சனி, 29 ஆகஸ்ட், 2015

‘வானகமே இளவெயிலே மரச்செறிவே...நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ’ என்ற பாரதியின் குரல் என்னுள் ஓராயிரம் முறை ஓங்கி ஒலிக்கிறது. மனிதனுக்கு மட்டுமல்ல பிறந்த எல்லா உயிர்களுக்கும் என்றுமே தாய்மடியாய் விளங்குவது  வனம்தான். தொல்காப்பியர் பகரும் பல்லுயிரும் சரண் புகுந்து வாழ்வைத் தொடங்கியது இந்த வனமென்னும் வீட்டில்தான். அடர்ந்த மரங்கள் வனத்தின் காவலர்கள்; செடிகொடி புல்பூண்டுகள் வனத்தின் மானங்காக்கும் மேலாடை; பறவைகளின் சிறகடிப்பு வனத்தின் விடுதலை; வண்டுகளின் ரீங்காரம் வனத்தின் உயிர்ப்பு; விலங்குகளின் துள்ளல் வனத்தின் வசீகரம்; பச்சை இலைகள் வனத்தின் முகம்; உயர்ந்த மலைகள் வனத்தின் முகவரி; கல்லும் மண்ணும் வனத்தின் திருமேனி; சங்கீத இலயத்தோடு வீழும் அருவி வனத்தின் இதயத்துடிப்பு; ஓடும் நதி வனத்தின் வெண்குருதி...மனிதன் செய்யும் கொடுமை எல்லாம் பொறுத்துக் கொண்டு கருணைமிக்க கடவுளாக இன்னும் இந்த வனம்தானே காத்து வருகிறது. இந்த உயிர்ச்சங்கிலியில் எந்தக் கண்ணியும் அறுந்துவிடக் கூடாதென இந்த வனம்தானே நம்மைக் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. வனம் இருந்தால்தான் முகில்கள் கர்ப்பம் தரிக்க முடியும். வனம் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் உயிர்க்குலம் முழுதும் இன்புற்று வாழ முடியும். பிணமாவதற்கு முன்னால் மனிதா இனியாவது வனத்தை வணங்குவாயா? 

கருத்துகள் இல்லை: