சனி, 17 ஏப்ரல், 2010

சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன்

இரண்டாயிரதொன்றாம் ஆண்டிறுதியில் ஆறு நண்பர்களுடன் மூன்றாம் முறையாகத் தமிழகப் பயண சென்றிருந்தேன். எங்கள் பயணம் வழக்கமான திருத்தலச் சுற்றுலாவாக மட்டும் அமையாமல் வாழ்வின் எல்லா நிலை மனிதர்களையும் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது.

உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தேங்காய் மட்டையில் கயிறு திரிக்கும் குடியானவர்கள், பட்டைத் தறியில் நெய்யும் நெசவாளர்கள், கட்டுமரத்திலேறி கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கள் இறக்கும் மரமேறிகள், குயவர்கள், உழவர்கள், என விளிம்புநிலை மனிதர்வரை ஒரு தேடலைத் தொடர்ந்தோம்.

இந்தத் தேடலினூடே எங்கள் பயணம் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளை நாகர்கோயில் ஊருக்கருகே சென்றதும் என் நண்பர் மணிமாறன் சுந்தர ராமசாமியைச் சந்திக்கலாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நண்பர் மணிமாறனைத் தவிர்த்து என்னோடு வந்த மற்றவர்களுக்கு இலக்கிய நுகர்வு மிகக் குறைவு. அவர் அளவுக்கு எனக்கு அப்போது சுந்தர ராமசாமியை ஆழமாகப் புரிந்து கொள்ளவிடினும் ஏதோ பெயரளவில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,’ஜே.ஜே குறிப்புகள்’ கொஞ்சம் படித்து வைத்திருந்தேன் என்பதைவிட குழம்பியிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் மணிமாறன் காலச்சுவடு தொடர்ந்து படிப்பதால் ஓரளவிற்கு அவரைக் காணும் வேட்கையில் தீவிரமாக இருந்தார்.

நான் படித்தறிந்தவரை சுந்தர ராமசாமியின் ஆளுமை என்பது நெருங்குவதற்குக் கடுமையானவர் கோபக்காரர் என்றெல்லாம் ஒரு அடையாளம் இருப்பதை அறிவேன். ஆனாலும் பல இலக்கியவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகும் பிடிப்புள்ள எழுத்தாளரான அவரைச் சந்திப்பதில் எனக்கும் உள்ளூர ஆர்வம் எழுந்தது.

அந்த டிசம்பர் மாதப் புலர்காலைப் பொழுதொன்றில் அவரின் இல்லத்தைத் தேடிச் சென்றோம். நாகர்கோயில் சாலையோரத்திலே அவரின் வீட்டை அடையாளங் கண்டுகொண்டோம். கிராமியச் சூழலை உணர்த்தும் மதில் சுவரோடு ஏழெட்டுத் தென்னைமரங்கள் பின்னணியில் ஓங்கி நிற்க எளிமையும் பழமையும் காட்டும் அந்த வீட்டின் முன்புறம் பவளமல்லி செடியிலிருந்த உதிர்ந்த மலர்கள்வரை இலக்கிய வாசத்தை என்னுள் விதைத்தது.

வாயில் இருப்புக் கதவை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தோம் அவரை சந்திக்கும் ஆவலோடு. எங்களின் குரல் கேட்டு நீல டீ சட்டையும் வேட்டியுடம் அணிந்த உயர்ந்த உருவத்தோடு எங்கள் முன்னே அவர் வந்தது என் நினைவுகளில் இன்றும் கல்வெட்டுகளாய் பதிந்துள்ளது. எங்களைப் பற்றி அன்பொழுக விசாரித்துவிட்டு உள்ளே அழைத்துப் போனார். வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரின் மகளிடம் எங்களை அறிமுகம் செய்தார். பிறகு மெல்ல அவரின் கதைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது

எங்களோடு அவரின் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் என்னையும் மணிமாறனையும் விட்டுவிட்டு வெளியே உலவ சென்றுவிட்டனர். அவரின் சில கேள்விகள் எங்களின் வாசிப்பு ஆழத்தை உழுவதாகவே எனக்குப் பட்டது. ஏதோ ஒன்றிரண்டு பொருத்தமாக நான் சொல்ல நண்பர் மணிமாறன் அவரின் கதைப்போக்கையும் ஆளுமையையும் சிலாகித்துப் பேசினார். பொறுமையோடு ஆழ்ந்து கேட்கும் அவரின் தன்மையும் மென்மைப் பேச்சும் என்னுள் அவரின் மீதுள்ள மதிப்பை உயர்த்தின.

அவர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கும் நண்பருக்கும் பரிசளித்ததும் எங்களோடு சேர்ந்து நிழற்படமெடுத்ததும் மறக்கமுடியாது. ஒரு இலக்கிய விமர்சனத்தால் மேலும் ஒளிரும் நட்சத்திர எழுத்தாளரைச் சந்தித்தத் திருப்தியோடு விடைபெற்றோம். அவர் பரிசளித்த அந்த ஒரு புளிய மரத்தின் கதையை அண்மையில் மீண்டுமொருமுறை வாசித்தேன். அக்கதையின் சாரத்தை பருகுங்கள்.

பெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.

புளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.

புளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை. புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.

(இரு வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையை மறுவாசிப்பு செய்தேன். அந்தக் கதைப் புத்தகத்தைத் தொட்டதும் அவரைச் சந்தித்த நினைவுகள் என்னுள்ளே மலரத்தொடங்கின. அதை ஒரு இனியச் சந்திப்பாக இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அவரோடு இணந்து நிழற்படம் எடுத்துக்கொண்டாலும் அந்தப்படம் என் நண்பர் மணிமாறனிடம் மட்டுமே உள்ளதால் இதில் இணைக்கவில்லை)

என் காதல் என்றும் தமிழோடுதான்

நினைத்தாலே நெஞ்சக் கருவறையும் தித்திக்கும்; சொன்னாலே உதடுகளெல்லாம் தேனமுதாய் இனிக்கும் தமிழ்மொழியாம் நம் தாய்மொழியை நேசிப்பது இயல்பானது மிக இயற்கையானது. தமிழ்மொழியும் அதனூடே பின்னிப்பிணைந்த மரபும் காலங்காலமாக முன்னோர் மிக விழிப்புடன் பேணிப் பாதுகாத்து நமக்களித்துள்ளதே நாம் பெற்ற பெரும்பேறு.

தாயை நேசிப்பது எவ்வளவு இயல்பானதோ அது போன்றே தமிழை நேசிக்க வேண்டும். பள்ளிக் காலத்தில் என்னைப் பார்த்து ஒரு சில மூடர் தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று வழித் தடத்தை மாற்ற முற்பட்டார்கள். தமிழ் சோறு போடுமா? என்பது இன்றுவரை தமிழர்களிடையே பேசப்படுவதைக் கண்டு என்னுள்ளே நீருபூத்த நெருப்பாய் அறச்சீற்றம் எழும்.

சோறு மட்டும்தான் வாழ்க்கை என்றால் உயிருக்குச் சுதந்திரம் எதற்கு?. அடிமை வாழ்க்கையில் வேளாவேளைக்குச் சோறு கிடைக்குமே! ஒரு தொழிலுக்காகத் தாய்மொழியைக் கற்க நினைப்பதவிட மூட நினைப்பு வேறில்லை. இன்றுங்கூட சோற்றுக்கு வழி தேடுவதில் என் மலேசியத் தமிழினம் சுயநலமாகச் சுருங்கிவிட்டது. அதனால்தான் தமிழ் படிப்பது தமிழருக்கே வேம்பாய் கசக்கிறது.

இந்தப் பேதை மனிதருக்கு மொழி என்பது வெறும் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடித் தரும் அட்சயபாத்திரம். தாய்மொழி என்பது ஊனோடும் உயிரோடும் இணைந்த தொப்புள் கொடி உறவு என்பது இந்த மூடர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை?. தமிழில் பேசுவது பாவமானது; தமிழ் நூலைக் கையில் வைத்திருப்பது கேவலமானது; தமிழனாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறானே இவனைவிட ஈனப் பிறவி வேறுண்டோ?.

உலகத்தில் ஒருவனுக்கு அடையாளத்தைத் தேடித் தருவது அவன் பிறந்த இனமும் அந்த இனம் பேசும் மொழியும்தான். மொழியைச் சார்ந்துதான் இனம் நிற்கிறது; இனத்தின் துணையுடன்தான் மொழி நடக்கிறது. என் இனத்தையும் மொழியையும் நான் மறந்தால், என் முகத்தையும் முகவரியையும் இழந்துவிடுவேன் என்ற அடிப்படை அறிவுகூட தமிழர் பலருக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை?.

தமிழனிடம் ஆழமான அறிவும் ஆற்றலும் இருக்கிறது ஆனால் தேவையான மொழிப்பற்றில்லை என்பதால்தான் பிற இனங்களைக் காட்டிலும் இன்னும் தலைகுனிந்தே இருக்கிறான். உலகில் பல இனத்தாருக்கு மொழி என்பது வெறும் தொடர்புக்கருவி மட்டுமே. தமிழர்க்குத் தமிழ் என்பது உணர்வு கலந்த ஆன்மிகம். தமிழர்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக அமைந்தது தற்செயலானது என்ற கருத்துண்டு ஆனால் அது எனக்கு நெடுங்காலம் நான் செய்த தவப்பயன் என்றே மிக ஆழமாக நம்புகிறேன்.

தமிழ் என் பயணத்தில் வழித்துணையாய் மட்டுமல்ல வாழ்க்கைத் துணையாகவும் நின்றுதவுகிறது. தலைமுறை தலைமுறையாக முன்னோரிடமிருந்து தோள்மாற்றிக் கொடுக்கப்பட்டத் தமிழை என் தந்தை என்மீது இறக்கிவைத்தபோது அதை சுமையாக அல்ல சுகமாக ஏற்றுக் கொண்டேன். அந்த மொழி வழிப்பட்ட பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையின் தோள்களிலே நான் சரியாக இறக்கிவைக்காமல் போனால் நான் வாழ்ந்ததே பொருளற்றதாகப் போகும்.

தமிழ் இலக்கியம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகளை மறந்ததால்தான் இன்று தமிழனின் வாழ்க்கையே திசைமாறிப்போனது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனித குலத்திற்கே தோழமைப் பண்பையும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ நடைமுறை பேருண்மையையும் உலகத்துக்கே ஓங்கி உரைத்தது தாய்மொழி தமிழல்லவா?.மொழிக்கும் வாழ்வுக்கும் ஒரு சேர வழிகாட்டும் தொல்காப்பியமும் வாழ்வியல் மனப்பிணி நீக்கும் அருமருந்தாம் திருக்குறளும் தமிழர் மேன்மையுற கிடைக்கப்பெற்ற அருஞ்செல்வங்கலல்லவா?.

தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத திருநாவுக்கரசரும், சீலமாய் செந்தமிழை செழுந்தமிழாக்கிய திருஞானசம்பந்தரும், சுந்தரத் தமிழில் திருப்பாட்டிசைத்த சுந்தரரும், திருவாசகமாய் உள்ளொளி உருக்கிய மாணிக்கவாசகரும் மேலும் ஆழ்வார் பாசுரங்களும் நீதி இலக்கியம் முதல் இன்றைய நவின இலக்கியம் வரை வாழ்வை மேம்படுத்த எத்தனை இன்பப் புதையல் தமிழன்னைக் காலடியில் பந்தி வைக்கப்பட்டுள்ளன.

பிற மொழியிலெல்லாம் அகர எழுத்தை அடையாளம் காட்டும்போது (a for apple –english / a untuk ayam –malay) கனியோடும் பிராணியோடும் வெறும் உணவுகளோடு அடையாளங் காட்டுகையில் தமிழ் மட்டும் ‘அறஞ்செய விரும்பு’ என உணர்வோடு அறத்தை சார்ந்தது நம் வாழ்வு என்று ஒளவை சுட்டிக் காட்டுவதை உணரமுடியவில்லையா?

இன்று பெரும்பாலான மலேசியத் தமிழ் இல்லங்களில் பொய்மைக் கலந்த இனிய மயக்கமுண்டு. வீட்டில் அறைகுறை தமிழும் வெளியில் பகட்டுக்காக ஆங்கில மோகமும் வாழும் வகைக்கு மலாயும் கைகொடுக்குமென்ற போலித்தனம் பரவலாக உலவுகிறது. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஒவ்வொரு தமிழரும் குடும்பத்திலும் சமூக உறவுகளில் தமிழ் பேசுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழர் வாழ்வதற்கு எந்த மொழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளட்டும் ஆனால் தாய்மொழியாம் தமிழை கற்றுக்கொள்ளத் தவறக்கூடாது; கூடுமானவரைத் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படாமல் மாறாக பெருமைக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரையும் தமிழ் பேச ஊக்கப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.

இதயத் தூய்மையுடன் தமிழை நேசிக்கும் தலைமை இல்லாததால்தான் தமிழன் இன்று தமிழனாக இல்லை. அதற்காக நான் என் மொழிப்பற்றை எதன் பொருட்டும் எவருக்காகவும் விட்டுத் தர முடியாது என்பதில் மிக உறுதியாக உள்ளேன்.


வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஒளியோடு ஒரு அதீத காதல்

ஜென் தத்துவத்தில் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாம் வகையினர் இருளிலே வாழ்ந்து கொண்டிருப்பதை உணராதவர்கள்; இரண்டாம் வகையினர் இருளில் வாழ்ந்து கொண்டு ஒளியை நோக்கி ஏக்கம் கொள்பவர்கள்; மூன்றாம் வகையினரோ ஒளியை நோக்கிப் பயணிப்பவர்கள். அந்த மூன்றாம் பிரிவைச் சார்ந்த மனிதனாக எண்ணியே என் பயணம் இதுவரை தொடர்ந்து வருகிறது.

ஒளியைப் பற்றியச் சுவையும் தேடுதலும் என்னுள்ளே உருவாகக் காரணமாயிருந்தது சினிமா எனும் ஒளி ஊடகம்தான். எப்படி இந்த வெள்ளைத் திரையில் நடிகர்கள் வந்து போகிறார்கள் அவர்களோடு ஆறு, விமானம், சூரியன், பறவை, தெய்வம் எல்லாம் வந்து போகிறன்றன?. சினிமா அரங்குக்கு பின்னே அதுவெல்லாம் எப்படி சாத்தியம்?.தோட்டப் புறங்களில் திருவிழாக் காலங்களில் திறந்த வெளியில் சினிமாவை வெள்ளைத் திரையிட்டுக் காட்டுகையில் எனக்கு குழப்பமே ஏற்படும்.

ஏழு வயது சிறுவனாக நான் நெஞ்சிலே தேக்கி வைத்தக் கேள்ளிகளை என் தாத்தாவிடம் கேட்டேன். அவர், ‘அதோ அந்த சக்கரம் மாதிரி சுழலுதே ரீல்லு அதுலேந்து வர வெளிச்சத்துலதாம்பா அவங்களெல்லாம் வந்து போறாங்கன்னு’ தமது அறிவியல் அறிவைப் பொத்தம் பொதுவாக எனக்குள் சொல்லி விதைத்தார்.

அன்றிலிருந்து சினிமா பார்க்க அரங்கத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்த இருட்டில் ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்றை இமைக் கொட்டாமல் யார்யார் அதனுள்ளே ஒளியாகச் செல்கிறார்கள் என்று துருவித் துருவி தேடிப்பார்ப்பதே என் வேலையாகிவிட்டது. எத்தனையோ முறை என் தாத்தா, ‘அத ஏம்பா பாக்குறே திரையைப் பாருன்னு’ சொல்லிக் கொண்டே இருப்பார்.

தாத்தாவின் வார்த்தைகள் ஒளியைப் பற்றிய அதீத ருசியை என்னுள்ளே ஏற்படுத்தியிருந்தது. அந்த பூபாளப் பொழுதுகளில் என் கண்கள் ஒளியைத் தெய்வீகமாய் ரசிக்கத் தொடங்கிவிட்டன. காலைச் சூரியனின் ஒளியைக் ஒரு காதலியைபோல் தினமும் தரிசிக்கக் காத்திருப்பேன்.

அந்த ஒளியில் எந்த தெய்வமாவது வந்திரங்குகின்றதா என்று ஆராய்வேன். தமிழ்த் திரைகளிலே தெய்வங்களெல்லாம் திடீரென ஒளியிலிருந்து வடிவெடுக்குமே அந்த மாதிரி ஏதேனும் என் முன்னே நடக்குமென நம்பிக்கைக் கொண்ட சிறுவனாய் காத்திருந்தேன் ஒரு பெருந்தவத்தோடு.

தென்னங்கீற்றினூடே ஒளி சின்னச்சின்னதாய் கிளைவிட்டு பிரிவதையும் அந்த ஒளிக்கற்றைக் கையில் பிடித்துக் கொண்டே மேலுலகம் செல்வது போன்ற பாவம் அந்தச் சிறுபிராயத்திலே என்னுள்ளே ஏற்படும். இளங்கதிரின் ஒளியைத் தாண்டி உச்சி வெயில் சூரியனையும் கூசும் கண்களால் தேடுவேன். கண்கள் மிகுந்த ஒளியால் பழுது பட்டுவிடுமென என் பாட்டி எப்போதுமே என்னைக் கண்டிப்பது வழக்கம்.

இரவு வேளைகளில் நீலமும் பச்சையும் கலந்து மினுமினுக்கும் நட்சத்திரங்களின் ஒளியை பார்ப்பதின் அலாதி சுகம் இன்றுவரை எனக்குள் விலக்கமுடியாத பழக்கமாகவே வேர்விட்டுள்ளது. பெளர்ணமி நிலவின் மஞ்சள் ஒளிவட்டத்தின் தூரத்தைக் கணக்கிடுவதும் அந்த நிலவுக்குள் யார் தினமும் விளக்கேற்றுகிறார்கள் என்றும் ஆராய்வேன். நம் பாட்டியால் செல்ல முடியாத நிலவுக்கு ஒளவைப்பாட்டி மட்டும் எப்படி நிலவுக்குச் செல்ல முடிந்ததது என்று யோசிப்பேன்.

கார்கால பூமழைத் தூவும் நீளப்பொழுதுகளில் வானவீதியில் நெளிந்தோடும் மின்னலின் ஒளித் தெறிப்பை பயத்தோடும் பரவசத்தோடும் பார்த்து மகிழ்வேன். அப்படி பார்க்கும்போதெல்லாம் ‘கண்ணு போயிருண்டா’ என்று பாட்டி திட்டுவார். கண்களைக் கையால் மூடிக்கொண்டே விரல்களின் சிறுசிறு துவாரங்களின் வழி உருகியோடும் மின்னலின் அழகை ஆராதிப்பேன்.

திருவிழாக் காலங்களில் ஒளிப் பூக்களாய் அலங்கார விளக்குகள் சிரிப்பதை மிக நெருக்கமாய்க் கண்டு ரசிப்பேன். இந்த விளக்குகள் எப்படி ஒளியை உமிழ்கின்றன அது எப்படி இந்தச் சின்னக் குடுவைக்குள் இவ்வளவு ஒளி அடங்கி இருக்கிறது என்று ஆவலோடு தேடுவேன். ஒளியின் மூலத்தைத் தேடுவதில் ஒரு தேவசுகம் உள்ளது.

கார்த்திகைத் திருநாளில் தோட்டத்து எல்லோர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றி வைத்திருப்பதை காண்பது பெரும் மகிழ்ச்சித் தரும். அகல் விளக்குகளால் ஒவ்வோர் இல்லமும் தெய்வீகம் பெற்றுவிட்டதாய் எனக்குத் தோன்றும். வானத்து தேவதைகள் ஒளியலங்காரத்தோடு ஊர்வலம் வருவது போன்ற தீராக் காத்திருப்பு எழும். அந்த நாள் முடியும் பொழுது மீண்டும் இன்னொரு கார்த்திகை எப்போது வரும் என்ற ஏக்கம் என்னுள் தொக்கி நிற்கும்.

அகல் விளக்குகள் ஏற்றுவதையும் அதன் ஒளி காற்றில் வளைந்து நெளிந்து ஒளிர்வதையும் காண்பது மிகப் பிடிக்கும். இன்றுவரை என் விரல்களால் அகல் விளக்குகளை ஏற்றியுள்ளதேயன்றி என்றுமே அணைத்ததில்லை; அது தானே அணைவதைக்கூட காண பொறுப்பதில்லை. அந்தளவுக்கு எனக்கும் அகல் ஒளிக்கும் ஒரு ரகசிய நட்புண்டு. வலம்புரிஜான் நூலொன்றில் குறிப்பிட்டதுபோல்’ இருட்டு விலகட்டும் விலகாமல் போகட்டும் விரல்கள் விளக்கேற்றுவதை விட்டுவிடக் கூடாது’ என்ற வாசகம் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று நட்புப் பாராட்டுவேன்.

புற்றீசல் பொலபொலத்து வரும் மழைக்கால இரவுகளில் மின் விளக்கை அணைத்து தோட்டத்து ஒவ்வொரு வீட்டின் முன்னும் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள்ளே மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுத்திரி ஏற்றி வைப்பார்கள். என்னைப்போல் வெளிச்சத்தை விரும்பும் ஈசல்களும் விட்டில் பூச்சிகளும் எதைத்தேடி இங்கே வந்து மாட்டி மடிந்தன என மனம் கணக்கும். இரவின் சுகத்தை தனது மினுமினுப்பால் அழகூட்டும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து கண்ணாடிக் குடுவைக்குள் அடைத்து அதன் ஒளியழகை பல பொழுதுகள் ஆராதித்திருக்கிறேன். மரகதம் போல மின்னும் அதன் பச்சை மினுமினுப்பில் தனிக்காதலுண்டு.

ஒளியின் தேவரகசியத்தைத் தேடியலைந்த அந்த இளைய நாள்கள் மிகமிக இனிமையானவை. ஒளியை உள்வாங்கும் கண்கள் மனிதர்களுக்குக் கிடைப்பதற்கரிய வரமாகத் தோன்றும். ஒளியை அருளாகப் பெறும் கண்களை மிகவும் சிலாகித்துப் போற்றுவேன்.

பார்வையற்றவர்களுக்கு நமக்குக் கிடைத்தப் பேறு வாய்க்கவில்லையே என பல காலம் எண்ணி மிக வருந்தியுள்ளேன். இந்த ஒளியின் சுவையை உணரமுடியாமல் தவிக்கும் அவர்களின் இயலாமை என்னுள் என்றும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தும். என் கண்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளை பார்வையில்லாதவரின் ஒளியற்ற இருளுலகை மனதால் எண்ணி உருகுவேன்.

ஒரு நிலாக் கால இரவில் வீட்டின் முற்றத்தில் பார்வையற்றவர்களைப் பற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது என் தாத்தா சொன்ன வார்த்தைகள் எனக்குள் புதியதொரு வியப்பை ஏற்படுத்தின. இருட்டுக்குள்கூட ஒளியிருக்கும் என்றும் அதேபோல எல்லாப் பொருளுக்குள்ளும் நன்றாய்ப் பார்த்தால் ஒளி தெரியும் என்று சொல்லி எனக்குள் புதியதொரு தேடலை கொளுத்திப் போட்டார்.

இருள் நிலையானது ஒளியோ வந்து போவது என்ற ஓஷோவின் கருத்துகள் இன்று எனக்குப் புரிந்தாலும் அப்போது என்னுள் ஒன்றையொன்று விஞ்சி வருவதே இரவுபகல் என புரிதல் மட்டுமே இருந்தது.

ஒளியைப் போலவே இருளில் புதைந்திருக்கும் அந்த ஒளியழகை தேடும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. இருளை கூர்ந்து நோக்க மெல்ல மெல்ல என் கண்களைப் பழக்கினேன். இருண்ட பொழுதுகளில் பயங்கலந்த உணர்வோடு தாத்தா சொன்ன ஒளித் தேடல் தொடங்கியது. அந்தத் தேடுதல் பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னுள் தொடர்கிறது ஒரு முடிவற்ற முடிவைத்தேடி.