்பதை நேசிப்பவர். அவரின் பேச்சில் மு.வ. மனம் தெரியும். அவரின் மூலம்தான் மு.வ. எனக்கு அறிமுகமானார். அந்த நல்ல மனிதர் எனக்கு வாழ்நாள் முழுதும் தந்த நல்ல உறவுதான் மு.வ.)

இளவயதில் என் இதயத்தை உழுத எழுத்து வேந்தே, நல்லெண்ணங்களையெல்லாம் பொன் எழுத்தாக்கிய உன்னை அறிஞன் என்றழைக்கவா? இலக்கியங்களை உயிரோவியங்களாக்கிய சமூக கலைஞன் என்றழைக்கவா?.... சமூக நெஞ்சில் இலக்கியத்தேனை அள்ளித் தெளித்த டாக்டர் மு.வ அவர்களே, உன் மங்காத புகழுக்கு என்ன பெயர் வைப்பது?

25.04.1912 இல் உன் பிறந்த தினம், இலக்கிய உலகில் ஒளி பிறந்த தினம்! அன்பிற்கினிய அன்னை அம்மா கண்ணம்மாள் அவர்களும் அற்விற்கினிய தந்தை முனுசாமி அவர்களும் செய்த தவம் நீ. அந்தத் தவத்தின் பயனாய் எங்களுக்குக் கிடைத்த நல்முத்து நீ ஐயா.

வட ஆற்காடு மாவட்ட திருப்பத்தூர் செய்த புண்ணியம் என்பதா? உண்மையைக் கூறினால் தமிழர்கள் முழுமனதோடு செய்த இதய வேள்வி தமிழுலகத்தில் தனியொரு பூவாய் நீ பூத்தது. இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகைப் புரட்டும்போது உன் மனம் தனி மணம்.

உன் இனிய 62 வருடங்களில் தமிழ்த்தாயின் மனதை அலங்கரித்த 85 நூல்கள் இன்றும் தனி மனிதனுக்கும் தமிழ்ச் சமுதாய வாழ்வியலுக்கும் கருத்துக் கருவூலம் இனியென்றும் இனிக்கும் தமிழ்ச்சுரங்கம்

அமுதான புதினம் 13, சிறுகதை 2, சிந்தனைக்கதை 2, நாடகம் 6, கட்டுரை நூல் 11, இலக்கிய ஆய்வு 27, சிறுவர் இலக்கியம் 7, கடித இலக்கியம் 4, பயண இலக்கியம் 1, மொழியியல் 6, வாழ்க்கை வரலாறு 4, மொழிபெயர்ப்பு நூல் 2, என நீ ஆக்கிய எழுத்துகள் அத்தனையிலும் தனி முத்திரை பதித்தாய்.

உன் எழுத்தை சுவாசிக்கும்போதெல்லாம் ஒரு தந்தையாய், தாயாய், தலைவனாய், ஆசிரியனாய், அறிஞனாய், இதயத்துக்கு நெருக்கமான நண்பனாய் நின்று நன்னெறி காட்டுவாய்.
உன் வாழ்வின் தெளிவும், ஊக்கமும், வலிமையும், உறுதியும், ஆழமும், எளிமையும் மானிட உலகம் முழுமையுமே கடைப்பிடிக்க வேண்டிய பெருவாழ்வு. அதை நீ உதாரண புருசனாக வாழ்ந்து காட்டியிருக்கிறாய்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேரறிஞர் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழன் நீ. சென்னை பல்கலைக்கழகத்தின் சரித்திரத்திலேயே முதன் முதலில் தமிழில் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பெருந்தகை நீ. தமிழோடு, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளைக் கற்ற பன்மொழிப் புலவனும் நீதான்.

நீ - என்றும் வாடா மலர், கயமையை எதிர்த்த செந்தாமரை, அல்லியை வாழ்வித்த மண்குடிசை, உலகப் பேரேட்டின் அகல் விளக்கு, குறள் காட்டிய தமிழ் நெஞ்சம். நான் என்றும் உன்னில் தஞ்சம்.
10.10.1974 - தமிழுலகை கண்ணீரில் மிதக்க விட்டு உன் பொன்னுடல் மறைந்தது.

வாலிபத்தின் துளிர் பருவத்தில் நான் மலரத்துடித்தபோது என்னை வாடவிட்டுச் சென்றாய். நீ மறைந்தபோது ஒரு நண்பனய் இழந்த சோகம் இன்றும் எனக்குள் கசிகிறது. ஆனாலும் நீ என்னைப் போன்றவர்க்காக விட்டுச் சென்ற இலக்கியச் செல்வங்கள் வாழ்க்கை முழுவதற்குமான பாடங்கள்.

என்றும் என் நேசத்திற்குரியவனே, தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்வின் வேர்களை ஆராய்ந்து இலக்கைக் காட்டும் தமிழ்கூறு நல்லுலகில், மு.வ. என்றும் மறக்க முடியா மறைக்கவியலா பொன் வானம்.

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்

பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்
புதுவைப் பூஞ்சோலையில் கன்னல் தமிழ்ச்சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து ஊன் மணக்க உயிர் மணக்க கூவிக் கொண்டிருந்த தமிழ்க்குயிலுக்கு ஒரு நூற்றாண்டு வசந்தம் உருண்டோடிவிட்டது.

புதுவையிலிருந்து புறப்பட்ட இந்த நெருப்புத் தென்றல் நிலவும் கதிரும் உள்ளவரை தமிழ்மணத்தைச் சுமந்து என்றும் தளிர்நடை பயிலும். இந்தச் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்றுமே தமிழ் நெஞ்சக் கலயங்களிலே கொஞ்சி சிரிக்கும் இந்த சமத்துவக் கொள்கையின் சாரத்திற்கு ஆயுள் சிரஞ்சீவி என்பதாகும்.

பாளைச் சிரிப்பு; பசு நெய்யின் நறுமணம்; வாளைமீனின் துள்ளல்; வரிப்புலியின் கனல் பார்வை எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன்.தன்னுயிரை தமிழ் என்று சொன்னதால் இம்மண்ணுயிர் உள்ளவரை நம்மோடு வாழ்பவன்; நம் மனத்தை என்றும் ஆழ்பவன் பாரதிதாசன்.

கனகசபைப் பிள்ளைக்கும் இலக்குமி அம்மாளுக்கும் அருந்தவப் புதல்வனாய் முளைத்து மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப் புலவர் போன்ற ஆசான்களின் அறிவொளியில் கிளைவிட்டு பாரதியெனும் ஆலமர நிழலில் கனிவிட்ட இந்தக் கவிக்குயிலின் கவிதைக் குஞ்சுகள் மனித நேய உரத்தை உறிஞ்சி மண்ணிலெங்கும் மணப்பவை.

சாதி சமயச் சழக்குகளென்றும் சாக்கடைச் சுழிப்பில் சிக்கிச் சீரழிகிற, சிதறிக் கிடக்கிற சமுதாய மக்களை வலிமைமிகு கவிதைக் கரங்களால் தூக்க எழுந்த கவிஞன். மடமை, அறியாமை மண்டிய அழுக்கு மூட்டை சலக்குகளை மண்ணின் மைந்தர்களின் குட்டை மனங்களைக் கங்கையாய்ப் பொங்கிய கவிதை நீரால் வெளுக்க வந்த அற்புதக் கவிஞன்.

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிரப் பாடிய தன்னிகரற்ற புதுமைக் கவிஞன்; புரட்சிக் கவிஞன். நிமிர்ந்த நடை; நேர் கொண்ட பார்வை என பாரதி காட்டிய இலக்கணத்தின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்தவன்; புதியதோர் உலகம் தேடியவன்; பகுத்தறிவுக் கருத்துகளைப் பாடினான்; மூட நம்பிக்கைகளைச் சாடினான்.

இலக்கியப் புலமைக் கூடியவன்; முத்தமிழ் இயக்கம் நாடியவன்; வாடாத புகழ்மாலை சூடியவன் பாரதிதாசன். எடுப்பான தோற்றம்; துடிப்பான மீசை; வீர விழிகள்; ஆண்மைக்குரிய சிம்மக்குரல் இவையனைத்தையும் கொண்டு செந்தமிழ் நெஞ்சில் சீருலா வந்தவன்.

முதன் முதலாக அந்தக் கவிச் சிங்கத்தைக் காணுகையில் ஒருவகையான அச்ச உணர்வு கூடச் சிலருக்கு தோன்றக்கூடும் ஆனால் கவிஞரிடம் பழகத் தொடங்கிவிட்டால் வீர விழிகளில் ஈரம் ததும்பும், பாசமும் பால் போன்ற வெண்மையான குழந்தை உள்ளமும் அனைவரையும் காந்தமாய் ஈர்த்துவிடும்.

பாரதிதாசனது நறுக்குத் தெறித்தாற் போன்ற சிம்மக்குரலிலே நகைச்சுவையும் மானுடமும் இழையோடிக் கொண்டிருக்கும். இளைய வயதிலே கவிதைக் காதலியைக் கைப்பிடித்து, ‘கிறுக்கன்’,`கிண்டல்காரன்’ என்ற புனைப்பெயர்களில் எழுத்தோவியங்களைப் படைத்த இந்தத் தமிழ்க்குயில் பாரடி எனும் சூரியனோடு இரண்டறக் கலந்தபோதுதான் பாரதிதாசனாய் தமிழ்வானில் சுடர்விட்டது.

‘சுப்பிரமணியர் துதி அமுது’ என்ற நயம் ததும்பும் இசைப்பாடலின் மூலம் ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பெயர் பெற்று ‘புரட்சிக் கவி’ என்ற காவியத்தை செந்தமிழால் தீஞ்சுவை மிளிர, புரட்சிப் பூக்கள் பாக்களாய் மலர படைத்ததால் புரட்சிக் கவிஞராய் என்றும் உலாவரலானாய்.

பதினெட்டாம் அகவையின்போது தமிழ்ப்புலமையில் முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்ற பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞன். தமிழ் இலக்கிய அடர்த்திக்கு மட்டுமன்றி மானுடத்திற்கும் சேர்த்து தனது பா வளத்தால் உரமிட்டு சீரிய சிந்தனை உளியால் செதுக்க முற்பட்ட சமுதாயச் சிற்பிதான் நம் பாரதிதாசன்.

சீர்திருத்த புயலாய் மலர்ந்து, புரட்சிப் பொறிகளை புதுமைச் சிந்தனைகளைத் திரட்டுப் பாலொத்த தேன்தமிழ்ச் சொற்களோடு வாரி வீசிய வண்ணமிகுந்த அணையாத கவிதைக்கனல் பாவேந்தர். சாதிகள், சாத்திரச் சடங்குகளை, மூடப் பழக்கங்களை முற்றும் வெறுத்து குருதிக் கொப்பளிக்கும் கோபத்துடன் பாடினாலும் மானுட நேசம் மறக்காதவன்.

உழைப்பாளியின் சிவந்த கரங்களில் அழகைக் கண்டு வாழ்த்தியவன்; மனித விடுதலை மலர விரும்பியவன்; கைப்பெண்டிருக்காக குரல் கொடுத்தவன்; பெண்ணை என்றும் பெருமை செய்தவன்; மண்ணைப்போல் மிதிப்படும் மானிடரைப் பார்த்து ‘உன்னை விற்காதே’ என்று எச்சரித்தவன்; தமிழ்ப் பகைவர் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற ஆண்மையாளன் பாரதிதாசன்.

விரைந்தோடும் வெள்ளமும் விசீயடிக்கும் புயற்காற்றும் இவன் நடை இயல்புகள்; வெள்ளத்தைத் தாக்கும் படை இல்லை; வீசும் புயற்காற்றை விலக்கும் தடை இல்லை. அதுபோல இவனது சொற்களில் எந்தச் சிக்கலான பொருளும் சுள்ளிகளைப்போல் நொறுங்கிப் போகும். சாதி சமய பெயரால் நிகழும் அடிமைத் தலையறுக்க போர்ப்பரணி பாடியது இவனது கவிதை. அந்த மிடுக்கு இவன் நடையின் அரசவைப் பெருமிதம்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இழைக்கப்படும் கொடுமைகளைச் சாடிய பாரதிதாசன் ஒரு தனி மனிதனின் பெயரல்ல; தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர். பாற்கடலாய் பரந்து விரிந்து தமிழ் மண்ணின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திட்ட இவனது உவமையழகு, உணர்ச்சித் துடிப்பு, புதுமை நோக்கு, புரட்சி வெடிப்பு அனைத்துமே அலைகளாய்ப் பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்தன; சிலம்பமும் ஆடின.

அந்தக் கறுப்புக் குயிலின் உள்ளத்திலிருந்து பீறிட்ட நெருப்புக் குரலோ இழிதகைமையை, ஈனச் செயல்களை மிதித்துத் துவட்டக் கூடியது. இந்தப் புதுவைக் குயில் தமிழின் இனிமையைப் பாடியது; நிலவின் அழகைப் பாடியது; ஆண்டாண்டுக் காலமாய் வாழ்ந்த அடிமை வாழ்வைச் சாடியது; ஏழ்மையை அழித்து பொதுவுடைமை அமைக்க குரல் கொடுத்தது.

வேரோடிப் பழகிவிட்ட வீண்பழமை மாய்ப்பதற்கே நேர்மைத் திறத்தோடும் உள்ளத் துணிவோடும் போராடச் சொன்னவன் புதுவைத் தமிழ்வேந்தன். வண்டமிழர் மாண்புரைத்தே கையிருப்பைக் காட்ட கடலாய் எழுகவென்றான்; சாதிமதக் கேடுகளைச் சாத்திரத்தின் பொய்மைகளைத் தீதென்றான்; தாழ்ந்தோர் தலைநிமிரத் தன்மானச் சங்கொலித்தான்.

பாம்பாகச் சீறும் பகைப் புலத்தோர் பல்லுடைத்து மேம்பாடு கண்டுயர மேன்மை நிலையுரைத்தான். கல்லார் நினைவிலும் கற்றோர் நாவினிலும் கல்லும் கரைந்துருகச் செய்யும் கவின் தமிழே பங்கம் உனக்கென்றால் பச்சைரத்தம் ஈவோமென்று அங்கம் கனன்றான் அரிமா முழக்கமிட்டான். தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டைப் பாங்குறவே பேணப் பகுத்தறிவுப் பண்ணிசைத்தான்.

இனிமைத் தமிழிலேயே தன்னை சதையும் ரத்தமும் உணர்வுமாய் கரைத்துக் கொண்ட பாரதிதாசனை நினைக்க நினைக்க என்றும் என் நெஞ்சம் நெகிழ்ந்துப் போகும். அவனது தமிழ்க் காதலுக்கு நான் என்றும் அடிமை.

‘முழுமை நிலா, அழகு நிலா முளைத்தது விண்மேலே - அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற்போல’ என்று பாடிய இந்த நெருப்புத் தென்றலின் குரலை உணர்ந்து இனியாவது தமிழறிஞர்கள் பழம்பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பதிலே காலங் கழிக்காமல் மாறிவரும் காலச்சுழலுக்கேற்ப புத்தம் புதிய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் இதயத்தில் இடங்கொடுக்க வேண்டுகிறேன்.

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

(பாரதியின் கைகளைப் பற்றி என் வாலிப வயதில் தளிர்நடை பயின்றபோது அவன் எனக்கு சிலரை அறிமுகப் படுத்தி வைத்தான். அவர்களில் முக்கியமானவர் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர். தாகூரின் கவிதைகளைத் தேடித் தேடி படித்திருக்கின்றேன். தாகூரின் ‘கீதாஞ்சலி’யின் இறைநேசம் என்னிலும் உருகி வழிந்து மனத்தை நிறைத்தது. அவரின் `stray birds’ படித்தபோது எனக்குள்ளும் கவிவாசம் பரவியது. அவரைப்போல நான் குயிலைக் கவியெழுத தொடங்கி அது உரைநடையாக வழிந்தோடியது. இந்த எழுத்துக்கள் எனது இளமை காலத்து பூக்கோலங்கள். 1989 ஜூலையில் எழுதப்பட்ட இந்த எழுத்துக்களை எனது பரணிலிருந்து மீட்டெடுத்து பதிவு செய்துள்ளேன் கிஞ்சிற்றும் மாற்றமின்றி. நான் தாகூரில் கரைந்தது உங்களுக்கும் புரியும்.)

கவிக்குயிலே,


என் கண்மணியே, கண்வழியே குடியேறி கனவைக் கொஞ்சும் தேவதையே, கண்ணில் கலங்கி கன்னத்தில் கால்வாய் வழிந்தோடும் கண்ணீரில் எனை மிதக்கவிட்டு தனியே வாடவிடுச் சென்ற உயிர்யாழே, உன் பாதச்சுவடுகளின் முகவரிகளை புதையலைப்போல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆருயிரே, என் நெஞ்சப் புண்வெளியை ஆற்றும் அருமருந்தே உன் உயிர்மூச்சைச் சுமந்து நின்ற காற்றிலும் உன்றன் கானத்தைக் கவிதைப்போல் யாசித்துக்கொண்டிருக்கின்றேன். இதய நாட்டை ஆள்பவளே, பாட்டுப் புனல்வெளியில் குதிக்கின்ற பேரழகே, காலக் காற்றில் உனைத் தேடித் தேடி சதிராடிக் கொண்டிருக்கின்றேன்.

அன்பே, வசந்தத்தைத் தரிசிக்க மேலாடையை இழந்துவிட்டு நிர்வாணமாய் ஆனால் ஞானச்செறுக்கோடு நிற்கும் எனது போதிமரத்தடியில் உனக்காக மீண்டும் என் மெளனத்தவம் தொடங்கிவிட்டது.
என்றன் தாய்மடியில் கண்ட கனவுகளை விட உன்றன் பூமடியில் தவழ்ந்து தேக்கி வைத்த காவியங்கள் யாவும் ஏட்டில் எழுத முடியா உயிரோவியங்கள். என்றன் கவிக்குயிலே, உன்றன் வருகையை ஆராதிக்கக் காத்திருக்கின்றேன்.

வானமுதே, வளர்பிறையே உன்றன் பிரிவை நினைத் நினைத்து நெஞ்சம் நெக்குருகிப் போனது. கருங்குயிலே, கண்மணியே என் இமைக்கதவை மூடிக் கண்ணை சாத்தும்போதெல்லாம் என்னுள்ளே எட்டிப்பார்க்கின்றாய் நிலவாய்.

காதலாம் தூண்டிலில், காலமாம் வலையில் தவித்திடும் மான் நான். காதலின் தீபம் நீ கையேந்திச் சென்றாய், காரிருள் தனிலென்னைத் தனிவிட்டுச் சென்றாய். கண்ணே கூடல் நீக்கி எனை வாடவிட்டுச் சென்றாய்.

நீ சென்ற திசை நோக்கித் தொழுதபடியே தவமிருக்கும் இந்த ஏழையின் நெஞ்சம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி புண்ணாகிப் போகும்வரை உன் கல்மனம் உருகாதா?அன்றொரு நாள் தனியனாய் மெளனக்கடலில் பொன்மாலைப் பொழுதிலே, நான் ஆழ்ந்திருந்த வேளை நீதானே துணைவந்தாய்.

உனக்காகத் காத்திருந்த ஒவ்வொரு துளி வினாடியும் காதலுணர்வுப் பொங்கிவர கவிதை அரும்பிவர நான் ஒரு கவிஞனாக, இயற்கையின் விந்தை குமிழிகளில் மூழ்கி மூழ்கி என்னை நானே மறந்தே போயிருக்கின்றேன்.

எத்தனையோ சுந்தரப் பொழுதுகளில் உன் தெய்வ தரிசனத்துக்காக தவங்கிடந்தேன். அந்த நினைவுகள் யாவும் என் இதயத்தில் அகண்ட இசைக்கடலைத் தாண்டி கவிக்கனலில் ஆழ்ந்திருக்கின்றது. முத்தே, நெஞ்சிலும் நினைவிலும் நீயே எப்பொதும் உள்ளாய்.

எனது உயிர்த் தொகுதி முழுவதும் உன் உருவமே நிறைந்துள்ளது. இன்றோ தொடங்கிற்று; தனிமை மிகுந்தது; இனிமையை எண்ணி ஏங்கியதுள்ளம்.என் நெஞ்ச உணர்வினைத் தூண்டி ஆண்டிட கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வே எனைக் கொன்றது.

எனது வார்த்தைகள் எனது கவிதைகள் இந்தப் பொன்மாலைப் பொழுதிலே தடுமாறுகிறது. ஓ... காதலே இசையின் இனிமையைப் பருகி ஓங்கி வளரும் காதலே தந்துவிட்டாய் இனிமை இனி பொறுக்க மாட்டேன் தனிமை.

நித்தம் ஏக்கச் சுழிப்புகளில் கண் வளர்க்கும் மாயக்கனவுகளின் சந்திப்பில் புண்பட்டுக் காதல் புயலில் சிறகொடிந்த பறவையாய் முகாரி பாடுகின்றேன். அருங்கனியே, வழி தப்பிய பறவையைப்போல் உன்னிடம் பிடிபட்டேன், என் உள்ளத்தைக் குலுக்கினாய், உனது எல்லையற்ற கீதவலையில் என்னுள்ளத்தைப் பிடித்தாய்.

ஆருயிரே, நானோ தாயாக வடிவம் மாறி பாக்களையே குழந்தையாக்கி உன்னைத் தாலாட்டி தூங்க வைத்தேன். எனது பாக்களில் நினது வசந்தகால மலகர்களின் தோற்றம் பொலிந்தது. இன்றோ உன் பிரிவு என் பாட்டு அலங்காரங்களைக் கட்டி வைத்துவிட்டது. என் இதயத்தில் ஒலிக்கும் கவிதை உன்னுள்ளத்தே ஒலி செய்யட்டும்.

எனது காதல் கீதம் உன்னுயிரிலே கலந்து பெருக்கெடுத்தோடட்டும். எனது சுருதியலைகள் உனது பாதக் கமலங்களைக் கழுவட்டும். யாழ் தன் இசையைத் தாங்குவதுபோல நான் உன்னன்பை தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் என் ஆருயிரோடு அளிக்க உறுதி கொண்டிருகின்றேன்.

என் உயிரொளிக் கதிரே; இன்னும் நான் சாகவில்லை; உயிர் நூலென உடலில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு இருக்கின்றேன்; சருகாக உன்னையெண்ணி துரும்பாக மடிவதற்குள் பூஞ்சிரிப்பில் மின்னும் உன் மதிமுகம் காண வழித் தேடுகின்றேன்.

உயிரொளி ஓவியமே,என் விழிகள் உன் மைத்தவழ் விழிகாணாமல் ஒளியிழந்துவிட்டன. பிரிவெனும் கசப்பைத் தந்தவளே இங்கே நான் துடிக்கின்றேன் தனிமைத் துயரில். அஞ்சுகமே, எனைப் பரிவோடு அணைத்திட்ட உன் பூங்கரங்கூட எனைவிட்டு பிரிவுக்கே உறவாகிப் போகுமென்று கிஞ்சிற்றும் நான் நினைக்கவில்லை.

அன்புத்தேனே, உணர்ச்சியாற்றில் ஓடி வரும் புதுப்புனலே, உன்றன் எண்ண வெள்ளத்தில் ஊழ்கி வரும் கனவுகளின் விளிம்புகளில் மிஞ்சுவது ஈரமான வெறுமையே. என் நெஞ்சத்துச் சிப்பிக்குள் கருத்து முத்தாய் நிலைத்தவளே, என்னிளமனது உனையெண்ணி நொடிக்கு நொடி நூறுமுறை துடிக்கிறது.

துன்பம் என்னை தனக்குள் விலங்கிட்டுக் கொண்டது; துடிப்பதற்கோ எனக்கிங்கே ஆற்றல்ல்லை; துவல்கின்றேன் கண்மணியே. என் கதையை மரணம் வந்துமுடிப்பதற்கு முயலுகிறது அதர்குள் உன் முகமலரை ஒரேமுறை கண்டு தரிசிக்க வேண்டும். என் அகங்குளிர இந்தச் செவிமுழுதும் தேன்மணங் கமழும் நின் தேவகானத்தை நான் கேட்க வேண்டும்.

அன்பே, சாவாலும் எந்நாளும் சாகாத காதலாலும் கூவாத ஊமைக் குயிலாய் சொல்லை நெஞ்சக் கூட்டுக்குள் போட்டடைத்து துன்ப வேதனயில் நெய்யாய் உருகுகின்றேன். என் நெஞ்சில் காதல் உணர்வை ஊஞ்சலாடவிட்டு ஆடுகின்ற பேரின்பத் திரவியமே, உன்றன் மடியதனைத் தலையணையாய்க் கொண்டே நான் துயின்ற நாளெண்ணி இப்போதிமரத்தின் அடியிலே நடைச்சடலமாய்த்தான் உலவுகின்றேன்.

பூந்தென்றலே, இறந்தகால நிகழ்வுகள் நெஞ்சத்தில் நிழலாய் நின்றாட நிகழ்கால வெப்பத்தில் நெக்குருகிப் போகின்றேன். புத்தமுதே, என் கண்ணிரெண்டில் காதலெனும் நோயைத் தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய்; கனவிலும் வந்தென்னை வாட்டுகின்றாய். கண்மணியே என் காதல் நோய்க்கு நீயல்லவோ அருமருந்து.பறவைகளில் பருவகால பறவையா நான்? இசையையே உணவாய் உட்கொள்ளும் அசுணப் பறவை; பனித் துளிக்கே ஏங்குகின்ற சக்ரவாகம் நான்.

உன் திருவரவன்றி என் இதயத்தாமரை இனி இதழ் விரிக்காது. ஆக வந்துவிடு விரைவில் உன் அன்பு முத்தம் தந்துவிடு. இடைவெளியே இல்லாமல் இருந்த காலம் இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் புதியதொரு சொர்க்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றோ பிரிவையெண்ணி உன் பொன்வரவுக்காக வழி பார்த்திருக்கின்றேன்; விழி தேய பூத்து நிற்கின்றேன்

புதன், 21 ஜனவரி, 2009

நீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலாம்பரிராகம்


(வாசிக்கும் முன்: பாரதியின் ‘குயில் பாட்டு’ படித்து அதன் காதற் சுவையிலே மனதை தொலைத்த என் இளமைக் காலத்தில் நான் எழுதிய எழுத்துகள் இவை. பாரதியைப்போல் நானும் கத்தும் குயிலோசைக்காக காடுமேடெல்லாம் அலைந்திருக்கின்றேன். நினைவிருக்கிறது 1986 இல் செப்டம்பர் மாத இறுதியிலே பினாங்கு(முகாயேட்) கடற்கரையோரத்தில் அமைந்த காட்டு மரமொன்றில் குயிலின் அமுதக் குரலைக் கேட்டு பாரதியின் காதல் உணர்வுப் பெற்றேன். மீண்டும் பாரதியில் முக்குளித்து 27.9.1986 நீள இரவினிலே இந்தக் கட்டுரையை எழுதினேன். என் பழைய பரணை சுத்தம் செய்தபோது கண்ணில் தட்டுப்பட்ட இந்தக் கட்டுரையை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பதிவு செய்திருக்கின்றேன்.)

அதோ ஆர்ப்பரிக்கும் நீலக் கடலோரம் அலைகள் காயப்படுத்தியும் கட்டுக் குலையாமல் நிற்கும் அந்தக் கற்பாறை மீது அமைதியாக அமர்ந்து மீண்டும் எனது மோனத் தவம் கலைகின்றேன். அலைகளின் பேரிடிகளுக்கும் வளைந்திடாத அந்தக் கற்பாறையைப் போல் என் காதல் உள்ளமும் உடையுமேயன்றி எவராலும் வளைத்திட இயலாது..மனதில் உன் மீது கொண்ட காதல் அலைகள் உணர்வுக் கரை மோதி வழிந்தோடுகிறது.
இந்தப் பெளர்ணமி நிலா ஒளியில் பாலைவன மனத்தோடு தொலைந்து போன நமது கரைகாணா காதலின் முகவரிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கரும்பே, உன் காலடிச் சுவடுகளைக் காணாததால் என் கண்மலர்கள் கண்ணீர் அரும்புகளைச் சிந்துகின்றன. நீ வாழும் நெஞ்சம் மட்டுமே நினைவுகளைத் தாலாட்டி என்னை உயிரோடு உலவவிடுகிறது.
இங்கே உன்றன் துணைத்தேடி தனியொரு சோகத் தரை மேகமாய் அலைகின்றேன். நான் கொதிக்கின்றேன் இவ்விடத்தில்; துடிதுடித்துத் தூங்காமல் போகின்றேன் இரவெல்லாம்; இவற்றையெல்லாம் ஒடிப்பட்ட சுள்ளிகளா அறியும்? அழகே, எத்தனை நாள் இப்படி ஏங்கி ஏங்கி இளத்திருப்பேன். என்புருகிப் போய் இருப்பேன் ஈடேற்றம் எந்நாளோ, உன்றன் அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ?
பனிதூங்கும் மலரே, பண்பெனும் பயிரே, பண்ணோடு நாதம் இழைகின்றதைப்போல உன்னோடு நானும் இணைவதெப்போ? உன்றன் தேன்மதுர இதழ்ம் துடிக்கின்ற இமையும் சிலையான உடலும் சிந்தாத மொழியும் அணையென்று சொல்லி என்னை அணையென்று சொல்லி அழைப்பதெப்போ?. இன்பமே வந்துவிடு என் வாட்டம் பொக்கும் அமுதகானம் இசைத்துவிடு.
கண்ணென்ற வழியால் நெஞ்சக் கருவறையில் புகுந்து நிலைத்தவளே,நீர் பிரிந்த நிலம்போல் இங்கே நின்றன் பிரிவால் வறண்டுள்ளேன். மதுமலரையெல்லாம் மனம் வெறுத்துவிட்டது; மலர்ந்து வரும் புது இன்பமெல்லாம் கசக்கின்றது.. இதுவரையில் உன் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்; இனி ஒரு கணமும் தாங்காது என் இளமனது.
தாயைவிட்டு பிரிந்த சிறுபிள்ளைபோல் ஒவ்வொரு நாழியும் கலங்கி குலைகின்றேன். கார்மேகம் போல் வற்றாக் கண்ணீரைச் சொரிகின்ற நிலையில் உள்ளேன். கரையுடைத்துக் கட்டுக்கு மீறிபாயும் காட்டாற்று வெள்ளம்போல் கண்ணீர் சிந்த வைத்தல் சரிதானா சரியேதானா?. என் இதய பூமியில் சீருலாவும் தென்றலே ஓரிதயம் உனக்காக உயிர்வாதைப் படுவதும் முறைதானா முறையேதானோ?.
உன்றன் ஒளிமுகத்தை உயிரூட்டி எனைக் காக்கும் கலை முகத்தை நான் காண வேண்டும். மீண்டும் என் கண்ணிலே அக்காட்சி தன்னிலே என் இதயம் நீந்தி குளிக்க வேண்டும். என் எண்ணமெல்லாம் உன் நினைவே நிறைவதன்றி பிறிதொன்றில்லை. புதிருக்குள் சிக்கிய விடையானேன், கொதிப்புனலின் தகிப்பானேன்; நிலம் மழையால் சேறாகிப் போனதுபோல் நிறையழகே உன்னைக் கண்ட நாள்முதல் குழம்பிப் போனேன்.
நீ பிரிந்து போனாதால் முடங்கிப்போன கலையானேன்; கரையொதுங்கித் தவிக்கின்ற கப்பலானேன். கொம்பில் முழுதாகப் பழுப்பதற்குள் வீழ்ப்பழம்போல், முற்றி வந்த நம்முறவில் பேரிடி விழுந்திட நொந்தேன். இருக்கட்டும் இற்றுவிடவில்லை என் இதயம் நூலின் இழையைப்போல் அவ்வுறவைப் பேணிக் காப்பேன் என் சின்னஞ்சிறு இதயக்கூட்டில்...
பொருள் புதைந்த பார்வையால்; அடக்கத்தோடு புன்னகையால் மழைக் காலத்தின் வெள்ளம்போன்ற கலகலப்புப் புது சிரிப்பால் காதல் சிறகுகளை என்னுள் முளைக்க வைத்தாய். இன்னமுதே, இன்பக் கவிதையன்றி இலக்கியம் பூப்பதில்லை அதுபோல கனிச்சாறே, நீயின்றி நானில்லை. கவிதைப் புதையலே, உன் பேரன்பில் முகிழ்த்தெழுந்தால் பட்ட்த்துயர் எல்லாம் தீர்ந்துபோகும்.
உன் தோள் தொத்தும் பேறு நான் பெற்றால் உலகந்தன்னை ஓர் நொடியில் பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பிறக்கும். அகத்துறையே, உன்னிசைவின் திசை நோக்கித் தெண்டனிட்டுக் கிடக்கின்றேன். தீஞ்சுவையே, உன்னைதான் என் வாழ்வுப் பேராட்சிக்கு உயர்த் தலைவியாக்கி கீதம்பாடி நிற்பேன். என் மனம் பற்ற வரும் மட்டும் காத்திருப்பேன் குன்றம்போல் இலையெனில் தீயில் கருகியதோர் மரம் போல் பட்டுப் போவேன்.
அன்பே, நீ பிரிந்துபோன நாள்தொட்டு வெறிச்சோடிக் கிடக்கின்றேன் நன்செய் நிலம் அறுவடைக்குப் பிறகு காய்ந்து கிடப்பதுபோல. எனக்கும் ஓரிதயம் உண்டு; அதற்குள் வாடா எண்ணங்கள் ஏக்கங்கள் பல முளைப்பதுண்டு. ஓராயிரம் ஆசை அலைக்குள் சிக்கி எழுகின்ற பேரேக்கம் என்னுள் நீர்சுழலானது. கனவுக்குள்ளே கண்புதைத்து காதல் வளர்த்ததால் இதயத்தில் இன்று கனல் பூத்துவிட்டது.
‘காதலே எனக்கு நீ நன்றே செய்தாய் - துன்ப வேதனையைத் தந்து நன்றே செய்தாய்’ என்று கவி தாகூரைப் போல் நானும் புலம்பிக் கொண்டிருக்கிறேன். பேரழகே, எனக்கு வாழ்வோ எரிசூளை, இரும்பாலை ஆனதென்பேன். தெய்வீக மலர்க்கொடியே, உதிர்ந்த இறகுகளோடு இருளின் மடியில் தொலைந்து போன என் இதயத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
காதல் போர்க்களத்தில் என்றுமே நான்தான் நிரந்தரக் கைதி. கார்கால மேகங்களின் ஊர்கோலம் கலைந்ததுபோல் என் வண்ணக் கனவுகளில் நீந்தியவளே, நீ என் கைக்குள்ளே கிட்டிவிட்டால் உலகிற் முதல் கவிஞனாவேன். எனைவிட்டு நீ பிரிந்து சென்றாலும் உன்பால் துளிரும் அன்பை நெஞ்சில் தேக்கி நித்தம் இந்த நீலக்கடலோரம் மாதவத்தோடு காத்துக் கிடக்கின்றேன்.
இரவின் இறுகமான இருட்டில் எனது மெளனப் புலம்பல்கள் ஆன்ம வீணைகளை அழ வைக்கின்றன. உன் ஆழக் கருவிழிகளோ ஆழங்காண முடியாத இதயக் கருவறையில் இருந்து பூத்த கனவுகள் சோக சுருதி இலயத்தோடு அலைகின்ற மழையில் குளித்த மலர்கள் சிலிர்த்ததுபோல் உன் அன்பு என் சிந்தையணு ஒவ்வொன்றிலும் ஒளிருகிறது.
கவிதைப் புனலின் கற்கண்டு ஊற்றே, இன்பக் கதைகளெல்லாம் உனைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?- அன்புத் தருவதிலே உனை நேராகுமோர் தெய்வமுண்டோ?. பேடைக் குயிலே,பெண்மைக்கே இலக்கணம் நீ, இந்த ஏழைக்குக் கிடைத்த அற்புதப் புதையல் நீ. நீலப் பூங்குயிலே, என்னுயிர் ஏகிடும் முன்னே நீ பறந்து வா என் முன்னே....

(வாசித்த பின்: இடைப்பட்ட இந்த இருபத்து மூன்றாண்டு கால இடைவெளியில் பல குயில்களை கண்டிருக்கின்றேன் ஆனால் அந்த நீலப் பூங்குயிலை மட்டும் கண்டிலேன். ஏனோ அந்தக் குயிலைக் காண இன்றும் இதயம் ஏங்குகிறது)

கண்ணதாசா.... என் கவிநேசா

‘தமிழில் ஒரு கவிமகனைச் சிறுகூடற்பட்டியல் தந்த மலையரசித்தாயே’ என்று தமது மூலத்திற்கு முன்னுரைக் கூறிய காலத்தில் அழியாத காவியம் தரவந்த கவிமன்னனே, கன்னித்தமிழில் செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து செவிமடல்களில் தேன்பாயும் சொல்லெடுத்து தித்திக்க தித்திக்க தீந்தமிழமூதூட்டிய செந்தமிழ்த் தேர்ப்பாகனே, நின்றன் எண்ணத்தில் விதையாய் விழுந்து தளிராய் நடைப்பயின்ற கவித்துவத்தை பேருவகையோடு நெஞ்சம் நெகிழ நினைத்துப் பார்க்கிறேன்.
சங்கத்தமிழ்ச் சாரத்தினைக் கவிதைப் பொங்கலாகக் கன்னல் கன்னல் நடையில் கருத்துப் பொலிவும் கவிதைச் சிறப்பும் மிளிர சிந்தையணு ஒவ்வொன்றிலும் சிலிர்த்து நிற்கும் உயிரோட்டமும் உணர்ச்சிப் பெருக்கும் மேவிட பாரிடை பட்டொளி வீசி பகழ்க் கொடி பரப்பிய பா வள்ளலே உன்னைப் பாடுவதற்கு வார்த்தைகளுக்காக தவமிருக்கிறேன்.
உயிர்ப்பெல்லாம் உணர்வெல்லாம் உள்ளக் கிளர்ச்சியெல்லாம் உள்மனச் சிரிப்பெல்லாம் எண்ணமெல்லாம் எழுச்சியெல்லாம் எழுத்தெல்லாம் எழிலெல்லாம் கவிதையாக ஊன்மணக்க உயிர்மணக்க வடித்துத் தந்த கவிச்சிற்பியே, காலத்தையும் கடந்து நிற்கும் நின்றன் உள்ளூரக் கள்ளூரும் கவியழகில் என் கவிமனத்தை கற்பூரமாய் கரையவிட்டு மீண்டும் உன் பொன்வரவுக்காகக் காத்து விழி பூத்து நிற்கின்றேன்.
உன்றன் கவி மலர்களில் கவின்வாசம் நாள்தோறும் தமிழறிந்தோர் செவிகளிலெல்லாம் செந்தேன் வெள்ளமாக சந்தனக் காட்டினுள்ளே சதிராடும் தென்றல்போல் மந்திர நடையும் மயக்குறு மொழியும் கொண்டு சீருலா வருகின்றது.
பாமர மக்களின் இதய சிம்மாசனத்தில் இலக்கியத்தின் இன்பமணிமுடி சூடிய மாக்கவிஞனே காற்றின் ஓசையிலெல்லாம் உன் இதயயாழ் மீட்டிய இன்ப கீதங்கள் உயிர்க் கவிதையாய் உலா வந்து கொண்டிருக்கும். பத்து விரல்களிலும் பாட்டினை ஊற்றி வைத்து முத்தாய் செந்தமிழை உதிர்த்த முத்தையாவே, உன் கவித்துவம் என்றும் அமிழ்தச் சுவையாய் தழைத்திருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வானிலே சுடர்விட்ட முழுமதியே, உனைப்போல் புகழ் மகுடம் சூட்டி மக்கள் போற்ற வாழ்ந்த கவிஞன் வெகுசிலரே. தமிழ் மொழியின் தவப் புதல்வனாகச் ‘ஈரும் தலையும்’,’எதுகையும் மோனையும்’,’பாட்டும் பொருளும்’ கைக்கட்டி சேவகம் செய்ய கால்நூற்றாண்டுக்கும் மேலாக கவிச் சக்கரவர்த்தியாக பவனி வந்த கவிநாயகனே, நீ தமிழ் நெஞ்சினர்க்குக் கிடைத்த அருங்களஞ்சியம்.
என் பாட்டுத் தோட்டத்தில் பாடித் திரிந்த வானம்பாடியே, உன் கவிதைச் சிறகின் கந்தர்வ நிழல் எவ்வளவோ சுகந்தமும் இனிமையும் உள்ளதாய் ஒலி மண்டலம் முழுதும் நிறைந்து வழிகிறது. பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழின் மேதை தெரிந்தது; உன்னில்தான் இன்பத் தமிழ் போதை தெரிந்தது. கம்பனுக்குப் பிறகு சந்தம் உன் ஒருவனிடத்தில்தான் சரணம் அடைந்தது.
பாடலுக்குப் பொருளான பழந்தமிழ் வேதமே! ஒளிப்பால் நீ சிந்துகிற ஒய்யாரச் சந்திரனின் மஞ்சளுக்கு உதாரணம் சொல்லிக் கொண்டே வாழ்ந்தபோதே வாடிப் போனவர்களுண்டு; கண்ணா! நீயோ சீதள இரவுகளில் மானிட விடியலுக்காகக் கவிதை மலர்களைத் தொடுத்த காவிய நாயகன். பெண்ணின் கூந்தல் அழகை மட்டும் நீ வர்ணித்தவன் அல்ல; குழி விழுந்த கன்னங்களிலும் உன் கவிதை முத்தம் மாறாமல் விழுந்திருக்கிறது.
மூன்றாம் பிறையைப் பார்த்ததும் ஆசைக்குரியவளின் நெற்றி மாத்திரம் உன் நிணைவுக்கு வரவில்லை; காலக் காற்றில் ஆடிப்போன மனித மரங்களின் வளைந்துபோன கூனல் முதுகும் உன் நினைவுக்கு வந்தது. திரையிசைப் பாடல்கள் உன்னால்தான் சிரஞ்சீவித்தன்மை பெற்றன. சந்தப் பேதமின்றி சுத்தமான பாட்டில் இனிமை சேர்த்த ராஜகவியே, உன்னைப் போல் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக விரித்து வைத்தவர் யாருமிலர். உனது பலத்தையும் பலவீனங்களையும் உலகறிய உளறிய பச்சிளங் குழந்தை. நீ அஞ்ஞான அஞ்ஞாத வாசத்தை ‘வனவாசம் ஆக்கினாய். நாளும் பட்டு பட்டுத் தெளிந்து பட்டறிவை ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ ஆக்கினாய். இலக்கிய மழையில் நனைந்து அதன் வாசத்தைத் ‘தென்றலில்’ உலவவிட்டாய்.
நீ சலனப்பட்டிருக்கிறாய்; மதுவிலும் மாதுவிலும் மயக்கமுற்று உன்னை இழந்திருக்கிறாய்; உணர்ச்சி வசப்பட்டு அரசியலில் களம் புகுந்தாய்; ஆனாலும் புகழ் வருமென்று பொய்யுரைக்கவில்லை; இகழ்வார்களென உண்மையைச் சொல்லாமலும் இருந்ததில்லை. மானுட வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கோணங்களில் சிந்தித்து சமூக வாழ்க்கைக்கான பாடப் புத்தகங்கள் அளித்தவன் நீ.
கற்பனைக் கடலாடி முத்தெடுத்து, பசியால் தவித்து, தாகத்தால் அலைந்து, கானல் நீராடிய மரத்தின் நிழலில் கற்பகம் கண்டு ஆயக் கலைகள் அனைத்தும் அனுபவத்தால் தெளிந்த கவிப் பறவையே,’கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று உனக்கே பல்லவி பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தாயே.
உன் வாழ்வில் எல்லாமே விதிப்படி நடந்ததால்தானோ எங்குமே தத்துவ மழை பொழிந்தாய் ஒரு மகா ஞானியைபோல. உன்னில் கருத்தூற்று மழையூற்றாய் பெருக்கெடுக்க நினைத்தவுடன் அருவியெனக் கவிபொழியும் உன் நாவினிலே கலைமகள் ஆனந்த வீணையை மீட்டி பெருமிதத்துடன் வீற்றிருந்தாள்.
காய்த்த மரத்திற்கே கல்லடி என்பதுபோல் சொல்லடி வல்லிடியாய் வந்தாலும் ‘போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என எல்லா கண்டனக் கணைகளையும் கனிவோடு ஏற்ற மாமலையே, நீ அழுதாலும் சிரித்தாலும் சினந்தாலும் உன் கவிதையின் ஒவ்வோர் அணுவிலும் இனிமை இழையோடுவதை உன்னை விமர்சிப்பவன் கூட உணர்கின்றான்.
கண்ணதாசா, உனக்கென ஒரு தனிநடை வகுத்துக் கொண்டாய். பாரதியைப் போல் புயல் நடையுமல்ல; கவிமணிபோல் தளிர் நடையுமல்ல; பாரதிதாசன் போல் புயலையும் தென்றலையும் சேர்த்திணைத்த நடையுமல்ல. நீயோ மாந்தளிர்க் கொய்து சாறுமாந்தும் ஒரு மாங்குயில்.
புயலும் தென்றலும் மாந்தளிரை ஆட்டிப் படைப்பதுபோல் துன்பமும் இன்பமும் உன்னை வாட்டி எடுத்தன. துன்பச் சகதியிலே நீ நிம்மதியின்றி ஊனையும் உயிரையும் உருக்கி எழுதிய இறவா கவிதைகளை நட்ட நடுநிசியில் கூட நிம்மதியாய் கேட்டு கொண்டிருக்கின்றேன்.
தத்துவம் மட்டுமல்ல காதலும் உன்னிடத்தில் நேசம் கொண்டதால்தானே சங்க இலக்கியக் காதல் ரசத்தயும் மிஞ்சி உன் காதல் கவிதைகள் காதலர் கடிதங்களில் தூது போகின்றது. தமிழின் முற்றத்திலே தங்க நிலா பிறவாகமாய் வாழ்ந்திருந்த இலக்கியச் சித்தன் நீ.
உனது வாழ்வில் சரிபாதி சபலங்களும் சஞ்சலங்களும் தாமரைத் தண்ணீரின் தத்தளிப்புகள்; மறுபாதியோ பருவம் பட்டுப் போனதாலேயே ஏற்பட்ட துன்பத்தின் சுமைகள். விலைமாதர் வீட்டிற்கும் போனதுண்டு; அருணகிரிபோல் தெய்வப் புகழ் பாடியதுமுண்டு; அரசியலில் சிலம்பம் ஆடியதுமுண்டு; அங்கு குத்தீட்டிகள் தாக்கியதுமுண்டு; பிறகு இதையெல்லாம் தாண்டி இலக்கிய முகடுகளைத் தொட்டதுமுண்டு.
காவியச் சித்தனே, வசன நடையில் புதியநடை தந்த தமிழ் இமயம் நீ; புதுக்கவிதைச் சாயலின் சந்தங்கள் பிசகாது சங்கீதத்தில் சஞ்சரிக்கச் செய்த ராஜாளிப் பறவை நீ. வாழும்போதே வரலாறான வைரமே, இளமையைச் சாகவிடாமல் இன்ப நினைவுகளோடு மானுடத்திற்கு மகுடி ஊதிச் சொல்லும் மந்திரம் உன் சொற்கூடுகலில் சுகமாகத் தேங்கி நிற்பதைப் பார்த்தால் கம்பனை உன்னுருவில் கண்டதாகத் தோன்றும்.
குற்றால அருவியாக வந்து விழுகின்ற சொற்கோவைகளை தமிழ் முத்தாரமாக தொடுத்த செட்டிநாட்டுச் சிங்கமே, உன் உணர்வின் ஊற்றிலிருந்து எழுந்து வருகின்ற செந்தமிழில் சந்தனம் மணக்கும். சந்தங்களோடு பல சங்கதிகளைச் சதிராட வைத்து கவிதைக் கலைக்கு புதுப் பள்ளியெழுச்சிப் பாடிய நாவுக்கரசனே; சிந்தாமலும் சிதறாமலும் சொல்வதில் நக்கீரனே; உன் கவிதைகள் சுகமான சொர்க்க வாசல் மட்டுமல்ல; சுந்தர புரிக்கு அழைத்துச் செல்லும் ஞானப்பனுவல்.
‘என் கவிதைகள் ஜீவிதமானவை’ எனத் தமக்குத்தாமே ‘நடுகல்’ நட்டுக் கொண்ட தெய்வீகக் கவிஞன் நீ. இறை நம்பிக்கையால் தமிழில் பல சித்துக்களைச் செய்து காட்டிய ஞானத் தச்சன் நீ. தன்னிலை உணர்ந்து திருத்திக் கொள்ள ‘போதி’ மரத்தை தேடிச் செல்ல துவங்கிய புத்தனும் நீ. 17.10.1981இல் சிக்காகோவில் தமிழ்ப் பொழிவிற்குப் பிறகு தாயகம் திரும்பாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்ட கலைஞனே, அன்றுமுதல் காவிரிபோல் பொங்கி வந்த புதுவண்ண பாக்கள் பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றன.
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்றெழுதிய வரிகளுக்கு நீயே அபிநயம் பிடித்துக் கொண்டு அழகு காட்டுகிறாயா?. இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ என்ற ஏக்கத்தில் தாயைப் பிரிந்திட்ட சேய்ப் பறவையாய் தவிக்கின்றேன்.

திங்கள், 12 ஜனவரி, 2009

பாரதி..........தீ


பாரதி...
கவிதைக் காதலியை பாமரனும் சொந்தங்கொள்ள நிலாமுற்றத்திலிருந்து தெருவுக்குக் கைப்பிடித்துக் கூட்டிவந்த தெள்ளுத்தமிழுலகின் காவியத் தலைவன். புவிகடல்மீது பாமரப் படகுக்குக் கவிதையால் கலங்கரை விளக்கங்கட்டிய கவிச்சிங்கம்.
அந்த எட்டயபுரத்துக் கட்டபொம்மனை ஏட்டில் எழுத எனக்கு இந்த ஆயுள் முழுதும் போதாது. அவன் கவிதையமுதினை கடைந்தெடுத்துப் பருக காலமும் ஞானமும் போதாது. அந்த வரகவியின் வாழ்வினை வார்த்தெடுக்க எனக்கு மட்டுமல்ல வளமிகுந்த நம் தமிழ்மொழிக்கே வார்த்தை வலிமை போதாது.
ஓர் இருண்ட பொழுதில் பாரதத் தேவியை வெள்ளைக்கெளரவர் பங்கப்படுத்தியபோது அவன்தான் கலியுகக் கண்ணணாய் கவியாடை தந்தான். அந்த அமாவாசை நாளில் பெளர்ணமி நிலவாய் உலாவந்து நீள்துயில் கொண்ட பாரதமாதாவின் இமைக்கதவுகளைத் திறக்க உணர்ச்சியோடு ‘திருப்பள்ளியெழுச்சி’ பாடிய புரட்சிக்கவியவன்.
கண்மூடி வழக்கத்தினால் மண்மூடிப்போய் கல்லும் முள்ளும் வளர்ந்திருந்த தமிழினத்தின் இமைக்கதவுகளைத் திறந்துவிட்ட எழுச்சித் திறவுக்கோல். கண்ணனையே காதலனாய், காதலியாய், நற்சேவகனாய் பற்பல உருவங்கள் தீட்டி மானுடத்தை தெய்வீகத்தோடு நெருங்கவிட்டவன்.
சுதந்திரத்தின் சூல் கொண்ட மேகமாய், விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியாய் உலக வாழ்க்கையில் உலாவந்த தேவமகன். பூமகளின் மார்புகளான மலைமுகடுகளில் பால்குடித்து தாய்மடியான பசும்புல் வெளிகளில் தலைசாய்த்து ஆடைகளான அருவிக்கடலில் நீந்தி மகிழ்ந்த கம்பீரத் தென்றலவன்.
வைரமீன் தொங்கும் வானத்தைத் தனது கைகளில் அடக்கிக் காட்டிய வித்தகன். புலர்ந்த காலையின் பொழுதுகள் தம்தவத்தின் பயனாகவே விளந்தனவென்று ஞானச்செறுக்கோடு பூபாளமிசைத்த பூமனங் கொண்டவன். கணுவில்லாத கவிதைக் கரும்புகளை உணர்வு நிலத்தில் ஊன்றி வளர்த்தவன்.
இனிக்கப்பாடும் இன்தமிழ்க்கவிதையாம் அனிச்சப்பூவினால் அணுகுண்டு செய்தவன். முடங்கிக்கிடந்த தமிழ்ச்சொற்களைப் பிரளய எழுச்சியோடு முடக்கிவிட்டவன். மென்மையாய் நடைப்பயின்ற செந்தமிழினுக்கு அச்சத்தை உடைத்தெறியும் ஆண்மைக்குரல் தந்த பெருகவி நெருப்பு.
கள்ளி நிறைந்த காட்டிலும் தேன் அள்ளி இறைத்த முல்லை அரும்பு. வீறு கமழும் இவனது கவிதைப் பாத்திரம் அமுதசுரபியில் அட்சயப் பாத்திரம். இமைத்தோரணத்தை எடுத்துக்கட்டி அமைந்த வீட்டின் அழகிய வாசலே விழியாம், இவனது விழியின் வாசலிலே பாக்கோலம் நர்த்தனமிடும். இளைத்துப்போன நம் தமிழ்க்கவிதைக்குப் புதுவிருந்து தந்தவன்.
தமிழன்னை பலநூற்றாண்டுகள் அருந்தவமிருந்து பெற்ற தெய்விகத் தமிழ்ப்பாவலன். அமரத்துவம் வாய்ந்த கற்கண்டு கவிதைகளால் தமிழ் நெஞ்சக் கோயிலில் அழியா அமரதீபமாய்ச் சுடர்விடும் கவிஞன்.வான்பூச்சொரியும் விண்மீன்களாலே கண்ணி கொஞ்சும் கவிதையாழ் மீட்டியவன்.
தீண்டத்தகாதவன் என்று விலகியோடியவனையும் அன்பொழுக அணத்து பூணூலிட்டு சாதியெனும் முடைநாற்றத்தின் மூக்கொடித்த பெரியோன். கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் பிறகு கவிதையாம் பேராறு வற்றிப்போய் வளங்குமைந்து தடுமாறியது. ’இல்லையோ தமிழுக்கும் தமிழருக்கும் இனியொரு புதுவாழ்வு’ என்று நல்லுள்ளமெல்லாம் வருந்தி நிற்கையில்,’ஏனில்லை நானிருக்கிறேன்’ என்று எழுச்சிக் குரல் கொடுத்து ஏற்றம் நிறைக்க உதித்த விடிவெள்ளி அவன்.
கற்றவர் மட்டுமே காமுறும் கவிதைகளை, பண்டிதர் மட்டுமே சுவையுறும் பாக்களைப் பாமரர்களோடு கைக்குலுக்கி பழக வைத்த கருவிலே வளர்ந்த திரு அவன். பல்லுடைக்கும் பண்டிதத் தமிழென்று விலகியோடிய பாமரர்களுக்கும் பைந்தமிழைப் பழகுத் தமிழாக்கியவன். இலக்கியத்தில் எத்துறையைத் தொட்டாலும் அத்துறையிலெல்லாம் பாரதியின் முத்திரை கல்வெட்டுக்களாய் ஆழப்பதிந்திருக்கின்றன.
பாரதி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கிஞ்சிற்றும் இடைவெளியில்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் தனக்கென வாழா பொதுவுடைமைக் கொள்கையேற்று அஃறிணை உயிர்களிடத்தும் ஆழமாஅ அன்புக்காட்டி அணைத்து நின்ற ஆலமரமவன். உள்ளத்திலே உண்மையொளிக் கொண்ட பாரதியின் இறவாக் கவிதைகள் என்றென்றும் காலவெள்ளத்தால் செல்லரிக்க முடியா உயிர்க்காவியங்கள்.
குமுகாயத்திலே கரைபுரையோடிக் கொண்டிருக்கும் மூடவழக்கங்களையும் முரண்பாடுகளையும் சிந்தனை வாள்கொண்டு அறுத்தெடுத்தான். ‘எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை’ அவனால் மட்டும்தான் அப்படி அழுத்தமாகச் சொல்ல முடிந்தது.
நேர்க்கொண்ட பார்வை, ஏறுபோல் பீடுநடை, அண்டஞ் சிதறினும் அஞ்சாத திண்ணிய நெஞ்சுரம் கொண்டு ‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே’ அவனால் மட்டும்தான் ஆங்கிலேயரைப் பார்த்து முழங்க முடிந்தது.
புதிய சுவை, புதிய பொருள், புதிய வளம் இவற்றைத் திரட்டிக் குவித்து பாரதி வடித்த கவிதைகள் புதியதோர் உலகத்தை பிரசவிக்கக்கூடிய ஆண்மையும் தாய்மையும் கொண்டது. மனிதகுலத்தின் பசிப்பிணி விட்டகல மேடுகலையும் பள்ளங்களையும் சரியாக விரவ மண்வெட்டி பிடித்திருக்கும் மாந்தனின் இரத்தத்திலும் புதியதொரு உலகை உருவாக்க துடித்திடும் உணர்விலும் அவன் கவிதையணுக்கள் கலந்திருக்கும்.
தமிழின் வளத்தையெல்லாம் வடித்து செதுக்கிய கவிதைகள் எதற்குமே வணங்காமல் விண்ணோக்கி நிற்கின்றன. தாயின் மணிக்கொடியின் கீழே அனைத்து மக்களும் ஒன்றாகக்கூடி நின்று பள்ளுபாடிய கனவுக்கு வித்து விதைத்தவன் பாரதி. சிந்து நதியின் நிலவுப் பொழுதிலே படகோட்டிப் பரவசமாகப் பாடிய இந்தக் கவிப்புயலை மீசை அரும்பாத ஓர் இளையப் பொழுதில் கண்டு காதல் கொண்டேன்.
பாரதியோடு என்மென்மனத்துள் ஆண்மை சுடர்விட்டது. அவன் ஆழ்கடல் நெற்றியைக் கண்டபோது ஞானக்கீற்று என்னுள் மின்னலாய் ஊடுருவியது. கூனிக்குறுகி நாண நடைப்பயின்ற என்னை நெஞ்சம் நிமிர்த்தி ராஜநடை போட வைத்தான். அவனுடைய சூரியப்பார்வையின் துணையினாலே மானுட வாழ்க்கையும் உலகத்தையும் புரிந்து கொண்டேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் நான் சோம்பலில் துயிலெழுந்த போதெல்லாம் அவனுடைய அக்கினிக் கண்கள் ஆசிரியனாய் இருந்து என்னைக் கண்டிருத்திக்கின்றன. ஒவ்வொரு சுந்தரப் பொழுதும் எனக்குள் புதியதொரு வசந்தத்தை அழைத்து வந்தவன் பாரதிதான். அவனை அடையாளம் கண்ட இளைய வயதில் அவன்மீது மதிப்பிருந்தது. அவனை எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியபோதுதான் தாயினும் சாலப்பரிந்த பாசம் மிகுந்தது.
மின்னலை விழுங்கி மின்சார சொற்களை ஓடவிட்ட அவனது நேசக்கையைப் பிடித்துக் கொண்டே என்னுலகத்தில் உலா வந்திருக்கின்றேன்; பாரதி இந்த உயிர்மூச்சோடு இரண்டறக் கலந்து என் செயல்களுக்குத் துணைவருகின்றான். ஒவ்வொரு நாளும் என் விழிகள் வைகறையில் விரியும்போது புதுப்பிறவி எடுத்துவிட்டதாக காதோரம் நற்செய்தி கூறுவான். வறுமைச் சுவடுகள் அவனது நெஞ்சைச் சுட்டதில் இன்னும் அந்த புண் ஆறவில்லை என்னுள். ’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று துன்பம் சூறாவளியாய் சுழன்றடிக்கும்போதும் களியாட்டம் போட்ட பாரதியின் மனதை இரவல் கேட்கிறேன். பாரதியெனும் சூரியனை மரணமெனும் நீரூற்றால் அணத்துவிட முடியுமா....?

வெள்ளி, 9 ஜனவரி, 2009

என் பிருந்தாவனத்தில் நந்தகுமரனாக


என்றன் தாய்பூமியை நினைக்கின்றபோதே என் நெஞ்ச முழுவதும் சொல்லால் விவரிக்க முடியாத அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வழிகின்றது.இந்தப் புனிதமான பிருந்தாவனத்திலே நந்தகுமாரனாக நான் உலவிய நாட்களை எண்ணி இன்றும் சிறுகுழந்தையாய் ஏங்குகிறது என்னிளமனது.
சிந்துபாடும் சிறுபறவையாய் பறந்து திரிந்த பால்ய நாட்களும், பயமென்ற சொல்லறியாது காடும் மேடும் சுற்றித்திரிந்த பொழுதுகளும், காட்டாற்று வெள்ளமென பொங்கிய மனத்தோடு துள்ளல்நடை பயின்ற காலங்களும், ஆசையோடு அமுத மழையில் ஆட்டம்போட்ட அருமை நாட்களும்.... மீண்டும் வருக என்னை அழைத்துச் செல்க.
இந்த பிருந்தாவன மண்ணின் வாசம் இந்தக் குருதியோடு கலந்து விட்டது. செம்மண் சாலையில் என் பாதம் பதித்தத் தடங்கள் இன்னும் என் கண்ணுக்குத் தெளிவாய் தெரிகின்றது. மழைநாட்கலில் ரப்பர் மரக் காடுகளிலுள்ள கால்வாய்களில் நீர்பெருகிடும்போது நண்பர்களோடு கும்மாளமிட்ட நாள்கள் நெஞ்சக் கலயத்தில் இன்றும் கொஞ்சி விளையாடுகின்றது.
இந்தப் புனித பூமியின் ஒவ்வொரு துகளும், ஓடையும், மரங்களும், குன்றும், எறும்புகளும், பறவைகளும்.... என்னுள்ளே தெய்வவீணை நாதமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலையுதிர்க் காலத்தில் மேலாடையின்றி நிர்வாணமாய் நாணி நிற்கும் மரங்களைக் காணுகையில் எனக்கும் வெட்கம் வரும்.
இன்று நாகரிக வெளிச்ச விழுதுகள் என் தாய் பூமியில் புது மாற்றங்களை வேர்விட்ட போதிலும் அன்றைய அற்புத நாள்களை ஆழமாக அழகாக இதயத்தில் பொன்வண்ண சித்திரமாய் செதுக்கி வைத்திருக்கின்றேன். இந்த கைப்புனைந்து இயற்றா கவின்பெரு வனப்பில் மீண்டும் முகித்தெழும்போது நான் நித்தம் புத்தம்புது பிறவியெடுக்கின்றேன்.
என் பிருந்தாவனத்தில் பனித்துளிகளைத் தலையில் சுமந்திருக்கும் பசும்புல் வெளியில் காலை நேரப் பொழுதில் வெறுங்கால்களில் மனத்தில் ஈரங்கசிய நடந்த அந்த சுந்தர சுகத்தைச் சொல்லி முடியாது. பனிபெய்யும் மார்கழிக் காலைப் பொழுதுகளின் குளிர் இன்னும் என்னுள்ளே கசிகிறது. இறுக்கமான கார்காலங்களில் கையது கொண்டு மெய்யது போர்த்தி இளகாத இருள் கவிந்திருக்கும் ரப்பர் மரக்காடுகளை நோக்கி நான் செய்த பயணம் தாலாட்டுகிறது. புலர்ந்து புலராத பூபாள வேளையில் தீமூட்டி குளிர்காய்ந்த பொழுதுகள்தாம் எத்துணை இன்பம்?
தாவரங்களின் இலைகளினூடே தங்கக்கம்பிகளாய் ஊடுருவி புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி, ச்ங்கீத இலயத்தோடு சலசலத்தோடும் நீரில் மலர்ச்சி தந்து, பசுமைத் தாயான கானகத்துக்கு உயிர் தரும் கதிரவனின் ஒளிக்கதிர்கல் என் பிருந்தாவனத்தில் செய்யும் அற்புதங்களை ஏட்டில் எழுதுதற்கும் வளமிகுந்த தமிழுக்கும் வலிவில்லையோ என்றே நினக்கின்றேன்.
வாழையிலையில் நர்த்தனமிடும் மழை முத்துக்களையும், இதயச் சிலிர்ப்போடு ஆனந்த பூமழையில் சிந்திட்ட ரோஜா இதழ்களையும் சின்னஞ்சிறு நீர்த்தேங்கிய குட்டைகளில் கும்மாளமிட்டு சங்கீதம் பாடும் தவளைகளையும் இன்றும் காதலிக்கின்றேன்.
தனது சிறு துவாரங்களுக்குச் சாரைசாரையாக இரை சுமந்து செல்லும் எறும்புக் கூட்டத்தினிலே நானும் ஒருவனாக கற்பனையில் செல்வேன். மழைக்காலங்களில் காகிதப் படகுவிட்டு நானும் அதில் ஏறி செல்வேன். என் பிருந்தாவனத்தில் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்கள் என்றும் என் நேசத்திற்குரியவர்கள். நான் இந்த மண்ணில் தவழ்ந்தபோது எனக்குத் தாயினும் சாலப்பரிந்து அன்பமூதூட்டிய வெள்ளை உள்ளங்கள்.
என் பிருந்தாவனத்தில் ஆழமாக காலூன்றியபடியே நிலவை முத்தமிட்டிருக்கிறேன்; காற்றில் உலா வந்திருக்கின்றேன்; மனித உணர்வுகளோடு சங்கமித்திருக்கின்றேன்; இயற்கையோடு இரண்டறக் கலந்திருக்கின்றேன். இங்கு சுதந்திரக் காற்றை மட்டுமல்ல வாழ்க்கையில் வசந்தங்களை நிறையவே தரிசித்திருக்கின்றேன். கிழிந்த பாயில் எச்சில் கறைப்பட்ட தலையணையில் படுத்துக்கொண்டே எதிர்கால கனவுகளை வண்ணத்திரையாக மனத்தில் ஓடவிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். இன்றும் இதயத்தில் உனக்காக தவமிருக்கின்றேன் தாயே என் தேவபூமியே.

உயிர் பிழைக்கக் கற்பதே கல்வி

இந்த மண்ணில் மானிட குமுகாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மிருகங்களாக வாழ்ந்த மனிதன் தமது பட்டறிவால் பலவற்றைக் கற்று மெல்ல வாழும் வகை அறிந்து கொண்டான். வயிற்றுக்கு மட்டுமே உணவிட்டு வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் அறிவின் எல்லையை விரிவுப்படுத்த முயன்றபோது பிறந்ததுதான் கல்வி.
வெந்தழால் வேகாத, வேந்தரால் கொள்ளத்தான் முடியாத, அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான கல்வியின் மேண்மயினை எல்லா மொழிகலும் போற்றியிருப்பினும் நம் தேன்தமிழோ வானளவு உயர்த்தியிருக்கிறது.
மனித உயிர்கள் சீரிய ஒழுக்கச் செறிவோடும் பண்பாட்டு அறநெறிகளோடும் வாழ்வியலில் சிறந்தோங்க உறுதுணையாய் விளங்கிவந்த கல்வியானது இன்று பெரும்பாலோரால் திசைமாற்றப்பட்டு வாழ்க்கையோடு ஒட்டாத வெறும் ஏட்டுக்கல்வியாய் மட்டுமே விளங்குகின்றது.
வள்ளுவன் சொன்ன ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற மெய்யெல்லாம் இன்றைய மக்களிடத்தே பொய்மையாய் வாழ்கிறது. ‘பயிற்று பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றானே பாரடி அதையும் தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் படித்த பலர் ‘பாரை(bar)’ உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
நட்புறவோடும், அன்போடும், பண்போடும் ஆக்கரமான மேம்பாட்டோடும் உயிர்கள் பிழைக்கவும் தழைத்து வாழவும் பயன்பட வேண்டிய கல்வியானது இன்று பலரின் மத்தியிலே வெறும் வயிற்றுப் பிழைப்பாய் போனதே விந்தைதான். படித்தவன் மத்தியிலே பொய் பித்தலாட்டங்கள், வஞ்சகச் சிந்தனைகள், அநீதிகள் பல்கிவிட்டன. உயிர் பிழைக்கப் பெறவெண்டிய கல்வியை சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றதின் பயனாக குமுகாயம் முழுமையாக தீங்கிழைக்கும் கொடும் பிணி பரவியுள்ளது.
‘படிப்பு வளருது, பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான் ஐயோவென்று போவான்’ என்று பாரதி சொன்னது பேருண்மை. அன்று தொட்டு படித்தவர்களை மக்கள் முழுமனதோடு நம்புகிறார்கள். ஆதலால் படித்தவர்கள் கீழான எண்ணங்களும் செயல்களும் கொள்ளலாகாது. கல்விக் கற்பதின் உன்னத நோக்கம் புரியாதக் காரணத்தால் வயிற்றுப் பிழைப்புக்காக கற்கும் நிலையில் இன்று மெத்தப் படித்த பலர் சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டுதான் வருகின்றனர்..
‘கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி; அணையாது ஒளிவிடும் ஒளி. கல்வி, மனிதனின் பொறி புலங்அளுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி மனிதனை முழுமைப்படுத்துவது; மானுடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது’ என்றார் குன்றக் குடியடிகளார்.
இன்றைய கல்வி முறையோ மனித மூளையில் செய்திகளைத் திணீப்பதும் நினைவாற்றலை சோதிப்பதிலேயே நின்றுவிடுகிறது. கற்கும் மாணாக்கனிடத்தே தனம்பிக்கை, திறமை, ஆளுமை அனைத்தும் குறுகிப்போய் நாளை வேலையைப் பற்றிய கனவே பெரிதாய் நிற்கின்றது.
‘வயிறு பிழைக்கக் கற்பதல்ல கல்வி உயிர் செழிக்கக் கற்பதே கல்வி’ என்று வள்ளலார் கருத்துக்கேற்ப சிறந்த கல்வியானது பெருமையைத் தரும், புகழைத் தரும், நாளைய வாழ்க்கை ந்ன்முறையில் அமைய ஆக்ககரமான அறிவாண்மையைத் தரும்.

திங்கள், 5 ஜனவரி, 2009

மனம் வெளுக்க வழி


துணி வெளுக்க மண்ணுண்டு; தோல் வெளுக்கச் சாம்பலுண்டு; மணிவெளுக்கச் சாணையுண்டு