சனி, 31 ஜனவரி, 2009

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

ஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்

(பாரதியின் கைகளைப் பற்றி என் வாலிப வயதில் தளிர்நடை பயின்றபோது அவன் எனக்கு சிலரை அறிமுகப் படுத்தி வைத்தான். அவர்களில் முக்கியமானவர் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர். தாகூரின் கவிதைகளைத் தேடித் தேடி படித்திருக்கின்றேன். தாகூரின் ‘கீதாஞ்சலி’யின் இறைநேசம் என்னிலும் உருகி வழிந்து மனத்தை நிறைத்தது. அவரின் `stray birds’ படித்தபோது எனக்குள்ளும் கவிவாசம் பரவியது. அவரைப்போல நான் குயிலைக் கவியெழுத தொடங்கி அது உரைநடையாக வழிந்தோடியது. இந்த எழுத்துக்கள் எனது இளமை காலத்து பூக்கோலங்கள். 1989 ஜூலையில் எழுதப்பட்ட இந்த எழுத்துக்களை எனது பரணிலிருந்து மீட்டெடுத்து பதிவு செய்துள்ளேன் கிஞ்சிற்றும் மாற்றமின்றி. நான் தாகூரில் கரைந்தது உங்களுக்கும் புரியும்.)

கவிக்குயிலே,


என் கண்மணியே, கண்வழியே குடியேறி கனவைக் கொஞ்சும் தேவதையே, கண்ணில் கலங்கி கன்னத்தில் கால்வாய் வழிந்தோடும் கண்ணீரில் எனை மிதக்கவிட்டு தனியே வாடவிடுச் சென்ற உயிர்யாழே, உன் பாதச்சுவடுகளின் முகவரிகளை புதையலைப்போல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆருயிரே, என் நெஞ்சப் புண்வெளியை ஆற்றும் அருமருந்தே உன் உயிர்மூச்சைச் சுமந்து நின்ற காற்றிலும் உன்றன் கானத்தைக் கவிதைப்போல் யாசித்துக்கொண்டிருக்கின்றேன். இதய நாட்டை ஆள்பவளே, பாட்டுப் புனல்வெளியில் குதிக்கின்ற பேரழகே, காலக் காற்றில் உனைத் தேடித் தேடி சதிராடிக் கொண்டிருக்கின்றேன்.

அன்பே, வசந்தத்தைத் தரிசிக்க மேலாடையை இழந்துவிட்டு நிர்வாணமாய் ஆனால் ஞானச்செறுக்கோடு நிற்கும் எனது போதிமரத்தடியில் உனக்காக மீண்டும் என் மெளனத்தவம் தொடங்கிவிட்டது.
என்றன் தாய்மடியில் கண்ட கனவுகளை விட உன்றன் பூமடியில் தவழ்ந்து தேக்கி வைத்த காவியங்கள் யாவும் ஏட்டில் எழுத முடியா உயிரோவியங்கள். என்றன் கவிக்குயிலே, உன்றன் வருகையை ஆராதிக்கக் காத்திருக்கின்றேன்.

வானமுதே, வளர்பிறையே உன்றன் பிரிவை நினைத் நினைத்து நெஞ்சம் நெக்குருகிப் போனது. கருங்குயிலே, கண்மணியே என் இமைக்கதவை மூடிக் கண்ணை சாத்தும்போதெல்லாம் என்னுள்ளே எட்டிப்பார்க்கின்றாய் நிலவாய்.

காதலாம் தூண்டிலில், காலமாம் வலையில் தவித்திடும் மான் நான். காதலின் தீபம் நீ கையேந்திச் சென்றாய், காரிருள் தனிலென்னைத் தனிவிட்டுச் சென்றாய். கண்ணே கூடல் நீக்கி எனை வாடவிட்டுச் சென்றாய்.

நீ சென்ற திசை நோக்கித் தொழுதபடியே தவமிருக்கும் இந்த ஏழையின் நெஞ்சம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி புண்ணாகிப் போகும்வரை உன் கல்மனம் உருகாதா?அன்றொரு நாள் தனியனாய் மெளனக்கடலில் பொன்மாலைப் பொழுதிலே, நான் ஆழ்ந்திருந்த வேளை நீதானே துணைவந்தாய்.

உனக்காகத் காத்திருந்த ஒவ்வொரு துளி வினாடியும் காதலுணர்வுப் பொங்கிவர கவிதை அரும்பிவர நான் ஒரு கவிஞனாக, இயற்கையின் விந்தை குமிழிகளில் மூழ்கி மூழ்கி என்னை நானே மறந்தே போயிருக்கின்றேன்.

எத்தனையோ சுந்தரப் பொழுதுகளில் உன் தெய்வ தரிசனத்துக்காக தவங்கிடந்தேன். அந்த நினைவுகள் யாவும் என் இதயத்தில் அகண்ட இசைக்கடலைத் தாண்டி கவிக்கனலில் ஆழ்ந்திருக்கின்றது. முத்தே, நெஞ்சிலும் நினைவிலும் நீயே எப்பொதும் உள்ளாய்.

எனது உயிர்த் தொகுதி முழுவதும் உன் உருவமே நிறைந்துள்ளது. இன்றோ தொடங்கிற்று; தனிமை மிகுந்தது; இனிமையை எண்ணி ஏங்கியதுள்ளம்.என் நெஞ்ச உணர்வினைத் தூண்டி ஆண்டிட கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வே எனைக் கொன்றது.

எனது வார்த்தைகள் எனது கவிதைகள் இந்தப் பொன்மாலைப் பொழுதிலே தடுமாறுகிறது. ஓ... காதலே இசையின் இனிமையைப் பருகி ஓங்கி வளரும் காதலே தந்துவிட்டாய் இனிமை இனி பொறுக்க மாட்டேன் தனிமை.

நித்தம் ஏக்கச் சுழிப்புகளில் கண் வளர்க்கும் மாயக்கனவுகளின் சந்திப்பில் புண்பட்டுக் காதல் புயலில் சிறகொடிந்த பறவையாய் முகாரி பாடுகின்றேன். அருங்கனியே, வழி தப்பிய பறவையைப்போல் உன்னிடம் பிடிபட்டேன், என் உள்ளத்தைக் குலுக்கினாய், உனது எல்லையற்ற கீதவலையில் என்னுள்ளத்தைப் பிடித்தாய்.

ஆருயிரே, நானோ தாயாக வடிவம் மாறி பாக்களையே குழந்தையாக்கி உன்னைத் தாலாட்டி தூங்க வைத்தேன். எனது பாக்களில் நினது வசந்தகால மலகர்களின் தோற்றம் பொலிந்தது. இன்றோ உன் பிரிவு என் பாட்டு அலங்காரங்களைக் கட்டி வைத்துவிட்டது. என் இதயத்தில் ஒலிக்கும் கவிதை உன்னுள்ளத்தே ஒலி செய்யட்டும்.

எனது காதல் கீதம் உன்னுயிரிலே கலந்து பெருக்கெடுத்தோடட்டும். எனது சுருதியலைகள் உனது பாதக் கமலங்களைக் கழுவட்டும். யாழ் தன் இசையைத் தாங்குவதுபோல நான் உன்னன்பை தாங்குவதுடன் அதை உனக்கே இறுதியில் என் ஆருயிரோடு அளிக்க உறுதி கொண்டிருகின்றேன்.

என் உயிரொளிக் கதிரே; இன்னும் நான் சாகவில்லை; உயிர் நூலென உடலில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு இருக்கின்றேன்; சருகாக உன்னையெண்ணி துரும்பாக மடிவதற்குள் பூஞ்சிரிப்பில் மின்னும் உன் மதிமுகம் காண வழித் தேடுகின்றேன்.

உயிரொளி ஓவியமே,என் விழிகள் உன் மைத்தவழ் விழிகாணாமல் ஒளியிழந்துவிட்டன. பிரிவெனும் கசப்பைத் தந்தவளே இங்கே நான் துடிக்கின்றேன் தனிமைத் துயரில். அஞ்சுகமே, எனைப் பரிவோடு அணைத்திட்ட உன் பூங்கரங்கூட எனைவிட்டு பிரிவுக்கே உறவாகிப் போகுமென்று கிஞ்சிற்றும் நான் நினைக்கவில்லை.

அன்புத்தேனே, உணர்ச்சியாற்றில் ஓடி வரும் புதுப்புனலே, உன்றன் எண்ண வெள்ளத்தில் ஊழ்கி வரும் கனவுகளின் விளிம்புகளில் மிஞ்சுவது ஈரமான வெறுமையே. என் நெஞ்சத்துச் சிப்பிக்குள் கருத்து முத்தாய் நிலைத்தவளே, என்னிளமனது உனையெண்ணி நொடிக்கு நொடி நூறுமுறை துடிக்கிறது.

துன்பம் என்னை தனக்குள் விலங்கிட்டுக் கொண்டது; துடிப்பதற்கோ எனக்கிங்கே ஆற்றல்ல்லை; துவல்கின்றேன் கண்மணியே. என் கதையை மரணம் வந்துமுடிப்பதற்கு முயலுகிறது அதர்குள் உன் முகமலரை ஒரேமுறை கண்டு தரிசிக்க வேண்டும். என் அகங்குளிர இந்தச் செவிமுழுதும் தேன்மணங் கமழும் நின் தேவகானத்தை நான் கேட்க வேண்டும்.

அன்பே, சாவாலும் எந்நாளும் சாகாத காதலாலும் கூவாத ஊமைக் குயிலாய் சொல்லை நெஞ்சக் கூட்டுக்குள் போட்டடைத்து துன்ப வேதனயில் நெய்யாய் உருகுகின்றேன். என் நெஞ்சில் காதல் உணர்வை ஊஞ்சலாடவிட்டு ஆடுகின்ற பேரின்பத் திரவியமே, உன்றன் மடியதனைத் தலையணையாய்க் கொண்டே நான் துயின்ற நாளெண்ணி இப்போதிமரத்தின் அடியிலே நடைச்சடலமாய்த்தான் உலவுகின்றேன்.

பூந்தென்றலே, இறந்தகால நிகழ்வுகள் நெஞ்சத்தில் நிழலாய் நின்றாட நிகழ்கால வெப்பத்தில் நெக்குருகிப் போகின்றேன். புத்தமுதே, என் கண்ணிரெண்டில் காதலெனும் நோயைத் தந்து கண்ணுறக்கம் பறிக்கின்றாய்; கனவிலும் வந்தென்னை வாட்டுகின்றாய். கண்மணியே என் காதல் நோய்க்கு நீயல்லவோ அருமருந்து.பறவைகளில் பருவகால பறவையா நான்? இசையையே உணவாய் உட்கொள்ளும் அசுணப் பறவை; பனித் துளிக்கே ஏங்குகின்ற சக்ரவாகம் நான்.

உன் திருவரவன்றி என் இதயத்தாமரை இனி இதழ் விரிக்காது. ஆக வந்துவிடு விரைவில் உன் அன்பு முத்தம் தந்துவிடு. இடைவெளியே இல்லாமல் இருந்த காலம் இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் புதியதொரு சொர்க்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றோ பிரிவையெண்ணி உன் பொன்வரவுக்காக வழி பார்த்திருக்கின்றேன்; விழி தேய பூத்து நிற்கின்றேன்

கருத்துகள் இல்லை: