செவ்வாய், 15 நவம்பர், 2016

ஆசிரியர் கல்விக் கழக இலக்கியப் பாடங்கள் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகள் செயல்பாடும் வெளிப்பாடும்


தமிழ்மாறன் பலராம்
ஆசிரியர் கல்விக் கழகம்,
சுல்தான் அப்துல் அலிம் வளாகம்,
08000 சுங்கை பட்டாணி, கடாரம்


1.0     முன்னுரை
அற்றைநாள் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரானவர் அறிவின் கொள்கலனாக விளங்கினர். மாணாக்கர் ஆசிரியரிடமிருந்து அறிவை ஒருவழித் தடத்திலே மட்டுமே பெற்றனர். ஆசிரியர்  கேள்வி கேட்பவராக மாணவர் விடை தருபவராக மட்டுமே விளங்கினர், ஆனால் இற்றைய சூழலில் ஆசிரியரானவர் வழிகாட்டுபவராகவும் மாணாக்கரை சிந்திக்கத் தூண்டுபவராகவும் விளங்குகின்றனர். இதன்வழி ஆசிரியரும் மாணாக்கரும் சேர்ந்தே பல்வேறு விடயங்களைக் கலந்தாய்ந்து கண்டடைகின்றனர். ஆசிரியர் மாணவர் இவ்விருவழித் தொடர்பும் உறவும் சீரிய கருத்துப் பரிமாறலுக்கும் கல்வியலில்  புதியதொரு திறப்பு உருவாவதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆக, இற்றைய புதுமையை நோக்கித் துரிதமாகப் பெயரும் கல்வி உலகில் உயர்நிலைச் சிந்தனைச் செயல்பாடும் வெளிப்பாடும்  தவிர்க்க இயலாதொன்றாகும்.
புதிய பாடத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட காலந்தொட்டே மலேசியக் கல்வி அமைச்சால் பள்ளிகளில் உயர்நிலைச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறலாயின. இருபதாண்டுகளுக்கும் மேலாக வகுப்பறை கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைப் பயன்பாட்டை ஊக்குவதன் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு நிலையிலான வழிகாட்டி பயிலரங்குகள் பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளன எனலாம். உயர்நிலைச் சிந்தனைகளை ஆசிரியர்கள் அவசியம் நாளும் தங்கள் கற்றல் கற்பித்தலில் செயல்படுத்த வேண்டும் என்பதை மலேசியக் கல்வியமைச்சின் தலையாய கோரிக்கையாகும். எதிர்கால வாழ்வில் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிப்பதற்கு இன்றே உயர்நிலைச் சிந்தனைகளைப் பற்றியப் புரிதலும் செயல்பாடும் அனைவருக்கும் மிக அவசியமாகும்.
இலக்கியம் என்றாலே வாசிப்பின் பரப்பளவு அதிகமிருக்கும்; நிறைய கருத்துகளையும் மறைப்பொருள் உண்மைகளையும் கொண்டிருக்கும்; பல அடர்த்தியான சொற்களையும் பொருளையும் உள்ளடக்கியிருக்கும்; நிறைய குறியீடும் இருண்மையும் கொண்டிருக்கும் போன்றதொரு தோற்ற மயக்கம் பெரும்பாலான மாணவர்களிடத்து உலவுகிறது. இந்த மனத்தடை எல்லாவற்றையும் தாண்டி இலக்கியத்தை இனிமையாகச் சுவைப்பதற்கும் அதன் மீதூர்ந்து மேலும் ஆழ்நிலைக்கு இட்டுச்சென்று உய்த்துணரச் செய்வதற்கும் இலக்கியம் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகள் கட்டாயம் செயலாக்கம் பெறவேண்டுவது முக்கியமாகும்.
2.0     இலக்கியம் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களின் முக்கியத்துவம்
சிந்தனை என்பது மூலைச் செயற்பாங்கின் விளைவாகும். இச்செயற்பாங்கின் விளைவை மாணவர்களின் பேச்சாலும் எதிர்வினையாலும் இன்னும் பிற நடத்தை செயற்பாடுகளின் வழி அறிய இயலும். கற்றல் செயல், கற்போரின் போக்கு, கற்றல் விளைவுகள், கற்பிக்கும் முறை இவற்றினூடாக மாணவர்களிடையே உயர்நிலைச் சிந்தனை உருவாக்க இயலும் என்கின்றனர் கல்வியாளர்கள். பெஞ்சமின் புளூம் (Taxonomy Bloom,1956) வகைதொகை நெறியில் உள்ளடங்கியுள்ள அறிவு, உணர்வு, முனைவு ஆகிய மூன்று களங்களில் அறிவுசார் நிலையே இங்கு முகாமை பெறுகிறது. மேலும் அண்டர்சன், கரத்வோல் (2001) கூற்றுப்படி வழக்கத்திற்கு மாறாக சூழலுக்கேற்பப் புதிய பொருள் பெயர்ப்பு செய்வதும்கூட உயர்நிலைச் சிந்தனைகளின் முக்கிய வெளிப்பாடு என்கிறார்.
மற்றெல்லாப் பாடங்களைப் போலவே இலக்கியப் பாடத்திலும் மாணவர்கள் ஆழச் சிந்திக்கும் நோக்கில் சிந்தனைத் திறன் வெளிப்படையாகவே கற்பிக்கப்பட வேண்டும் என்ற நிலை இன்றுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சிந்தனைத் திறனை உட்புகுத்தி கற்பிக்கப்பட வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் (ரெஸ்நிக், 1987). வகுப்பறையில் இலக்கியம் கற்றல் கற்பித்தலின்போது ஆசிரியரானவர் உயர்நிலைச் சிந்தனைகளை எவ்விதம் மாணவர்களிடம் கிளர்த்தல் செய்ய வேண்டும்? மாணவர்கள் அறிவுநிலைக்கொப்ப உயர்நிலைச் சிந்தனைக் கேள்விகளை எவ்வாறு கையாள வேண்டும்? மாணவர்களின் அடிப்படை புரிதலிலிருந்து எப்படி உயர்நிலைச் சிந்தனை நோக்கிச் செல்ல வேண்டும்? உயர்நிலைச் சிந்தனை நோக்கிச் செல்ல செல்ல மாணவர்கள் எதனை மையப்படுத்தி தன்னுணர்வை வலுப்படுத்தியும் வளப்படுத்தியும் கொள்ள வேண்டும்? போன்ற வினாக்களை உள்முகமாக ஆசிரியர் நோக்குதல் நலம்.
இதனைத் தொடர்ந்து, இலக்கியம் துய்த்தலில் மாணவர் உயர்நிலைச் சிந்தனைவழி அடைந்த அனுபவம் அல்லது உணர்வுநிலை மாற்றத்தை எவ்வாறு அணுக வேண்டும்? உயர்நிலைச் சிந்தனையின்வழி மாணவர்கள் பெற்ற பல்வேறுபட்ட இலக்கிய நுகர்வை எவ்விதம் வகைப்படுத்தி ஒவ்வொருவரின் கண்டடைதலுக்கு ஏற்றவாறு பொருள் பெயர்ப்புச் செய்வது? இலக்கியத்தின் ஊடாக உயர்நிலைச் சிந்தனைகளின் நிலைகளான ஆய்வுச் சிந்தனை ஆக்கச் சிந்தனை கண்ணோடத்தை எப்படி தூண்டுவது? இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைச் செயலாக்கத்தின்வழி மாணவர் தம் வாழ்வில் எதிர்ப்படும் சிக்கல்களைக் களையும் திறனை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? போன்றவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மாணவர்கள் இலக்கியப் பாடத்தில் பயின்ற பாடப் பொருளை தாங்கள் வகுப்புக்கு வெளியே நாள்தோறும் எதிர்நோக்கும்  நடைமுறைச் சூழல்களுக்கேற்பப் பொருத்தப்பாட்டுடன் பயன்படுத்தி அச்சூழலைத் திறம்படக் கையாளும் திறத்தையே உயர்நிலைச் சிந்தனையின் வெளிப்பாடு எனலாம். இத்தகு உயர்நிலைச் சிந்தனைகள் சமுதாய நிலைக்கு உற்றதாகவும் அறிவு நலத்திற்கு ஏற்றதாகவும் திகழ வேண்டும். மேலும்  அவ்வறிவானது எளிமையாகவும் இலகுவாகவும் பயன்பாட்டு நிலைக்குக் கொணரக் கூடியதாகவும் இருந்தால் சீரிய நற்பயன் விளைவிக்கும்.

          இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை உட்புகுத்திக் கற்பிக்கும்போது, மாணவர்கள் வெறும் இலக்கிய இன்பத்தையும் பாடப் பொருளறிவையும் மட்டும் பெறுவதில்லை. மாறாகப் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் சூழல் கருதிப் பயன்படுத்தும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். ஆகையால்தான் வகுப்பறையில் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படும்போது உயர்நிலைச் சிந்தனைகளை செவ்வனே திட்டமிட்டுக் கற்பிப்பது இன்றியமையாததாகிறது. இலக்கியப்பாடம் வாயிலாக கற்ற உயர்நிலைச் சிந்தனைகள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல் அவசியம். ஆசிரியர் கல்விக் கழக இலக்கியப் பாடங்கள் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகளைப் பயன்படுத்துவதற்கான தொடர் வாய்ப்புகளை வழங்குவதால் எதிர்காலத்தில் தெளிந்த சமன்நிலை கொண்ட நல்லாசிரியர்களை உருவாக்க முடியும்.
3.0     உயர்நிலைச் சிந்தனைகளின்வழி மாணவர்கள் பெறக்கூடிய திறன்கள்
பொதுவாகக் கல்வி மையங்களில் புளூமின் அறிவுசார் படிநிலைகளே சிந்தனைத்திறன் செயல்பாட்டிற்கு வழியமைக்கிறது. அந்தக் கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டே வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைச் செயல்பாட்டிற்கு வித்திட வேண்டும். உயர்நிலைச் சிந்தனைத்திறன்களின் அடிப்படையில் இலக்கியம் கற்றல் கற்பித்தல் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பன்முறைப் பயிற்சியும் மதிப்பீடும் செய்யப்பட வேண்டுவதோடு    கருத்துகளுக்கிடையேயான சார்பு எதிர்வுத் தன்மைகளை வகைப்படுத்தவும் மதிப்பிடவும் ஒவ்வொரு மாணவரும் ஆற்றல் பெற வேண்டும். ஆசிரியர்கள் வெறுமனே இலக்கியச் சுவையையும்  பொருளையும் மட்டுமே கற்பித்தலில் மையப்படுத்தாமல், உயர்நிலைச் சிந்தனைகளைக் கொண்டு நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி உணரச் செய்ய வேண்டும்.
இலக்கியத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை உட்புகுத்திக் கற்பிக்கும்போது ஆசிரியர்கள், ஆய்வுச்சிந்தனையையும் ஆக்கச் சிந்தனையையும் ஒருசேர வலியுறுத்த வேண்டுவது மிக அவசியம். இதன் மூலம் எதிர்கால மாணவர்களை வழிநடத்தப்போகும் ஆசிரியர்களான இவர்கள் நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் சிக்கல்களுக்கு மிகச் சிறந்த தீர்வுகளையும் கண்டறிய வழிகோலும் திறம் பெறுவர். இன்றைய மின்னியல் உலகில் மாணவர்களை வந்தடையும் பல்வேறு தகவல்களுள் எது ஏற்புடையது? நம்பகத்தன்மையுடையது? என்று பகுத்தாராய்ந்து தெரிவு செய்ய உயர்நிலைச் சிந்தனைத் திறம் பேருதவி புரியும்.  
இலக்கியம் கற்றல் கற்பித்தலில் திட்டமிட்டு உயர்நிலைச் சிந்தனைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால் அதற்கேற்ற வகையில் மாணவர்கள் பொருத்தமான விளைபயனை கண்டறிபவர்களாகவும், முன்வைத்த கேள்விகளை ஆய்ந்து நோக்குபவர்களாகவும்; உற்றுநோக்கியதை விளக்கப்படுத்தி நிறுவும் திறமுள்ளவர்களாகவும், ஒவ்வொன்றுக்குமிடையே காணப்பெறும் தொடர்பினை அறிபவர்களாகவும், எதிர்படும் சிக்கல்களுக்குப் பொருத்தமான மாற்றுவழியைக் காணும் ஆற்றல் கொண்டவர்களாகவும், பல்முனைகளில் எழும் கருத்துகளைச் சீராய்ந்து தெளிந்த முடிவு எடுக்கும் வல்லாண்மை கொண்டவர்களாகவும்  விளங்குவது திண்ணம். ஆகவேதான் இத்தகையப் பயன் நல்கும் உயர்நிலைச் சிந்தனைகளை இலக்கியப் பாடத்தில் மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆசிரியர் கல்விக் கழகத்தின் கலைத்திட்டத்தில் உள்ளடங்கிய இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைக் கற்பிப்பதன்வழி ஆசிரிய மாணவர்களான இவர்கள் நாளை பள்ளியில் தங்கள் போதனையில் இக்கூறுகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இலக்கியப் பாடத்தில் மாணவர்கள் கவிதையையோ கதையையோ கட்டுரையோ படித்தவுடன் அதன்  நம்பகத்தன்மையையும் ஏற்புடைமையையும் அடையாளங்காணும் திறம் பெறுவர். இதற்கு மேலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ள ஆருடங்களையும் நடுநிலையின்றி தற்சார்பு கொண்டுள்ள கருத்துகளை உற்றாய்ந்து மெய்மையைக் கண்டடையும் திறத்தையும் கைவரப்பெறுவர். இலக்கியப் பாடுபொருள் பகுப்பாய்வில் முக்கியக்கூறாக விளங்குவது உயர்நிலைச் சிந்தனைகளுள் ஒன்றான சிக்கல்கள் களையும் திறனாகும். ஒரு சிக்கலை முறையாகக் களைந்து அடைய வேண்டிய இலக்குகளுக்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் உற்றாய்ந்து  செயற்படுத்துவதையே சிக்கல்களைக் களையும் திறன் என்கிறோம். இதற்கு மேலும் படைப்பிலக்கியத்தின் சாரத்தை மீட்டுக் கொணரல், ஆழமாக உள்வாங்கிக் கொள்ளல், ஏடல்களை ஆய்வு மனப்பான்மையோடு சீர்தூக்கிப்பார்த்தல், ஆக்கச் சிந்தனையோடு மாற்றுவழிகளைச் சிந்தித்துப் பார்த்தல், பிறரிடைத் தொடர்புத் திறனைக் கொண்டிருத்தல் போன்ற உயர்நிலைச் சிந்தனைகள் வெளிப்பாடுகள் மாணவர்களிடம் வலுப்பெறச் செய்கிறது.
4.0     இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைக் கற்பிக்கும் அணுகுமுறைகள்
4.1    கவிதை - கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளை இணைத்துக் கற்பிக்கும் ஆசிரியர் தெளிவான அணுகுமுறைகளைக்  கையாள வேண்டுவது அவசியமாகும். கொடுக்கப்படும் கவிதையின் முக்கியக் கருத்தை மாணாக்கர் எவ்வாறு மேல்நிலையிலிருந்து ஆழ்நிலை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுவது என்ற திட்டமைப்பு ஆசிரியரிடம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் புரிதலுக்கும் கருத்துக்குமிடையே காணப்பெறும் வேறுபாட்டை அறிந்து சிக்கல்களைக் களையும் வகையிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். கவிதையின் மையத்தைக் மாணாக்கர் தாமாகவே கண்டடையும் நிலைக்கு ஏற்ற உயர்நிலைச் சிந்தனைப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். கவிதையின் கருத்திலிருந்து அதன் அகப்புறத்தில் ஏற்பட்ட விளைபயனையும் விவாதிக்கும் அளவிற்கு மாணவர்களை உயர்த்தல் வேண்டும். மேலும் உயர்நிலைச் சிந்தனைத் திறம் வலுப்பெற ஆசிரியர் பொருத்தமான சிந்தனை வரிபடங்களின் துணைகொண்டு மாணவர்களின் கருத்துகள் ஏற்புடையதா? இல்லையா? ஏன்? எவ்வாறு? போன்ற மாற்றுச் சிந்தனைகளை உருவாக்க  விவாதங்களைத் தூண்டும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கவிதைக்கு பதவுரை பொழிப்புரை சொல்லி விளக்குவதையெல்லாம் தவிர்த்து மாணவரின் புரிதலிலிருந்து மேலெழுந்து செல்லலாம்.
நெடுநாள் திண்ணையில் கிடந்த
தாத்தா
இல்லத்திற்குள் வந்தார் இறந்தபின்
படமாக....
 எடுத்துக்காட்டாக, மாணவர்களுக்கு மேற்கண்ட புதுக்கவிதையை அளித்து அந்தக் கவிதையின் கருத்தையும் அது ஏற்படுத்தும் பாதிப்பையும் வகுப்பில் மாணாக்கரை வட்டவடிவில் அமர வைத்து பார்வையைப் பகிரலாம். கவிதையை மாணவர் பன்முறை வாசித்தவுடன் அதில் உள்ளடங்கி இருக்கும் முக்கியச் செய்தியைப் புரிந்து வெளிக்கொணர ஊக்க வேண்டும்.  மாணவர் தம் கருத்துகளை முன்னிறுத்தி சான்று பகர்வதோடு அதனுள் பொதிந்திருக்கும் மனித நேயம், புறக்கணிப்பு, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றை அவர்களே அடையாளங்காண தூண்ட வேண்டும். மாணவர் வெளிப்படுத்தும் எவ்வித கருத்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள ஆசிரியர் திறந்த மனப்பான்மையுடன் விளங்க வேண்டும்.
கவிதை மீதான புரிதலை மாணவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் தனிநபராகவும் குழுவாகவும் வரைபடங்களாகத் வரையச் செய்யலாம். இச்செயல்பாட்டின்போது மிக முக்கியமாக மாணவர்களது கருத்துகளுக்கிடையிலான தொடர்பும்  உயர்நிலை சிந்தனைத் திறனும் வெளிப்படுவதை ஆசிரியர் உற்றாய்தல் வேண்டும்.  மாணவர்கள் கவிதையின் உட்கருத்தை நியாயப்படுத்தும்போது அவர்களது முடிவு செய்யும் திறனும் சீர்தூக்கிப் பார்க்கும் திறனும் எப்படி  வெளிப்பட்டது என்பதை ஆசிரியர் உற்றாய்ந்து விளக்குதல் அவசியம். மேலும் இதுபோல மாணவர்களின் சுயப்புரிதலையும் பார்வையையும் புறந்தள்ளாமல் மெருகூட்டி உயர்நிலைச் சிந்தனைத் திறனை பல்வகை முறைமைகளால் உயர்நிலைகளுக்கு ஊக்கலாம்.
4.2     சிறுகதை - கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
உயர் நிலைச் சிந்தனைகளை மேலும் வளர்ப்பதற்குப் பரவலான இலக்கிய வாசிப்பை ஆசிரியர் ஒரு கருவியாகக் கைக்கொள்ள வேண்டும். மாணவர்களே சுய விருப்பத்தின் பேரில் தேடி வாசித்த ஒரு சிறுகதையை தத்தம் புரிதலுக்கேற்ப ஆய்வு செய்து அவற்றில் உள்ளடங்கியுள்ள பல்வகையான கூறுகளைத் தம் கருத்திற்கேற்பத் தொகுத்துப் படைக்கப் பணிக்க வேண்டும். சிறுகதையில் தாம் உணர்ந்த கருத்துகளைப் படைப்புகளாக முன்வைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் விவாதங்களில் வலுவான பங்கேற்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இதன்வழி மாணவர்கள் படைப்பிலக்கியமான சிறுகதையை உற்று நோக்கவும் ஆய்வு மனப்பான்மையுடன் சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட வாய்ப்புண்டு. 
சிறுகதை வாசிப்பின் மூலம் அதன் மையச் சரடைக் கண்டறிதலும்; கருத்தாடலின் மூலம் குழு விவாதமும்; மாணவர் படைப்பாற்றலும் உயர்நிலைச் சிந்தனைகள் வேரூன்ற உறுதுணைப் புரியும். உயர்நிலைச் சிந்தனைகளைத் தூண்ட மாணவர்கள் முன்வைக்கும் ஒரு கருத்தானது, காட்சி நிலையிலுள்ளதா?, கருத்து நிலையிலுள்ளதா?, பொருத்தமான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதா? என்பதை நோக்குதல் வேண்டும். மேலும் மாணவர்கள் கண்டடையாத பூடகமாக மறைந்திருக்கும் ஏனைய தொடர்புடைய கருத்துகளையும் கூர்நோக்கோடு அடையாளங்காணச் செய்ய வேண்டும். மேலும் சிறப்பான எடுத்துக்காட்டுகளைச் சான்றுகாட்டி உயர்நிலைச் சிந்தனைகளைப்  பயன்மிகுந்த வகையில் உட்புகுத்தலாம். மேலும் படைப்பிலக்கியமான பல்வேறு உள்ளோட்டங்களைக் கொண்ட சிறுகதைகளை  வாசித்துத் தம் கருத்துகளையும் புரிதலையும் மனவோட்டவரையின்வழி குழுமுறையில் வெளிப்படுத்தி மாணவர்களை அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபட ஆசிரியர் ஊக்கலாம். இதன்வழி பிறரின் கருத்துகளையும் உள்வாங்கி, விடுபட்டவற்றை மீட்டுக்கொணர்ந்து ஏற்புடைய சான்றுகளுடன் தொடர்புபடுத்தி மாணவர்களின் சுயமாகவும் உள்முகமாகவும் உயர்நிலையில் சிந்திக்கும் ஆற்றலை பன்மடங்கு ஊக்கலாம்.
5.0 முடிவுரை
உயர்நிலைச் சிந்தனைக்குத் தூண்டுகோலாகவும் உரமாகவும் விளங்குவது பொருத்தமான வினாக்கள் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு உயரம் சிந்திக்கிறார்கள் என்பதை ஆசிரியரானவர் மேல்நிலை குவிநிலை வினாக்கள் எழுப்பி மாணவர்களின் விடைகளைப் பெறுவதின் மூலம் துல்லியமாக அவர்களின் சிந்தனை செயல்பாட்டை அறிந்து கொள்ள இயலும். ஆசிரியர் கல்விக் கழகக் கலைத்திட்ட இலக்கியப் பாடத்தில் உயர்நிலைச் சிந்தனைகளைப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட  இரண்டு கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் வழிகாட்டியாக மட்டுமே அமையும்.
மேலும் ஆசிரிய மாணவர்கள் தொடர்ச்சியான பரவலான வாசிப்பும் தேடலும் மேற்கொள்வதன்வழி இலக்கியத்தின் மேல்நிலையிலும் ஆழ்நிலையிலும் பொதிந்துள்ள கலை நயம், சொல் நயம், பொருள் நயம்  ஆகியவற்றைத் தெளிவாக உய்த்துணர்ந்து இலக்கியம் நலம் போற்ற முடியும். தொடர்ந்து இந்த ஆசிரிய மாணவர்கள் இயைபுடனும் ஏரணத்துடன் தாம் இதுகாறும் கொண்டிருந்த ஒரு கருத்தைச் சான்றுகாட்டி நிறுவவும் உள்முக உணர்வால் இலக்கிய இன்பம் எய்தவும் துணை புரியும். ஆசிரியர் கல்விக் கழகங்களில் கற்பிக்கப்படும் இலக்கியப் பாடங்களில் மேற்கண்ட நிலையை ஒவ்வொரு ஆசிரிய மாணவரும் அடையும்போதுதான் உயர்நிலைச் சிந்தனைகளின் செயல்பாடும் வெளிப்பாடும் பொருளுள்ளதாகிறது.  
மேற்கோள் நூல்கள்:
1. Anderson, L., Krathwohl, D., Airasian, P. et al (2001), A Taxonomy for Learning, Teaching, and Assessing:        A revision of Bloom's Taxonomy of Educational Objectives, New York: Pearson, Allyn & Bacon
2. Bloom B. S. (1956), Taxonomy of Educational Objectives, Handbook I: The Cognitive Domain, New York:      David McKay Co Inc.
3. Thomas, A., and Thorne, G. (2009), How to Increase Higher Order Thinking, Metarie, LA: Center for Development and Learning, 
http://www.readingrockets.org/article/34655
4. http://theonlinepd.files.wordpress.com/2008/03/teachinghigherorderthinking.pdf.


கருத்துகள் இல்லை: