செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தாவரங்களோடு ஒரு தவம்

என் மனத்துக்குள்ளே செடி, கொடி, தளிர், மலர் மரமென முழுவதும் விரிந்து கிடக்கிறது ஓர் இரகசிய உலகம். அந்த மனித ஓசைகளற்ற உலகத்தில் மரங்கள் பேசும் மொழியில் ஒரு தெய்விகம் ஒளிருகிறது.

ஒரு விதையானது மண்ணிலிருந்து கிளர்த்தெழுந்து முளைவிட்டு, இலைவிட்டு, கிளைவிட்டு, பூவிட்டு, காய்விட்டு, கனிவிட்டு தன்னையே ஈந்து பட்டுபோகும் ஒவ்வொரு தாவரத்திலும் ஒரு மனிதனை தரிசிக்கின்றேன்.

நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்திற்குப் பிறகும் என்னை உற்சாகமாகவும் உயிர்த் துடிப்பாகவும் வாழ வைத்துக் கொண்டிருப்பது என் தாவர தோழர்களே. கண்ணைமூடி நான் அமரும்போதெல்லாம் என் முன்னே விரிந்தாடும் மறைந்துபோன மரங்கள் சிலநூறு; மனித மூர்க்கத்தால் பலவாறு அழிந்த மரங்கள் பலநூறு.

சின்னஞ் சிறு வயதில் நான் பார்த்த மரங்கள் இன்னும் பசுமையாய் என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறன. அவை எத்தனையோ மனித காயம்பட்டு இன்று காணாமல் போனாலும் என்னுள்ளே நித்தம் நீரூற்றி வளர்க்கப்பட்டே வருகின்றன.

என் பாட்டியும் தாத்தாவும் காட்டிய வேலம், கல்யாண முருங்கை, நொச்சி, எருக்கம், வில்வ, புன்னை, ஆவாரம், ஆலம், அரச, புளிய, வேப்ப மரங்களைக் காண்கையில் இனம்புரியாத நேசம் நெஞ்சில் பூக்கிறது.

எத்தனையோ மரங்கள் இருந்த இடம் இன்று மனை மாடியென உருமாறி போயிருந்தாலும் அங்கே செல்லும்போதெல்லாம் எனக்குள் உறவைப் பிரிந்த சோகம் இதயத்தில் வலிக்கிறது. பெரும்பாலும் அந்த மரங்கள் வாழ்ந்த மண்ணை வாஞ்சையோடு தொடும்போது அதன் இளஞ்சூட்டை உள்ளூர உணர்கின்றேன்.

மண்ணை இதயத்தோடு அணைக்கையில் மறைந்துபோன மரத்தின் வாழ்ந்ததற்கான ஓசை சுவடுகள் மெல்லியதாய்க் கேட்கும். மரத்தின் வேர்பிஞ்சுக்கால்கள் உறைகளாக அணிந்த புதைந்த மண்ணின் வாசம் என்னால் நுகர முடிகிறது.

இன்றும் கூட நான் எந்தெந்த மரம் எங்கெங்கு வாழ்ந்தது இருந்தது என நண்பர்களிடம் கூறும்போது என்னை ஒரு மாதிரியாகவே பார்ப்பார்கள். என் பால்ய பருவத்திலே நான் வாழ்ந்த தோட்டத்து முழுமைக்கும் இருந்த தென்னை மரங்களின் எண்ணிக்கை அறுபத்து ஏழு. ஒவ்வொரு மரமும் நின்ற இடமும் தன்மையும் என்னுள் நிலையாக உள்ளன.

தோட்டத்து எல்லா மனிதர்களின் பெயர்களும் அவர்களின் இயல்புகளும் வாழ்ந்த வீடும் நினைவில் இருப்பதைப் போல எல்லா மரங்களும் அதன் மீதுள்ள அடையாளங்களும் மனிதன் ஏற்படுத்தியக் காயங்களும் நானறிவேன்.

நிழல் மரம் எனும் பொதுப்பெயரில் தோட்டத்து கீழ்ப்புற மையத்தில் ஒன்றும் தோட்டப் பள்ளியின் நடுவிலே ஒன்றும் மேல்புறத்தில் மாட்டுக் கொட்டகையின் ஓரம் ஒன்றும் அழகு சேர்த்தன. தோட்டத்தில் சிறுவர்களின் குண்டு விளையாடுதலின் சீண்டுதலில் சிலிர்த்துப்போகும் வேப்ப மரங்கள். பெரியவர்கள் கால்விரித்து கலந்துரையாட குடைப்பிடித்த கிழக்கு புளியமரம். பருவக் காலங்களில் பழங்களால் பூத்துக் குலுங்கி கற்களால் காயம்பட்டழும் ரம்புத்தான் மரங்கள்.

மாட்டுத் தொழுவத்தின் ஓரங்களில் வெளிறிய தோலோடு நின்ற ஐந்து கொய்யாமரங்கள் எங்களுக்கு ஊட்டச்சத்து தந்த தாய்கள். மலக்கூடங்களின் அருகில் செழித்து நின்ற பப்பாளி மரங்கள் பழங்கள் மட்டும் தந்தன?. எங்களின் சோப்புக் குமிழ்ப் போட்டிகளுக்கு காம்பையும் அல்லவா தாரை வார்த்தன.

தோட்ட கிராணியார் வாழும் மேட்டுப் புறங்களில் பூக்களே இலைகளாய் வீற்றிருக்கும் கொம்புகளடர்ந்த மூன்று மரக்கிளைகளில் சஞ்சாரம் செய்ததை மறக்க முடியாது. பட்டம்விடும் காலங்களில் அந்த மரத்தடிகள்தான் எங்கள் போதி மரங்கள்.

எந்ததெந்த பறவை எந்தெந்த மரத்திற்குச் சொந்தம் என்ற கணக்கெடுப்பும் என்னிடம் உள்ளது. மைனாக்களின் ஆலாபனையில் கிணற்றோரம் கண்துயிலும் ஏழு தென்னைமரங்களும், புறாக்களின் அழகிலே அசைந்தாடும் அகத்தீ மரமும், கடையோரத்தில் நிற்கும் முந்திரி பழத்துக்காக காத்திருக்கும் சிறுவர்களோடு போட்டிபோடும் காகங்களும், மரங்கொத்தி, மீன்கொத்திகளோடு பெயர் தெரியாத எத்தனையோ வண்ணப் பறவைகள் தங்கிச் செல்லும் ஆலயமாக விளங்கும் நெடிதுயர்ந்த டுரியான் பழ மரங்களும் தோட்டத்தையே வனப்போடு வைத்திருந்தன.

ஒதுக்குப்புறமாக நின்ற புளியமரம் பெரியவர்களால் காவல் தெய்வம் குடிகொண்டிருக்கும் இடமென பயமுறுத்தப்பட்டாலும் உச்சி வேளையைத் தவிர பிற பொழுதுகளில் சிறுவர்கள் விளையாட பயந்ததாக ஞாபகமில்லை.

தோட்டத்து மயான எல்லையில் நிற்கும் நடுகாட்டன் மரம் அவ்வளவு பெரியது இல்லையென்றாலும் அதைக் கடந்து போகும்போதெல்லாம் இறந்துபோனவர்கள் வெள்ளுடையிலே தொங்குவது போன்ற அம்புலி மாமா விக்கிரமாதித்தன் பேய்கள்தான் நினைவில் வரும்.

தோட்டத்து காதல் சின்னங்கள் பதிவான சில மரங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. முனியாண்டி கோயில் பக்கத்தில் நின்ற நெல்லி மரத்தில் மேல் கிளையில் ‘கண்ணு-சரோ’ காதலும் குப்பைக் மேட்டருகில் முளைத்த கள்ளி செடியின் மீது பால்வழியும் பல்வித காதல் குறியீடுகளும் காவிய வலிவுடையவை. எத்தனையோ காதல் மொழிகளில் இன்னும் அடையாளம் காணமுடியாமல் நான் இருப்பது ‘மனோ- திமா’ என்ற கல்லறை இலையைத்தான்.

தேன்சிட்டு பறவைகள் வட்டமிடும் சூசைமரங்களின் நிழலில் தங்கிச் செல்லும் ஆசை இன்றும் எனக்குண்டு. டப்பா பழச் செடிகளைக் கேட்காமலே பறித்து தின்னும் ஆசைகளும், குவளை மலர்களின் கொடிகளைத் தழுவும் சுகமும், தொட்டாற் சிணுங்கிகளின் பொய்க் கோபமும், ஒட்டுப் புற்களின் உதிராத நட்பும், கோரைப் புற்களின் சிலிர்த்த அழகும், அந்தி மந்தாரை, பவலவல்லி, மல்லிகை, செம்பருத்தி போன்ற வண்ண வண்ணப் பூச்செடிகளின் அணிவகுப்பும் என்றும் இனிக்கும் வசிகரமுடையன.

வாழை மரக் குறுத்து இலைகளின் இளம்பச்சைகளின் மேல் என்றுமே எனக்கு மயக்கமுண்டு. வாழையிலைகளின் வாசமும் அதன் விரிந்த இலைகளிலே உருண்டோடும் மழைத்துளிகளைக் காண்பதும் தனிசுகம். தோட்டத்து ஒதுக்குப்புறத்தில் வளைந்தோடும் ஆற்றங்கரை மேடுகளில் தோகை விரித்தாடும் மூங்கில் புதர்களில் நெஞ்சம் பறிகொடுத்திருக்கிறேன்.

புலராத காலைப் பொழுதின் பனித்துளிகள் மூங்கிலின் மெல்லிய இலைகளில் ஊஞ்சலாடுவதை கண் மாறாமல் பார்க்க பிடிக்கும். அந்தத் உணர்வுதான் இன்றும்கூட என் வீட்டு சுற்றுப்புறத்தில் மூங்கில் நட்டு வைத்திருக்கிறேன்.

மாலை நேர பறவைகள் கீச்சல்களோடு வந்தமரும் தென்னை இளங்கீற்றுகளை ஏக்கத்தோடு பார்ப்பேன். தென்னை ஓலையை குழந்தையின் அன்போடு அணைப்பது இன்றுவரை தொடர்கிறது. ரப்பர் மரக்காடுகளில் மகிழ்ச்சியோடு பயணம் போவதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

இலையுதிர் காலங்களில் மரக்கிளைகளிலிருந்து உதிரும் இலைகள் பூமியைத் தொடும் வரை அதோடு பறந்தது எத்துணை இன்பம். ரப்பர் இலைகள் துளிர்விடும் காலங்களில் மஞ்சள் நிற செந்தூர மகரந்த துகள்களின் மணம் இன்றும் என்னுள்ளே மணக்கிறது. என் அப்பா இறந்துவிட்ட நிலையில் அவர் வளர்த்த வெற்றிலைக் கொடிகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு புது இலை துளிரிலும் அவரின் முகம் தெரிகிறது. அவரது கைப்பட்டு வளர்ந்த அந்த வெற்றிலை செடிகளைத் தொடும்போது அவரைத் தொடும் சுகம் பிறக்கிறது.

என் வயதோடு வளர்ந்த மரங்களைக் காணும்போது என் வளர்ச்சியைக் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த மரங்களோடு எனது தோழமையும் தொடர்கதையாய் செல்கிறது. இன்றும் என் வீட்டைச் சுற்றிலும் உறவுகளாக விரிந்திருப்பது மரஞ்செடி கொடிகள்தான். ஒவ்வொரு காலையும் அந்தச் செடிகளின் முகங்களில் விழிப்பது இன்பம். என் குழந்தைகளுக்கு சகோதரர்கள் நான் வளர்க்கும் செடிகளே.

என் வீட்டில் வளரும் மரஞ்செடி கொடிகளுக்கு தனிச்சிறப்புண்டு. ஒவ்வொரு செடிகொடிக்கும் என்னோடு தோட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் பெயரை வைத்துள்ளேன். என் குழந்தைகளுக்கு அந்த மனிதர்களின் பெயரையும் அவர்களின் பண்பு இயல்புகளையும் சொல்லியே செடிகொடிகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஒவ்வொரு மாலைப் பொழுதும் நீரூற்றும் வேளையில் அச்செடிகளோடு கந்துரையாடுவதும் அன்பொழுக அணைப்பதும் இனிதே நடக்கிறது.

வீட்டின் முன்னே கிளை பரப்பி நிற்கும் நெல்லி மரத்திற்கு என் பாட்டி ஆதிலெட்சுமியின் பெயரும் மூங்கில் செடிக்கு தாத்தா வேதாசலத்தின் பெயரும் மூக்காயி, பொன்னம்மா, சின்னையா, பலராம் பாரதி, ஒளவை, வள்ளுவன் என என் வீட்டு எல்லாத் தாவரங்களுக்கும் பெயருண்டு. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் அவர்களோடு நானும் குழந்தைகளும் பேசுவோம். நீரூற்றுவது, மண் அணைப்பது, களை நீக்குவது என அந்தத் தாவர மனிதர்களோடு இன்பமாக வாழ்கிறோம்.

நான் பணிசெய்யும் இடத்தும் என்னோடு ஒரு செடியை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். நான் தினமும் அச்செடியோடு பேசுவதும் அன்பு கொள்வதும் எனை மீண்டும் உணர்வால் புதுப்பிக்கின்றது. ஒரு ரகசியம் சொல்லட்டுமா?. என்றோ படித்த ‘போஸ்’ என்பவரின் தாவர ஆராய்ச்சி. நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது உங்களின் வருகையை முதலில் அறிவதும் உணர்வதும் ஆனந்தப்படுவதும் உங்கள் வீட்டு தோட்டத்துத் தாவரங்களே. அவைக்குப் பிறகுதான் நீங்கள் வளர்க்கும் செல்ல நாய், பூனை, மீன் எல்லாம். இறுதியாக உங்களை வரவேற்பதுதான் உறவுகள்.

நினைவில் நிறுத்துங்கள், உங்களுக்கு உடம்பில் காயம் பட்டால் முதலில் உங்களுக்காக கலங்குவதும் வருந்துவதும் துடிப்பதும் தாவரங்களே. உணர்வுப்பூவமாக சொல்கிறேன் தாவரங்களோடு நேரம் ஒதுக்கி உரையாடிப் பாருங்கள், வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் புரிதல்களைச் சொல்லும். மலர்கள் மெல்ல மொட்டவிழும் மெல்லோசை செவிமடல்களில் தேனாக பாயும். மழையில் இலைகள் நனைந்த ஆனந்த சிலிர்ப்பு உங்கள் கண்களுக்குத் தெரியும். என்றேனும் ஒரு நாள் சில மணித்துளிகளாவது ஏதாவதொரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்து வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா?. உங்கள் மீது இலைகளும், கிளைகளும், மலர்களும், காய்களும், கனிகளும் முளைப்பதை கவனித்துப் பாருங்கள். அந்தச் சுகானுபவத்திற்காக இன்னும் பல பிறப்புகள் தாவரங்களாய் பிறக்கலாம்.

நூல்களோடு ஒரு காதல்

எனது இதயம் நூல்களால் பின்னப்பட்டது. எந்த நூலைக் கண்டாலும் தாயினும் சாலப் பரிந்திடும் அன்போடு அதன் பின்னே ஓடுகிறது என்னிளமனது. நெடுங்கால வறட்சிக்குப்பின் மழை பெய்தபோது கிளர்ந்தெழும் மண்ணின் வாசத்தைப்போல இலக்கிய நூலின் வாசம் எங்கிருந்தாலும் என்னால் நுகர முடிகிறது.

பள்ளிப் பருவத்திலே நூல்களின் மேல் தீராத என் காதலுக்கு காரணமானவர்கள் நால்வர். நான் வாழ்ந்த விக்டோரியா தோட்டத்து சூழலும் அதன் அழகும் என்னுள் இயற்கையாகவே எனக்குள் ஒரு சொல்ல முடியா வாசிக்கும் பரவசத்தைத் தந்தது. தோட்டத்து மக்களும் மண்வாசனையும் என்னுள் இகசிய வாசிப்பை ஏற்படுத்தினர்.

என் தாத்தா வேதாசலத்தின் தூண்டுதலும் அவரின் கதை சொல்லும் பாங்கும் என்னுள் கற்பனை வளத்தையும் கதைகளின் மீதான ஆவலையும் அகலப்படுத்தியது. தோட்டத்து மக்களிடையே பால்வெட்டுத் தொழிலாளியானாலும் பரந்துபட்ட தமிழ் வாசிப்பைக் கொண்டவரான திரு.இராமரெட்டியைக் காணும்போதெல்லாம் எனக்குள் வாசிக்கும் ஆர்வம் ஊற்றெடுக்கும்.

அவர் பெரும்பாலும் வாசித்த நாவல்களிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டும்போதெல்லாம் அந்நூல்களை வாசிக்க மனம் ஆவலுறும். மறைமுகமாக அவரின் தூண்டுதலால் தீவிர வாசகனானேன். ரப்பர் மரம் சீவிவிட்டு ஓய்வு நேரங்களில் அவர் சாண்டில்யன்,மு.வ.,அகிலன் என எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

அடுத்து எழுபதுகளில் என் அண்டை வீட்டுக்காரரான திரு.நடேசன் அவர்களிடம் காணப்பட்ட எனக்குப் பிடித்த பழக்கம் வாசிப்பது. அவரிடமிருந்து கல்கண்டு இதழை வாரந்தவறாமல் படிப்பது எனக்கு இனிய பழக்கமானது.

கல்லூரி காலங்களில் பெரும்பாலும் மெளனத்தின் ஆழத்திலே நான் புதையுண்டிருந்தாலும் என்னோடு இணைபிரியாமல் பேசிக்கொண்டிருந்தது நூல்களே. நா.பா,,மு.வ, அகிலன், ஜெயகாந்தன் என நாவல்களில் நீராடியதும், புதுமைப்பித்தன், மெளனி, பிச்சைமூர்த்தியென சிறுகதைகளோடு உலவியதும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா கவிதைகளோடு கைக்குலுக்கியதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

தமிழ் இலக்கிய நூல்களோடு இருந்த நெருக்கம்தான் என்னை உள்ளூர சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் ஆனந்த பிடியிலே தொங்கிக் கொண்டுதான் ஆங்கில இலக்கியவான்களான செக்ஸ்பியர், மில்டன், ஒர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பெர்னாட்ஷாவோடும் கொஞ்சம் உறவு கொண்டேன்.

என் இருபதுகளில் பெர்னாட்ஷாவின் கருத்துகள் என் வாழ்க்கையைப் பாதையைப் பெரிதும் திருப்பிப் போட்டன. அவரின் சீர்த்திருத்தக் கருத்துகளும் கிண்டலும் கேலியும் என்னுள்ளே புரட்சி விதையை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் தமிழில் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தேன். அமைதியாக நீருபூத்த நெருப்பு என்னுள்ளே வளர்ந்தது.

ஆங்கிலத்தில் தழுவல்களாக வெளியான ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மனதை இளகச் செய்தது. பாலைவன கவியரசன் கலீல் ஜிப்ரானின் ‘ப்ரொபெட்’ எதிர்பாரதவிதமாக தொட்டதும் என்னுள்ள பள்ளத்தாக்கிலும் கவிப்பூக்கள் மொட்டவிழத் தொடங்கின.

மலாய் இலக்கியவாதிகளான சானோன் அமாட்டின் ‘ரஞ்சாவ் செபான்ஞ்சாங் ஜாலான்’, சமாட் சைட்டின் ‘சலீனா’, இந்தோனேசிய நாவலான ‘கெலுவார்கா கெரில்யா’எனக்குள் மொழிபேதத்தைத் களைந்து மனிதத்தைக் காட்டின. கிரிஸ் மாஸின் ‘கே மாக்காம் பொண்டா’வையும் சைரில் அன்வாரின் ‘புரோங் புஜாங்கா’வையும் வாசிக்கையில் கவிதைகளில் மனித உணர்வையுந் தாண்டிய உயிர்களின் பொதுமைப் பண்பு தெரிந்தது.

இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், இறையன்பு, சுகி சிவம் ஆகியோரின் வாழ்வியல் கட்டுரைகளில் தனிக் காதலுண்டு. வாழ்வின் நம்மால் கவனிக்கப்படாத எத்தனையோ ரகசியக் கதவுகளை திறந்து காட்டியிருக்கிறார்கள். என்றுமே ஓஷோவின் கருத்துகளுக்கு என்னுள் தனியிடம் உண்டு. ஓஷோவைப் படித்தப் பிறகுதான் வாழ்க்கையின் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும் ஆழப் பார்க்கும் பார்வை பிறந்தது. சமூக நடப்புகளிலிருந்து மெல்ல என்னை விடுவித்து கொண்டு சுதந்திர பறவையாய் சிறகு விரிக்க நினைக்கிறேன்.

என் வாழ்க்கை வழியெங்கும் நான் தொட்ட புத்தகங்களெல்லாம் என்னைக் கேட்காமலேயே என்னைச் செதுக்கின. கல்லூரியெனும் பத்தக மூங்கில் காட்டுக்குள் என்னைத் தொலைத்தேன். இலக்கியத் தாகத்தால் எந்த வழிகாட்டலும் மேய்ப்பனுமின்றி தனியே என் பயணம் இன்றும் தொடர்கிறது. இன்னும்கூட ‘மோகமுள்ளின்’ வலியும் ‘மரப்பசுவின்’ உரசலும் ‘விஷ்ணுபுரத்தின்’ விளைச்சலும் இதயத்துள் விரிகின்றது.

ஜெ.ஜெ.குறிப்புகளுக்குப் பிறகு சுந்தர ராமசாமியை நானும் நண்பர் மணிமாறனும் அவர் இல்லத்துக்கே தேடிச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியது மறக்கவியலாது. இன்றைய ஜெயமோகன், வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், என வாசிப்பு விரிந்து சென்றாலும் எனக்குள் நானே விமர்சனம் செய்த எத்தனையோ இலக்கியப் படைப்புகள் கனவிலும் கல்லெறிந்து கொண்டிருக்கிறன.

தமிழில் அறம் பாடிய வள்ளுவன் தொடங்கி மறம் பாடிய பாரதிவரை ஒவ்வொரு வரியாக வாசித்து சிலாகிக்க மனம் ஏங்குகிறது. சங்கத் தமிழும் பக்தி பதிகமும் சல்லடையாய் அலச அறிவு துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கிய இன்பத்திலே கரைவதற்கு இதயம் தவிக்கிறது. ஒரு கோப்பைத் தேநீரோடு இலக்கிய அமுதம் பருக என்னோடு இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 26 ஜூன், 2009

இசைப் புயல் ஓய்ந்தது


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1], [2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்
இருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை
முதற்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும்.

முதற் சங்க காலம்

 அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக
வேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை
,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இடைச் சங்க காலம்

 அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்
தொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்
நூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.


கடைச் சங்க காலம்

 கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்
இருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்
கூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக
விளங்கியது.
தமிழின் சிறப்பு -கி.ஆ.பெ

செவ்வாய், 19 மே, 2009

காலமே! கருணையே இல்லையா?


காலமே! உனது நெஞ்சில்
கருணையே இல்லையா?
எங்கள் ஓலமே நாதமாக
உன்வன்செவி வீழும்போலும்!
பாலையில் பயணம்போகும்
பாதையேன் தந்தாய்? நாங்கள்
ஆலைவாய் கரும்பாய்மாறி
அழுவதைக் காண்கின்றாயோ!
உணவில்லை பகிர்ந்துண்ண
உறவில்லை உடமையேதுமில்லை
உயிர்விலை என்னவிலை இனியில்லை
உணர்விலை உலகுக்கோ மனமில்லை
உனக்கோ எதுயெல்லை
ஏதும் தெரியவில்லை
கொடியோர் தினம்கொழுத்தே
உவப்பதும் நியாயந்தானா?
தமிழினத்தைத் துண்டாடி
துயராட வைப்பதும் சரிதானா?
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று! புதியதோர்
தமிழ் உலகைக்காண
இல்லையேல் இனியும்
கெஞ்சாமல் எஞ்சிய
உயிரோடு உன்னையும்
வேரறுத்து நானும் வீழ்வேன்!
(‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்...’ என பாரதி தமிழரின் நிலைக்கு வருந்தி அழுதது என்னுள் அழியாத பதிவாக உள்ளது. இன்று இலங்கை கொடூர அரக்கனால் நடக்கும் தமிழினப் படுகொலையை எண்ணி என் இதய வலியில் கசிந்த வார்த்தைகள்)

ஞாயிறு, 17 மே, 2009

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்

இதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்
இலக்கியங்களுக்கும் எனக்குமுள்ள உறவும் தொடர்பும் தொப்புள்கொடியில் தொடங்கியதல்ல. ஊழ்வினைப் பயனோ எனக்கு வாய்த்த வரமோ நானறியாமலே என்னுள் நிலைப்பெற்ற பேறு. இந்த இன்ப உறவை புனித பந்தத்தை என் உயிராகவே கருதுகிறேன்.
என் இதயத்துள் புதைந்திருந்த இலக்கிய உணர்வினை தொட்டெழுப்பியதில் பெரும் பங்கு என்னோடு வாழ்ந்த மண்ணையும் மனிதர்களையும் சாரும். அந்தத் தோட்டத்து மக்களை வாசிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் விரிந்து செல்வதை என்னால் உணரமுடிந்தது.
‘என்னை எழுத வைத்தது வான்’ என்று பாரதிதாசன் கூறியதுபோல என் கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ்க்காவியம் பாட வைத்து எண்ண ஏர் கொண்டு எழுத்தாய் காகித வயலை உழ வைத்து கவிப்புறாவின் காந்தர்வச் சிறகுகளை சொல் வானமெல்லாம் சிறகடித்து இதயமெல்லாம் இரண்டறக் கலந்தினிக்கும் என் தாய்மண்ணே உன்னில் மீண்டும் தலைசாய்கிறேன்.
எத்தனையோ பூபாளப் பொழுதுகளில் புல்லாங்குழல் நாதம் தேன்மழையாய் செவிமடல்களில் பாய்ந்தாலும் உன் தாயன்புக்காக மீண்டும் நான் சேயாய் தவிக்கிறேன். என் சிந்தனை பறவை சிறகடிக்கிற தேவவேளை இது.
இளமை பூரிப்போடு நிமிர்ந்து நிற்கும் மூங்கில் காடுகளைப் பார்த்துப் பரவசப்படுகிற பால்மணம் மாறாத பருவ மனத்தோடு என் பழைய பசுமை நாட்களில் உலா வருகின்றேன். என் நினைவுகளின் பின்வீச்சு சலனமற்ற கால வெள்ளத்தின் வெளிச்ச விளிம்பைத் தொட்டுப் பார்க்கிறது
மேனியில் புழுதிப் படிந்தாலும் மனதிலே மாசு படியாத அந்த இறந்த காலங்களை இதயத்தில் இனிக்கும் இளைய காலங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பள்ளி முடிந்து பட்டம் விட்டு மனது மகிழ்ச்சியில் துள்ளித் திரிந்த பருவம் இன்பப் பருவமது.
ரப்பர் பாலை தேடியெடுத்து காகிதங்களில் தென்னங் குச்சிகளை வளைத்து வைத்து பட்டம் செய்வதிலேயே நாட்கள் நகரும். செய்த பட்டத்திற்கு நீண்ட குட்டை வால்களை அலங்கரிப்பது தனியின்பத்தைத் தரும். ஒரு நாள் பட்டம்விடும் உற்சாகத்தில் தன்னையே மறந்த நண்பன் காலில் கண்ணாடித் துண்டை மிதித்துத் துடித்தக் காட்சி இன்றும் என் நினைவுகளில் மின்னலிடுகிறது.
என் புண்ணிய பூமியில் அறிவியல் வெளிச்சம் புகாத அந்த அந்தக நாட்கலில் தொலைக்காட்சி, வானொலி கருவிகள் எல்லாம் காண்பது அரிது. தோட்டத்தில் யாரோ இருவர் வீட்டில்தான் வானொலியைக் கண்டதாக ஞாபகம். நாளடைவில் பல வீடுகளிலும் வானொலி மெல்ல நுழையத் தொடங்கியது.
நான் முதன் முதலாக தொலைக்காட்சியைப் பார்த்தது தோட்டக் கிராணி வீட்டில்தான். தொலைக்காட்சி பார்க்க வேண்டும் எனும் உந்துதலில் கிராணி வீட்டிற்குப் பறப்பட்ட நானும் என் நண்பர்களும் எப்படியெல்லாம் அவரின் பிள்ளைகளின் கட்டளைகளுக்கு மனம் வாடாமல் சேவை செய்தோம் என நினைத்தால் இப்போது வேதனையாக உள்ளது.
அந்த மேல்தட்டு பிள்ளைகளின் ஏவலுக்கிணங்க பூச்செடிகளுக்கு நீரூற்றுவதிலிருந்து உடம்பு பிடிப்பதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தால் சின்ன மனத்தின் ஆசைகள் எப்படியெல்லாம் எங்களை அடிமைப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. பூச்செடிகளுக்கு நீரூற்றினால்தான் கறுப்பு வெள்ளை ‘கெளபாய்’, ’கார்டூன்’ படங்களை ஐந்தடியில் நின்று பார்க்க அனுமதிக்கப்படுவோம் இல்லையேல் விரட்டியடிக்கப்படுவோம்.
தோட்டத்து இலையுதிர் காலங்களை என்னால் கொஞ்சமும் மறக்கவியலாது. கோடைக்கனல் கொப்பளிக்கும் வெப்பப் பொழுதுகளில் மேலாடைகளை களைந்து நிர்வாணமாய் காட்சியளிக்கும் ரப்பர் காடெல்லாம் வெளிச்சம் விழுதுவிட்டிருக்கும்.
உதிர்ந்து விழும் இலை சருகுகளில் நடக்கும்போது ஏற்படும் சரசர ஓசை இன்னும் காதில் ஒலிக்கிறது. இலையுதிர் காலத்தில் புகை மூட்டத்தையோ நெருப்பொளியையோ ரப்பர் காட்டில் கண்ணுற்றால் உடனே தோட்டத்தில் இரும்பு மணி அடிக்கப்படும்.
இதற்காகவே காத்திருக்கும் நானும் என் தோழர்களும் தோட்டத்து ‘டிரக்டரில்’ முண்டியடித்துக் கொண்டு ஏறுவோம். தளிர்களையும் கோணிப் பைகளையும் கொண்டு ஓடியோடி தீப்பரவாமல் அணைப்போம்.எங்கள் ரப்பர் மரங்களை தீயிலிருந்து காப்பாற்றியதற்காக கிராணியார் பத்து அல்லது இருபது காசுகளை எண்ணித் தருவார்.
உன்னதமான இசையின் உயிர் அடங்குகிறபோது மெல்லிழையோடும் நாதத்தைப் போல் என் மன ஆழத்தின் மெளனமான மூலையில் எங்கோ அந்த நினைவு புலம்பிக் கொண்டே இருக்கிறது. தமிழ் வாசத்தோடு இடைநிலைப் பள்ளிக்கு இடம் பெயர்ந்த அந்த இறுக்கமான நாட்கள்; மாலை பள்ளியாதலால் மனதிற்குள் கவலை வீட்டிலுள்ளவர்க்கோ பூமழை.
விடுமுறை நாட்கள்போல் இனிமேல் காலையில் ரப்பர் காட்டுக்குள் காலையில் வசித்துவிட்டு மாலையில் இடைநிலைப் பள்ளியில் வாசிக்க வேண்டியதால் மனம் கனமாகிப் போனது. பால்மரக் காட்டிலே பாடுபட்டு நேரமில்லாமல் பள்ளிக்குப் பசியோடு நானும் என் நண்பர்களும் ஓடிய நாட்கள் பல.
குளித்தப் பின்னரும் உடலில் பட்ட ரப்பர் பால் சரியாக நீங்கப்பெறாமல் பல நாட்கள் பள்ளிச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் சீன ஆசிரியரொருவர் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தது என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அப்போது வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிக்கொண்டிருந்த பொல்லாத வேளையென்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்வியை நோக்கி என் இதயம் பயணம் போனது இன்னும் என்னுள் பிரமிப்பூட்டுகிறது.
இளைய நாட்களில் தெளிவற்ற நீரோடைகளில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற சலனத்தைப்போல என் எண்ண விரிசல்களில் திரைப்படங்கள் சில உறுத்துதல்களை உண்டாக்கிவிட்டிருந்தன. இன்று திரைப்படங்களைக் காண்பதற்கு ஆர்வமில்லாத நான் அன்று தமிழ்த் திரைகளை நேசித்ததாகவே தெரிகிறது.
எனது பால்ய நினைவுகளிலிருந்து இன்னும் உதிர்ந்து போகாமல் அந்த நாள் இன்றும் என்னுள் பிரகாசிக்கிறது. எனது பக்கத்து தோட்டத்தில் (புக்கிட் சிலாரோங் - கெடா) மாதத்திற்கொரு முறை இரவில் திரைப்படம் காட்டப்படும். இதைக் காண்பதற்கென்றே நானும் நண்பர்களும் மிதி வண்டியில் புறப்படுவோம்.
அங்கு பார்த்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘தங்கப்பதக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் நினைவில் இன்றும் சிரிக்கிறது. நள்ளிரவு படம் முடிந்து பயத்தோடு வீடு திரும்புகையில் நண்பனின் மிதிவண்டியின் சங்கிலி அறுந்து விழ உதவிக்கு வேறு துணையின்றி விரைந்து தள்ளி புறப்படும்போது கீழேவிழுந்து உண்டான காயத்தின் வடு கதை சொல்கிறது.
என் உயிர்க்காற்று கலந்துலவும் இந்தப் புண்ணிய பூமியில் நான் உலவிய அந்த பிஞ்சு நாட்கள் என்னுள்ளே அழியாத கோலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிதைந்தும் சிதையாமலும் நெஞ்சத்தில் நின்றாடும் அந்த இளைய நாட்களை ஏக்கத்தோடு இன்றும் நேசிக்கின்றேன்.