திங்கள், 15 ஜூலை, 2019

கற்றதன்வழி நிற்க


இரண்டு நாட்களுக்கு முன் சமூகவலைதளத்தில் வெளியான யாப் ஊ லிங் என்ற ஆசிரியரின் இறப்புச் செய்தி அதைத்தான் எனக்கு உணர்த்தியது. விடுமுறைநாள் என்றாலும்  சிபுவிலுள்ள இடைநிலைப்பள்ளியொன்றில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு போதித்துக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலே இறந்த அவரின் மறைவு வேதனையளிக்கிறது.  தமது ஆயுளின் இறுதிவரை அர்ப்பணிப்போடு பணிசெய்த இதுபோன்ற ஆசிரியர்களின் தியாகம் என்றென்றும் மறக்கலாகாது. தம்மிடம் பயிலும் மாணவர்களை உயர்த்த வேண்டும் என்ற உயர்வெண்ணம்  உண்மையான ஆசிரியர்களின் ரத்த நாளங்களில் என்றும் ஊறிக்கிடக்கும் என்பதற்கு அந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்தது. மாணவர் உலகத்தோடு பழகும்போதுதான் நம்மால் அவர்களின் எண்ண அலைகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மாணவன் என்ன நினைக்கின்றான் அந்த மாணவி என்ன சொல்ல வருகிறாள் என்ற மனக்குரல்களை ஓர் அனுபவமிக்க ஆசிரியரால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் மனத்திற்குள் அதிகம் நிறைந்தும் மறைந்திருக்கின்ற எண்ணங்கள்தாம் அவர்களைப் பின்னாளில்  உயரச் செய்கின்றன. இந்தச் சூட்டுமத்தை ஆசிரியரானவர் நுணுகி ஆராய்ந்து  அறிந்துகொண்டால் சரியான இலக்கை நோக்கிக் கற்றல் கற்பித்தலை நடத்தலாம். அறிவியல் ஆசிரியர் ஒருவர் தம் வகுப்பில் கம்பளிப் புழுவானது வண்ணத்துப் பூச்சியாக மாறும் காட்சியைப் பாடமாக நடத்தினார். அதற்காக அவர் கூட்டுப்புழுவாக இருந்த  எருக்கஞ் செடியை வகுப்புக்கு கொணர்ந்து அது புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சியாக உருவெடுக்கும்வரை கூர்ந்து கண்காணிக்கச் சொன்னார். பல மாணவர்களின் கூட்டுப்புழுவானது வண்ணத்துப்பூச்சியாக மாறி பறக்கையில் ஒருவனுடையது மட்டும் புழுவாகவே இறந்து கிடந்தது. மறுநாள் இதைப் பார்த்த ஆசிரியர் மாணவனிடம் காரணம் கேட்க, “இந்தப் புழு கூட்டைவிட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டது. அதற்கு உதவி செய்யலாம்னு வெளியே எடுத்து விட்டேன்.” அமைதியாகச் சொன்னான். “நீ அதற்கு உதவி செய்யவதாக நினைத்து அதைக் கொன்றுவிட்டாய். புழுவானது தானே கூட்டை உடைச்சிக்கிட்டு வெளியே வரணும். அப்படி வந்ததாதான் அதற்கு வலிமையான கால்களும் உறுதியான சிறகுகளும் கிடைக்கும். அவ்வாறு வந்தால்தான் இயற்கைச் சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்ள முடியும்.  இதுதான் வாழ்க்கை. துண்பங்களைத் தடைகளை துயரங்களை எதிர்கொள்கிறவர்கள்தாம் வாழ்க்கையில் வலிமையாக வாழ்கிறார்கள்.  இருந்த எதிர்மறையாக  ஒருவர் தாம் படித்து அறிந்தற்கும் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். திருவள்ளுவர் சொல்லும் கற்க மட்டுமல்ல கற்றதன்வழி நிற்க சற்று கடினம்தான் என்றாலும் முயற்சியோடு கற்றதை வாழ்வில் ஒழுகுவதுதானே மாந்தர்க்கு அழகு? மாணவர்களை விழிப்புறச் செய்ய எந்தச் சூழலிலும் விழித்துக் கொண்டேயிருப்பதுதானே ஆசிரியம்? 

கருத்துகள் இல்லை: