புதன், 27 ஜூன், 2018

இங்கு அமரர் சிறப்புக் கண்டார்






உலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவுகள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி.  ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல்  தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய்தமிழச்சிஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில்  நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற  முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர்.  அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது?’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்கும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே?

என்றும் அணையாத தமிழ்த் தீபம்








நேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற  பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில் என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய அருந்தமிழ்ப் புலவர்’, ஆசிரிய மணி’, தனித்தமிழ் மழவர் தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளிவீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா?