திங்கள், 16 மார்ச், 2009

தித்திக்கும் தொல்காப்பியம்

தொல்காப்பியம்

‘தமிழ் முதனூல்’ என்று போற்றப்படும் தொல்காப்பியம் பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையும் முதன்மையையும் பெற்றதாகும்.

ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இன்று நேற்று தோன்றிய நூலல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததென்று மொழியியலர் சான்று பகர்கின்றனர். என்ன வியப்பு ஏற்படுகிறதா?. மூவாயிரம் அகவையுடைய தொல்காப்பியமே மிகச் செறிவாக இருப்பதனால் நமது தமிழ் அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண இலக்கிய வளமிகுந்த மொழியாய்ச் சிறப்புற்றிருத்தல் வேண்டும் என்பர் நற்றமிழறிஞர்.

தொல்காப்பியரை நினைத்தால் மிகப் பெருமையாக உள்ளது. அவர் தம்மினும் முன்னோரை உயர்மொழிப் புலவர், யாப்பறி புலவர், நுணங்குமொழிப் புலவர், நூனவில் புலவர், சொல்லியற் புலவர், தொன்னெறிப் புலவர் என உவகைப் பொங்க நன்றி பாராட்டுதல் போற்றத்தக்கது.

“இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இஃது இலக்கண நூல்தான் என்றாலும், ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.” டாக்டர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் தமிழ் மொழியின் இயல்பை உள்ளவாறு ஆராய்ந்து விளக்குவது; பேச்சு வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டிலங்குவது. அதற்குச் சான்றாக விளங்குவது கீழ்க்கண்ட சிறப்புப்பயிரம் வரிகள் உணர்த்துகின்றன.

“தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி “

தொல்காப்பியத்தை நாம் மொழி விளக்கவியல் நூலாகவே கொள்ளலாம். தொல்காப்பியம், தொல்காப்பியர் காலத்து மொழி நிலையையும் அதன் முந்திய நிலையையும் ஓரளவு உணர்த்துகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி நூலின் விதிகளை ஒட்டியே பெரிதும் இலங்குவதால் அதனைக்கொண்டு மொழியின் பொதுவியலையும் ஓரளவு அறியவியலுகிறது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாயினும், இன்றும் தொல்காப்பியத்தின் ஆட்சி தமிழ்மொழியில் பெரும் பகுதி நிலைத்து நிற்கிறது. தொல்காப்பியர் ஆழ்ந்து சிந்தித்துத் தமிழின் அடிப்படையான இலக்கணக் கூறுகளையெல்லாம், முன்னோர் வழிநின்று, தொகுத்துத் தந்திருப்பதால் தமிழுக்கு நிலைபேறான காப்பு நூலாக விளங்கி வந்திருக்கின்றது.

எத்தனையோ இலக்கிய இலக்கண நூல்கள் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்திருந்தாலும் இந்நூல் சிதைவு பெறாமல் வழிவழியாகப் போற்றிக் காக்கப்பட்டு இன்று நம் கைக்கு முழுமையாக கிடைத்திருப்பதே இதற்கு பெரும் சான்றாகும் என்கிறார் தமிழண்ணல்.

தமிழரின் பழைய வாழ்க்கை மரபுகள், நூல்மரபுகள் யாவற்றையும் பிற்பட்ட காலத்தவர்க்குக் கொண்டு சேர்த்த பெருமை இந்நூலுக்கே உண்டு. தொல்காப்பியம், இவ்வகையில் தமிழ் இலக்கியம் இலக்கணம் தமிழர் வாழ்க்கைப் பண்பாடுகள் யாவற்றிலும் கொண்டு செலுத்திய செல்வாக்கு வேறு உலகநூல் எதனினும் காணப்படாத ஒன்றாகும்.

தொல்கப்பியர் காலத்தில் ‘நூல்’ என்றால் . அஃது இலக்கண நூல் ஒன்றையே குறிக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் பிரிவுகளை உடையது.

எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துகளின் உச்சரிப்பு நிலை, சொற்களில் எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியன கூறப்படுகின்றன.

சொல் பற்றிய பெரும் பிரிவில் சொற்கள் தொடர்ந்து தொடர்களாக அமையும் முறை, தமிழுக்குச் சிறப்பாக அமையும் அல்வழி வேற்றுமைத் தொடரிலக்கணம், தனிச்சொற்களின் இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன.

பொருள் இலக்கணம் இலக்கிய ஆக்கம் பற்றியது. மக்கள் வாழ்வு எங்ஙனம் இலக்கியமாகப் படைக்கப்படுகிறது என்பதே இதில் விளக்கப்படுகிறது. இது தமிழில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடைய பகுதியாகும். இப்போது நன்கு புரிந்திருக்குமே நமது தொல்காப்பியத்தின் சிறப்பு எத்துணை பெரிதென்று.

தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தமிழில் பலப்பல இலக்கண நூல்கள் தோன்றின. தமிழ் இலக்கண வரலாறு ஒன்று விரிவாக எழுதக்கூடிய வகையில் தமிழில் இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றின.

முதலாவதாக ஐந்திலக்கண நூல்களைக் குறிப்பிடலாம். அவை முறையே வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம். இவற்றுள் ஒரு சில வடநூல் மரபிற்கு ஆட்பட்டு இலக்கணங் கூறினாலும் தொல்காப்பிய மரபே நிலைபெறுவதாயிற்று.

யாப்பிலக்கணம் சார்ந்து தோன்றியவற்றில் குறிப்பிடத்தக்கவை யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் ஆகும். அவிநயம், காக்கைபாடினியம் என முற்பட்டனவாயும்; யாப்பிலக்கணம், சிதம்பர செய்யுட்கோவை, மாறன் பாப்பானினம், பல்சந்தப் பரிமளம், திருவலங்கல் திரட்டு, விருத்தப்பாவியல் எனப் பிற்காலத்தும் தோன்றிய யாப்பிலக்கண நூல்கள் மிகப்பலவாகும்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம், அணி இலக்கணம் போலும் தமிழ் அலங்கார நூல்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுதி எனினும் கூர்ந்து நோக்குவார்க்கு அவற்றிலுள்ள தமிழ் அடிப்படைகளும் தெள்ளிதின் விளங்கும்.

நேமிநாதமும் நன்னூலும் எழுத்து, சொல் பற்றித் தனியே இலக்கணங்கூறுவன. இலக்கணக்கொத்து சொல்லிலக்கணம் பற்றியது. இறையனார் களவியல், நம்பியகப் பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, மாறனகப் பொருள் என்பன அகம் பற்றியும் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை என்பன புறப்பொருள் பற்றியும் தோன்றியனவாகும்.

நன்னூல் தொல்காப்பியத்தின் வழிநூலாகும். இதனைப் பழையனவற்றை ஓரளவு கழித்துப் புதிய வழக்குகளைப் புகுத்தித் தன் காலத்து நிலையை விளக்கும் மொழிவிளக்க நூல் எனலாம். நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிலங்குகின்றது.

நன்னூல் எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் என்று இரண்டு அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஐந்து இயல்கள் உள்ளன. இதனை இயற்றிய பவணந்தி முனிவர் வடமொழியினையொட்டி பதவியல் என ஓர் இயலைப் புகுத்தியுள்ளார். நன்னூல், பிற்காலத்துக் கருத்துகளை ஏற்றுப் புதுவிதிகள் சொல்லுவதைப் பலவிடங்களில் காணலாம்.

தற்போது மேலைநாட்டார் கண்ட மொழியியலை நம் முன்னோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சிறந்த முடிவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இலக்கண நூல்கள் செவ்விய சான்றுகளாகின்றன.

தொல்காப்பியத்திற்கு ஈடு சொல்லக்கூடிய அளவிற்கு வேறு சிறந்த மொழியியல் விளக்க நூல் இன்றளவும் பிற மொழியிலில்லை என்று துணிந்து கூறலாம். இன்று பல்கிப் பெருகிவரும் மேலைநாட்டாரின் புதுக்கருத்துகளோடு தொல்காப்பியம் பெரிதும் ஒத்து இயங்குகிறது; தமிழின் இயலை நன்கு விளக்குகிறது.


தமிழ்மொழியின் தோற்றம் மிகத் தொன்மையானது. கடற்கோளால் முதற்சங்கம் தோன்றிய குமரிக் கண்டமும், இடைச்சங்கம் தோன்றிய கபாடபுரமும், கடைச்சங்கம் தோன்றிய மதுரையும் அழிந்தன என சான்றுகளைக் கண்டோம்.

என்றுமுள தென்தமிழாய் பல்லோரலும் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது நம் தமிழ்மொழி. தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது நிலைபெற்று இருக்கிறது. இனி வரும் எத்துணைக் காலமும் தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ்மொழிக்கு அடிப்படையாகவே விளங்கும்.

செவ்வாய், 3 மார்ச், 2009

தமிழ்மொழியின் சிறப்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

தமிழ்மொழியின் தொன்மை

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூல்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பி ளாம் எங்கள் தாய்
- மகாகவி பாரதியார்

தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர்.

அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.

கால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே!.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடினும் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

“தமிழ்” என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். “தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.

செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் ...................

மொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன.
- ஹீராஸ் பாதிரியார்

சுமேரியர் – ரோமானியர் – கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் – ஹிப்ரு – கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.

மனித இனம் வாழவும் – வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.

குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.
- அறிஞர் ஹெக்கல்

உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.
-போப்பையர்

தமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.

குமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். ‘கடுங்கோன்’ என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.

இடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.

சிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே! மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.

தமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
-பாவேந்தர் பாரதிதாசன்

திங்கள், 23 பிப்ரவரி, 2009

மரண தேவதையே!

மரணமே! உன்னை நான் நேசிக்கின்றேன்
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம்
மலரின் முடிவில் காயின் பிறப்பு
காயின் இறப்பில் கனியின் சிரிப்பு
ஒன்று உரமாகி இன்னொன்று உருவாகும்
சருகுகள் உதிராவிட்டால் புதிய தளிர்களுக்குப் பிறப்பேது?
கரையே இல்லாத கடல் எங்கேயாவது நீங்கள் கண்டதுண்டா?
முடிவே இல்லாத நதி பூமியில் நடை பயின்றதுண்டா?
ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது
ஆதலால் மரணமே உன்னை நேசிக்கின்றேன்
மரணம் என் நேசத்திற்குரிய நெருங்கிய நண்பன்
அதன் வலிமை என்றும் என் ஆராதனைக்குரியது
ஞானம் போதிப்பதில் எந்த ஆசானும் மரணத்திற்கு ஈடில்லை
பலர் ‘மனிதர்களாக’ வாழ்வதே மரண தரிசனத்தில்தான்
மரணம் இன மத நிற வேற்றுமையின்றி நம்மை அரவணைக்கும் தலைவன்
‘காலா என் காலருகே வாடா, உனை சிறு புல்லென மதிக்கின்றேன்
உனை என் காலாலே மிதிக்கின்றேன்’ என்று பாரதிபோல் சவால்விடவும் தெரியாது
‘சாவே உனக்கொரு நாள் சாவுவந்து சேராதோ -
தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ’
என்று கவியரசு கண்ணதாசன்போல் புலம்பவும் தெரியாது
மரணம் எனைத் தேடிவரும்போது
அதை ஒரு தேவதையைப் போல் வாழ்த்தி வரவேற்பேன்
தெய்விக அமைதியுடன் அதன் தாய்மடியில் கண் துயில்வேன்
ஏனென்றால் மரணமே வாழ்வைப்போல் உன்னை நேசிக்கின்றேன்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நெஞ்ச வயலில் நம்பிக்கை விதைப்போம்.

என் அன்பு சோதரனே,
வாழ்வின் வசந்தத்தை எல்லாம் நாடு வளர பிறர் வாழ வாரி இரைத்து நலிந்துவிட்ட தோழனே, உன்னோடு என் உள்ளப்பூர்வமான வார்த்தை பரிமாறல்கள். அன்று உடல் உயிர் பொருளென உன் வாழ்வையே அர்ப்பணித்தாய். இன்று குழிவிழுந்த கண்களோடும் உடைந்த மார்போடும் கூன் விழுந்த முதுகொடும் சரிந்த தோளோடும் உரமற்ற நெஞ்சோடும் நீ உலாவருவதை பார்க்கும்போது என் இதயத்துள் இரத்தம் கசிகிறது.

என் இனிய நண்பனே,
அனைத்தும் உன்னைவிட்டு சென்றுவிட்டாலும் நீ இழக்காதா நம்பிக்கை வைரமாய் ஒளிருகிறது. இந்த உலகத்தில் நீ தொடர்ந்து போராடி வாழ்வதற்கு உனக்குத் தேவைப்படும் மூலதனமே நம்பிக்கைதான். மறந்திடாதே, ‘வெறுங்கை என்பது மூடத்தனம் உன் பத்து விரல்களும் மூலதனம்’. மீண்டுமொரு உதயம் உன்னால் உருவாகட்டும்.

என் அருமைத் தோழனே,
இரவுகள் என்பவை நிரந்தரமானவை அல்ல; ஒவ்வொரு பொழுதும் புலரவே செய்கிறது என்பது இயற்கையின் நியதி. இருளின் திரையைக் கிழித்தெரியும் கதிரவனைப்போல் உன் மன ஆழத்திலே ஊற்றெடுக்கின்ற நம்பிக்கை துளிகள்தாம் உனக்கொரு திருநாளைக் கொண்டுவரப் போகிறது. கோடையின் வெப்பம் குளிரில் மறைவதுபோல் நீ வறுமையின் கோரப்பிடியில் விடுகின்ற ஏக்கப் பெருமூச்செல்லாம் நம்பிக்கை நீரூற்றால்தான் தணியப்போகிறது.

என் நேசத்திற்குரியவனே,
மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான் என்ற கருத்தை உன் இதயத்தில் ஆழமாக செதுக்கி வைத்துக்கொள். நம்பிக்கை ஆணிவேர்கள் ஆழ வேரூன்றிய உன் மனத்தில் சூறையென துன்பம் சூழ்ந்தடித்தாலும் புயலெனப் படை பாய்ந்தெதிர்த்தாலும் அதையெல்லாம் இடுப்பொடித்து தவிடுபொடியாக்கும் பட்டை வைரமாய் ஒளிவீசுகிறது.

என் நெஞ்சிற்கு நெருக்கமானவனே,
“சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்” என்ற பாரதியின் வாய்மையைப்போல் நம்மை ஆயிரம் சோதனை ஆர்த்து வந்தாலும் அவற்றை அழித்து ஆக்கும் சக்தியாக வெற்றிக் கொள்ளச் செய்ய திருமுருகன் நமக்கு அளித்துள்ள வேலாயுதம் நம்பிக்கைதான். இராமன் தம்மை இராவணனிடமிருந்து விடுவித்து வாழ்விப்பான் என்ற அசோகவன சீதையின் நம்பிக்கை; தம் கணவன் கள்வனல்ல என்று பாண்டிய மன்னனிடம் நீதியுரைத்த கற்புக்கரசி கண்ணகியின் வாய்மையான நம்பிக்கை; துச்சாதனன் பலரறிய அவைக்களத்தில் துகிலுரித்தபோது தம்மையே கண்ணனிடம் தந்துவிட்டு சரண்புகுந்த தெளரபதியின் நம்பிக்கை இதிகாசங்களையும் காப்பியங்களையும் மட்டும் வாழவைக்கவில்லை மானுடத்தையும் தாங்கிப் பிடித்து உயர்த்தியிருக்கின்றன.

என் அன்பு சிநேகிதனே,
ஆற்றங்கரையோரம் ஓடுமீனோட உறுமீன் வருமளவு மெளனத்தவமிருக்கிற கொக்கின் நம்பிக்கையை நீ கூர்ந்து கவனித்ததுண்டா? கொக்கை விடவா நீ நம்பிக்கையில் தாழ்ந்தவன்?. சின்னஞ்சிறிய மீன்கள் தன் கால்களினூடே துணிச்சலோடு அனுமதிக்கும் கொக்கு, பெரிதான மீன் வருவதென்னவோ உறுதி என்றுதானே அத்துணை நம்பிக்கையோடு பொறுமை காத்து நிற்கிறது. எனக்குத் தெரியும் நீ கடுமையாய் உழைத்து களைத்திருக்கிறாய். நீண்ட வழிநடந்த களைப்பால் ஓரடி எடுத்து வைக்க தெம்பில்லாமல் மனம் தடுமாடுகிறாய். சற்றே அமர்ந்து நீ நடந்து வந்த பல்லாயிரம் பாதத் தடங்களை மெல்ல திரும்பிப்பார். நீ முதலில் எடுத்து வைத்த நம்பிக்கையே இதுவரை உன்னை சுமந்து வந்திருக்கிறது இனியும் உன்னை வானம் தொடும் தூரம்வரை இட்டுச் செல்லும்.

என் நம்பிக்கைச் சுடரே,
“நம்பிக்கைகளே வானத்தின் நட்சத்திரங்கள்; வாழ்க்கையின் எல்லைக் கற்கள்; சகாரா பாலைவனத்தில் நீ நடைபயின்றாலும் நம்பிக்கைகளே உன் தாகம் தீர்க்கப்போகும் தண்ணீர்ப் பந்தல்கள்; நம்பிக்கை என்றும் மகத்தானது; உலகை என்றும் செழிப்பில் வாழ வைப்பது” என்றோ நான் படித்த இந்தப் பேருண்மை வரிகளுக்குச் சொந்தக்காரனை நேசமுடன் `இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்’ என்ற தமிழ் நம்பிக்கையின் சிகரம் திருவள்ளுவரின் திருப்பாதங்களுக்கு பூத்தூவ காத்து நிற்கிறேன்.

என் இதய நாயகனே,
நம்பிக்கைத் துளிர்கள் காணாத விதைகள் பசுஞ்சோலையிலும் உயிர்ப்பதே இல்லை. நம்பிக்கை வெள்ளம் பாயாத மணற்பரப்பில் பசுமை பூப்பதே இல்லை. `நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறில்லை’ என்று வறட்டு வேதாந்திகள் தம்மீது நம்பிக்கை கொள்ளாமல் நாளும் பொழுதும் தங்கள் இயலாமையை புலம்பிக் கொண்டு திரிவதை எண்ணி வெட்கப்படு தோழா. அவர்கள் மீது அறிவுவாள் வீசுவோம்.

என், உதய நிலவே,
‘நாளை இறக்கப்போவதற்காக இன்றே கண்ணீர் சிந்தும் அறிவிலிகள் கவலைப்படுவதாலும் துயரப்படுவதாலும் உங்கள் உயரத்திற்கு மேலே ஒரு முழம் கூட்ட உங்களுக்குள் எவரால் இயலும்’ என்று இயேசுநாதர் கேட்பதை சிந்தித்துப்பார். ‘காலா எந்தன் காலருகே வாடா - சற்றே உன்னை மிதிக்கின்றேன்’ என்ற பாரதியின் கண்ணொளியில் பிரகாசிக்கும் நம்பிக்கையை உன்னிப்பார். அடிவானம் எட்டாக் கனியாய் இருக்கலாம் அருகே செல்லச் செல்ல தொலைதூரம் போகலாம் ஆனாலும் தொடவேண்டுமென்ற நம்பிக்கைதான் வாழ்வை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

என் இளஞ் சூரியனே
நம்பிக்கைதான் இந்தப் பூமியை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பு. நம்பிக்கை இருக்கிறவரை பூமி செழிப்பில் சொர்க்கமாய் சிரிக்கும்; நம்பிக்கை அற்றுப் போனால் இருண்ட நரகமாய் விளங்கும். நம்பிக்கை நெஞ்சுரங் கொண்டவனே,` பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகள் திறந்தன, சிறுத்தையே வெளியே வா’ என்று பாரதிதாசன் உன்னை அழைப்பது செவிகளில் விழவில்லையா?. இன்னுமென்ன தயக்கம்?. உலகம் உன் பொன்வரவுக்காக காத்து நிற்கிறது. நம்பிக்கையோடு புறப்படு தோழா, காலம் உனக்கொரு காவியம் பாடும்.

(பெரும்பாலான நம்மின இளைஞர்களைப் பார்த்து கவிஞர் வைரமுத்து முப்பது வயதுக்குள்ளே முதுமை வந்து தளர்ந்துவிட்டனாக இருக்கின்றான் என்று கவிதைச் கணையால் உணர்த்தியுள்ளார். அந்தக் கருத்திற்கும் எனது நோக்கிற்கும் உடன்பாடு உண்டு. இன்றைய இளைஞர்களின் தோற்றமும் வாழ்க்கையில் ஒரு தேடுதலும் இலக்குமின்றி உடலையும் உயிரையும் பேணாமல் மனமும் ஆன்மாவும் மலராமல் சிந்தனைக் குறுகி நம்பிக்கை வற்றி நடைப் பிணமாகத் தேங்கியக் குட்டையாய் வாழ்ந்து விதிவந்து சாவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஒவ்வொரு இளைஞனையும் மாசக்தியாக உருவாக்கும் தார்மிகப் பொறுப்பும் சமூகக் கடப்பாடும் அனைவருக்குமுண்டு. இராமாயணத்தில் தன்னுடைய ஆற்றல் புரியாததால் கடலைக் கடந்து இலங்கைக்கு செல்ல முடியாமல் வாயு புத்திரனான அனுமான் மனம்வாடி நின்றபோது ‘சாம்பன்’ என்ற வானரம் அனுமனின் ஆற்றலை அறிந்து வீரதீர வார்த்தைகள் வலிமையோடு உச்சரிக்க அனுமன் தன்னையுணர்ந்து மெல்ல பேருருவம் எடுத்து இலங்கைக்குப் பறந்து செல்வதாகக் காட்சியுண்டு. இங்கே எனக்கு அந்தச் ‘சாம்பன்’ போன்று நம்மின இளைஞர்களுக்குப் பெரியோர்கள் நம்பிக்கை நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தால் விரைவிலேயே நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். ஒரு இளைஞன் சொன்னது `we are not useless but we are used less’. என் பங்குக்கு இன்றைய சோர்ந்த இளைஞனை தட்டிக் கொடுக்கும் நோக்கிலே இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன்)

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

கவியரசரின் கூர்த்த மதி

இலக்கியக் கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து
" கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை" என்றுகேட்டாராம்.
உடனே கண்ணதாசன்," கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான்! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .

தமிழை சுவாசி....

திருக்குறளைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்பார் மாணிக்கவாசகர். நம் குழந்தைகளைத் திருக்குறளை ஒப்பிக்கும்படி பழக்குகிறோம். அது நல்ல பழக்கம். ஆனால் பெரியவர்கள் குறளின் பொருளைப் பலமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், திரும்பத் திரும்ப நினைத்தல், திரும்பத் திரும்பச் செயல்படுத்த முயலுதல் .. இவையே உருவேற்றுதல் ஆகும். இதைச் ‘ஜெபம்’ என்றும் ‘பாராயணம்’ என்றும் வடமொழியில் கூறுவர். தமிழில் ‘உரு’வேற்றுதல் என்பது மிக அழகான, பொருள் பொதிந்த சொல். ‘உரு’வாகிறது அது; பலமுறை .. நூற்றி எட்டு முறை .. ஆயிரத்து எட்டு முறை சொல்லுங்கள். எழுதுங்கள்.

நீங்கள் நினைப்பது முதலில் மனத்தில் ‘உரு’வாகும் பிறகு வாழ்க்கையில் உருவாகும். அதனால் நினைத்ததை அடைவீர்கள். இவ்வாறு செய்தால் நாம் திருவாசகம், தேவாரம், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்றவை தொடங்கி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரை நாமே மனப்பாடம் செய்கிற பழக்கம் வரும்.

இது நம்மைப் பார்த்து நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே மிகமிகக் கூடுதலான பக்திப் பாடல்களைக் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும். அதைப் பாடிப் பரவி உலகெலாம் ஒலிக்கச் செய்வது நம் கடமையாகும்.”