செவ்வாய், 15 நவம்பர், 2016

வாழிநலம் சூழ வாழ்த்துகிறேன்….
முத்தமிழ் வணக்கம். அன்பிற்கினிய நண்பர் திரு. இராஜேந்திரனுக்கும் எனக்குமான நட்பு 35 ஆண்டுகளுக்கு மேலான காலத்தை உள்ளடக்கியது. இவ்வினிய நண்பரைப்  பற்றி சில நினைவுகளை  இப்பிரியாவிடை மலரில் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். கருத்த உருவமென்றாலும் காந்தம்போல் காண்போரைக் கவர்ந்திழுக்கும் சிரித்த முகம்; அமைதி தவழும் முகத்தில் கருணை பொங்கும் கனிந்த கண்கள்; சுருள்சுருளாய் அடர்ந்து கீரிடம் சூட்டிய தலைமயிர்; நடுத்தர உயரத்தில் நிதானமான நேர்கொண்ட நன்னடை; பேச்சில் அன்பும் பண்பும் குழைந்து வெளிவரும் வார்த்தைகள்; இவைதாம் முதற் பார்வையில் என்னுள் கருக்கொண்ட  இவ்வினிய நண்பரின் தோற்றம். இவர் ஸ்ரீகோத்தா கல்லூரியில் பயிற்சி ஆசிரியராகக் காலூன்றிய காலந்தொட்டே என் நெஞ்சத்தில் தமது கனிந்த அன்பால் கோலோச்சினார்.
           கல்லூரியில் நான் அதிகம் பேசாத சுபாவம் கொண்டிருந்த காலத்திலும் என்னை நாடி ஒருசில வார்த்தைகளை கனிவோடும் நட்போடும் உதிர்த்துவிட்டுச் செல்வார். அவரின் இந்த அக்கறையே பின்னாளில் எங்கள் நட்பு தொடர்வதற்கும் வளர்வதற்கும் அடித்தளமாக அமைந்தது. கல்லூரி பயிற்சிக் காலத்தின்போது அவர் தமிழ்ப்பிரிவுக்கு மாணவத் தலைவராகப் பொறுப்பேற்று ஆக்ககரமான பல அரும்பணிகளை செய்திருப்பதை அருகிலிருந்து கண்டு வியந்திருக்கின்றேன். புயலே அடித்தாலும் தலைவனுக்குரிய நிதானம், தெளிவு, தூரநோக்கு, சமன்பாடு, பொறுமை, நடுவுநிலைமை என அத்தனை உயர்குணங்களும் கொண்டு வெல்லும் திறமுள்ளவர். எவ்வித சிக்கல் தம்முன் எதிர்பட்டாலும் கொஞ்சமும் கலங்காமல் அமைதி காத்து மிகவும் பொறுப்போடும் மாறாத புன்னகையோடும் அன்றே அவர் சாதூர்யமாக செயல்பட்டதை அறிந்து நிச்சயம் ஒருநாள் நம் இந்தியச் சமுதாயத்தின் மிகச் சிறந்த தலைவராக வருவார் என நினைத்திருக்கின்றேன். மேலும் கல்லூரி காலங்களில் அவர் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டியதோடு டத்தோ ஸ்ரீ சா.சாமிவேலு அவர்களோடு நெருங்கி பழகியவர் என்பதால் அப்போதைய சூழலில் இச்சிந்தனையே என்னுள் வலுப்பெற்றது.
கல்லூரியில் வளர்ந்த எங்கள் நட்பு பின்னாளில் நான் விரிவுரைஞராகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகளில் விருட்சமாக வளர்ந்து வலுப்பெற்றது எனலாம். இந்த வாழ்க்கையில் என் இதயமும் அறிவும் தொட்ட மிக நெருங்கிய பொருள் பொதிந்த நட்பாளர்களுள் நண்பர் திரு. இராஜேந்திரனும் உள்ளடக்கம் என்பதை இம்மலரில் பணிவுடன் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை தலைமைத்துவத்திற்குரிய அத்தனை உயர்ப்பண்புகளையும் கொண்டு தமிழ்த்துறைக்குத் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தியத்தோடு தாம் பெற்ற அனுபவத்தையும் சிந்தனையையும் தம்மோடு பணியாற்றும் நண்பர்களோடு கிஞ்சிற்றும் சிதறாமல் பகிர்ந்து கொள்வதோடு தன்னம்பிக்கையை ஊக்குவதில் ன்னிகரற்றவராகவும் திகழ்கிறார். நல்லாசிரியப் பெருந்தகைக்கேயுரிய மலர்ச்சியான தோற்றப் பொலிவு, அன்பான புன்னகை, கனிவான பேச்சு, தெளிந்த சிந்தனை, முன்மாதிரி வழிகாட்டல், உறுதியான நிலைப்பாடு என அனைத்தும் ஒருங்கே ஒளிரும் இனிய மனிதரான இவரை நண்பராகப் பெற்றதில் இயற்கைக்கு நான் என்றென்றும் நன்றி சொல்கின்றேன்.
உள்ளத்தால் உயர்ந்த ந்த மகத்தான நண்பர் எதிர்வரும் 3.1.2017 இல் விருப்பப் பணி ஓய்வு பெற்றாலும் என்றும் ல்லோர் இதயங்களிலும் அன்புமணம் வீசிக்கொண்டிருப்பார். பள்ளி தொடங்கி கல்லூரிவரை என்றும் புன்னகை குறையாமல் பொறுமையோடும் இலகுவாகவும் இதமாகவும் கற்பிக்கும் இவரின் பாங்கு எந்த மாணாக்கரையும் எளிதில் ஈர்த்துவிடும். ரின் அறிவும் அனுபவமும்  இன்று நாட்டில் பல நல்லாசிரியர் உருவாவதற்குப் பெருந்துணையாய் அமைந்துள்ளதை மறுப்பாரில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் தமது  கற்றல் கற்பித்தல்  அறிவாலும் அனுபவத்தாலும் ஆழ வேரூன்றிய இவரின் அளப்பரிய சேவை கால பேரேட்டில் பொன்னெழுத்துகளால் நிச்சயம் பொறிக்கப்படும்.
நான் சந்திக்கத் தொடங்கிய நாள் முதல் எனக்கு நேசமிக்க நண்பனாக, பாசமிக்க சகோதரனாக, பொறுப்புமிக்க வழிகாட்டியாக, சிறந்ததொரு தலைவராக, நல்லதொரு மனிதராக, எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான நட்புக்கு இலக்கணமாக இன்றுவரை இவர் திகழ்ந்து வருகின்றார். பழகியவரை என்றுமே மறக்காமல் நட்புக்கு முன்னுரிமை தந்து போற்றும் உயர்ந்த இதயம் திரு.இராஜேந்திரனுக்கு மட்டுமே உரியது. தம்மோடு பழகியவரின் இயல்புக்கேற்ப நட்புறவுடனும் அன்புடனும் இனிமையாகப் பழகி அவரவர் மனத்தையும் தேவையையும் குறிப்பால் உணர்ந்து செயல்படும் வரின் வல்லமை வேறு யாருக்கும் எளிதில் வாய்க்காத வரம்.
இந்நாட்டில் தமிழ் கல்வி உயர அரும்பணியாற்றிய அன்பு நண்பர் திரு.இராஜேந்திரனை வெறும் ‘வாழ்க என்ற ஒற்றை வார்த்தையால் வாழ்த்தி பணி ஓய்வுபெற வழி அனுப்பிவிட முடியாது?. இந்த இனிய நண்பர்க்கும் குடும்பத்தார்க்கும் இறைவன் என்றென்றும் வற்றாத உடவுள நலத்தையும் வளத்தையும் அருளையும் வழங்க வேண்டுமென இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன அவரின் அன்புக்கு ஈடாக என்னால் செய்ய இயலும்?. பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு நீடூழி வாழ்கவென்று என் இதயத் தோட்டத்து அன்பு மலர்கள் தூவி வாழ்த்துகிறேன் ‘நண்பா...வாழி நலம் சூழ்க
என்றென்றும் அன்புடன்,
தமிழ்மாறன் பலராம்
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்                                          


கருத்துகள் இல்லை: