செவ்வாய், 7 ஏப்ரல், 2009

தந்தைக்கு நினைவாஞ்சலி

‘அப்பா’வென்று என்செல்லக் குழந்தைகள் அழைக்கையிலே
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது

தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்

குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே

சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே

எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா

(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)

கருத்துகள் இல்லை: