ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நெஞ்ச வயலில் நம்பிக்கை விதைப்போம்.

என் அன்பு சோதரனே,
வாழ்வின் வசந்தத்தை எல்லாம் நாடு வளர பிறர் வாழ வாரி இரைத்து நலிந்துவிட்ட தோழனே, உன்னோடு என் உள்ளப்பூர்வமான வார்த்தை பரிமாறல்கள். அன்று உடல் உயிர் பொருளென உன் வாழ்வையே அர்ப்பணித்தாய். இன்று குழிவிழுந்த கண்களோடும் உடைந்த மார்போடும் கூன் விழுந்த முதுகொடும் சரிந்த தோளோடும் உரமற்ற நெஞ்சோடும் நீ உலாவருவதை பார்க்கும்போது என் இதயத்துள் இரத்தம் கசிகிறது.

என் இனிய நண்பனே,
அனைத்தும் உன்னைவிட்டு சென்றுவிட்டாலும் நீ இழக்காதா நம்பிக்கை வைரமாய் ஒளிருகிறது. இந்த உலகத்தில் நீ தொடர்ந்து போராடி வாழ்வதற்கு உனக்குத் தேவைப்படும் மூலதனமே நம்பிக்கைதான். மறந்திடாதே, ‘வெறுங்கை என்பது மூடத்தனம் உன் பத்து விரல்களும் மூலதனம்’. மீண்டுமொரு உதயம் உன்னால் உருவாகட்டும்.

என் அருமைத் தோழனே,
இரவுகள் என்பவை நிரந்தரமானவை அல்ல; ஒவ்வொரு பொழுதும் புலரவே செய்கிறது என்பது இயற்கையின் நியதி. இருளின் திரையைக் கிழித்தெரியும் கதிரவனைப்போல் உன் மன ஆழத்திலே ஊற்றெடுக்கின்ற நம்பிக்கை துளிகள்தாம் உனக்கொரு திருநாளைக் கொண்டுவரப் போகிறது. கோடையின் வெப்பம் குளிரில் மறைவதுபோல் நீ வறுமையின் கோரப்பிடியில் விடுகின்ற ஏக்கப் பெருமூச்செல்லாம் நம்பிக்கை நீரூற்றால்தான் தணியப்போகிறது.

என் நேசத்திற்குரியவனே,
மனிதன் காற்றை சுவாசிப்பதால் வாழ்வதில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறான் என்ற கருத்தை உன் இதயத்தில் ஆழமாக செதுக்கி வைத்துக்கொள். நம்பிக்கை ஆணிவேர்கள் ஆழ வேரூன்றிய உன் மனத்தில் சூறையென துன்பம் சூழ்ந்தடித்தாலும் புயலெனப் படை பாய்ந்தெதிர்த்தாலும் அதையெல்லாம் இடுப்பொடித்து தவிடுபொடியாக்கும் பட்டை வைரமாய் ஒளிவீசுகிறது.

என் நெஞ்சிற்கு நெருக்கமானவனே,
“சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்” என்ற பாரதியின் வாய்மையைப்போல் நம்மை ஆயிரம் சோதனை ஆர்த்து வந்தாலும் அவற்றை அழித்து ஆக்கும் சக்தியாக வெற்றிக் கொள்ளச் செய்ய திருமுருகன் நமக்கு அளித்துள்ள வேலாயுதம் நம்பிக்கைதான். இராமன் தம்மை இராவணனிடமிருந்து விடுவித்து வாழ்விப்பான் என்ற அசோகவன சீதையின் நம்பிக்கை; தம் கணவன் கள்வனல்ல என்று பாண்டிய மன்னனிடம் நீதியுரைத்த கற்புக்கரசி கண்ணகியின் வாய்மையான நம்பிக்கை; துச்சாதனன் பலரறிய அவைக்களத்தில் துகிலுரித்தபோது தம்மையே கண்ணனிடம் தந்துவிட்டு சரண்புகுந்த தெளரபதியின் நம்பிக்கை இதிகாசங்களையும் காப்பியங்களையும் மட்டும் வாழவைக்கவில்லை மானுடத்தையும் தாங்கிப் பிடித்து உயர்த்தியிருக்கின்றன.

என் அன்பு சிநேகிதனே,
ஆற்றங்கரையோரம் ஓடுமீனோட உறுமீன் வருமளவு மெளனத்தவமிருக்கிற கொக்கின் நம்பிக்கையை நீ கூர்ந்து கவனித்ததுண்டா? கொக்கை விடவா நீ நம்பிக்கையில் தாழ்ந்தவன்?. சின்னஞ்சிறிய மீன்கள் தன் கால்களினூடே துணிச்சலோடு அனுமதிக்கும் கொக்கு, பெரிதான மீன் வருவதென்னவோ உறுதி என்றுதானே அத்துணை நம்பிக்கையோடு பொறுமை காத்து நிற்கிறது. எனக்குத் தெரியும் நீ கடுமையாய் உழைத்து களைத்திருக்கிறாய். நீண்ட வழிநடந்த களைப்பால் ஓரடி எடுத்து வைக்க தெம்பில்லாமல் மனம் தடுமாடுகிறாய். சற்றே அமர்ந்து நீ நடந்து வந்த பல்லாயிரம் பாதத் தடங்களை மெல்ல திரும்பிப்பார். நீ முதலில் எடுத்து வைத்த நம்பிக்கையே இதுவரை உன்னை சுமந்து வந்திருக்கிறது இனியும் உன்னை வானம் தொடும் தூரம்வரை இட்டுச் செல்லும்.

என் நம்பிக்கைச் சுடரே,
“நம்பிக்கைகளே வானத்தின் நட்சத்திரங்கள்; வாழ்க்கையின் எல்லைக் கற்கள்; சகாரா பாலைவனத்தில் நீ நடைபயின்றாலும் நம்பிக்கைகளே உன் தாகம் தீர்க்கப்போகும் தண்ணீர்ப் பந்தல்கள்; நம்பிக்கை என்றும் மகத்தானது; உலகை என்றும் செழிப்பில் வாழ வைப்பது” என்றோ நான் படித்த இந்தப் பேருண்மை வரிகளுக்குச் சொந்தக்காரனை நேசமுடன் `இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்’ என்ற தமிழ் நம்பிக்கையின் சிகரம் திருவள்ளுவரின் திருப்பாதங்களுக்கு பூத்தூவ காத்து நிற்கிறேன்.

என் இதய நாயகனே,
நம்பிக்கைத் துளிர்கள் காணாத விதைகள் பசுஞ்சோலையிலும் உயிர்ப்பதே இல்லை. நம்பிக்கை வெள்ளம் பாயாத மணற்பரப்பில் பசுமை பூப்பதே இல்லை. `நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறில்லை’ என்று வறட்டு வேதாந்திகள் தம்மீது நம்பிக்கை கொள்ளாமல் நாளும் பொழுதும் தங்கள் இயலாமையை புலம்பிக் கொண்டு திரிவதை எண்ணி வெட்கப்படு தோழா. அவர்கள் மீது அறிவுவாள் வீசுவோம்.

என், உதய நிலவே,
‘நாளை இறக்கப்போவதற்காக இன்றே கண்ணீர் சிந்தும் அறிவிலிகள் கவலைப்படுவதாலும் துயரப்படுவதாலும் உங்கள் உயரத்திற்கு மேலே ஒரு முழம் கூட்ட உங்களுக்குள் எவரால் இயலும்’ என்று இயேசுநாதர் கேட்பதை சிந்தித்துப்பார். ‘காலா எந்தன் காலருகே வாடா - சற்றே உன்னை மிதிக்கின்றேன்’ என்ற பாரதியின் கண்ணொளியில் பிரகாசிக்கும் நம்பிக்கையை உன்னிப்பார். அடிவானம் எட்டாக் கனியாய் இருக்கலாம் அருகே செல்லச் செல்ல தொலைதூரம் போகலாம் ஆனாலும் தொடவேண்டுமென்ற நம்பிக்கைதான் வாழ்வை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.

என் இளஞ் சூரியனே
நம்பிக்கைதான் இந்தப் பூமியை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பு. நம்பிக்கை இருக்கிறவரை பூமி செழிப்பில் சொர்க்கமாய் சிரிக்கும்; நம்பிக்கை அற்றுப் போனால் இருண்ட நரகமாய் விளங்கும். நம்பிக்கை நெஞ்சுரங் கொண்டவனே,` பூட்டிய இருப்புக் கூட்டின் கதவுகள் திறந்தன, சிறுத்தையே வெளியே வா’ என்று பாரதிதாசன் உன்னை அழைப்பது செவிகளில் விழவில்லையா?. இன்னுமென்ன தயக்கம்?. உலகம் உன் பொன்வரவுக்காக காத்து நிற்கிறது. நம்பிக்கையோடு புறப்படு தோழா, காலம் உனக்கொரு காவியம் பாடும்.

(பெரும்பாலான நம்மின இளைஞர்களைப் பார்த்து கவிஞர் வைரமுத்து முப்பது வயதுக்குள்ளே முதுமை வந்து தளர்ந்துவிட்டனாக இருக்கின்றான் என்று கவிதைச் கணையால் உணர்த்தியுள்ளார். அந்தக் கருத்திற்கும் எனது நோக்கிற்கும் உடன்பாடு உண்டு. இன்றைய இளைஞர்களின் தோற்றமும் வாழ்க்கையில் ஒரு தேடுதலும் இலக்குமின்றி உடலையும் உயிரையும் பேணாமல் மனமும் ஆன்மாவும் மலராமல் சிந்தனைக் குறுகி நம்பிக்கை வற்றி நடைப் பிணமாகத் தேங்கியக் குட்டையாய் வாழ்ந்து விதிவந்து சாவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஒவ்வொரு இளைஞனையும் மாசக்தியாக உருவாக்கும் தார்மிகப் பொறுப்பும் சமூகக் கடப்பாடும் அனைவருக்குமுண்டு. இராமாயணத்தில் தன்னுடைய ஆற்றல் புரியாததால் கடலைக் கடந்து இலங்கைக்கு செல்ல முடியாமல் வாயு புத்திரனான அனுமான் மனம்வாடி நின்றபோது ‘சாம்பன்’ என்ற வானரம் அனுமனின் ஆற்றலை அறிந்து வீரதீர வார்த்தைகள் வலிமையோடு உச்சரிக்க அனுமன் தன்னையுணர்ந்து மெல்ல பேருருவம் எடுத்து இலங்கைக்குப் பறந்து செல்வதாகக் காட்சியுண்டு. இங்கே எனக்கு அந்தச் ‘சாம்பன்’ போன்று நம்மின இளைஞர்களுக்குப் பெரியோர்கள் நம்பிக்கை நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தால் விரைவிலேயே நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். ஒரு இளைஞன் சொன்னது `we are not useless but we are used less’. என் பங்குக்கு இன்றைய சோர்ந்த இளைஞனை தட்டிக் கொடுக்கும் நோக்கிலே இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன்)

7 கருத்துகள்:

gTheeban சொன்னது…

வணக்கம்.
இதுதான் நான் முதல் தடவையாக தங்களுடைய வலையை வலம் வருகிறேன்.

நன்று.

இது என்னுடைய வலை. ஒரு வலம் வாருங்களேன்.

http://www.tamilmarutham.blogspot.com

நன்றி!

பெயரில்லா சொன்னது…

tanggalai samnbanaaka kaankirom

குமரன் மாரிமுத்து சொன்னது…

சிறப்பான கருத்துகளை அழகிய தமிழில் படைத்திருக்கின்றீர்கள். படித்தேன்; அனுபவித்தேன்.

HS சொன்னது…

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரை.

வரிக்கு வரி நம்பிக்கை ஊட்டும் எழுத்துகள்.

தமிழ்மாறன் சொன்னது…

வணக்கம்.தங்கள் கருத்துரைக்கு நன்றி.

அன்புடன் அருணா சொன்னது…

நல்ல பதிவு!பூங்கொத்து!