வெள்ளி, 26 ஜூன், 2009

இசைப் புயல் ஓய்ந்தது


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1], [2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்
இருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை
முதற்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும்.

முதற் சங்க காலம்

 அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக
வேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை
,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இடைச் சங்க காலம்

 அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்
தொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்
நூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.


கடைச் சங்க காலம்

 கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்
இருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்
கூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக
விளங்கியது.
தமிழின் சிறப்பு -கி.ஆ.பெ

செவ்வாய், 19 மே, 2009

காலமே! கருணையே இல்லையா?


காலமே! உனது நெஞ்சில்
கருணையே இல்லையா?
எங்கள் ஓலமே நாதமாக
உன்வன்செவி வீழும்போலும்!
பாலையில் பயணம்போகும்
பாதையேன் தந்தாய்? நாங்கள்
ஆலைவாய் கரும்பாய்மாறி
அழுவதைக் காண்கின்றாயோ!
உணவில்லை பகிர்ந்துண்ண
உறவில்லை உடமையேதுமில்லை
உயிர்விலை என்னவிலை இனியில்லை
உணர்விலை உலகுக்கோ மனமில்லை
உனக்கோ எதுயெல்லை
ஏதும் தெரியவில்லை
கொடியோர் தினம்கொழுத்தே
உவப்பதும் நியாயந்தானா?
தமிழினத்தைத் துண்டாடி
துயராட வைப்பதும் சரிதானா?
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று! புதியதோர்
தமிழ் உலகைக்காண
இல்லையேல் இனியும்
கெஞ்சாமல் எஞ்சிய
உயிரோடு உன்னையும்
வேரறுத்து நானும் வீழ்வேன்!
(‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்...’ என பாரதி தமிழரின் நிலைக்கு வருந்தி அழுதது என்னுள் அழியாத பதிவாக உள்ளது. இன்று இலங்கை கொடூர அரக்கனால் நடக்கும் தமிழினப் படுகொலையை எண்ணி என் இதய வலியில் கசிந்த வார்த்தைகள்)

ஞாயிறு, 17 மே, 2009

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்
இலக்கியங்களுக்கும் எனக்குமுள்ள உறவும் தொடர்பும் தொப்புள்கொடியில் தொடங்கியதல்ல. ஊழ்வினைப் பயனோ எனக்கு வாய்த்த வரமோ நானறியாமலே என்னுள் நிலைப்பெற்ற பேறு. இந்த இன்ப உறவை புனித பந்தத்தை என் உயிராகவே கருதுகிறேன்.
என் இதயத்துள் புதைந்திருந்த இலக்கிய உணர்வினை தொட்டெழுப்பியதில் பெரும் பங்கு என்னோடு வாழ்ந்த மண்ணையும் மனிதர்களையும் சாரும். அந்தத் தோட்டத்து மக்களை வாசிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் விரிந்து செல்வதை என்னால் உணரமுடிந்தது.
‘என்னை எழுத வைத்தது வான்’ என்று பாரதிதாசன் கூறியதுபோல என் கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ்க்காவியம் பாட வைத்து எண்ண ஏர் கொண்டு எழுத்தாய் காகித வயலை உழ வைத்து கவிப்புறாவின் காந்தர்வச் சிறகுகளை சொல் வானமெல்லாம் சிறகடித்து இதயமெல்லாம் இரண்டறக் கலந்தினிக்கும் என் தாய்மண்ணே உன்னில் மீண்டும் தலைசாய்கிறேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் புல்லாங்குழல் நாதம் தேன்மழையாய் செவிமடல்களில் பாய்ந்தாலும் உன் தாயன்புக்காக மீண்டும் நான் சேயாய் தவிக்கிறேன். என் சிந்தனை பறவை சிறகடிக்கிற தேவவேளை இது.
இளமை பூரிப்போடு நிமிர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளைப் பார்த்துப் பரவசப்படுகிற பால்மணம் மாறாத பருவ மனத்தோடு என் பழைய பசுமை நாட்களில் உலா வருகின்றேன். என் நினைவுகளின் பின்வீச்சு சலனமற்ற கால வெள்ளத்தின் வெளிச்ச விளிம்பைத் தொட்டுப் பார்க்கிறது
மேனியில் புழுதிப் படிந்தாலும் மனதிலே மாசு படியாத அந்த இறந்த காலங்களை இதயத்தில் இனிக்கும் இளைய காலங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பள்ளி முடிந்து பட்டம் விட்டு மனது மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பருவம் இன்பப் பருவமது.
ரப்பர் பாலை தேடியெடுத்து காகிதங்களில் தென்னங் குச்சிகளை வளைத்து வைத்து பட்டம் செய்வதிலேயே நாட்கள் நகரும். செய்த பட்டத்திற்கு நீண்ட குட்டை வால்களை அலங்கரிப்பது தனியின்பத்தைத் தரும். ஒரு நாள் பட்டம்விடும் உற்சாகத்தில் தன்னையே மறந்த நண்பன் காலில் கண்ணாடித் துண்டை மிதித்துத் துடித்தக் காட்சி இன்றும் என் நினைவுகளில் மின்னலிடுகிறது.
என் புண்ணிய பூமியில் அறிவியல் வெளிச்சம் புகாத அந்த அந்தக நாட்கலில் தொலைக்காட்சி, வானொலி கருவிகள் எல்லாம் காண்பது அரிது. தோட்டத்தில் யாரோ இருவர் வீட்டில்தான் வானொலியைக் கண்டதாக ஞாபகம். நாளடைவில் பல வீடுகளிலும் வானொலி மெல்ல நுழையத் தொடங்கியது.
நான் முதன் முதலாக தொலைக்காட்சியைப் பார்த்தது தோட்டக் கிராணி வீட்டில்தான். தொலைக்காட்சி பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் கிராணி வீட்டிற்குப் பறப்பட்ட நானும் என் நண்பர்களும் எப்படியெல்லாம் அவரின் பிள்ளைகளின் கட்டளைகளுக்கு மனம் வாடாமல் சேவை செய்தோம் என நினைத்தால் இப்போது வேதனையாக உள்ளது.
அந்த மேல்தட்டு பிள்ளைகளின் ஏவலுக்கிணங்க பூச்செடிகளுக்கு நீரூற்றுவதிலிருந்து உடம்பு பிடிப்பதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தால் சின்ன மனத்தின் ஆசைகள் எப்படியெல்லாம் எங்களை அடிமைப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. பூச்செடிகளுக்கு நீரூற்றினால்தான் கறுப்பு வெள்ளை ‘கெளபாய்’, ’கார்டூன்’ படங்களை ஐந்தடியில் நின்று பார்க்க அனுமதிக்கப்படுவோம் இல்லையேல் விரட்டியடிக்கப்படுவோம்.
தோட்டத்து இலையுதிர் காலங்களை என்னால் கொஞ்சமும் மறக்கவியலாது. கோடைக்கனல் கொப்பளிக்கும் வெப்பப் பொழுதுகளில் மேலாடைகளை களைந்து நிர்வாணமாய் காட்சியளிக்கும் ரப்பர் காடெல்லாம் வெளிச்சம் விழுதுவிட்டிருக்கும்.
உதிர்ந்து விழும் இலை சருகுகளில் நடக்கும்போது ஏற்படும் சரசர ஓசை இன்னும் காதில் ஒலிக்கிறது. இலையுதிர் காலத்தில் புகை மூட்டத்தையோ நெருப்பொளியையோ ரப்பர் காட்டில் கண்ணுற்றால் உடனே தோட்டத்தில் இரும்பு மணி அடிக்கப்படும்.
இதற்காகவே காத்திருக்கும் நானும் என் தோழர்களும் தோட்டத்து ‘டிரக்டரில்’ முண்டியடித்துக் கொண்டு ஏறுவோம். தளிர்களையும் கோணிப் பைகளையும் கொண்டு ஓடியோடி தீப்பரவாமல் அணைப்போம்.எங்கள் ரப்பர் மரங்களை தீயிலிருந்து காப்பாற்றியதற்காக கிராணியார் பத்து அல்லது இருபது காசுகளை எண்ணித் தருவார்.
உன்னதமான இசையின் உயிர் அடங்குகிறபோது மெல்லிழையோடும் நாதத்தைப் போல் என் மன ஆழத்தின் மெளனமான மூலையில் எங்கோ அந்த நினைவு புலம்பிக் கொண்டே இருக்கிறது. தமிழ் வாசத்தோடு இடைநிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ந்த அந்த இறுக்கமான நாட்கள்; மாலை பள்ளியாதலால் மனதிற்குள் கவலை வீட்டிலுள்ளவர்க்கோ பூமழை.
விடுமுறை நாட்கள்போல் இனிமேல் காலையில் ரப்பர் காட்டுக்குள் காலையில் வசித்துவிட்டு மாலையில் இடைநிலைப் பள்ளியில் வாசிக்க வேண்டியதால் மனம் கனமாகிப் போனது. பால்மரக் காட்டிலே பாடுபட்டு நேரமில்லாமல் பள்ளிக்குப் பசியோடு நானும் என் நண்பர்களும் ஓடிய நாட்கள் பல.
குளித்தப் பின்னரும் உடலில் பட்ட ரப்பர் பால் சரியாக நீங்கப்பெறாமல் பல நாட்கள் பள்ளிச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீன ஆசிரியரொருவர் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தது என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிக்கொண்டிருந்த பொல்லாத வேளையென்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்வியை நோக்கி என் இதயம் பயணம் போனது இன்னும் என்னுள் பிரமிப்பூட்டுகிறது.
இளைய நாட்களில் தெளிவற்ற நீரோடைகளில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற சலனத்தைப்போல என் எண்ண விரிசல்களில் திரைப்படங்கள் சில உறுத்துதல்களை உண்டாக்கிவிட்டிருந்தன. இன்று திரைப்படங்களைக் காண்பதற்கு ஆர்வமில்லாத நான் அன்று தமிழ்த் திரைகளை நேசித்ததாகவே தெரிகிறது.
எனது பால்ய நினைவுகளிலிருந்து இன்னும் உதிர்ந்து போகாமல் அந்த நாள் இன்றும் என்னுள் பிரகாசிக்கிறது. எனது பக்கத்து தோட்டத்தில் (புக்கிட் சிலாரோங் - கெடா) மாதத்திற்கொரு முறை இரவில் திரைப்படம் காட்டப்படும். இதைக் காண்பதற்கென்றே நானும் நண்பர்களும் மிதி வண்டியில் புறப்படுவோம்.
அங்கு பார்த்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘தங்கப்பதக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் நினைவில் இன்றும் சிரிக்கிறது. நள்ளிரவு படம் முடிந்து பயத்தோடு வீடு திரும்புகையில் நண்பனின் மிதிவண்டியின் சங்கிலி அறுந்து விழ உதவிக்கு வேறு துணையின்றி விரைந்து தள்ளி புறப்படும்போது கீழேவிழுந்து உண்டான காயத்தின் வடு கதை சொல்கிறது.
என் உயிர்க்காற்று கலந்துலவும் இந்தப் புண்ணிய பூமியில் நான் உலவிய அந்த பிஞ்சு நாட்கள் என்னுள்ளே அழியாத கோலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிதைந்தும் சிதையாமலும் நெஞ்சத்தில் நின்றாடும் அந்த இளைய நாட்களை ஏக்கத்தோடு இன்றும் நேசிக்கின்றேன்.

என்ன வளமில்லை தமிழ் மொழியில்

என்ன வளமில்லை தமிழ் மொழியில்
தமிழைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற இன்பமிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதிலும் அதன் இலக்கணச் சிறப்பிலும் இலக்கிய வளத்திலும் காலூன்றி கற்க விழைந்திட்டால் நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழின்பக் கடலில் முத்தெடுக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் என்னவோ சங்கக்கால பெயர் குறிப்பிடாத புலவனொருவன் ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார் போலும்.
விந்தைமொழிச் செந்தமிழ்ப்போல் உலகில் வேறுமொழி இல்லையென எல்லீசர், ஜி.யு.போப்பையர், வீரமாமுனிவர் போன்ற மேனாட்டு அறிஞர் பகன்றதை எண்ணிப்பாருங்கள். ஆங்கிலத்தில் சிந்தைக்கவர் பெண்களுக்கெனப் பருவமெனும் சொல்லொன்றே ‘உமன்’ என்பதாகும்.
நந்தமிழில்தான் ‘பேதை’,’பெதும்பை’,’மங்கை’,’மடந்தை’,’அரிவை’,’பேரிளம் பெண்’ என்று சொற்கள் பல்கிப் பெருகியுள்ளன. பூக்களின் பருவத்தை தமிழரைவிட அழகுறச் சொன்னவர் யார்? ‘அரும்பு’,’மொட்டு’,’முகை’,’மலர்’,’அலர்’,’வீ’,செம்மல்’ அமுதாக ஏழுநிலை அடுக்கி வைத்தானே.
தருக்களிலே இலையுண்டே அதற்கும் தமிழில் பருவங்கள் உள்ளன. ‘கொழுந்து’ இளமைப் பருவத்தை ‘தளிர்’ என்போம். இலை,’பழுப்பு’,’சருகு’ என்ற சொற்களெல்லாம் தமிழிலுண்டு. ஆல், அரசு,,அத்தி, பலா, மா, வாழைக்கோ அழகு ‘இலைகள்’ என்போம்.
அகத்தி போலிருக்கும் செடி பிறப்பைக் ‘கீரை’ என்போம். பூமியிலே படரும் வகை தாவரத்தை ‘பூண்டு’ என்றும் அருகு, கோரை போன்ற சப்பாத்திச் செடியைத் ‘தாழை’ என்றும் கரும்பு நாணலை ‘தோகை’ என்றும் உடலோங்கி நிற்கின்ற பனைதென்னைக்கோ ‘ஓலை’ என்று பெயரிட்டோம்.
மேற்கண்ட சொற்சிறப்பெல்லாம் பிறமொழிக்குள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைப்பதில்லை. கடலைப்போல் பரந்திருக்கும் தமிழில்தான் களஞ்சியம்போல் கணக்கிலா சொற்களுண்டு.
நீல வண்ணக் கடல்நீரை இரைத்துக் கொண்டிருந்தபோதும் கடுகளவும் குறையாமல் இருப்பதைப்போல் கடன் கொடுத்தும் பிறமொழிகள் கவர்ந்து சென்றும் கட்டுடலம் குலையாமல் கன்னிமாறா உடலழகைப் பெற்றதெங்கள் தமிழே என்ற உண்மையினை மறுத்திடுவோன் மடையனாவான்.
ஆங்கிலத்தை உலகமொழி என்கிறோமே அதுகூட கடனாளி நம் தமிழுக்கு, மாங்காயை நாம் தந்தோம், ’மெங்கோ’ என்றான். ‘சாண்டல் ஊட்’ என்கிறான் நாம் கொடுத்த சந்தனத்தின் மணம் நுகர்ந்து.
அரிசியை ‘ரைஸ்’, இஞ்சியை ‘ஜிஞ்சர்’, அணைக்கட்டை ‘அணைகட்’ என்று ஆங்கிலமாக்கியவன் வெள்ளையன். தனித்தினிக்கும் தாய்ப்பாலில் சர்க்கரையும் நீரும் தேவையில்லை என்பதுபோல தனித்தியங்கும் வல்லமை தமிழுக்குண்டு.
தமிழ் தன்காலில் தான்நிற்கும் பிறரைத் தாங்கும். அணித்தமிழில் பிறமொழியைக் கலந்துவிட்டால் அழகாக வளருமென்போர் அறிவிலிகள். தனித்திருகும் அரிசியிலே கல்கலந்தால் தின்பவரின் பல்லுடையுமே தவிர சுவைத்திடாது.
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்தென எத்தனையோ சொற்கள் அடக்கமாகி பொருள் கொண்டிருக்கும். மூன்று இலக்கத்திற்குமேல் சொற்களிருக்க தமிழ் பிறமொழிகளிடம் கடன் வாங்கத் தேவையில்லை.
நீர் மிதக்கும் கப்பலுக்கு நங்கூரம்போல் மரங்களுக்கு வேரிருந்து காப்பதுபோல் மக்கள் வாழ்வில் வேர்ப்பிடிப்பாய் இருப்பததன் மொழியே. இட்லர் போர்வெறியன் தானெனினும் அவனுங்கூட ஒன்றைச் சொன்னானே ‘ஓரினத்தைச் சீரழிக்க வேண்டுமென்றால் மொழியைச் சிதைத்துவிடு; இனம் தானாக அழிந்தேபோகுமென்றானே’.
விரல்களெல்லாம் பறித்தாலும் உடலிருக்கும்; விலா எலும்பை முறித்தாலும் உயிரிருக்கும் ஆனால் குரல்வளையை நெறித்தபின்னே உயிரா மிஞ்சும் அதுபோல குலமொழியை அழித்துவிட்டால் இனமேயில்லை
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
மொழியென்றால் மனிதனுக்கு உயிரின்மூச்சு; மூச்சுதனை இயக்குகின்ற உயிர்ப்புக்காற்று. மொழிதான் குமுகாயத்தை முறியாமல் காக்கும் அச்சாணி. பேசும் மொழியொன்றே இலக்கியங்கள் பிறப்பதற்கு மூலமாகும்; வம்சப் பூ மலர்வதற்கே அதுவே இரத்தநாளம்.
மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பவனே முழுமனிதன். செழிப்புற்று வளர்ந்துயர்ந்து ஓங்கிநிற்கும் ஜாப்பனியர் பிரான்சு நாட்டார் கொண்டிருக்கும் மொழியுணர்ச்சி நாம் பெற்றாலே விடிவுண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் நம் இனத்தின் நல்ல மறுமலர்ச்சிக்கும் புதுவெள்ளம்போல் வேகமாக அறிவெழுச்சிப் பெறுவதற்கும் மொழியே வேண்டும்.
தமிழின் வளமறிந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தேவையறிந்து அறிவியல் தொழில்நுட்ப சொற்களைப் பெருக்கி கணினி போன்ற நவின கருவிகளிலும் தமிழை உலாவரச் செய்வது தமிழனின் கடமையாகும்.
தமிழைக் குறைகூறி வாளாவிருப்பதைவிட்டு இனியாகிலும் தமிழன் தமிழின் நிலையுயர்த்த நினைப்பானா?

சனி, 16 மே, 2009

காதல் செய்வீர் உலகத்தீரே

“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”

பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி

‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.

காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.

காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.

எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.