செவ்வாய், 16 மார்ச், 2010

உமக்குத் தொழில் அன்பு செய்தல்!!!

மனித வாழ்வை இன்பப் பூஞ்சோலையாக்கும் வல்லமை அன்புக்குண்டு. அன்பு தழைத்தோங்கும் இடமே சொர்க்கம்; அன்பற்ற நலிவிடமே பாழும் நகரம். இதயம் அன்பின் தித்திப்பில் திளைத்திருந்தால் காணும் உயிர்களிலெல்லாம் தம்மையேக் காணலாம் என்பது சான்றோர் வாக்கு.

மனிதனை மேன்மைப்படுத்தும் வல்லமை கொண்டது அன்பென்பதால் பாரதி,
‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’
‘அன்பென்று கொட்டு முரசே’
‘அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’
‘ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை வளர்த்திடுவோம்’
‘துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி கிளியே’ என்று அன்புருக கரைந்தான். ‘உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை’ என அனைத்து உயிர்களிலும் இறைமையைக் கண்டான் பாரதி. பாரதியின் அடியொற்றிய பாரதிதாசன்,’ இதயமெல்லாம் அன்பு நதியில் நனைப்போம்’ என்று மானுடத்தை நோக்கி முழங்கினான். ‘அன்பெனும் ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததில்லை’ என்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் வியந்து பாடினான்.

‘அப்பா நான் வேண்டுதல் கேட்டருளல் வேண்டும் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செய்தல் வேண்டும்’ என்ற வள்ளலாரின் அன்புப் பார்வை ஆன்மநேயத்தின் அடிநாதமாய் ஒளிருகின்றது. அன்பும் ஈரமும்தான் சமயங்களின் சாரம்.

‘அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே’ என்ற தாயுமானவரின் அன்பின் உருக்கம் இறைமையோடு இரண்டறக் கலப்பது நம் எண்ணமெல்லாம் இனிக்கிறது.

அன்பிருக்கும் இதயமே ஆண்டவன் இருக்கும் ஆலயம். அன்பே ஆண்டவன் என்றுணர்தலே உண்மை ஞானம். ‘அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ என்ற திருமூலரைவிட அன்பின் வலிமையை யார் சொல்லிட இயலும்.

மானுட வாழ்க்கையில் ஏன் இத்துணை துன்பங்கள்! சிக்கல்கள்!. நமக்கு எல்லாம் தெரிகிறது ஆனால் ஒரேயொரு தொழில் மட்டும் செய்யத் தெரியவில்லை. அது பாரதி சொன்ன தொழில்!

‘உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்’. ந்ம்மில் பலர் பாரதி சொன்ன தொழிலை இன்னும் கற்றுக் கொள்ளவேயில்லை.