செவ்வாய், 7 ஏப்ரல், 2009

குடும்பம் ஒரு கோயில்

உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.

அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.

நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.

’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.

இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.

குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.

‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.

அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.

குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.

‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.

கருத்துகள் இல்லை: